“அன்னைக்கே சொன்னேன், அந்த பொண்ணு குடும்பத்துக்கு ஒத்துவர மாட்டான்னு. என்னவோ அவசர கோலத்துல முடிச்சிட்டார் மருமகன். எனக்கும் பயங்கர கோவம். மருமகன் ரொம்ப பேசவும் கிளம்பி போய்ட்டோம். அதுக்குன்னு ஒரு பிரச்சனைன்னா விட்டுட முடியுமா?…”
தங்கையிடம் அத்தனை நயமாய் பேச ஆனந்தி வேறு தன் பங்குக்கு அப்படி புலம்பி தள்ளிவிட்டார்.
“என் மகனை போய் பிச்சை வாங்கினான்னு பேசிட்டா அவ. அவ இருக்கற இருப்புக்கு இந்த பேச்சு பேசலாமா?…”
“அதான், ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துட்டு பேச்ச பாரேன். என்னன்னு இதை மாப்பிள்ளை பார்த்துட்டு சும்மா விட்டார்?…”
“அவர் எங்க பேச? நாங்க எல்லாருமே அவ பேசினதுல அதிர்ச்சியாகிட்டோம். இதுல எங்க அந்த மனுஷன் பேச?…” என்ற ஆனந்தி,
“அதுவும் கூட நல்லதுக்கு தான். இல்லைன்னா அப்பாவுக்கும் புள்ளைக்கும் இன்னும் விரிசல் பெருசாகிருக்கும்…” என மகிழ்ந்துகொண்டார்.
“இல்லன்னாலும் ரொம்ப ஒட்டி உரசுவாங்க தான். ரொம்ப முக்கியம். அதை விடும்மா. ஆகவேண்டியதை பார்ப்போம்…” என்று பொடி வைத்து பேச,
“ஆகவேண்டியதா? என்னண்ணே?…” என்றார்.
“என்ன நீ? புரியாம பேசற? அதுதான் மருமகனே விட்டுட்டாரே அந்த பொண்ணை. அப்பறம் என்ன? சூட்டோட சூடா இதை நம்ம ஆளுங்களை வச்சு பேசி அத்து விட்டுடுவோம்ன்னு சொல்றேன்…” என்றதும் ஆனந்தி அதிர்ந்து போனார் முதலில்.
“அண்ணே இது மட்டும் கண்ணனுக்கு தெரிஞ்சிச்சு?…”
“அவர் ஒன்னும் சொல்லமாட்டார். சொல்லபோனா இப்ப கோவத்துல வேற இருப்பார். சும்மாவே நாம வேண்டாம்ன்னு தள்ளி வச்சா பத்துமடங்கு தானா விலகி போற மனுஷன் மருமகன். நமக்கு தெரியாதா மருமகனை பத்தி?…” என்று பேசி ஆனந்தியின் மனதை மாற்ற அவர் வெகுவாய் சிரமப்பட தேவையில்லாது போனது.
திருமணம் முடிந்ததும் மகனை எண்ணி தான் அத்தனை யோசித்தார் ஆனந்தி. எப்படி இந்த பெண் அவனுடன் வாழும் என்று நினைத்தவர் இப்போது இவளுடன் என் மகன் எப்படி வாழ முடியும்? என நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
அதற்கு குருமூர்த்தியின் பேச்சும் முக்கிய காரணமாகிவிட ஏற்கனவே குழம்பிய குட்டையில் ஆனந்தியின் அண்ணனால் இலகுவாய் மீன் பிடிக்க முடிந்தது.
“என்னம்மா நான் சொல்றது சரிதானே?…” என கடைசியில் கேட்கையில் தெளிவாய் தலையசைத்தார் ஆனந்தி.
“நீங்க சொல்றதும் சரி தான். நான் கூட அந்த பொண்ணை அப்பாவி, பாவம்ன்னு நினைச்சேன். ஆனா எவ்வளோ பேசறா?…” என சொல்லியவர்,
“இதை எப்படி வீட்டுல அவர்க்கிட்ட பேச?…” என யோசிக்க,
“நீ யோசிச்சிட்டே இரு. நான் இப்ப போன் பேசிட்டு வரேன்…” என்று வெளியே வந்தார் குருமூர்த்தி.
பின்பக்கமாக வந்தவர் மாட்டை கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து நின்று தன் மனைவியிடம் பேச அங்கே முருகேஸ்வரி இருந்ததை கவனிக்கவில்லை.
பேச்சில் அத்தனை மும்மரம். சொல்ல வந்ததை பெரும் மகிழ்ச்சியுடன் அவர் சொல்லி முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றார்.
அவர் செல்லவும் அண்ணாமலை வரவும் சரியாக இருந்தது. பார்த்ததும் சிரித்த குருமூர்த்தி,
“நல்லாயிருக்கீங்களா மாப்பிள்ளை…” என்றார்.
“ஹ்ம்ம், நல்லாயிருக்கோம். நல்லாயிருக்கோம். உட்காருங்க. எப்ப வந்தீங்க?…” என தோரணையுடன் பேசிய அண்ணாமலை,
“காபி குடிச்சீங்களா?…” என கேட்டார்.
“இன்னும் இல்லைங்க மாப்பிள்ளை. நீங்க வரட்டும்ன்னு தான் இருந்தேன். அப்படியே பேச்சுல நேரம் போயிருச்சு…”
“சரித்தான் அப்ப இருந்து மத்தியானம் சாப்பிட்டே போகத்தான?…” என்ற அண்ணாமலை,
“ஹ்ம்ம், கோவமெல்லாம் போயிருச்சா? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?…” என்று சாதாரணமாக பேச ஆனந்திக்கு தான் ஒருபக்கம் பயமாகவும் இன்னொருபக்கம் கலக்கமாகவும் இருந்தது.
ரிதுபர்ணாவை அண்ணாமலைக்கு பிடிக்காது தான். ஆனாலும் இந்த விஷயத்தை எப்படி எடுத்துகொள்வார் என்பதில் சற்று அச்சம் தான்.
ரிதுவின் வீட்டை தங்கையின் மேல் உள்ள கோபத்தில் மட்டுமா ஒதுக்கி வைத்தார். அதையும் தாண்டிய காரணங்கள் உள்ளதே?
அப்படி இருக்க மகனுக்காக மட்டும் இதனை அவர் ஒப்புக்கொள்வாரா என்று சஞ்சலமாக இருந்தாலும் ஒருபக்கம் தன்னை போல மகன் எதிர்காலத்திற்கு என்று பார்த்தால் கண்டிப்பாக ஒப்புக்கொள்வார் என்றும் நம்பிக்கை வந்தது.
ஆனந்தி ஒருவழியாக முழுமனதாகவே அந்த முடிவிற்கே வந்துவிட்டார் இப்போது.
அதிலும் தன் அண்ணன் மகள் வேறு. கேட்கவே வேண்டாம். அத்தனை எதிர்பார்ப்பும், கூடவே கலக்கமுமாக அண்ணாமலையை கவனித்தார்.
“ஹ்ம்ம், எடுத்துக்கோங்க…” என்று ராணி கொண்டுவந்து தந்த ஆரஞ்சு ஜூஸை காண்பித்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டார் அண்ணாமலை.
தொழில் விஷயமாக எல்லாம் பேசி முடித்து கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே வந்த விஷயத்தை ஆரம்பித்தார்.
“ஆனந்தி தான் போன் பண்ணுச்சு. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு மாப்பிள்ளை…” என்று மொட்டையாக குருமூர்த்தி சொல்ல,
“என்ன கஷ்டம்? என்ன சொன்னா?…” என்று அண்ணாமலை ஆனந்தியை பார்க்க,
“வேற ஒண்ணுமில்லை. நேத்து பேசறப்போ பேச்சுவாக்குல இந்த மாதிரி நம்ம மருமகனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஒத்துவரலை. ரெண்டுபேரும் பேசிக்க கூட இல்லை. பிரச்சனைன்னு சொல்லுச்சு. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்…” என்றார்.
இரண்டு மணி நேரத்தில் வந்துவிடும் ஊரில் இருந்துகொண்டு உடனே வந்துட்டேன் என்று குருமூர்த்தி சொல்லும் அபத்தத்தை அண்ணாமலை உணர்ந்ததும் அவர் பார்வை சற்று அழுத்தமாய் மாறியது.
“அப்படிங்களா? அதுக்கென்ன? இதுல இப்படி பதறி அடிச்சு வர என்ன அவசரம் இருக்கு?…” என்றார் அண்ணாமலை.
திக்கென்றது ஆனந்திக்கு. இந்த பேச்சின் தொனியே வேறு விதமாய் இருக்க அதனை கண்டுகொண்ட ஆனந்தி அண்ணனுக்கு குறிப்பு தர முயல அது உபயோகப்படவில்லை.
“என்ன இப்படி சொல்லிட்டீங்க? எவ்வளவு துணிச்சல் இருந்தா அவ என் மருமகனை பார்த்து பிச்சை போட்டேன்னு சொல்லியிருப்பா? நீங்க எப்படி சும்மா விட்டீங்க?…” என்றதும்,
“அவக்கிட்ட மனுஷன் பேசுவானா? என் தலையெழுத்து இப்படி அவ இந்த வீட்டு மருமகளா இருக்கனும்னு இருக்கு…” என்று அண்ணாமலை எரிச்சலாய் சொல்ல,
அண்ணாமலையின் இந்த கோபமே போதுமானதாய் இருந்தது தான் வந்த விஷயத்தை நிறைவேற்ற.
“என்ன சொல்றீங்க?…” என அண்ணாமலை கேட்க,
“ஆமா மாப்பிள்ளை. குடும்பத்துக்கும் ஒத்துவரலை. இப்ப மருமகனுக்கும் பிடிக்காம தான் அவ கூட போன்ல கூட பேசாம கோவிச்சிட்டு தனியா அங்க போய் இருக்கார். எதுக்கு இந்த அக்கபோரு?…”
“அதுக்கு என்ன பண்ண முடியும்?…” அண்ணாமலை விட்டேற்றியாக சொல்ல,
அவரின் பேச்சின் திசை என்னவென புரிந்தும் புரியாமல் அண்ணாமலை ஆனந்தியையும் பார்த்துவிட்டு மீண்டும் குருமூர்த்தியிடம்,
“என்னன்னு மழுப்பாம உடைச்சு பேசுங்க…” என்றார்.
“அதை பேசத்தான வந்திருக்கேன். இது சரிப்பட்டு வராது மாப்பிள்ளை. யாருக்கும் பிடிக்காம போச்சு. இப்ப என்னத்துக்கு கையை கட்டிட்டு வேடிக்கை பார்க்கனும்? நாம என்ன கையாளாகாதவங்களா?…” என்றதும் அதனை கேட்டும் அண்ணாமலை அவரே பேசட்டும் என பார்த்தார்.
“என் மருமகனுக்கு இப்பவும் பொண்ணு குடுக்க ஆயிரம் பேர் போட்டி போட்டுட்டு வருவாங்க. அட வேற எவனையும் எதுக்கு சொல்லனும்? இப்ப சரின்னு சொல்லுங்க. கூட்டத்தை போட்டு அந்த கல்யாணத்த ரத்து பண்ணிட்டு என் பொண்ணை இப்பவே நான் கட்டி வைக்கறேன்…”
குருமூர்த்தி இப்படி சொல்லவும் அண்ணாமலை முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.
உடனே பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்ட அண்ணாமலை தன்னை நிதானப்படுத்திக்கொண்டு,
“இந்த பேச்சு பேசத்தான் வந்தீங்கன்னா அது வேண்டாம். இத்தோட நிறுத்திக்கோங்க…” என்று தன்மையாகவே சொல்லிவிட்டார்.
அதுவரை அண்ணாமலை மனநிலை அன்றைகென்று பார்த்து சற்று நிதானமாகவே இருந்தது.
அதனால் குருமூர்த்தி சொல்லவும் தங்கை மகனின் வாழ்க்கை, என்னவோ தெரியாமல் யோசிக்கிறார் என்று நினைத்து பொறுமையாக பதில் கூறினார் அண்ணாமலை.
ஏற்கனவே தன் மகனின் அந்த அதிரடி திருமணத்தில் வீடு தேடி வந்து அவமானப்பட்டு போனவர். இப்போதும் அதை செய்ய வேண்டாம் என்று பார்த்தார்.
“என்ன என்ன மாப்பிள்ளை நீங்க? நான் நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன். திரும்ப அந்த விளங்காதவளை இங்க இழுத்துட்டு வரனும்னு நினைக்கறீங்களா?…” என்றார் குருமூர்த்தி.
அண்ணாமலையின் நிதானமும், அமைதியும் குருமூர்த்திக்கு வேறு விதமாக அர்த்தம் கொடுத்தது.
அதிலும் அண்ணாமலை அமைதியாக பேசியதும் இன்னும் துணிந்து பேசினார் குருமூர்த்தி.
“இங்க பாருங்க, இது சரிப்பட்டு வராது. அதுவும் இந்த குடும்பத்துக்கு கொஞ்சமும் ஒத்து வராது…” என்ற அண்ணாமலை,
“ஆனந்தி இதென்ன பேச்சு? நீ சொல்லமாட்டியா?…” என்றார் மனைவியிடம்.
“அவளுக்கு இதுல முழு விருப்பம். அவ தான் புலம்பினா என் மகன் வாழ்க்கையே போச்சேன்னு. என் தங்கச்சிக்கு இருக்கற அக்கறை கூட உங்களுக்கு உங்க மகன் மேல இல்லாம போகும்ன்னு நான் நினைக்கவே இல்லை…” குருமூர்த்தி வார்த்தையை விட,
“ஆனந்தி அப்படியா?…” என்றார் அண்ணாமலை மனைவியிடம்.
“என்கிட்டே கேளுங்க. இப்படி மிரட்டி பேசற மாதிரி ஒன்னும் பேச வேண்டாம். அவ சொல்லாமலா வந்தேன் நான்? அவளுக்கு இருந்த முடிவுல முழு சம்மதம்…” குருமூர்த்தி விரைப்பாய் பேசினார்.
“என் மகன் இதுக்கு சம்மதிக்கமாட்டான். நீங்க இந்த பேச்சை விடறது தான் நல்லது…” அண்ணாமலை பல்லை கடிக்க,
“அதை நாங்க பார்த்துக்கறோம். ஒருவாட்டி அவர் அப்படி முடிவெடுத்தா நாம அப்படியே விடறதா? இப்ப கோவத்துல இருக்கும் போது தான் நல்லதுகெட்டது எடுத்து சொல்லி நாம அடுத்ததை பார்க்கனும்…” என சொல்ல அண்ணாமலை பொறுமை பறந்தது.
“என் மகனே சம்மதிச்சாலும் நான் சம்மதிக்கமாட்டேன். இந்த பேச்சு அசிங்கம். எனக்கு புடிக்கலை…” என்று உடைத்து சொல்லிவிட குருமூர்த்தியின் முகத்தில் கடும் கோபம்.
‘என்ன மாப்பிள்ளை, என்ன? புடிக்கலை புடிக்கலைன்னு? சொந்த மருமகள அதுவும் சொந்த தங்கச்சி மகளை இப்ப விட்டுக்குடுக்க முடியலையாக்கும்?…” என்று கேட்க அண்ணாமலை கோபத்துடன் எழுந்துவிட்டார்.
“டேய் எந்திடா, எந்திடா…” என்று குருமூர்த்தியை எழுப்ப அவர் அதிர்ச்சியாக பார்த்தார்.
“மாப்பிள்ளை மரியாதையா பேசுங்க…”
“என்னடா? என்ன மரியாதை? கல்யாணமாகி இன்னும் ஒருமாசமாவலை. அதுக்குள்ளே அதுங்களை பிரிச்சிவிடனும், அத்துவிடனும்னு பேசுவியா நீ? உனக்கு மரியாதை ஒரு கேடா? எந்திடான்றேன்…” என்று சொல்லிவிட எழுந்துகொண்டார் குருமூர்த்தி.
“தங்கச்சி, இப்ப புரியுதா? அம்புட்டு கோவம்ன்னு இருந்த மனுஷனுக்கு இப்ப மட்டும் எங்க இருந்து இவ்வளோ பாசம்? அப்ப இம்புட்டு நாள் போட்டதெல்லாம் வேஷமா?…”