முருகேஸ்வரி சொல்லி தன் காதில் விழுந்ததை நம்பவே முடியவில்லை ரிதுபர்ணாவிற்கு.
இப்படி ஒரு திருப்பம் நடக்கும் என நினைத்திருப்பாளா என்றால் இல்லவே இல்லை.
“என்ன சித்தி சொல்றீங்க?…” என்றாள் ரிது மீண்டும்.
“நிசமாத்தான் கண்ணு. இப்பத்தான் உன் மாமியாரோட அண்ணன் வந்திருக்கறதை பார்த்தேன். தற்செயலா வெளில நின்னு போன்ல அவர் சொன்னதை கேட்டுட்டு தான் ஓடியாறேன்…” என்று கலங்கி போய் சொல்ல சிலை போல நின்றுவிட்டாள்.
“என் காதுபடவே பேசினாரு. இங்க பிரச்சனை. இப்படி தம்பி போய்ருச்சு. இனி ஒட்டாது. எல்லாம் நம்ம கையிலன்னு பேசிக்கிட்டு இருந்தாரு. எப்படியும் ரெண்டு மூணு நாள்ல நம்ம ஜனக்கட்டை கூட்டி கூட்டம் போட்டு பிரிச்சுவிட்டு…” என்றவருக்கு அதற்கு மேல் பேசமுடியவில்லை ரிதுவின் பார்வையில்.
“சூட்டோட சூடா ரெண்டாவதா தம்பிக்கு கல்யாணத்தை பண்ணிவச்சிடனும்னு என்னென்னவோ பேசிட்டிருந்தார் போன்ல. அனேகமா அவர் சம்சாரத்துட்ட தான் சொல்லிட்டிருந்திருப்பார் போல? உன் மாமியார் தான் விஷயத்தை சொல்லி வரவழைச்சிருக்காங்க…” என்றார்.
ரிதுபர்ணா கேட்டுக்கொண்டே மட்டும் தான் இருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.
“கண்ணு?…” அழுதுகொண்டே அவர் பேச கண்ணில் நீர் வழிய அப்படியே துவண்டு அமர்ந்தாள்.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத பெண். இப்படி இதையும் கேட்டு தளர்ந்துவிட்டாளே என நொந்து போய் பார்த்தார்.
“இப்ப நாம என்ன கண்ணு செய்யறது?..” என்றவர்,
“இரு நான் முதல்ல உன் மாமாவுக்கு கூப்பிடறேன்…” என வெளியே செல்ல ரிதுவும் வேகமாய் எழுந்து தன் அறைக்குள் வந்திருந்தாள்.
பரத்திற்கு பார்த்திருக்கும் பெண்ணின் வீட்டில் விசேஷம் என்று விசாலாட்சியும், ஏழுமலையும் சென்றிருக்க உடன் செண்பகமும் சென்றிருந்தார்.
இப்போது வேறு யாருமில்லை அங்கே. வித்யாவும் கல்லூரிக்கு சென்றிருக்க கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு மனதிற்குள் ஏக போராட்டம்.
“திருமணமா?…” மீண்டும் மீண்டும் தனக்கு தானே கேட்டுக்கொண்டவளுக்கு அதுவரை இருந்த தயக்கம், வருத்தம், குற்றவுணர்ச்சி எல்லாம் எங்கோ சென்றிருந்தது.
கொஞ்சம் கூட தன்னை யோசிக்காமல் இங்கேயே விட்டு சென்றுவிட்டான் என்று சற்று முன்வரை அத்தனை மருகியவள் தான்.
தான் பேசியதற்கு மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி ஆக்கிரமித்திருந்தாலும் தன்னை புரிந்துகொள்ள மாட்டானா என்ற எண்ணமும் ஒருபுறம்.
ஆனால் அதையும் தாண்டி அவனின் பெற்றோர் மத்தியில் விட்டுகொடுக்காமல் பேசுகிறேன் என்று பேசிவிட்டு மொத்தமாய் விட்டு சென்று அவர்களின் கேலி பார்வைக்கு ஆளாக்கிவிட்டவன் மீது அத்தனை கோபமும் பொங்கியது அன்று.
அவனாக பேசட்டும், அவனே அழைக்கட்டும் என்று இருந்தவளுக்கு மனதிற்குள் ரண வேதனை.
‘உனக்கே அந்த வார்த்தையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிந்தும் அதே வார்த்தை பிரயோகத்தை அவன் மீது செலுத்தியிருக்க அவனுக்கும் அது சுட்டிருக்கும் தானே?’ என தன் மனசாட்சியே அவனுக்காக பரிந்து வந்தது.
அந்த உண்மையில் மீண்டும் ஆத்மாவின் புறமே மனது சாய திரும்பவும் அவனுக்கு விடாமல் அழைத்தாள்.
‘நிச்சயம் வலித்திருக்கும். பெரிய வேதனை தான். அனுபவித்த நானே அதனை அவனுக்கும் தந்துவிட்டேனே?’ என்று அத்தனை புலம்பல்.
மனதிற்குள் அவ்வளவு மன்னிப்பு வேண்டுதல்கள். ஆனாலும் தானாக அவன் அழைக்காமல் அவன் இருப்பிடத்திற்கு செல்ல விரும்பவில்லை.
மனதிற்கு அது சரி என்றும் தோன்றவில்லை. அவ்வப்போது ஆத்மாவின் அந்த கேள்வி அவளை குளவியாய் மொய்க்கும் நேரங்களில் உடனே கிளம்பிவிட கால்கள் பரபரத்தாலும் கட்டுப்படுத்தி இருந்துகொண்டாள்.
‘போனிலாவது அழைக்கட்டுமே? ஏன் சொல்லாமல் செல்ல முடிந்தது. அழைக்க முடியாதா? சொல்லாமல் சென்றவன் மேல் எனக்கும் கோவம் தான்’ என்று அத்தனை வார்த்தைகள் தனக்குள்ளேயே அவனுக்கும் சேர்த்து பேசி, வாதிட்டு என்று இருபுறமும் தவித்து போய் இருந்தாள்.
‘இப்படி அவனாக அழைப்பான் என்று நினைத்து தேடி, தவித்து காத்திருக்க இவர்கள் என்னவென்றால் அவனுக்கு திருமணம் செய்வார்களா? அப்ப எங்களுக்கு நடந்ததுக்கு பேர் என்னவாம்?’
சுறுசுறுவென்று ஆத்திரம் கண்ணை மறைக்க ஆத்மாவின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் விடாமல் அவள் தொடர்புகொள்ள அவன் எடுக்காமல் இருக்க இருக்க ரிதுவின் ஆவேசம் தான் அதிகமாகியது.
“அவ்வளவு தூரம் நான் ஈசியா உனக்கு?…” என போனை பார்த்தவள் கோபத்துடன் கேட்டவாறு அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்தாள்.
“இப்ப நீங்க எனக்கு கால் பண்ணலை, இங்க நடக்கறதே வேற…” என்று அவள் அனுப்பியிருக்க உடனே அவன் பார்த்துவிட்ட குறியீட்டை கண்டுகொண்டவள்,
“இனிமே நானா உங்களுக்கு கூப்பிட மாட்டேன். இப்ப இந்த நிமிஷம் எனக்கு நீங்க கால் பண்ணனும். பண்ணியே ஆகனும்…” என அதிகாரமாய் அனுப்பி வைக்க அங்கே ஆத்மாவிற்கு அவள் குரலில் தொனித்த ஆவேசம் திகைப்பை ஏற்படுத்தியது.
அடுத்த நொடி அவளுக்கு அழைத்துவிட்டான். அவன் அழைப்பை பார்த்துக்கொண்டே இருந்தவள் விழிகள் ரத்தமென சிவந்திருக்க அதனை எடுக்க நினைத்தவள் வெறுமனே பார்க்க மட்டுமே செய்தாள்.
மனது சமன்பட மறுத்தது. தன் சொல்லிற்கு இணங்க அவன் அழைத்துவிட்டான் தான்.
ஆனாலும் சட்டென ஏற்க முடியவில்லை. வீம்பு வேகமெடுத்தது. முறைப்புடன் பார்த்திருந்தாள்.
‘இப்படித்தானே நானும் காத்துக்கிட்டு இருந்தேன்?’ என மனதிற்குள் நினைத்தபடி பார்த்திருக்க ஆத்மா மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“கால் பண்ண சொல்லிட்டு என்ன விளையாட்டா உனக்கு?…” என்று அனுப்பி மீண்டும் அழைக்க அதனை பார்த்தவள் போனை எடுத்துவிட்டாள்.
“யார் விளையாடறா? என் வாழ்க்கையோட நீங்களும் உங்க குடும்பமும் தான் விளையாடறீங்க….” என ஆவேசம் குறையாமல் பேச,
“ப்ச், என்னாச்சு உனக்கு? இப்ப யார் விளையாண்டாங்கன்றது முக்கியமா? எனக்கு வேலை இருக்கு…” என்றான் அவன்.
“ஒரு வேலையும் பார்க்க வேண்டாம். எனக்கு பதில் சொல்லுங்க…” என்றவள் கோபத்தில் ஆத்மாவிற்கு வியப்பு தான் உருவானது.
“என்ன ரிது?…” என்று சளைக்க,
“உங்களுக்கு பொண்ணு பார்க்காங்களாம். தெரியுமா?…” என கேட்க அவனிடம் மௌனம்.
“கேட்கறேன் தானே? பதில் சொல்லுங்க…”
“சரி பார்க்கட்டும், இப்ப என்ன அதுக்கு?…” என்று அசால்ட்டாக அவன் சொல்ல ரிதுவிற்கு நெருப்பு பற்றிக்கொண்டது.
“என்ன அதுக்கா? பொண்ணு எதுக்கு பார்ப்பாங்க?…”
“எனக்கு தெரியாது ரிது. அப்படி ஒன்னு என் வாழ்க்கையில நடக்காமலே போய்டுச்சு. நீயே சொல்லு…” என்றவனின் கிண்டல் பேச்சில் இன்னும் கொதித்தாள்.
“எவ்வளோ அகம்பாவம் உங்களுக்கு?…” என்றதும்,
“இதை கேட்க தான் கால் பண்ணுனியா?…” என்றவன் பேச்சில் ஆத்திரம் மிகுந்தது.
“பொண்ணு பார்த்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம். ஒருத்தனுக்கு எத்தனை தடவை கல்யாணம்?…” என்று கேட்க சத்தமின்றி சிரித்துவிட்டான் ஆத்மா.
“ஹ்ம்ம், அப்படியா?…” அவன் கேட்க,
“எவ்வளோ ஈசியா கேட்கறீங்க? அப்ப நமக்கு நடந்தது?…” என்றவள்,
“நீங்க நடத்தினது. நடத்திக்கிட்டது?…” என்றாள் உடனே திருத்தமாய்.
“ப்ச், இதை யார் சொன்னா உனக்கு?…” அவனின் சாதாரணமான கேள்வியில்,
“உங்க மாமா தான். அவர் இங்க வந்ததே கல்யாணம் பேச தான். எவ்வளோ பேச்சு? இப்படியே சூட்டோட சூடா நம்மளை பிரிச்சு விட்டு…” என்று சொல்லும் பொழுதே அழுகையை அவள் அடக்குவதை இவன் உணர்ந்தான்.
“நான் சும்மா இருந்தேன். அன்னைக்கு பேசாம விட்டிருந்தா என் வேலையை நான் பார்த்துட்டு எப்பவும் போல ஒதுங்கி இருப்பேன். விட்டீங்களா நீங்க?…”
“யார் என்ன நினைப்பாங்க எதுவும் யோசிக்கலை தாலியை கட்டியாச்சு. அன்னைக்கே அத்தனை வசனத்தை ஒப்பிச்சு என் கண்ணை மறைச்சு வாழவும் ஆரம்பிச்சாச்சு…” என்று குற்றத்தை அடுக்கினாள்.
“என்ன நான் கண்ணை மறைச்சேனா?…” ஆத்மா வாயில் கை வைத்து அப்பாவியாய் கேட்க,
“பேசக்கூடாது நீங்க. கெட்ட கோவத்துல இருக்கேன்…” என்று மிரட்ட ஆத்மா மீண்டும் மௌனமானான்.
“நீங்களா வருவீங்க, நீங்களா தாலி கட்டி கூட கூட்டிட்டு போய் வாழனும்னு சொல்லுவீங்க. அதன் போக்குல வாழனும்னு பாடம் எடுப்பீங்க. அப்பறம் நீங்களா சொல்லாம விட்டுட்டு போய்ருவீங்க. அப்படித்தானே?…”
“உங்களை யார் கேட்பா? இதோ இப்ப இந்த பிரச்சனை. விட்டுட்டு போன உங்களை யாரும் கேட்டு அதட்டி என்னன்னு பார்க்கலை. கிடைச்சது சான்ஸ்ன்னு உங்க மாமா உங்களை புதுமாப்பிள்ளையாக்க பார்க்கறார்…”
“உங்களுக்கு நான் போன்ல கூப்பிட்டா என்னன்னு கூட கேட்க தோணலை. போன் எடுக்கறதில்லை. உங்களுக்கு எதுக்கு கல்யாணம்? எதுக்கு பொண்டாட்டி? அவ்வளோ ஈஸியா போச்சா? இந்த லட்சணத்துல இன்னொரு கல்யாணமாம். தொலைச்சிடுவேன்….”
“யப்பா, செம்ம காரம்…” என ஆத்மா முணுமுணுக்க அவளுக்கு எங்கே கேட்டது?
“நீங்க வேண்டாம்ன்னு விட்டுட்டு சொல்லாம போவீங்க. ஆனா நான் மட்டும் தேடி வரனுமா? புருஷன் என்ன பன்றான்னு அவன் தான் பொண்டாட்டிட்ட சொல்லனும். நீங்க ஊர்ல இல்லைன்னு இன்னொருத்தர் சொல்றார். அவர் முன்னாடி நீங்க போனதை பத்தி ஒண்ணுமே தெரியாம குறுகி போய் நின்னேன்…”
“உன்கிட்ட சொல்லலையாம்மான்னு கேட்ட மனுஷனும் துடிச்சு போய்ட்டார். அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதுல ஆரம்பிச்சு இப்ப உங்க தாய்மாமா பொண்ணு தரேன்னு நிக்கிறார். நம்ம வாழ்க்கைக்குள்ள இவ்வளோ பேர் வந்து பேசற அளவுக்கு கொண்டு வந்துட்டீங்க இல்ல?…”
“நான் என்ன பொம்மையா? உங்க இஷ்டத்துக்கு என்னை வளைக்க? இப்படி நிக்க வச்சுட்டீங்க இல்ல? இன்னும் வேறென்ன இருக்கு? ஒதுங்கி நின்னவளை கூட்டிட்டு வந்து அலங்கரிச்சு உயிரை பிடுங்கறீங்க…” என்றவள் சற்றே மூச்சை இழுத்து விட்டாள்.
அவனிடம் அத்தனை வேகமாக பேச பேச பலமாய் மூச்சு வாங்கியது ரிதுபர்ணாவிற்கு. கொஞ்சம் அமைதியானவள்,
“ஆமா, தப்பு தான் நான் சொன்னது. மன்னிப்பும் கேட்டிருப்பேன். ஆனா வேற என்ன சொல்லிருக்க முடியும் அந்த இடத்துல? எவ்வளோ நாள் நானும் அமைதியா போனேன். அது என் சூழ்நிலை. கண்டுக்கவும் இல்லை. ஆனா இப்ப உங்கம்மா பேசினது…” என்று மீண்டும் மூச்சை இழுத்து விட,
“ரிது ரிலாக்ஸ்…” என்றான் ஆத்மா,
“வாய மூடனும் சொல்லிட்டேன். பேசனும்னா நீங்களா கால் பண்ணியிருக்கனும். பேசிருக்கலாம். இப்ப நான் தான் பேசுவேன். இப்பவும் நானா தான் உங்களை பேச வச்சிருக்கேன். உங்களுக்கு பேச சான்ஸ் இனி இல்லை…” என்று சொல்லியவள்,
“ஒரு தடவை இந்த ஒருதடவை அந்த வார்த்தையை கேட்ட உங்களுக்கே இப்படி இருக்கு. அவ்வளோ கோவம். இதையே ஒவ்வொருதடவையும் காரணமே இல்லாம நான் கேட்கும் போது? என்னோட வலியை பாருங்கன்னு உங்களுக்கு நான் காமிக்க நினைக்கலை…”
“அந்த நிமிஷம் அந்த வார்த்தை, அதுவும் நாம அப்படி வாழ்ந்திட்டிருக்கும் போது கேட்டு எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்? பிச்சையா கேட்டேன் நான்? வாழ்ற வாழ்க்கையை பிச்சைன்னு சொல்லும் போது அப்படி இல்லைன்னு வேற எப்படி சொல்ல?…”
“நீங்களா வந்தீங்க, எல்லாரையும் எதிர்த்து எனக்கு தாலி கட்டி வாழ்ந்து, இப்ப விட்டுட்டும் போயாச்சு. பெத்தவங்க யாருமில்லைன்னு நான் ரொம்ப எல்லாம் வருத்தப்பட்டு தேடினதில்லை. ஆனா இப்ப எனக்கு அம்மாவை ரொம்ப தேடுது…”
“அம்மா மடில படுத்து அழனும்னு ரொம்ப தோணுது. உனக்கு நான் இருக்கேன்னு அவங்க சொல்லி கேட்கனும்னு தோணுது. யாருமில்லையோன்னு தோணுது. நிஜமா நீங்க இருப்பீங்கன்னு அவ்வளோ நம்பிருந்தேன். என்னை தூக்கி வீசிட்டு போய்ட்டீங்க நீங்க…”