“நீ சும்மா இரு மனோ. இவளுக்கு காபி குடுக்கலைன்னு உன் அண்ணன் கேள்வி கேட்பான். சண்டை போடுவான். சரி அவனுக்காக இவளை இருந்து காபி குடிக்க சொன்னா இவ்வளோ அடம் பண்ணுவாளா இவ?…” என்று சொல்ல ரிதுபர்ணா இன்னுமே அமைதியாக பார்த்தாள் அவரை.
“ஏன்? நேத்து உன் அண்ணன் மட்டும் இவ குடுத்ததை வாங்கி சாப்பிடலையா? இல்லை அவனோட சேர்ந்து இங்க உக்கார்ந்து இவ சாப்பிடலையா? அவனில்லாம இவ கீழ வந்து நாம ஒண்ணுமே குடுக்காம இருந்து அதுக்கும் உன் அண்ணன் நம்மளை கேள்வி கேட்கனும்….”
“மொத்தமா இந்தம்மா அவனை அவ வீட்டுப்பக்கம் இழுத்துக்கனும். இதான் இவ திட்டமா இருக்குமோ என்னமோ? உன் அண்ணனும் அப்படித்தான நடந்துக்கறான்…” என்று ஆனந்தி பேச அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் ரிதுபர்ணா அவரை தாண்டி நடந்தாள்.
“பார்த்தியா? பார்த்தியா? எப்படி போறான்னு பாரு. புருஷனுக்கு கொண்டு போன்னு சொன்னாலும் செய்யமாட்டாளாம். இவளும் குடிக்கமாட்டாளாம். இங்க என்ன விஷமா வச்சிருக்கோம்?…” ஆனந்தி போட்ட சத்தத்தில் அண்ணாமலையும் வந்துவிட அவர் வந்தது கூட ரிதுபர்ணா கவனிக்கவில்லை ஆனந்தியின் பேச்சில்.
“உங்கப்பா சொல்லுவார் யாரை எங்க வைக்கனுமோ அங்க வைக்கனும்னு. இவளை உன் அண்ணன் தலையில தூக்கி வச்சான்ல. ஆட தான் செய்வா. நம்ம பேச்சுக்கு எங்க மதிப்பு இருக்கும்?…” என்று கேட்டதும் அவரை திரும்பி பார்த்தாள் ரிதுபர்ணா.
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் பேசனுமா? பதில் சொல்லனுமா? என்ன பதில் சொல்லனும்? கேளுங்க…” என்று அவரின் அருகே வந்து நின்றுவிட்டாள்.
‘போய்விடு, போய்விடு’ என்ற மனதை அடக்கி வைத்து ஆனந்தியின் இந்த வீண் பேச்சிற்கு அவள் பதில் கொடுக்க திரும்ப ஆத்மாவின் வருகையும் அதனை ஒட்டி இருந்தது.
“எவ்வளோ திமிரா பேசற? உன்னை என்ன கொடுமையா படுத்தறோம்? காபி குடின்னு சொன்னதுக்கு திமிரா போற?…” ஆனந்தி அவளின் இந்த எதிர் கேள்வியில் கொந்தளித்து கேட்க,
“வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனா அதுக்கு பேர் திமிரா? எனக்கு தெரியாதே?…” என்ற ரிதுபர்ணா,
“எனக்கு இப்ப குடிக்க தோணலை. அதை கூட நான் சொல்ல கூடாதா? எனக்கு புரியலை. எதுக்கு இவ்வளோ பேசறீங்க? அதோட நான் காபியும் குடிக்கமாட்டேன்….” என்று கேட்க,
“அண்ணி ப்ளீஸ், நீங்க கிளம்புங்க. அம்மா ஏதோ கோவத்துல…” என மனோ சமாதானம் செய்யும் பொழுதே,
“நீ எதுக்கு இவளை சமாதானம் செய்யற? நாம என்ன தப்பு பண்ணினோம்? வாழ்க்கையே இல்லாம நின்னவளுக்கு என் மகன் வாழ்க்கையை பிச்சையா போட்டிருக்கான். அந்த நினைப்பு இல்லாம இவளுக்கு பேச்சை பார்த்தியா? அவன் மட்டும் அன்னைக்கு இல்லைன்னா இவ நிலைமை என்ன?…”
“என்ன சொல்லனும்? என் புருஷன் சொல்லுவாரு, பிச்சையா கூட அந்த வீட்டுக்கு எதுவும் போட முடியாதுன்னு. இப்ப என் பிள்ளை உனக்கு பிச்சை தான் போட்டிருக்கான்…” என சொல்ல அந்த இடத்தில் அசாத்திய பேரமைதி.
“அதை மனசுல வச்சுட்டு நடக்கனும். அவன் தான் புதுசா கல்யாணமானதுல உனக்கு சலுகையும், இடமும் குடுத்தா நீ தலைக்கு மேல நிப்பியா? வந்த பாதையை மறக்க கூடாது…” என வார்த்தைகளால் விஷத்தை பாய்ச்சினார்.
ரிதுவை எதற்கு அதட்ட ஆரம்பித்தோம் என்றதெல்லாம் மறந்து ஆனந்தியின் கண்மண் தெரியாத கோபம் அவரை எங்கோ இட்டு சென்றது.
மாடியில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்த ஆத்மாவும், உள்ளிருந்து அண்ணாமலையும் வரும்முன் ஆனந்தியின் பேச்சிற்கான பதில் கிடைத்துவிட்டது அவருக்கு ரிதுவிடமிருந்து.
“பிச்சையா? யாருக்கு யார் பிச்சை போட்டது? எனக்கு தெரிஞ்சு கேட்கிறதுக்கு பேர் தான் பிச்சை. குடுக்கறதுக்கு பேர் தானம்…” என்றவள்,
“எங்க கல்யாணத்துல நடந்தது அதுதான். என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு பிச்சை கேட்டது உங்க பிள்ளை. தானம் குடுத்தது நான். உங்க மகன் வந்து கல்யாணம் பண்ணிக்க கேட்காம நானா ஒன்னும் அவரை தேடி போகலையே? கேட்கலையே? இப்ப சொல்லுங்க யாருக்கு யார் பிச்சை போட்டான்னு….”
ரிதுவின் பேச்சில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து பார்க்க ராணிக்கு ஏன் தான் தான் கிளம்பி சென்ற பெண்ணை பிடித்து நிறுத்தினோமோ என்றானது.
“என்ன என் பிள்ளையை பிச்சை கேட்டான்னு சொல்றியா? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா கொஞ்சமும் பயமில்லாம என்கிட்டையே இப்படி பேசுவ…” என்று ஆனந்தி கேட்க,
“நான் தைரியமில்லாம ஒன்னும் நீங்க பேசினதுக்கெகேல்லாம் அமைதியா போகலை. ஒதுங்கி போனேனே தவிர பயந்து போகலை. அதை புரியறதும் புரியாததும் உங்க பாடு. எனக்கு தேவை இல்லை…” ரிது பதில் சொல்ல,
“திரும்பவும் அப்படியே பேசற? வாழ வந்த வீடுன்னு கொஞ்சமாச்சும் நெஞ்சுல அச்சமிருக்கா? அவ்வளோ துணிச்சலா?…” ஆனந்திக்கு போருக்க முடியவில்லை. அதற்கும் ரிது பதில் சொல்லும் முன்,
“இதுல என்ன துணிச்சல்? அவ ஒன்னும் தப்பா பேசலையே?…” என்றவனின் குரலில் அதுவரை இருந்த ஆவேசம் சென்று பரிதவிப்பு உண்டானது ரிதுபர்ணாவிற்கு.
ஆத்மாவை பார்த்த நொடி அவன் முகத்தில் வந்துபோன உணர்வில் உயிரெல்லாம் சிதறியது ரிதுவிற்கு.
அவனருகே சென்று பேச கூட ரிதுவிற்கு முடியவில்லை. சட்டென மனதெல்லாம் பாரமேறிய உணர்வு.
“கண்ணா பார்த்தியா எப்படி பேசறான்னு?…” என ஆனந்தி சொல்ல,
“தப்பா பேசலைன்னு இப்ப தானே சொன்னேன்? நீங்க பேசினதுக்கு பதில் சொன்னா. கரெக்ட் தான்….” என்றவன்,
“நான் பிச்சை தான் கேட்டேன். நானா தான் கேட்டேன். இதை சொல்ல எனக்கு ஒன்னும் அசிங்கமில்லை…” என்றான் ரிதுபர்ணாவை பார்த்து.
ஆத்மாவின் சிவந்திருந்த கண்களில் அப்படி ஒரு வலி. செவ்வரியோடிய நரம்புகள் எல்லாம் இன்னும் செஞ்சாந்தை பூச ரிதுவிற்கு அவனின் கையை பிடித்துக்கொண்டு தன்னுணர்வை சொல்ல மனது துடித்தது.
‘தனியா போகலைன்னு சொன்னேனே? கேட்டியா?’ என்ற ஆதங்கம் வேறு அவளை அலைகழிக்க அவ்வுணர்வை முகத்தில் பிரதிபலித்தாள் ரிது.
அவளால் அவன் பார்வையின் வீச்சிலிருந்து நின்ற இடத்திலேயே வேரோடிவிட்ட கால்களை நகற்ற கூட முடியவில்லை.
“நான் கோவத்துல இவளை சொன்னா இவ உன்னை சொல்லுவாளா?…” என ஆனந்தி பேச,
“ஏன் ரிதுவோட அப்பாம்மா மேல இருந்த கோவத்துல அப்பா ரிதுவை பேசலையா? அது மாதிரி தான். பேசினதுல என்ன தப்பு?…” என்று சாதாரணமாக சொல்லியவன்,
“ரிது வா போகலாம். நான் வேலையை முடிச்சிட்டு வரேன்….” என்று முன்னே நடக்க அவளும் அவனுடன் தடுமாற்றமும், தள்ளாட்டமுமாய் நடந்தாள்.
நிச்சயம் தன் பேச்சு அவனை காயப்படுத்தி இருக்கிறது என்று தெளிவாய் தெரிந்தாலும் நெருங்கி பேசும் வாய்ப்பை அவன் தனக்கு அளிக்காததை போலவே இருந்தது.
அவனின் பெற்றோரின் முன் சாதாரணமாய் பேசுவதை போலிருந்தாலும் அப்படி இல்லை என்று அவளால் உணர முடிந்தது.
“என்னங்க, ஒரு நிமிஷம்…” என்ற அழைப்பில் கூட அவள் முகம் பார்க்கவில்லை ஆத்மா.
வெளியே வாசலுக்கு வந்துவிட்டவர்கள் மற்றவர்களின் பார்வையில் சாதாரணமாக காட்டிக்கொள்ள முயன்று பார்த்தனர்.
“ஓகே, நீ போய் உன் வேலையை பாரு. நான் கம்பெனிக்கு கிளம்பறேன்…” என்று சொல்லிவிட்டு தனது காரை எடுத்து கொண்டு கிளம்பி சென்றான்.
ஒன்றும் பேசாமல் சென்றவனுக்கு சற்று நேரத்தில் ரிதுபர்ணா அழைப்பு விடுக்க எடுக்கப்படவில்லை.
மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தவள் அவன் எடுக்காமல் இருக்கவும் சரி எப்படியும் ஊருக்கு கிளம்ப தன்னை அழைத்து செல்ல வருவான் என்று நினைத்தாள்.
ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லை. அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே வீட்டிற்கும் வராமல் சென்னைக்கு கிளம்பியிருந்தான் ஆத்மா.
வீட்டினரிடம் தவறென்ன என சாதாரணமாய் சொல்லிவிட்டவனுக்கு அதனை மனதிற்குள் அப்படி நினைத்து கடக்க முடியவில்லை.
கனமாய் மனதில் அந்த வார்த்தை தேங்கி நின்று உயிரை அறுக்க அப்போதைக்கு வேறு எதையும் யோசிக்காமல் சென்னைக்கு புறப்பட்டிருந்தான் ஆத்மா.