சற்றுமுன் தான் மூடியிருந்த கண்களை சிரமம் கொண்டு பிரித்தெடுத்தாள் ரிதுபர்ணா.
கழுத்தோடு இறுக்கமாய் பற்றியிருந்த ஆத்மாவின் கையை விலக்க முயன்றவள் அவனையும் சேர்த்து எழுப்பியிருக்க மீண்டும் அவனின் வலிமையான பிடியில் சிக்கிக்கொண்டாள்.
“டைமாச்சு, எழுந்துக்கனும். விடுங்க…” என்றவளின் மெல்லிய சத்தத்தில் ஒற்றை கண்ணை மட்டும் திறந்தவன்,
“நான் எழுந்துக்க டைமாகும். இப்ப நீயும் எழுந்துக்க வேணா. இப்படியே இருப்பியாம்…” என அவளை இறுக்கிக்கொண்டு திரும்பி நிமிர்ந்து படுத்தவன் தன் தோளில் ரிதுவை சாய்த்துகொண்டான்.
தோளில் இருந்து ஆங்காங்கே அவன் நெஞ்சத்தில் மருதாணியின் தடங்கள் செக்க சிவந்துபோய் இருக்க ரிதுவின் பார்வை அதில் படிந்தது.
மொத்த உறக்கமும் கலைந்திருக்க அவள் இதழ்களில் வெட்கத்தின் அடையாளமாய் அழகிய புன்னகை.
“கவனமா தான் தூங்கினேன். எப்படி அன்னைக்கு மருதாணி ஒட்டுச்சோ?…” என்று தனக்கு தானே கேட்டுக்கொள்ள,
“இன்னொருதடவை வச்சிட்டு வாயேன். எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்…” என சீண்டலுடன் சொல்லியவன் வாயில் கை வைத்து மூடியவள்,
“மூச், அதான் தூங்கனும்னு சொன்னீங்க தானே? தூங்குங்க…” என்று மிரட்டல் போல அவள் சொல்ல,
“உன்னை யாருடி என் காதுல ரகசியம் பேச சொன்னா? இனி எங்க தூங்க?…” என்றவன் கைகள் இன்னும் அவளை வளைத்தது.
தன் முகத்திற்கு நேராய் அவளை கொண்டுவந்தவன் மீசையின் குறுகுறுப்பில் இரு கைகளையும் கொண்டு அவன் முகத்தை மூடினாள்.
“போதும், ஒன்னு தூங்குங்க. இல்லைன்னா என்னையாவது விடுங்க. நான் போய் எல்லாம் பேக் பண்ணனும்…”
“என்ன பேக்கிங்?…”
“அதான் ஊர்ல இருந்து வரப்போ கொண்டுவந்த ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கனும். நான் எதையுமே ரெடி பண்ணலை…” என்றாள் ரிதுபர்ணா.
அவளின் பேச்சுக்களை கேட்டதென்னவோ ஆத்மாவின் காதுகள் மட்டுமே. மற்றவை எல்லாம் அதற்கு எதிரான வேலையை செய்துகொண்டிருக்க,
“ப்ச், சொன்னேன்ல…” என்று அவனை தள்ளினாள்.
“அதெல்லாம் பேக் பண்ணவேண்டாம். இங்கயே இருக்கட்டும். உனக்கு வேணும்ன்றதை சென்னைல வந்து வாங்கிக்கோ…” என கூறியவன் அதற்கு மேல் பேசும் நிலையிலில்லை. அவள் பேச்சை கேட்கும் நிலையிலுமில்லை.
அவளின் நூதனங்கள் அவன் தீண்ட தீண்ட தீர்ந்திடாமல் அவனை உள்ளிழுக்க முற்றாய் அவளோடு ஒன்றி போனான். மீண்டும் ஒரு குட்டி உறக்கம்.
அயர்ந்து உறங்கியவனிடமிருந்து விலகியவள் எழுந்து குளித்துவிட்டு உடை மாற்றி வந்து அவன் எழுவதற்காக காத்திருந்தாள் ரிதுபர்ணா.
அவனின்றி கீழே இறங்கி தனியே செல்ல முடியவில்லை. முதல் நாளும் அவனோடு ஒன்றாகவே வெளியேறி சென்றிருக்க இப்போதும் அதற்கு காத்திருந்தாள்.
“என்னாச்சு ரிது? பேக் பண்ணனும்னு கிளம்பின? போகலையா?…” என்று அவளை நோக்கி கண்சிமிட்டி கை நீட்டி அழைத்தான் அருகே.
“நான் மாட்டேன். குளிச்சாச்சு…” உடனே மறுக்க அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“நான் அதுக்காக கூப்பிடலை. காது, கழுத்தெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ. இல்லைன்னா அன்னைக்கு மாதிரி கேட்டுடுவாங்க யாராச்சும்…” என கிண்டலடிக்க,
“உங்களை…” என்று கையில் இருந்த டவலை வீசி எறிந்தாள்.
“தனியாவா? நீங்க வாங்க…” என்றாள் ரிது அவனை நெருங்கி.
“நீ என்ன சின்ன பிள்ளையா? தனியா போக பயப்பட?…” என்றவன் கேள்வியில் அவள் மௌனமாக,
“இந்நேரம் யாரும் இருக்கவும் மாட்டாங்க ரிது. எதுக்கு பயம்?…”
“எனக்கொண்ணும் பயமில்லை…” என்று வேகமாய் சொல்லியவளுக்கு தனியே செல்ல விருப்பமில்லை.
மனது கிடந்து அடித்துக்கொண்டது. அவனின்றி உள்ளே வருவதும் இல்லை. வெளியே செல்வதும் இல்லை.
இன்று தனியே தன் வீட்டிற்காக இருந்தாலும் ஆத்மா இருந்தால் அந்த ஒரு தைரியத்தில் கடந்து சென்றுவிடுவாள்.
இவன் என்னடாவென்றால் இன்றைக்கு இத்தனை வம்பு செய்கிறானே என்றிருந்தது ரிதுபர்ணாவுக்கு.
“என்னை வாசல் வரைக்கும் மட்டும் கொண்டுவந்து விட்டுட்டு திரும்பி வருவீங்களாம். ப்ளீஸ்…” என்று மீண்டும் அழைக்க,
“என்ன இது? சின்ன குழந்தை மாதிரி? கீழே இறங்கினா ஹால். ஹாலை தாண்டினா வாசல். அங்க உன் அம்மா வீடு. இதுக்கு போக இவ்வளோ ஆர்ப்பாட்டமா?…” என சிவந்திருந்த கண்களை கசக்கிக்கொண்டு அவன் எழுந்துகொள்ள பார்த்தான்.
முகத்தில் சோர்வு தட்டியிருந்தாலும் புன்னகையுடன் இருந்தவனை ரொம்ப படுத்துகிறோமோ என பார்த்தாள் ரிது.
தான் மட்டும் சென்றால் அண்ணாமலையை பார்க்க நேரிட்டு ஏதேனும் சொல்வாரோ என்ற தயக்கத்தில் தான் அவனையும் அழைத்தது.
இப்போது ஆத்மா சொல்வதும் சரி என்றுதான் மனதிற்கு பட்டது. எத்தனை நாளுக்கு அவனை துணைக்கு அழைப்பது?
யார் என்னவும் பேசட்டும். தான் யாருக்கும் பதில் சொல்ல போவதில்லை என நினைத்துக்கொண்டவள்,
“என்னாச்சு, கண்ணி விட்டிருக்கா? இதுவும் போச்சா?…” என கண்ணாடியை பார்க்க போக,
“இங்க வா ரிது, நான் பார்க்கறேன்…” என்றதும் அவனை நம்பி அமர்ந்தவள் காதோடு தன் கன்னம் உரசியவனின் முற்றுகையிலிருந்து திமிர்ந்து எழ முயன்றாள் ரிதுபர்ணா.
ஆழ்ந்த ஒரு முத்த பரிமாற்றம். கொடுத்ததும் அவனே. பெற்றதும் அவனே. அவளை அவனாக விடுவிக்க முறைப்புடன் அவனை ஏறிட்டாள்.
“நிஜமாவே ஜிமிக்கி கண்ணி ரெண்டா தான் தொடுக்கி இருந்துச்சு. அது சுத்தியிருக்குன்னு தெரியலை. பக்கத்துல வரவும் ஸ்லிப்பாகிட்டேன். வேற ஒண்ணுமில்லை….” என்று சிரித்தவன்,
“ஓகே ஓகே, நீ போ, போ. கிளம்பு…” என்றான்.
“உங்களை வச்சுக்கறேன் இருங்க…” என்று முறைப்புடன் சொல்லிவிட்டு நகர,
“வச்சுக்கறேன்னுட்டு எங்க போறீங்க மேடம்?…” என்றவன் சீண்டல் குரலை திரும்பி பார்க்க இதழ் குவித்து விசிலடித்தவன் விழிகளில் மீண்டும் அழைப்பு.
“வா வா…” என்றான் விரல் நீட்டி அவளிடம் முகம் கொள்ளா புன்னகையுடன்.
அவனின் உயிரை திருடும் கள்ளச்சிரிப்பை கண்டு அவ்விடம் விட்டு செல்லவே மனதில்லை ரிதுவிற்கு.
இன்னும் சிறிது நேரம் இவனுடன் இருந்துவிட்டு சேர்ந்து கிளம்பினால் என்ன என்ற மனதை அடக்கியவள்,
“வரமாட்டேன்…” என்று மூக்கை சுருக்கி கண்ணால் மிரட்டிவிட்டு அந்த புன்னகையை தனக்குள்ளும் வாரியபடி அறையை விட்டு சென்றாள்.
“ஹ்ம்ம், தனியா போய் பழகட்டும்ன்னு அனுப்பறதுக்குள்ள எவ்வளோ பாடு. கஷ்டம்டா ஆத்மா…” என தலைமுடியை கோதிக்கொண்டவன் அதற்கு மேலும் இருக்க முடியாமல் தானும் கிளம்பி கீழே செல்ல விழைந்தான்.
மாடியிலிருந்து இறங்கும் வரை சாதாரணமாய் வந்தவளுக்கு கீழே இறங்கி ஹாலுக்கு வரும் முன் தன்னை போல ஒரு படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டது.
இத்தனை வருடம் அப்படியே வளர்ந்துவிட்டவளுக்குள் அந்த எச்சரிக்கை உணர்வு தானாகவே வந்தமர்ந்தது.
தாமதிக்காமல் சட்டென ஹாலை கடந்துவிட வேகமாய் நடக்க முயன்றவளால் முடியவில்லை.
அண்ணாமலையின் கண்ணில் மட்டும் பட்டு வாயில் விழுந்துவிட கூடாது என்ற வேண்டுதலுடன் நடையை எட்டி போட,
“ஒரு நிமிஷம், நில்லுங்கம்மா…” என்றார் ராணி.
சட்டென ப்ரேக்கடித்ததை போல் நின்றவள் பார்வை ஹாலை சுற்றி பார்வையிட்டு ராணியை பார்த்தாள்.
“என்ன சொல்லுங்க?…” என ரிது கேட்கவும்,
“ராணின்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க…” என்றார் அவர்.
“இல்லை இருக்கட்டும், என்னன்னு சொல்லுங்க…” என அவசரமாய் கேட்டவளுக்கு சென்றால் போதும் என்று அங்கே முள்ளில் நிற்பதை போல நின்றாள்.
“ஒருநிமிஷம் இப்படி வாங்க ம்மா…” என ராணி டைனிங் டேபிள் பக்கம் போக ‘இதென்னடா?’ என யோசனையுடனே அவளும் சென்றாள்.
“ஊஃப், இதுக்கா கூப்பிட்டீங்க?…” என்று நிம்மதியானாள்.
“ஆமா, இப்ப காபி போட்டுடறேன். உட்காருங்க…” ராணி சொல்ல,
“எனக்கு வேண்டாம்ங்க. வரேன்…” என்று மீண்டும் மறுத்தாள் ரிது.
“இல்லைங்கம்மா, தம்பிக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாங்க. நான் இப்ப கொண்டு வரேன். குடிச்சிட்டு போங்களேன்…” ராணி அவளை விடவில்லை.
அன்று அத்தனை பேசினானே ஆத்மா. உங்களுக்கு அன்றே சொன்னேனே என இன்றும் தன்னிடம் வந்து கேட்டால் என்ன செய்ய என பயத்துடன் ரிதுவை பிடித்துக்கொண்டு அவர் விடவில்லை.
“அதெல்லாம் நினைக்கமாட்டாங்க. நீங்க சங்கடப்படாதீங்க…” என அவரை சமாதானம் செய்ய,
“இல்லைங்கம்மா. அன்னைக்கே உங்களுக்கு குடுக்கலைன்னு சத்தம் போட்டாங்க. இப்ப தரேன். ரூமுக்கும் கொண்டு போங்க. தம்பிக்கும் சேர்த்து…” என்று அவர் பேச கண்ணை கட்டியது ரிதுவிற்கு.
“நேத்தும் அப்படியே கிளம்பிட்டீங்க. சீக்கிரம் போய்ட்டதால நான் ஒன்னும் பண்ண முடியலை. இருங்க இப்ப போட்டுடறேன். டிக்காஷன் இறக்கிட்டேன்…” என அவர் சொல்ல,
“அச்சோ, அவங்க இப்ப தூங்கறாங்க. எனக்கும் வேண்டாம். விடுங்களேன்…” என சொல்லி திரும்ப அங்கே கோபமாய் ஆனந்தி நின்றிருந்தார்.
ஒரு நொடி திடுக்கிட்டாலும் ஆனந்தி தானே என இயல்பாகி பதட்டமின்றி ரிதுபர்ணா கடந்து செல்ல,
“ஏன் மகாராணி இங்க எல்லாம் காபி குடிக்க மாட்டாங்களோ?…” என்று அவர் ராணியிடம் கோபமாய் கேட்க அதனை திகைத்து போய் பார்த்தாள் ரிது.
ஆனந்திக்கு முதல்நாள் நடந்த நிகழ்வில் இருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
‘என் பிள்ளை மட்டும் இவள் தந்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். இவள் இங்கே இதை கூட மறுப்பாளா?’ என கோபம் ஆனந்திக்கு குறையவில்லை.
என்னதான் மகன் தங்கள் மீது பெரிதாய் பற்றின்றி இருந்தாலும் தாலி வாங்கி வந்தவள் அதனை சொல்லி மாற்ற வேண்டாமா என எதிர்பார்த்தார்.
அதனை தான் தன் கணவனிடம் செய்தோமா என்ற எண்ணம் மட்டும் அவருக்கு எழவே இல்லை.
ரிதுபர்ணா ஆனந்தி பேசியதற்கு என்ன பதில் சொல்ல என திகைத்து நின்றது ஒரு நொடி தான்.
பின் ‘தன்னிடமா இவர் கேள்வி கேட்டார்? ராணியிடம் தானே?’ என்று நினைத்தவள் அங்கிருந்து நகர முற்பட மீண்டும் ஒரு சத்தம் ஆனந்தியிடம்.
“நான் பேசிட்டே இருக்கேன். எவளோ என்னவோ கத்தறான்னு போனா என்ன அர்த்தம்? அவ்வளவு ஏத்தமா?…” என்று இப்போது நேரடியாக பேச சுத்தமாய் ரிதுபர்ணாவிற்கு பேச்சு எழவில்லை.
அப்போதும் ஒன்றும் பேசாமல் ராணியையும், ஆனந்தியையுமே அமைதியாக பார்த்தவளுக்குள் பதட்டம்.
மனோ வந்துவிட்டால் அந்த நேரம் பார்த்து. சற்றே ஆசுவாசம் கொண்ட ரிது எங்கே அண்ணாமலையும் வந்துவிடுவாரோ என அங்கிருந்து கிளம்புவதில் தான் இருந்தாள்.
இல்லை என்றால் நேராக மாடிக்கே சென்றுவிடலாம் என மாடிப்பகுதியை பார்க்க அங்கிருந்து செல்லவேண்டும் என்றால் ஆனந்தியையும், மனோவையும் தாண்டிக்கொண்டு தான் செல்லவேண்டும்.
“ராணி நீ காபி போடு இவ குடிக்காம எப்படி போறான்னு பார்க்கறேன். என் மகன் மட்டும் இவ நீட்டினதும் எடுக்கனுமா?…” என்று ஆனந்தி சொல்ல,
“இல்லை எனக்கு வேண்டாம்…” என்றவளுக்கு படபடப்பில் பேச்சே வரவில்லை.
காபி அவள் குடிப்பதில்லை. எங்கே கொண்டுவந்து குடிக்கவே வைத்துவிடுவாரோ என பதறி போனவள்,
“எனக்கு காபி வேண்டாம். நான் போறேன்…” என்று சொல்லி செல்ல அவள் முன் வந்து மறித்தபடி நின்ற ஆனந்தி,
“இந்தா நில்லு. நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க?…” என்ற அதட்டலில் ரிதுபர்ணாவின் முகம் மாறியது.
“எனக்கு பேர் இருக்கு…” என்றாள் மெல்லிய குரலில் சற்று அழுத்தமாய்.
ஆனந்தி ‘இந்தா’ என்று அழைத்த தொனி சுத்தமாய் பிடிக்கவில்லை. அதென்ன இந்தா என சுர்ரென்று ஏறியது.
பொறுமையாக இருந்தால் இவர் என்னை இப்படி பேசலாமா என எண்ணம் துளிர்க்க பயம், பதட்டம் எல்லாம் பின்னுக்கு சென்றது.
“உனக்கு பேர் இருக்கட்டும். எனக்கென்ன? நீ என்னதான் நினைச்சிட்டு இருக்க?…” என்று ஆனந்தி கேட்க,