ஆத்மா கிளம்பி சென்ற திசையை பார்த்தபடி அவன் வீட்டு வாசலில் நின்றவள் நடை தளர்ந்து போய் தன் வீட்டை நோக்கி வந்தாள்..
முருகேஸ்வரி வீட்டினுள் இல்லாததால் ரிதுபர்ணா வந்திருந்த நிலையை அவர் கவனிக்கவில்லை.
வந்தவள் நேராக தன்னறைக்கு சென்று படுத்துவிட்டாள். இந்த காலை நேரத்தில் கம்பெனியாம்?
அழுகை முட்டிக்கொண்டு வந்தது ரிதுவிற்கு. இப்படி செய்துவிட்டோமே என ஒருபுறம் அடித்துக்கொண்டாலும் ஆனந்தியின் பேச்சு வேறு இன்னும் தீயை தணியவிடவிலை.
“எதிர்த்து பேசு. நீ பேசாம இருக்க இருக்க இப்படித்தான் சொல்லுவாங்க…” என்ற விசாலாட்சியின் பேச்சை கூட எப்போதும் சட்டை செய்யாதவள்.
இன்றைய அந்த நிமிடங்களை மறக்க முயன்றும் முடியாமல் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
மூடிய விழிகள் திறக்கும் நொடி அனைத்தும் கனவென்றாகி அவன் அணைப்பில் இருந்துவிட மாட்டோமா என மனது அடித்துக்கொண்டது.
இல்லை, எதுவும் கனவில்லை என்பதற்கு சாட்சியாய் விழிகளில் நீர் சுரக்க துடைத்துவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
ஆத்மாவின் பார்வை அடியாழம் வரை அவளை சுண்டி இழுக்க அவனுக்கு அழைத்து பேசவே பயமாக இருந்தது.
தனது மொபைலை எடுத்தவள் அழைப்போமா வேண்டாமா என யோசித்து யோசித்து மண்டை காய முருகேஸ்வரி வந்துவிட்டார்.
“கண்ணு…” என அவள் அறையின் வாசலில் வைத்து அழைக்கவும் ரிது எழுந்து செல்ல முகம் சோர்ந்து விழிகள் சிவந்து இருக்க முருகேஸ்வரி வேறு விதமாய் நினைத்துக்கொண்டார்.
“என்ன கண்ணு படுத்துட்ட? நான் பின்னாடி அரிசி களைஞ்ச தண்ணிய மாட்டுக்கொட்டில்ல ஊத்த போய்ட்டேன். தேடுனியா?…” என்று கேட்க,
“ம்ஹூம், இல்லை சித்தி…” என்றாள்.
குரல் எழும்பவே இல்லை. என்ன பேச? இதில் என்ன பேச முடியும்? அவரிடம் நடந்ததை சொல்லவும் தயக்கமாக இருந்தது.
ஒருவேளை விஷயம் யாருக்கும் தெரியாமலே இருந்து தன் மூலம் ஏன் தெரியவேண்டும் என நினைத்தாள்.
ஏற்கனவே பிரச்சனை, இதில் தான் வேறு இதனை சொல்லி பெரிதாய் வெடித்துவிட வேண்டாம் என்று சொல்லாமல் இருந்துகொண்டாள்.
“கண்ணெல்லாம் வீங்கி சிவந்திருக்கு. தலை எதுவும் வலிக்குதா?…” என அவர் கேட்க,
“இல்ல சித்தி…” என்றவள்,
“ஹாங், ஆமா. வலிக்குது…” என மாற்றி கூற கண்ணீர் ததும்பியது விழிகளில்.
“என்ன கண்ணு? ஏன் அழற?…” முருகேஸ்வரி பதறி போனார்.
“ஹாங், தலைவலி. ரொம்ப வலிச்சதா. அதான்…” என சுதாரித்து கண்ணை துடைத்தாள்.
“வேற ஒன்னுமில்லையே?…” என்ற முருகேஸ்வரி,
“மாத்திரை போட்டுக்கோ கண்ணு. தலை மட்டும் தான வலிக்குது? உடம்புக்கு ஒன்னுமில்லையே?…” என்றதும் இல்லை என தலையசைத்தாள்.
“சரி வா, வந்து ஒரு டீயை குடிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோ. சாப்பாடு ரெடி பன்றேன்…” என்று சொல்ல மறுக்க முடியாமல் அவருடன் சென்றாள்.
பொம்மை போல் நடந்து சென்றவள் அங்கே அவர் தரும் டீயை கூட பருக முடியாமல் விழுங்கிக்கொண்டிருந்தாள்.
“சூடா இருக்கு கண்ணு. மெல்ல குடி…” என்று சொல்ல அது கூட உரைக்கவில்லை.
மாத்திரையை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு டீயை குடித்துவிட்டு அங்கிருந்து செல்ல போக,
“என்ன கண்ணு, ஏன் என்னவோ மாதிரி இருக்க நீ?…”
“அதெல்லாமில்லை சித்தி. கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியாகிடும்…” வலிந்து ஒரு புன்னகையை அவள் கொடுக்க,
“இன்னைக்கு ஊருக்குன்னு சொன்னியே? எப்ப கிளம்பற? தம்பி காரை காணலையே? வெளில போயிருக்காங்களா?…” என அடுத்த கேள்வியை கேட்டார் முருகேஸ்வரி.
மூச்சுக்கே திணறுவதை போலிருந்தது அப்போதைய ரிதுவின் நிலை. மனமெல்லாம் ஆத்மாவின் நினைவே வியாப்பித்திருக்க பதில் சொல்ல முடியாது மலங்க மலங்க விழித்தாள்.
“என்ன கண்ணு?…” என்று முருகேஸ்வரிக்கு பயம் பிடித்தது.
“ஒண்ணுமில்லை சித்தி, ஒருமாதிரி தலை சுத்துது…” என்று சமாளித்தவள்,
வந்தவள் அத்தனை முறை அழைக்க அழைக்க அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்தது.
கம்பெனிக்கு அழைப்போமா என்றால் அதுவரை அப்படி செய்ததே இல்லை. வேறு யாரிடம் கேட்க என தெரியாமல் அவள் விழித்தாள்.
இது தெரியவந்தால் வீட்டில் எத்தனை பெரிய கலவரம் வெடிக்கும்? அதிலும் பேச்சுக்கள் இருபுறமுமே வலிக்க வலிக்க பாய்ந்திருந்தது.
மீண்டும் ஆத்மாவிற்கு அழைத்தவள் மெசேஜ் அனுப்பியும் பார்க்க அதுவும் பார்க்கப்படவில்லை.
ஒருவேளை போனை அறையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டானோ என்றும் தோன்ற சற்று இடைவெளி விட்டவள் நெற்றியில் அத்தனை முறை அறைந்துகொண்டாள்.
“எல்லாம் என்னால, அப்படி என்ன அவசரம்? போக வேண்டாம்ன்னு சொன்னாங்களே. கேட்டேனா நான்? ஐயோ ஐயோ…” என்று முகத்தில் அடித்துக்கொண்டவளுக்கு அழுகை கூடியது.
இன்னும் அழுது முருகேஸ்வரி எதுவும் கேட்க நேர்ந்தால்? அதிலும் வித்யா வேறு இருக்கையில் வேண்டாம் என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்.
முதல்நாள் ஆத்மா கேட்டதே மனதிற்குள் வலம் வந்தது. ‘நான் கோபமா இருந்தா விட்டுடுவியா நீ?’ என்ற கேள்வி காதுக்குள் ரீங்காரம் பாட கண்ணீர் வழிந்தது.
கண்களை மூடியிருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள் தலைவலியும், மனவலியும் அவளை சாய்த்திருந்தது.
அன்றைக்கு மதியம் வரை மற்றவர்கள் யாருக்கும் இவ்விஷயம் தெரியாமலே இருந்தது.
நன்றாக உறங்கி எழுந்தவள் எழுந்ததுமே பார்வை மொபைலுக்கு செல்ல ஆத்மாவிடமிருந்து அழைப்பு எதுவும் வந்திருக்கிறதா என பார்த்தாள்.
இல்லை. அவன் அழைத்ததன் சுவடே இல்லை. தன்னுடைய குறுஞ்செய்தியை அவன் பார்த்திருக்க மனதிற்குள் பயப்பந்து சுழன்றது.
மீண்டும் ‘எப்போ வருவீங்க?’ என கேட்டு செய்தி அனுப்பிவிட்டு அவனுக்கு அழைக்க எடுக்கப்படவில்லை.
“வேலையா இருக்காங்களோ கம்பெனில?…” என யோசித்தவள் வெளியே வந்து திண்ணையில் நின்று அவன் கார் நிறுத்துமிடத்தை பார்க்க வெற்றிடமாக இருந்தது.
“இன்னும் தம்பி வரலை போல கண்ணு. நீ போய் துணிமணியை எடுத்து வை. முகத்தை கழுவு…” என முருகேஸ்வரி சொல்ல,
“ஹ்ம்ம், சரிங்க சித்தி…” என்று உள்ளே நகர போனாள்.
“கண்ணு மத்தியானம் அங்க சாப்பிடறீங்களா?…” என்று அவர் நிறுத்தவும்,
“எங்க சித்தி?…” என்றாள்.
“அதான் உன் மாமியார் வீட்டுல…” முருகேஸ்வரி கேட்டதும் முகம் மாறியது ரிதுவிற்கு.
“இல்ல, தம்பி வந்ததும் கிளம்பனும்னு சொன்னியே. காலையிலயும் சாப்பிடலை நீ. இப்ப இன்னும் அந்த தம்பி வரலை. சமைச்சிட்டேன். இங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு அங்க அப்பறமா சாப்பிட்டுக்கோயேன்…” என்றதும் ரிதுவின் பார்வை அந்த வீட்டை தான் எட்டியது.
‘அங்க போய் சாப்பிடறதா?’ என நினைக்கையில் கசப்பின் உணர்வு வந்து முகத்தில் ஒட்டிக்கொள்ள அவளின் வெறித்த பார்வையில் துணுக்குற்றார் முருகேஸ்வரி.
“எனக்கு இப்ப வேண்டாம் சித்தி. பசிக்கலை. அவங்க வரட்டும்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
முருகேஸ்வரி மனதிற்கு என்னவோ சரியாக படவில்லை. உடனே விசாலாட்சியை தேடி செல்ல,
“என்ன எந்திச்சிட்டாளா அவ?…” என்று கேட்டபடி காய்ந்த உடைகளை எடுத்துக்கொண்டு இருந்தார் விசாலாட்சி.
“இப்பத்தான் முழிச்சா க்கா…”
“நான் வந்தப்ப நல்ல தூக்கம். அதான் எழுப்பலை. இப்ப முகம் பரவாயில்லையா?…” விசாலாட்சி அந்த உடைகளை அப்படியே மடித்து ஈஸி சேரில் வைத்தார்.
“உனக்கென்ன லூஸா புடிச்சிருக்கு? இங்க இத்தனை நாள் இருந்துட்டு கிளம்பறோமேன்னு அவ யோசிச்சிருப்பா. என்ன நடந்திருக்க போகுது? அதுவும் காலையில கண்ணனோட அவ வெளில வந்ததை நானே பார்த்தேன். அவன் இருக்கும் போது யார் என்ன சொல்லிருக்க முடியும் ரிதுவை?…”
விசாலாட்சிக்கு முருகேஸ்வரியின் இந்த பேச்சில் நம்பிக்கை இல்லை. பெரிதாய் ஒன்றும் நடந்திருக்காது என நினைத்தார்.
“அப்படியே சண்டைன்னா இந்நேரத்துக்கு மதினி ஊரையே கூட்டிருக்குமே?…” என கிண்டலாய் வேறு சொல்ல,
“உங்கண்ணன் வேற வீட்டுல இருந்தாரு. அதான் பக்குன்னு இருக்கு…” என்ற முருகேஸ்வரி,
“சரிக்கா அவ எல்லாம் எடுத்து வச்சிட்டளான்னு பார்க்கறேன்…” என்று வீட்டிற்கு வந்தார்.
ரிதுபர்ணா தன்னுடைய பேக்கை தயாராய் வைத்து வேறு உடையும் மாற்றி இருந்தாள்.
வெளியே வரவேற்பு அறையில் வந்து அமர்ந்திருந்தாள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து ஆத்மா வந்ததும் அப்படியே கிளம்புவதை போல.
“என்ன கண்ணு? இப்பவே பேக்கெல்லாம் இங்க எடுத்து வச்சுட்ட? இன்னும் தம்பியே வரலை போல?…” என்றவர்,
“கொஞ்சூண்டு சாப்பிட்டுக்கோ கண்ணு. முகமெல்லாம் வெளுத்து போன மாதிரி இருக்கு…” என சாதத்தை வைத்து பிசைந்துகொண்டு வர கையில் வாங்கிக்கொண்டாள்.
“நானே சாப்பிட்டுக்கறேன் சித்தி…” என்றவள் கிளம்பும் பொழுது இவர்களை எதற்கு சங்கபடுத்துவானேன் என்று வலுக்கட்டாயமாக உண்டுவிட்டாள்.
மனதிற்குள் ‘அவன் உண்டானா? இல்லையா?’ என்ற கேள்வி அவளை துளைக்க ஆத்மாவுடன் பேசவும் முடியாமல் வெகுவாய் தவித்து போனாள்.
சாப்பிட்டு முடித்து மேலும் ஒருமணி நேரமாகியிருக்க ரிதுபர்ணா வெளி திண்ணைக்கே வந்து அமர்ந்துகொண்டாள்.
அவன் அழைக்கவில்லை. அழைப்பான் என்ற நம்பிக்கை இப்போது சுத்தமாக இல்லை.
போனையும், வாயில் கேட்டையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இருந்தாள் ரிதுபர்ணா.
சட்டென கேட் திறக்கும் சத்தத்தில் உடலில் ஒரு பரபரப்பு தோன்ற திண்ணையை விட்டு வாசல் படிக்கு இறங்கிவிட்டாள்.
வருவது ஆத்மா தானோ என எண்ணிக்கொண்டு அவள் தாமரைக்குளம் வரை நடந்து வந்துவிட உள்ளே நுழைந்ததோ இளவரசுவின் கார்.
அப்படியே பாதங்கள் அசையாமல் நின்றுவிட்டன. உச்சி வெயிலில் தரை அத்தனை சூடாக இருக்க வெற்று பாதங்களுடன் அங்கேயே நின்றுவிட்டவள் விழிகள் எதிர்பார்ப்புடன் மீண்டும் வாசலை தொட்டு இளவரசு காரில் நின்றது.
ஒருவேளை அவருடன் வந்திருக்கிறானோ என்ற யோசனையுடன் அவள் பார்த்திருக்க காரை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிய இளவரசு ரிதுபர்ணாவை பார்த்தார்.
“என்ன ரிது? இந்த வெயில்ல இங்க நிக்கிற?…” என கேட்டபடி கையில் இருந்த பையிலை தலைக்கு மேல் பிடித்தபடி வந்தார்.
“மாமா…” என்றவள் பார்வை காரை பார்த்துவிட்டு ஏக்கத்துடன் கேட்டையும் பார்த்தது.