தாமரைக்குளம் சுற்றிலும் தீபங்கள் எல்லாம் ஏற்றி முடித்துவிட்டு தாம்பாளத்தை வித்யாவை அழைத்து ரிதுபர்ணா கொடுத்தனுப்பினாள்.
குளத்தை சுற்றி வந்த ஆத்மா எல்லாம் சரியாக உள்ளதா, ஏதேனும் விட்டிருக்கிறதா என பார்த்துவிட்டு அடுத்த விளக்கிற்கு கை நீட்டினான்.
“அவ்வளோ தான், முடிஞ்சது…” என்று அவனின் கையை தட்டி அழைத்து சொல்ல,
“அதுக்குள்ளே முடிஞ்சதா? அதோ அந்த பவுண்டெயின் சுத்தி இடமிருக்கே? அங்க விளக்கு வைக்கலை?…” ஆத்மா ஆர்வத்துடன் கேட்க ரிதுபர்ணா சிரிப்புடன் வியப்பாய் பார்த்தாள் அவனை.
“அங்க எனக்கு எட்டாது. அது மேல எப்படி வைக்க? அதோட தண்ணி தெறிக்கும்…” என்று மறுப்பாய் அவனிடம் சொல்ல,
“விளக்கு முடிஞ்சதா? வேற இல்லையா?…” என்றான் மீண்டும் அவளிடத்தில்.
அதுவும் உண்மை தான். விளக்குகள் இத்தனை விளக்கு என்று கணக்காக இருந்தது. இதற்கு முன்பும் விவரம் தெரிந்ததிலிருந்து தாமரைக்குளம் பகுதியை அவள் தான் எடுத்து அலங்கரிப்பது.
இப்போதும் அதற்கு கணக்காய் விளக்குகள் இருக்க இப்படி திடீரென ஆத்மா கேட்பான் என நினைக்கவில்லையே?
“ஹ்ம்ம், எப்பவும் இத்தனை தான் வைப்பேனா. அதான்…” என்றவள்,
“கேண்டில் வேணுமா? அது இருக்கு….” என்றாள்.
“ம்ஹூம். மண் விளக்கு மாதிரி அது வராது. இதுவே இருக்கட்டும்…” என்று அங்கிருந்த கல்மேடையில் சென்று அமர்ந்துகொண்டான்.
பார்வை அனைவரின் வீட்டையும் சுற்றி வந்தது. விளக்குகள் வெளிச்சத்தில் வீடே சொர்க்கம் போல ஜொலிக்க பார்த்தவன் பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.
உதட்டில் உறைந்திருந்த புன்னகையுடன் அவனின் விழிகள் சுழன்றவண்ணம் இருக்க அவனுக்கருகே சென்றாள் ரிதுபர்ணா.
“உட்கார் ரிது…” என்று அவளுக்கு இடத்தை காண்பித்தவன் வானத்தை பார்த்தான்.
“பெருசா காத்து எதுவும் அடிக்கலை. விளக்கு எல்லாம் அழகா எரியுதே?…” என சொல்ல,
“ஹ்ம்ம், சில நேரம் தீபம் ஏத்தவே முடியாது. அவ்வளவு காத்தடிக்கும். இந்ததடவை அப்படி இல்லை…” நிறைவாய் அவனிடம் சொல்ல இருவரும் பேசியபடி இருக்கவும் ஆத்மாவின் வீட்டு வாசலில் ஆனந்தி இதனை கவனித்தபடி இருந்தார்.
செண்பகமும், விசாலாட்சியும் கூட அவரவர் வீட்டு வாசலில் நின்று இதனை பார்த்திருந்தனர்.
அவர்களுக்கு எல்லோருக்குமே அத்தனை சந்தோஷம் ஆத்மாவின் இந்த பங்குகொள்ளளில்.
இன்னும் அண்ணாமலை வீடு வந்திருக்கவில்லை. இளவரசுவுடன் வெளியே சென்றிருந்தார் அவர்.
காலை கோவிலில் இருந்து கிளம்பியவர்கள் இன்னும் வந்தபாடில்லை. ஏழுமலை மட்டுமே வந்திருக்க இவர்களை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
ஆத்மா தன் கைகளை பின்னால் ஊன்றி காலாட்டியபடி அமர்ந்திருந்த இலகுவான தோரணையில் ரிது அவனை பார்த்தபடி இருக்க,
“என்ன தெரியுதாம் என் முகத்துல? இப்படி பார்த்திட்டு இருக்க?…” என்றான் ஆத்மா கண்சிமிட்டி.
“சும்மா, பார்த்தேன். வேற ஒன்னும் இல்லை…” என சமாளித்தவள்,
“கொழுக்கட்டை செஞ்சிருக்கேன். கொண்டு வந்தா சாப்பிடுவீங்களா?…” என்றாள் தயக்கமாக.
எங்கே தான் தனது வீட்டிலிருந்து எடுத்துவந்தால் உண்ணுவானோ இல்லையோ என்று சந்தேகத்துடன் அவள் கேட்க,
“நீ செஞ்சதா?…” என்றான் ஆத்மா.
“ஆமா, நிஜமாவே நான் தான் பண்ணேன். நான் மட்டுமே பண்ணேன்…” வேகமாய் அவள் சொல்லவும் மென்னகை புரிந்தான்.
“ஏன் இவ்வளோ பதட்டம்? நீ செஞ்சதுன்னு சொல்ல இவ்வளோ டென்ஷனா?…”
“நீங்க நம்பலைன்னா? அதான்…” என்றவள்,
“கொண்டுவரட்டுமா?…” என கேட்க தலையசைத்தான் ஆத்மா.
ரிதுபர்ணா உடனே தலையசைத்து அவள் வீட்டிற்குள் செல்ல சென்ற திசையில் தான் ஆத்மாவின் பார்வை.
வீட்டின் திண்ணையின் ஓரத்தில் முருகேஸ்வரி வித்யாவுடன் பேசியபடி அமர்ந்திருந்தார்.
அவ்வப்போது வித்யா எழுந்துவந்து எண்ணெய் குறைந்த விளக்குகளை பார்த்து எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தாள்.
அதனை கவனித்தபடி ஆத்மா இருக்க முரளி வந்துவிட்டான் அங்கே. செண்பகம் முதலிலேயே சொல்லிவிட்டார் ரிதுவுடன் இருக்கையில் தொந்தரவு செய்யாதே என்று.
அதனால் ரிதுபர்ணா உள்ளே சென்றதும் தான் முரளி ஆத்மாவை நோக்கி வந்தான் தான் எடுத்த வீடியோவை காண்பிக்க.
“அட அட அட. நீங்க இப்படி இங்க உக்கார்ந்து நான் இப்பதான் பார்க்கறேன் ண்ணா…” என்று வந்தமர்ந்தான் முரளி.
“என்னடா எங்க ஆளையே காணும்?…” என ஆத்மா அவனின் முதுகில் தட்ட,
“நான் வந்திருந்தா மட்டும் என்னை கவனிச்சிருப்பீங்களா? நீங்க தான் விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம்ன்னு அவ்வளோ மும்மரமா விளக்கு வச்சிட்டிருந்தீங்களே?…” என்று கிண்டலாய் சொல்ல,
“நீ வேடிக்கை பார்த்தியாக்கும்? சும்மா நின்னிருக்க. வந்து நீயும் வச்சிருக்கலாம்ல?…” என ஆத்மா சொல்ல,
“எதுக்கு, சும்மாவே சின்ன பையன்னு சொல்லி எல்லா வேலையும் வாங்கறாங்க என்னை. இது மட்டும் ஏன் மிச்சம் வைக்கனுமா?…” என்று சிரிக்க பரத் வந்துவிட்டான் அங்கே.
“வாங்க புது மாப்பிள்ளை, வாங்க. காலையில கோவில்ல இருந்து கிளம்பி போனவங்களை இப்பத்தான் பார்க்கறேன்…” என்று முரளி அவனை கிண்டல் பேச,
“சும்மா இருக்கமாட்டியாடா நீ? உன்னை மாதிரியா? கம்பெனி வேலையை எல்லாம் யார் பார்க்க?…” என்று அவனும் அந்த கல் திண்டில் அமர மூவருமாக பேசிக்கொண்டிருந்தனர்.
“என்னவோ கம்பெனியை ஒத்தை கையில தூக்கி நிபாட்டிட்ட மாதிரி தான். நாமலாம் என்னவாம்?…” என்று முரலில் பதிலுக்கு இடக்காக பேச,
“ஏன் நீயும் நிப்பாட்டேன். நான் பார்க்கறேன்…” என்றான் பரத் சற்று கடுப்புடன்.
முரளி எப்போதும் கலகல டைப். அத்தனை கோபமாகவோ, சட்டென எரிச்சலாகவோ பேசிவிடமாட்டான்.
ஆனால் பரத் கிட்டத்தட்ட தன் மூத்த தாய்மாமாவை போல. குணத்திலும். என்ன ஒன்று வார்த்தைகள் அளந்து அதட்டி தான் வரும் அவனிடத்தில்.
பெரிதாய் தன்னை பெரிய மனிதன் போல காண்பித்துகொள்வதில் பரத்திற்கு அத்தனை கர்வம்.
ஆனால் ஆத்மாவிடம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் அவன் முன் அடக்கி வாசிப்பான்.
முரளி போல ஆத்மா அதை அத்தனை சகஜமாக எடுத்துக்கொண்டு போய்விடமாட்டானே?
“இப்ப யார் நிப்பாட்டினா என்ன? எல்லாருக்குமே வேலை பார்த்தா தான் வருமானம். முரளி அவனுக்கு குடுத்த வேலையை முடிச்சுட்டான். உன் வேலையை நீ இப்ப முடிக்கிற. இது பெரிய விஷயமா?…” ஆத்மா அடக்கி வைக்க பரத் எதிர்த்து பேசவில்லை.
“பாயிண்டு பாயிண்டு…” என அப்போதும் முரளி சிரித்தபடி சொல்ல அவனின் முதுகில் மீண்டும் செல்லமாய் ஒரு தட்டு தட்டினான் ஆத்மா.
பரத் இதனை கடுகடுத்து பார்த்தாலும் முகத்தில் அதனை காண்பிக்க முடியவில்லை.
வெறுமனே ஒரு புன்னகை. சிரித்து தலையசைத்து பார்த்தவன் வேறு பேச்சை பேச திசை மாறியது சூழ்நிலை.
அதற்குள் ரிதுபர்ணாவும் கொழுக்கட்டையுடன் வந்துவிட்டாள். ஆனந்தி கண்கள் தெறிக்க இங்கே பார்வையை பதித்திருந்தார்.
இதனை எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயம் தன் மகன் அங்கிருந்து எதையும் உண்ண விரும்பமாட்டான் என நினைத்திருக்க முதல் ஆளாய் ஆத்மா தான் அவள் கொண்டுவந்த தட்டில் இருந்து எடுத்தான்.
“பனை ஓலை கொழுக்கட்டையும் செஞ்சியா ரிது?…” என அதிலும் ஒன்றை எடுத்துக்கொண்டவன் நாசி அருகே கொண்டு சென்று வாசம் பிடித்தான்.
“ஹ்ம்ம், எப்பவும் செய்யறது தானே?…” என்றவள்,
“எடுத்துக்கோங்க ண்ணா…” என்று பரத்திடம் நீட்ட,
“நீ செஞ்சதா?…” என்று கேட்டபடி அவனும் எடுத்துக்கொண்டான்.
“அப்பறம் வெறும் கொழுக்கட்டை மட்டும் தானா அண்ணி?…” என முரளி அண்ணியில் அழுத்தம் கொடுக்க,
“ஒழுங்கா சாப்பிடு…” என்று சொல்லிவிட்டு அவர்கள் பேசட்டும் என்று தள்ளி சென்றுவிட்டாள்.
மனோ, ஆனந்தியை தவிர பெண்கள் மற்றவர்கள் அங்கே ஒன்று கூடி விசாலாட்சி வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டனர்.
வெகுநேரம் ஆத்மா, முரளி, பரத் பேசியபடி அங்கே அமர்ந்திருக்க அண்ணாமலையின் கார் உள்ளே நுழைந்தது.
இளவரசுவுடன் பேசிக்கொண்டே காரை விட்டு இறங்கியவரின் பார்வை சிரிப்பு சத்தம் கேட்ட திசைக்கு செல்ல அங்கே வீட்டு ஆண்மக்கள் மூவரும் அமர்ந்திருக்க கையில் தம்ளருடன் ரிதுபர்ணா நின்றுகொண்டிருந்தாள்.
மூவருக்கும் சுக்கு டீ போட்டு எடுத்து வந்தவள் அவர்களுக்கு தர அதை வாங்கி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க அண்ணாமலையின் மனது சற்று இடறியது.
இப்படி தாங்கள் கூட என்றாவது சேர்ந்து அமர்ந்து பேசியிருப்போமா என்றால் இல்லை.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. ஆத்மாவின் குணம் மற்ற அனைவரிடமிருந்து மாறுபட்டது. இத்தனை ஒட்டுதல் என்றும் அவன் காண்பித்ததில்லை யாரிடத்திலும்.
வருபவன் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்புவதில் தான் குறியாய் இருப்பானே தவிர்த்து ஆற அமர அமர்ந்து பேசியதெல்லாம் இல்லை.
இன்று எல்லாம் புதிதாய் தெரிந்தது. அதிலும் அவரின் புருவம் உயர்ந்தது மகனின் அந்த செயலில்.
கையில் தம்ளருடன் எழுந்தவன் டீயை குடித்தபடி எரிந்துகொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டுவிட்டு மற்றவற்றையும் பார்த்து ரிதுவிடம் காண்பித்து எதுவோ சொல்வது தெரிந்தது.
புருவங்கள் உயர முகத்தின் திகைப்பை மறைக்க முடியாமல் பார்த்திருந்தவர் மகன் பார்க்கும் முன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
மீண்டும் விளக்குகளை எல்லாம் திண்ணையின் ஓரத்தில் எடுத்து வைக்கும் வரை வெளியில் தான் இருந்தான் ஆத்மா.
ரிதுபர்ணா எல்லாம் முடித்துவிட்டு வரும்வரை அவளுடன் அங்கே வெளி திண்ணையில் தான் இருந்தான் ஆத்மா. அதில் ஆனந்திக்கு அத்தனை மனத்தாங்கல்.
இப்படி தங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவில்லையே என தாளமாட்டாமல் மனோவிடம் அவனின் செயல்களை எல்லாம் புலம்பி தீர்க்க கேட்டுக்கொண்டிருந்த அண்ணாமலைக்கு தூபம் போட்டதை போலானது.
“இப்படி உன் அண்ணன் மாறுவான்னு தெரியாம போச்சு. நல்லாயிருக்கட்டும். ஆனா நம்ம வீட்டை பத்தி நினைச்சானா? கவனிச்சானா?…” என்று பேச,
“வாயை மூட்டிட்டு இருக்கமாட்டியா நீ? இதை பேசி அவன் ஏடாகூடமா பேசத்தான?…” என்று அண்ணாமலை எரிந்து விழும் வரை பேச்சுக்கள் இருந்தது.
‘நீ மட்டும் அண்ணன்கிட்ட பேசினியாம்மா?’ என கேட்க நினைத்த மனோ வாயை மூடிக்கொண்டாள்.
பேசினால் அதற்கு ஒருபாடு பேசி தீர்ப்பார் என்று மூச்சு விடவில்லை அவள். தானாக ஓயட்டும் என்று.
“எங்கன்னு எட்டி பாருடி, இன்னும் ரெண்டுபேரையும் ஆளை காணும். அவன்பாட்டுக்கு அங்க போய் உங்கப்பா அதுக்கு வேற குதிக்க போறார்…” என மகளிடம் சொல்ல,
“வருவாங்கம்மா…” என்றாலும் எழுந்து சென்று பார்க்காமல் இல்லை.
வெளியே வந்து பார்க்க யாரையும் காணவில்லை. அனைவரும் அவரவர் வீடுகளுக்குள் இருக்க ஆத்மாவோ, ரிதுவோ தென்படவில்லை.
“ம்மா, அவங்க இல்லை…” என்றதுமே நெஞ்சே நின்றுவிட்டது ஆனந்திக்கும், உள்ளே கேட்டிருந்த அண்ணாமலைக்கும்.