“நீங்க வரதே எனக்கு தெரியாதே?…” என அவன் முகம் பார்க்காமல் சொல்லியவள் அமைதியில் மெல்ல சிரித்தவன்,
“ஓகே, இதுக்கேன் முகத்தை தூக்கி வச்சுக்கற? சும்மா சொன்னேன். தூங்கு…” என்றவன் அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்டே உறங்க முற்பட,
“கோவமில்லையே?…” என்றாள் அவனிடம்.
“எதுக்கு?…” என்றவன் முகத்தை பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொள்ள அதில் இதழ் பதித்தவன்,
“இன்னைக்கு இது போதும். அதான் சாமிக்கு என்னவோ வச்சிருக்கியே. முடிச்சுட்டு வா. நாளைக்கு எனக்கு. நாளையில இருந்து எனக்கு…” என்று சிரித்தான்.
அவனின் பேச்சில், சிரிப்பில், அனுசரணையில் என கொஞ்சம் கொஞ்சமாய் கணவன் என்ற கடமையில் இருந்து இன்னும் முழுதாய், உறவாய், அவளுக்கு மட்டுமேயானவனாய் அவள் மனம் அவனை ஸ்வீகரிக்க ஆரம்பித்தது.
கடமையான உறவுக்கு மேல், அக்கறையான கவனிப்பிற்கு மேல் அவனிடம் மனது கட்டுண்டு நின்ற தருணம்.
“நீங்க கொஞ்சம் நல்லவர்ங்க…” என்றாள் மெல்லிய குரலில்.
“அண்ணாமலை மகனுக்கு பாராட்டு. பார்ரா…” என்று கிண்டலடித்தான் ஆத்மா.
“நீங்க தான் சொல்லியிருக்கீங்க. அந்த உறவை வச்சு வாழ்க்கையை வாழமுடியாதுன்னு. இது என் புருஷனுக்காக சொன்னது…” என்று வீறுகொண்டு அவள் வேகமாய் பேச,
“ஓஹ் ரிது, இதென்ன வாய்ஸ்? ஹஸ்கி வாய்ஸ். இழுக்குது போ. இன்னைக்கு போய் விரதம், கிரகம்ன்னு படுத்துறடி…” என நொந்துகொண்டான்.
அவள் சொல்ல வந்ததை முழுதாய் கிரகித்தாலும் கிண்டலாய் பேச பேச ரிதுவின் முகத்திலும் அத்தனை புன்னகை.
“இந்த மருதாணியை நானே பூசிக்கனும்னு தோணுது. உன்னை என் மேல பூச வைக்கனும்னு தோணுது. என்ன பண்ணலாம்?…” என்று காதினோரம் இதழோடு முறையிட கண்களை மூடியவள் அவன் பக்கமாய் திரும்பி நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“சாமி, சாமி. சோதிக்காதடி. தூங்கிடறேன். இல்லைன்னா மானாவாரியா என் மேல மருதாணி பூசிக்கும்…” என்று சொல்ல வெட்கத்துடன் அசையாமல் விழிகளை மூடிக்கொண்டாள் ரிதுபர்ணா.
மறுநாள் காலை எழுந்ததுமே அவளின் வீட்டிற்கு சென்றுவிட்டாள் இங்கிருந்தே குளித்து கிளம்பி.
அங்கே முருகேஸ்வரி தயாராக இருந்தார் இவளுக்கு எடுத்த புது புடவையை எடுத்து வைத்து.
“ஆமா பெரிம்மா. வரும் போது எடுத்துட்டு வந்தாங்களாம்…” என்றுமட்டும் சொல்ல,
“இப்பத்தான் என் மனசு நிம்மதியா இருக்கு…” முருகேஸ்வரி சொல்ல,
“கண்ணனுக்கு இவ்வளோ தெரியுதே, அதுவே சந்தோஷம் தான். சரி கிளம்புவோம்…” என்று கிளம்பினார்கள்.
காலை பூஜைக்கு என்று ஏற்கனவே ரிதுவும் ஆத்மாவிடம் பேசியிருக்க விசாலாட்சி, இளவரசுவும் சொல்லியிருக்க தயாராக வந்திருந்தான் வேஷ்டி சட்டையில்.
அத்தனை அழகாய் கம்பீரமாய் இருந்தது அவனுக்கு. அண்ணாமலை தன்னை மறந்து மகனை அசந்து போய் பார்த்திருந்தார்.
விருப்பமில்லை என்றாலும் கோவிலுக்கு தங்கள் முறை. சென்றுதான் ஆகவேண்டும். அத்துடன் தங்கை மகனின் நிச்சய தாம்பூலம் மாற்றும் வைபவம் வேறு.
தாய்மாமனாக சபையில் தான் இருக்கவேண்டுமே? கிளம்பி தயாராக இருக்க மகனின் வரவில் மெய்மறந்து பார்த்தார்.
அவரின் பார்வையை ஆத்மா கவனிக்கவில்லை. முரளியிடம் போனில் பேசியபடியே கீழே வந்தவன் காபியை குடித்துவிட்டு வெளியேறிவிட்டான்.
அனைவருமாக கிளம்பி கோவிலுக்கு செல்ல முதலில் பூஜை முடிந்தது. பூஜை முடிந்ததும் அங்கிருக்கும் மண்டபத்தில் பரத்தின் நிச்சயம் நடந்தேறியது.
பூஜை வரை வேஷ்டியில் இருந்தவன் உடையை மாற்றிவிட்டு பேண்ட், ஷர்ட்டில் வந்து நிற்க அதுவரை அவனை ரசித்திருந்தவள் முகத்தை சுருக்கினாள்.
“ஏன் ட்ரெஸ் மாத்தினீங்க? அதுவே நல்லா இருந்ததே?…” என்று சொல்ல,
“இதை நீ இப்ப தானே சொல்ற? முதல்லையே சொல்லியிருந்தா வேஷ்டிலையே இருந்திருப்பேன்…” என்றவன்,
“அதோட நம்ம பூஜைக்காக நான் வேஷ்டி கட்டினது. இது பரத் பங்க்ஷன். சோ எனக்கு பார்மல் ட்ரெஸ் தான் கரெக்ட்ன்னு தோணுச்சு…” என்றதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
‘ஆனாலும் ரொம்ப நியாயமா பேசறான்டா இவன்?’ என புகையாமல் இல்லை ரிதுவிற்கு.
தட்டு மாற்றும் வைபவம் நடந்துகொண்டிருக்க ஒருபுறம் வித்யாவும், முருகேஸ்வரியும் ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தார்கள் என்றால் இன்னொருபுறம் ஆத்மா.
பெரிதாய் கலந்துகொள்ளவில்லை. அனைத்தையும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
விசாலாட்சி மகள் சுந்தரி திருமணத்திலும் திருமணத்தன்று வந்துவிட்டு அன்றே கிளம்பி சென்றிருந்தவன் தான்.
இந்தமட்டிலும் இதில் இருக்கிறானே என்று அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை.
விசாலாட்சி ரிதுவை இழுத்து பிடித்து வைத்துக்கொண்டார். அவளும் எப்போதும் போல சுந்தரியுடன் கலந்துகொள்ள அண்ணாமலை பார்வை அவள் பக்கம் செல்லவே இல்லை.
அதிலும் முருகேஸ்வரி வந்திருக்க அந்த எரிச்சலை காட்டிக்கொள்ளவும் முடியவில்லை.
அது தன் வீட்டு விசேஷம் இல்லையே? தங்கையின் கணவரான ஏழுமலை மேல் அத்தனை மரியாதை வைத்திருந்தார்.
அதன் பொருட்டு அவரை அதிகாரம் எல்லாம் செய்துவிட முடியாதென்று அமைதியாய் இருந்தார்.
பெண்ணிற்கு பூவைத்து தாம்பூலம் மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்துகொண்டார்கள்.
இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என்று பேசி முடிவு செய்திருக்க அனைவருக்குமே அதில் மனமார்ந்த மகிழ்ச்சி.
அந்த நிகழ்வு முடிந்து வீட்டிற்கு வரவுமே ஆத்மா கம்பெனிக்கு சென்றுவிட வீடு திரும்புகையில் மாலை மயங்கி இரவாக இருந்தது.
உள்ளே வரும் பொழுதே ரிதுபர்ணா அவள் வீட்டு திண்ணையில் விளக்குகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
எல்லாம் எண்ணெய் ஊற்றப்பட்டு தயாராக இருக்க ஆத்மா வந்ததையும் கவனியாமல் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாய் இருந்தவள் சற்று நேரத்தில் கையில் தீபமேன்றிய விளக்கோடு வர ஆத்மாவை கண்டுகொண்டாள்.
“போன் பன்றேன்…” என கையால் சைகை காண்பித்தவன் தலையசைத்து உள்ளே செல்ல,
“நீ வச்சிட்டு போம்மா. நான் பார்த்துக்கறேன்…” என்றார் முருகேஸ்வரி.
“சித்தி நான் ஏத்தறேனே?…” என்றவளிடமிருந்து விளக்கை வித்யாவை வாங்க சொல்லியவர் அவளை ஏற்ற சொல்ல உள்ளே வந்தவள் ஆத்மாவின் அழைப்பை ஏற்றாலும் ஒன்றும் கேட்கவில்லை.
“பாட்டு சத்தத்துல எதுவுமே கேட்கலைங்க…” என்று மெசேஜ் அனுப்ப,
“ஓகே, நீ விளக்கேத்து…” என்று அனுப்பிவிட்டான்.
“மெசேஜ் பண்ணுங்க, இல்லைன்னா விளக்கு வச்சிட்டு வரேன்…” என அனுப்பியவள் அவனின் பதிலை எதிர்பார்த்து இருக்க பார்த்தவன் பதில் அனுப்பவில்லை.
மொபைலுடன் வெளியே வந்தவள் ஜன்னலோரம் அதனை வைத்துவிட்டு மற்ற விளக்குகளை கீழே போட்டிருந்த கோலத்தில் அழகாய் வைக்க,
“மத்ததை நாங்க எடுத்து வைக்கறோம். நீ தாமரை குளத்துக்கு விளக்கை கொண்டு போ…” என்று முருகேஸ்வரி ஒரு பெரிய தாம்பாளத்தை நீட்டினார்.
வாங்கிக்கொண்டு வந்தவள் தாமரைக்குளத்தை சுற்றிலும் விளக்கை வைத்துக்கொண்டே வர மறுபக்கம் நின்றிருந்தான் ஆத்மா.
அவனை பார்த்ததுமே கையிலிருந்த விளக்குடன் நெருங்கி செல்லவும் புன்னகைத்தவன்,
“ஹ்ம்ம், வை…” என்று சைகையில் விளக்கை காண்பித்து அவன் சொல்ல தலையசைப்புடன் அவற்றை எடுத்து வைக்க அந்த தட்டில் இருந்ததில் இருந்து தானும் விளக்கை எடுத்து அவள் சொல்லிய இடத்தில் வைத்தான்.
உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி. அது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அடுத்தடுத்து தானே வைத்தான்.
அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் விளக்கு எடுத்து வைப்பதை பார்த்துவிட்டு தான் வைப்பதை விட்டுவிட்டு அவனுக்கு ஒவ்வொன்றாய் எடுத்து நீட்டினாள்.
அதனை கவனிக்காமல் விளக்குகளை வைப்பதை மட்டும் கவனத்தில் வைத்து முகம் கொள்ளா புன்னகையுடன் அவற்றை வைத்தவன் முகத்தில் தீபத்தின் சுடர் ஒளிர்ந்தது.
அப்போது தான் அனைவரின் வீட்டிலும் வெளியில் விளக்கு ஏற்றிக்கொண்டிருக்க இதனை பார்த்தவர்களுக்கு ஒவ்வொருவிதமான உணர்வுகள் பொங்கியது.
ஆனால் யாரும் அவர்களை கலைக்கவே இல்லை. வித்யா மட்டும் இடையில் இன்னொரு தாம்பாளத்தை கொண்டுவந்து ரிதுவிடம் தந்துவிட்டு சென்றாள்.
வந்தது, தந்தது, சென்றது என எல்லாம் தெரிந்தாலும் ஆத்மாவின் மனதிற்குள் பதியவில்லை.
“என்ன வேடிக்கை? அடுத்து எடுத்து தா..” என அதட்டி ரிதுவிடம் விளக்கை வாங்கிக்கொண்டான் ஆத்மா.
அழகாய் ஒரு நிகழ்வு. அற்புதமாய் அவன் முகம் காட்டிய உணர்வு. வரிக்க முடியாத ஓவியமாய் அவர்கள் இருவர் மனதின் சுகந்த நிலை. தெவிட்டாத சூழ்நிலை.
இவை அனைத்தும் முரளியின் மொபைலில் காலத்திற்கும் அழியாத காட்சிகளாய் அவர்களின் ஒளிர்வான நிமிடங்கள் பத்திரமாய் பதிவாகிக்கொண்டிருந்தது.