“என்ன வெயில்ல நிக்கறேன்னு கேட்டா கேட்டை ஏன் பார்க்கற ரிது?…” என்ற இளவரசு,
“சாப்பிட்டியா நீ?…” என அருகில் வரும் பொழுது தான் அவள் ஒற்றை கையால் தூக்கி பிடித்திருந்த புடவைக்கு கீழே பாதங்கள் காலணி இன்றி இருப்பதை கவனித்தார்.
சிமெண்ட் தரையில் இந்த வெயிலுக்கு எப்படி கொதிக்கும் என்று நன்றாகவே தெரியும் அவருக்கு. அதை கூட உணராமல் அவள் நின்றிருக்க,
“ரிது, இந்த சூட்டுல எப்படி நிக்கிற நீ? என்னம்மா? நிழலுக்கு போ முதல்ல…” எனவும்,
“செருப்பு போட்டு வர மறந்துட்டேன் மாமா, ரொம்ப சூடு தெரியலை….” என்றவள்,
“அவங்க வரலையா?…” என்றாள் இளவரசுவிடம்.
கேட்க வேண்டாம் என நினைத்தாலும் மனது அடங்கவில்லை. வார்த்தையும் நிற்கவில்லை.
“யாரை கேட்கற?…” இளவரசுவிற்கு புரியவில்லை.
“அவங்க தான். காலையில கிளம்பி போனாங்க. ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்து வச்சிட்டேன். இன்னும் வரலை…” என்றதும் இளவரசுவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.
“என்னடா இப்படி கேட்கிற? கண்ணா ஊருக்கு போய்ட்டானேம்மா. உன்கிட்ட சொல்லிட்டு கிளம்பறான்னு நினைச்சேனே?…”
“ஊருக்கா?…” என கேட்டவள் விழிகள் நிலைகுத்தி நின்றுவிட்டது.
“ரிதும்மா. என்னடா? என்னாச்சு?…” என்ற இளவரசு,
“அவன் காலையிலையே சொல்லிட்டு கிளம்பிட்டான். அவசர வேலை இருக்கு சித்தப்பா. போய் முடிச்சிட்டு வரேன் அப்படின்னு. உனக்கு தெரியும்ன்னு நினைச்சேனே?…” என்று சொல்லியது எல்லாம் அவள் காதில் விழவே இல்லை.
“கிளம்பிட்டாங்களா? நிஜமாவா மாமா?…” என்று கேட்டவிதமே அத்தனை பரிதாபமாய் இருந்தது.
அழுகையை அடக்க போராடும் முகமும், துடிக்கும் இதழ்களும் என்று தொய்ந்து போயிருந்தாள்.
“ரிதும்மா, எதுவும் பிரச்சனையா? என்னடா? மாமாட்ட சொல்லு…” என்று அவர் கேட்க கேட்க அவளிடம் பதிலில்லை.
ஒன்றும் பேசாமல் தலையாட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அவன் சென்றுவிட்டான், அதுவும் தன்னிடம் சொல்லாமலே கிளம்பிவிட்டான் என்பதை நம்பவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை.
அவள் சொல்லிய தானம் இப்போது கேட்பாரற்று தரையில் கிடப்பதை மனக்கண்ணில் விரிய போனை எடுத்தவள்,
“நிஜமாவே போய்ட்டீங்களா? இங்க இல்லவே இல்லையா நீங்க?…” என அவளின் குரலை பதிவு செய்து ஆத்மாவிற்கு அனுப்பிவிட்டு சுருண்டுகொண்டாள்.
ரிதுபர்ணாவின் பின்னோடே வந்த இளவரசு வெளிவாசலில் நின்றபடி முருகேஸ்வரியை அழைத்தார். அந்த சத்தத்தில் விசாலாட்சியுமே வந்துவிட்டார்.
“என்னண்ணே, என்னாச்சு?…” என்று அவரும் கேட்க,
“என்னம்மா ரிது இப்படி இருக்கா? என்ன பிரச்சனை?…” என இளவரசு முருகேஸ்வரியிடம் கேட்க அவர் திடுக்கிட்டு பார்த்தார்.
“புரியலையே ண்ணே. நிஜமாவே பிரச்சனை தானோ?..” என பார்த்தார் முருகேஸ்வரி,
“கண்ணா ஊருக்கு போனது கூட ரிதுவுக்கு தெரியலை. நான் சொல்லவும் புள்ளை மனசொடிஞ்சு போன மாதிரி இருக்கே?…” என்றதும் அவர்கள் இருவருமே அதிர்ந்தனர்.
“என்ன? சொல்லாம போய்ட்டானா? இங்க இவ எல்லாத்தையும் எடுத்து வச்சு அவனுக்காக காத்துக்கிட்டுல இருந்தா?…” என ஹாலில் இருந்த உடமைகளை எல்லாம் விசாலாட்சி காண்பித்து கேட்க,
“எனக்கு தெரியலைங்கண்ணே. அக்காட்ட கொஞ்ச நேரம் முன்னுக்க கூட நான் சொன்னேன். அதெல்லாம் ஒன்னுமிருக்காதுன்னாங்க. இப்ப என்னவோ பதட்டமாகுதே?…” முருகேஸ்வரி பதற,
“ஒன்னும் பதட்டப்பட வேண்டாம். நான் பார்த்துக்கறேன்…” என்றவர் நேராக அண்ணாமலை வீட்டிற்கு செல்ல விசாலாட்சியும் உடன் சென்றார்.
கார் சத்தம் கேட்டு வெளியே வந்த செண்பகமும் இதனை பார்த்துவிட்டு இளவரசுவிடம் என்ன என கேட்டபடி பின்னால் சென்றார்.
உள்ளே நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த மனோவை பார்த்த இளவரசு ஆனந்தியை தேடினார்.
“மனோ அம்மா எங்க?…” என கேட்க,
“வாங்க சித்தப்பா. உட்காருங்க. அம்மா உள்ள இருக்காங்க…” என்று சொல்லிய மனோ,
“அம்மா…” என சத்தம் கொடுக்க ஆனந்தி வெளியே வந்தார்.
“வாங்க…” என்று மட்டுமே அழைப்பு.
முகத்தில் அத்தனை கோபம். அவர்கள் மீது தான் என்பது அவர் பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது.
“சொல்லுங்க…” என கேட்க,
“என்ன சொல்லனும்? என்ன நடந்துச்சு? என்ன பிரச்சனை?…” என்றார் இளவரசு.
“என்ன நடந்துச்சுன்னா? எல்லாரும் சேர்ந்து ஒருத்திய வம்படியா என் பிள்ளை தலையில் காட்டினீங்களே? அவ இவ்வளோ நேரம் சொல்லாமலா இருந்தா?…” என்றார்.
“என்னக்கா, என்ன பேச்சு பேசறீங்க? உங்களை என்ன கேட்டாங்களோ அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. சும்மா தலையில கட்டிவச்சீங்கன்னு வாய்க்கு வந்தபடியா பேசறீங்க? நாங்களா கட்டி வச்சோம்?…” செண்பகம் ஆரம்பித்திலேயே ஆனந்தியை அடக்கி வைத்தார்.
“செண்பகம் நீ அமைதியா இரு, நான் பேசிக்கறேன்…” இளவரசு அதட்ட,
“நல்லா பேசுவீங்க. என்னன்னு கேட்க வந்தா நாம கட்டி வச்சோம்ன்னு பேசறாங்க. ஏன் அந்த சபையில இவங்களும் தான இருந்தாங்க? மகனை பிடிச்சு நிப்பாட்ட வேண்டியது தானே?…” என்றார் செண்பகம் கோபத்துடன்.
“இப்ப என்ன அவளுக்காக நீங்களும் சண்டை போட வந்திருக்கீங்களா?…” ஆனந்திக்கு அத்தனை கோபம்.
அதிலும் தன்னுடைய பேச்சிற்கு ரிது எதிர் பேச்சு பேசியதோடு, அத்தனை கேட்டும் மகன் அவள் பக்கம் நின்றது என இன்னும் கொதித்து போயிருந்தார்.
“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க…” என மீண்டும் இளவரசு நிதானமாக கேட்க ஆனந்தி செண்பகத்தையும், விசாலாட்சியையும் பார்த்துவிட்டு மனோவை பார்த்தார்.
“நீ சொல்லு மனோ…” என விசாலாட்சி கேட்க தான் வந்ததிலிருந்து நடந்தவற்றை மனோ ஒன்றுவிடாமல் சொல்ல அத்தனைபேரும் நெஞ்சில் கை வைத்து நின்றுவிட்டனர்.
“யாத்தே? நீங்கல்லாம் என்ன மனுஷி?…” என விசாலாட்சி கேட்டுவிட்டு ராணியை அழைத்து கேட்க அவரும் நடந்ததை பயந்துகொண்டே சொல்ல ஒரு ‘காபிக்கா?’ என அத்தனைபேருக்கும் பொடுபொடுவென்று வந்தது.
“என்ன இப்படி பண்ணிட்டீங்க? அவ எங்க காபி குடிச்சா உங்களுக்கு என்ன? அப்படி என்ன கோவம்?…” என விசாலாட்சி கேட்க,
“காபியை தானே குடிக்க சொன்னேன்? ஆனாலும் என் பிள்ளை வாழ்க்கையே பாழா போச்சு. இப்படி ஒருத்திய கட்டிக்கிட்டு. அவனையும் வச்சுக்கிட்டு அவன் பிச்சை கேட்டான்னு சொல்லிட்டாளே?…” ஆனந்தி மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.
இதில் யாரை சொல்லி நோக என்று தெரியாமல் மூவருமாக வீட்டை தாண்டி வெளியே வந்தனர்.
“நல்ல கதையா இருக்கே? இந்தாங்க இன்னும் கொஞ்சம் கழுத்தை நல்லா அறுத்துக்கோங்க, வலி பத்தலைன்னு அவ நிக்கனும்னு நினைக்கறீங்களா? அவ கேட்டதுல தப்பே இல்லை…” என்றார் செண்பகம்.
“என்ன பேசற நீ?…” அதிருப்தியுடன் இளவரசு முறைக்க,
“இத்தனை வருஷம் உங்கண்ணனும் இதை தான ரிதுவை பேசினாங்க. அப்பலாம் எங்க போச்சு உங்களுக்கு. கண்ணனை நினைச்சா கஷ்டமா தான் இருக்கும். ஆனா ஒருதடவை கேட்டதுக்கே இவங்க இந்த குதி குடிக்காங்க…” என்ற செண்பகம்,
“நாம பேசும் போது மட்டும் எல்லாரும் எல்லாத்தையும் கம்முன்னு கேட்டுக்கனும். திரும்பி அதையே நமக்கு யாரும் பண்ணிடக்கூடாதுன்னு நினைச்சா சரியா? என்ன குடுத்தாங்களோ அது தான் திரும்பியிருக்கு. என்னை விட்டிருந்தா இன்னும் நல்லா கேட்டிருந்திருப்பேன்…” என்றார்.
“இவ வேற இருக்கற பிரச்சனையில?…” என இளவரசு தலையில் தட்டிக்கொண்டு,
“ஒன்னும் கேட்க வேண்டாம். முதல்ல கண்ணன் கிட்ட பேசி இங்க வர சொல்லுவோம். இல்லைன்னா ரிதுவை கொண்டுபோய் விட்டுட்டு வருவோம்…” என்று விசாலாட்சி சொல்லவும் சரி என தலையசைத்தார்கள்.
விஷயம் பக்குவமாய் முருகேஸ்வரிக்கு சொல்லப்பட அவர் ஒருபாடு ரிதுவை இப்படி எல்லாம் அங்கே பேசலாமா என கேட்டு ஒருவழியாக்கிவிட்டார்.
முதலிரண்டு நாட்கள் ஆத்மா சென்னை சென்று ரிதுவிடம் பேசாதது எல்லாம் ஆனந்திக்கு தெரியவரவில்லை.
மகன் இப்படி அவளை விட்டுவிட்டு கிளம்பி சென்றதில் ஒருவகையில் திருப்தியாக இருந்தது.
“இதுதான் சரி. அப்பத்தான் வாயை அடக்கி வைப்பா. என் மகனும் சும்மா இல்லைல…” என ராணியிடம் பெருமைப்பட்டுக்கொண்டார்.
ஆனால் நாட்கள் நான்கைந்து கடந்து பத்து, பதினைந்து என்று வந்து நிற்க கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை என்னும் விஷயம் வந்துவிட்டது.
மகன் இப்படி மருமகளை இங்கேயே விட்டுவிட்டு அழைத்து செல்லாமல் மனவாட்டத்தில் இருக்கிறான் என பேச்சுவாக்கில் அவரின் அண்ணன் வீட்டிற்கு தெரிவித்திருக்க அடுத்த இரண்டு நாட்களில் வந்து சேர்ந்தார் ஆத்மாவின் தாய்மாமா.
“காலுக்குதவாத செருப்ப கழட்டி வீசத்தான? அதான் நம்ம வீட்டு பையனே வேண்டாம்ன்னு விலகி போயிருக்கு….” என நடு வீட்டில் அமர்ந்து நாட்டாமை பேசிக்கொண்டிருந்தார்.
அதே நேரம் ரிது அனுப்பிய வாய்ஸ் மெசேஜை மீண்டும் மீண்டும் ஓடவிட்டு கேட்டுக்கொண்டிருந்தான் ஆத்மா.
“நிஜமாவே போய்ட்டீங்களா? இங்க இல்லவே இல்லையா நீங்க?…” என்ற மனைவியின் கண்ணீர் குரல் அவனை பலவீனப்படுத்தும் வேலையை செவ்வனே செய்தாலும் முகத்தில் உணர்வில்லை.
தினத்திற்கும் பலமுறை அவள் அழைத்தாலும் அவனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை.
ஆத்மாவின் தாய்மாமா வந்த விஷயம் பெரும் பிரச்சனையாக வெடிக்க அவரின் நோக்கமும் மொத்த குடும்பமும் அறிந்து அத்தனைபேரும் ஸ்தம்பித்து தான் போயினர்.
அதில் பெரிதாய் ஆட்டம் கண்டது ஆனந்தியே. அவர் முற்றிலும் நினைக்காத ஒன்று நிகழ்ந்துவிட மிரண்டு போனார்.