ரிதுபர்ணாவின் இந்த தவிப்பான பேச்சில் சிலையாய் சமைந்து போனான் ஆத்மா.
“நான் பேசினதுக்கு கூட என்னை கூட கூட்டிட்டு போய் வச்சிருந்து பேசாம கூட என்னை நீங்க பனிஷ் பண்ணிருக்கலாம் உங்க கோவம் போற வரைக்கும். ஆனா இப்ப என்னவோ அவசரமா கல்யாண பண்ணி சும்மா ஒப்புக்கு சமாளிச்சு விட்டுக்கொடுக்காம இருந்து, போதும்ன்னு விட்டுட்ட மாதிரி ஒரு பீல் குடுக்குது….”
“ரிது…” ஆத்மாவின் குரல் அத்தனை கலங்கி போய் ஒலித்தது.
“என்ன பரிதாபமா? தேவையே இல்லை. நீங்களே வச்சுக்கோங்க. இப்ப இந்த நிமிஷம் நீங்க கூப்பிட்டா கூட நான் உங்க கூட அங்க வரதா இல்லை. வரவும் மாட்டேன். இனி இங்க தான் இருப்பேன். என்ன செய்வீங்க?…”
“நீங்க வந்து என்னை ஊர் மெச்ச கூட்டிட்டு போனாலும் என்னை வாசலோட விட்டுட்டு திரும்பி பார்க்காம போனீங்க பாருங்க. அது என்னை விட்டு மறையவே செய்யாது. உங்களை அவ்வளோ தேட வச்சு என்கிட்டே ஒரு வார்த்தை போறேன்னு கூட சொல்லாம, ப்ச்…”
“எப்படி நின்னேன் தெரியுமா? பேக் எல்லாம் எடுத்து வச்சி பைத்தியக்காரி மாதிரி வாசலுக்கு நடந்து கேட் திறக்கறப்ப எல்லாம் வந்திருவீங்கன்னு பார்த்து நின்னேன்ல. நல்லா பண்ணிட்டீங்க. வார்த்தை கொன்னுடுச்சு. ஆனா வாழ்க்கையையும் கொன்னுடும்ன்னு நினைக்கலை…”
“போதும், எல்லாம் போதும். என்னை இங்க விட்டது விட்டதாவே இருக்கட்டும். நான் ஒன்னும் உங்களை என்னை வந்து கூட்டிட்டு போங்கன்னு கெஞ்ச கூப்பிடலை. உங்க வீட்டுல நினைக்கிறது நடக்காது. அந்த பயம் உங்களுக்கு இருக்கனும், அதுக்கு கூப்பிட்டேன்…”
“உங்களுக்கும், எனக்கும் கல்யாணம் முடிஞ்சது முடிஞ்சது தான். திரும்ப பட்டு வேஷ்டி கட்டி ஊர்கோலம் போய் புதுமாப்பிள்ளையா மினுக்க முடியாது. அந்த நினைப்பு கொஞ்சம் கூட எட்டி பார்க்க கூடாது. ஞாபகம் இருக்கட்டும். அதுக்கு தான் கால் பண்ணேன்…” என்று மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டாள் அவள்.
ஆத்மாவிற்கு ரிதுவின் பேச்சு ஒவ்வொன்றும் மனதில் தைக்க அவனிருந்த இடத்தை விட்டு அசையவில்லை.
ஆத்மாவையே பார்த்துக்கொண்டு உதவிக்கு அவனருகே நின்றவனிடம் மொபைலை நீட்டியவன் மனதிற்குள் அடுத்து என்ன என்னும் யோசனை தான்.
இன்னுமே அவள் பேசிய மொத்தமும் காதில் எதிரொலிக்க நெஞ்சை நீவியபடி இருந்தான் ஆத்மா.
அவனிடம் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டிவிட்டு தணியாத ஆவேசத்துடன் அமர்ந்திருந்தவள் அறையின் கதவு தட்டப்பட்டது.
எழுந்து சென்று திறக்க பிடிக்கவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் தட்டப்பட திறந்து பார்த்தாள்.
“என்ன கண்ணு, எவ்வளோ நேரமா தட்டறேன்?…” என முருகேஸ்வரி கேட்க,
“கவனிக்கலை சித்தி…” என்றாள் அவள்.
“இங்க வா, இங்க பெரிய பிரச்சனையே நடந்திருச்சு. சொன்னா நம்ப மாட்ட…” என்னும் பொழுதே ரிதுபர்ணாவிற்கு சலிப்பு.
இத்தனை தூரம் முடிவிற்கு வந்திருக்க இதைவிட இன்னும் பெரிதாய் என்ன நடந்துவிடும் என தான் தோன்றியது.
“என்ன நடந்தா என்ன சித்தி? இனிமே அதை பத்தி, அந்த வீட்டை பத்தி எதுவும் பேசவேண்டாம்…” என்றாள் விட்டேற்றியான குரலில்.
“என்ன கண்ணு? ஏன் ஒருமாதிரி பேசற?…” முருகேஸ்வரி கேட்க வெளியே இளவரசுவின் குரல்.
உடன் ஏழுமலையும் வந்திருக்க விசாலாட்சி முகத்தில் இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வு.
“ரிது…” என்று வந்தவர்கள் மூவரும் அவளின் முகத்தை பார்த்தனர்.
“என்னவாம்? இன்னும் அதையேவா நினைச்சிட்டிருக்க?…” என்றார் ஏழுமலை.
“உன்னை யார் அவசரப்பட்டு இவக்கிட்ட சொல்ல சொன்னது? பாரு அழுது முகம் வீங்கி போய் இருக்காளே?…” என சொல்லிய விசாலாட்சி,
“எதுவும் நடக்கலை. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ….” என்று ரிதுவிடம் கூறினார்.
“என்ன சொல்றீங்க பெரிம்மா? எனக்கு புரியலை…” ரிதுபர்ணா விழிக்க வெளியே செண்பகத்தின் குரல்.
“இரு என்னன்னு கேட்டுட்டு வரேன்…” என இளவரசு செல்ல,
“சரி நீ முகத்தை கழுவிட்டு நம்ம வீட்டுக்கு வா. அங்க வச்சு பேசிக்கலாம். இங்கன்னா உன் சின்னத்தை வரமாட்டா…” என்ற விசாலாட்சி,
“வா முருகேஸு…” என அவருடன் நடந்தபடி,
“நீ போன் போடவும் நாங்களும் பயந்து பதறிட்டு தான் வந்தோம். ஆனா இங்க நடந்ததே வேறையா இருக்கே. நினைக்கவே இல்லை…” என சொல்லிக்கொண்டே வெளியே சென்றார்.
அதனை புரியாமல் பார்த்தபடி தன்னறைக்குள் நுழைந்தவள் முகத்தை கழுவிவிட்டு தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு சில நொடிகள் ஆசுவாசமாய் அமர்ந்தாள் ரிது.
ஆத்மாவிடம் தான் பேசியவை எல்லாம் மீண்டும் ஞாபகப்படுத்தி கொண்டுவந்து பார்க்க எதுவும் தவறாக தெரியவில்லை.
இதுவே அவனாக வந்திருந்தாலோ, இல்லை தான் அழைக்கும் பொழுது பேசியிருந்தாலோ கூட நிச்சயம் மன்னிப்பு என்ற ஒன்றை கேட்டிருப்பாள்.
அவனை காயப்படுத்திவிட்டோம் என்ற மருகல் தானே இத்தனை நாள் அவனுக்காக காத்திருக்க வைத்தது.
தன்னுடைய பேச்சினால் உண்டான காயம், அந்த பாதிப்பினால் மட்டுமே அவன் இத்தனை தூரம் விட்டு சென்றது என்று தோன்றினாலும் அவனுக்காக மட்டுமே ஆனந்தியின் இத்தனை நாள் பார்வையை ஒதுக்கி தள்ளினாள்.
அதற்கு முன்பு அங்கிருந்த பொழுதுகளில் ஆனந்தியின் பார்வை தன்னிடம் இப்படி இருந்ததே இல்லை என்பது ஞாபகம் வந்தது.
இப்போதோ வெளியில் நிற்கையில் நடக்கையில், வேலை என்று இருக்கையில் அவ்வளவு எள்ளலாக ஒரு பார்வை ஆனந்தியிடமிருந்து கிடைக்கும்.
‘பார், என் மகன் என் மகன் தான். உன்னை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான் பார்’ என்ற தொனியை தாங்கி நிற்கும்.
அப்போதெல்லாம் ஆனந்தியை விட ஆத்மாவின் மீது தான் கோபம் கிளர்ந்தெழும்.
அவன் அப்படி விட்டுவிட்டு சென்றதால் தானே இவரின் பார்வை இப்படி கீழிறங்கி வருகிறது என்று நினைப்புடனே கடந்து சென்றாள்.
அதனால் ஆனந்தியும், அவரின் பார்வையும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை ரிதுபர்ணாவிற்கு.
ஆத்மா, அவன் ஒருவனே அவள் உலகத்தில் பெரும்பாலான உணர்வுகளை தருவித்தும், உயிர்ப்பித்தும், இப்போது குற்றி கிழித்தும் கொண்டிருப்பது.
‘இதற்கு இவன் என்னை அங்கேயே ஏன் இப்படி பேசினன்னு கேட்டிருக்கலாம்? அவள் பேசினதுல தப்பில்லைன்னு வாசல் வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டு அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான்’ என நினைக்காத நாழிகை இல்லை.
இப்போதும் இந்த பேச்சு வரும்வரை கூட அவனுக்காக என்றும் ஒருமனம் அடித்துக்கொண்டிருந்தது தான் உண்மை.
இந்த நொடி அப்படி இல்லை. ‘இன்னொரு திருமணமாம்?’ இகழ்ச்சியாய் இதழ்களில் ஒரு புன்னகை.
‘செஞ்சு தான் பார்க்கட்டுமே? எல்லாத்துக்குமே அடங்கி போவேன்னு நினைச்சுட்டாங்களா?’ என நினைத்தவளுக்கு நெஞ்சை அடைத்தது.
எதிர்பார்க்காத திருமணமாக இருந்தாலும் எத்தனை அழகாய் ஆரம்பித்த வாழ்க்கை.
ஆத்மாவின், பேச்சு, அதட்டல், கோபம், உரிமை என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஞாபகத்தை தர அவனின் அருகாமை தேட சொல்லியது.
‘அப்படி ஒன்றும் அவன் செய்துவிடமாட்டான்’ என மனது அடித்து சொன்னாலும் கோபமே.
இத்தனை தூரம் யார் யாரோ வந்து தங்கள் வாழ்க்கையில் கலகம் செய்ய இடமளித்தது அவன் தானே?
அவன் சரியாக இருந்திருந்தால் ஏன் இவ்வளவு பேச்சுக்கள்? இப்படி ஒரு முடிவிற்கு வர எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? என தோன்றியது.
அப்படி ஒன்றிற்கு அவன் இடமளிக்கலாமா? இருவருக்கும் இடையிலான பிரச்சனையை, மனத்தாங்கலை மற்றவர்கள் பார்வைக்கு விருந்தாக்கலாமா? என அவ்வளவு தூரம் வலியாய் காந்தியது.
இனி என்னதான் இருவரும் நன்றாக சேர்ந்து வாழ்ந்தால் கூட இப்படி விட்டு விட்டு சென்றான் என்பது மறையவே மறையாதே என நினைத்து நினைத்து தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
தன்னை செல்லும் பொழுது அழைக்கவில்லை என்றாலும் போனில் என்னவென பேசியிருந்தால் கூட ஒருவேளை தான் கிளம்பி சென்றிருப்போம் என்பதில் அவ்வளவு நிச்சயம் தான்.
ஆனால் அப்படியா நடந்தது? இதென்ன வாழ்க்கை என்று தோன்றினாலும் என்னவாகவும் இருக்கட்டும்.
இதில் தானா? அவனா? என்று பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தாள்.
ஆம், இதில் வேறு யாரையும் உள்ளிளுக்கவோ, குற்றம் சாட்டவோ அவள் விரும்பவில்லை.
இது அவனுக்கும் அவளுக்குமான உணர்வு சிக்கல். அதில் யாரையும் உள் வர அனுமதிக்க போவதில்லை. அவன் வரட்டும். வருவான் என அடித்து கூறியது மனது.
‘இத்தனை பேசுகிறோமே, கொஞ்சமேனும் அதை மறுத்தோ, இல்லை உணர்ந்தோ பேசுகிறானா இவன்?’ என்று வேறு எரிச்சல் கூடியது.
“ரிதுவாம், ரிது. இங்க வரட்டும். பேசிக்கறேன்…” என்றவளுக்கு வெளியே முருகேஸ்வரியின் சத்தத்தில் அங்கே செல்லவேண்டும் என்பதை மறந்து நின்றது புரிந்தது.
எழுந்து விசாலாட்சி வீட்டிற்கு செல்ல அங்கே முருகேஸ்வரி ஒரு பக்கம் நின்றாலும் இன்னொரு திசையில் மற்றவர்கள் இருந்தனர்.
அண்ணாமலை வீட்டில் நடந்த விஷயத்தை தான் பேச போகின்றார்கள் என்று நன்றாகவே தெரிந்தது.
ஆத்மாவிடம் தான் பேசியது இன்னும் யாருக்கும் தெரியாதென்பதால் மௌனமாக வந்து நின்றவள்,
“சொல்லுங்க மாமா…” என்றாள் சுரத்தின்றி.
“இப்படி உட்கார்…” என்று விசாலாட்சி சொல்லவும் அங்கே அமர்ந்தாள்.
“எதுக்கு இப்ப முகத்தை இப்படி தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்கற? இப்ப என்ன நடந்து போச்சாம்?…” விசாலாட்சி கேட்க,
“அதானே? இங்க பார் ரிது. நாங்க என்ன அப்படியேவா விட்டுடுவோம்? அதுவும் இவங்க இஷ்டத்துக்கெல்லாம் கண்ணன் சம்மதிக்கவே மாட்டான்….” என்ற செண்பகம்,
“ஒருநாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு அதிசயம் தான் நடந்திருக்கு. இன்னும் நம்ப முடியலை என்னால…” என மேவாயில் கையை வைத்துக்கொண்டவருக்கு அத்தனை சந்தோஷம்.
அப்போது தான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையே கவனித்தாள்.
“என்ன கண்ணு? என்ன இப்படி முழிக்கிற? எல்லாம் நல்ல விஷயம் தான். நான் சொன்னேனே? கவனிக்கலையா?…” முருகேஸ்வரி சொல்ல,
“இல்லையே சித்தி? என்னாச்சு?…” என்றாள் ரிதுபர்ணா.
“என்னவா? உன் மாமனார் உன் மாமியாரோட அண்ணன் கழுத்தை புடிச்சு வெளில தள்ளிருக்கார் தெரியுமா?…” என விசாலாட்சி சொல்ல ரிதுவின் விழிகள் விரிந்தது.
“என்ன?…” அவளால் நம்பவே முடியவில்லை.
“ஆமா, வந்து நல்லா வாங்கி கட்டிட்டு தான் அவமானப்பட்டு போயிருக்காரு அந்த மூக்கு வேர்த்த நாட்டாமை…” என்று செண்பகமும் சிரித்தபடி சொல்ல தன் காதுகளையே நம்ப முடியவில்லை ரிதுவிற்கு.
அதே நேரம் அண்ணாமலை ருத்ரதாண்டவமாடியதன் தாக்கம் குறையாமல் நின்றிருக்க அவரின் எதிரே ஆனந்தி நடுநடுங்கியபடி இருந்தார்.
“பொண்டாட்டி ஒத்துவரலைன்னா ரெண்டாவது கல்யாணம் செய்யறதுல தப்பில்லைன்னு நான் நினைச்சிருந்தா மனோ பிறந்த அடுத்த வருஷத்துலயே அதை நான் பண்ணிருந்திருப்பேனே?…”
“காலுக்கு உதவாத செருப்புன்னா கழட்டி வீசனுமாம். இப்ப உன் அண்ணே சொன்னது தான? அது எல்லாருக்கும் தான். விளங்குச்சா?…”
அண்ணாமலை எகிற ஆனந்தி மூச்சுவிடவே பயந்து போய் அடங்கி நின்றிருந்தார்.