“வேணாம் குருமூர்த்தி, என்னை வெறியாக்காம இங்க இருந்து போயிரு. அவ்வளோ தான் சொல்லுவேன்…” அண்ணாமலை எச்சரிக்க குருமூர்த்திக்கு இப்படியே விட்டுவிட்டு செல்வதா என அத்தனை கோபம்.
“உண்மையை சொன்னா உங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஒத்துக்க வேண்டியது தானே? அவ உங்க தங்கச்சி மகன்ற பாசம் தானே விடமுடியலை. மகனை சொல்லி அவளை இழுத்து பிடிக்கறீங்க. உங்களுக்கு மட்டும் பாசம் இருக்கனும், என் தங்கச்சிக்கு என் மக மேல இருக்க கூடாதா?…”
“ஆனந்தி, இவனை போக சொல்லு…” என அண்ணாமலை ஆனந்தியிடம் சொல்ல,
“என்கிட்ட பேசுங்க. அவளை ஏன் இழுக்கறீங்க?…” என இன்னுமே சீண்டிவிட்டார் குருமூர்த்தி.
“என்னடா, என்ன பேசனும்? ஏற்கனவே கல்யாணமாகி ஒருத்தியோட வாழ்ந்திட்டிருக்கான் என் மகன். என்னவோ சண்டை. அதுக்கு நீ ஊடால வந்து பிரிச்சிவிட்டு ரெண்டாவதா உன் பொண்ணை கட்டி வைப்பேன்னு நினைப்பியா நீ? ஒரு பொம்பளைப்பிள்ளைக்கு அப்பனா கொஞ்சமாச்சும் யோசிக்கிறியா?…” என்றார் அண்ணாமலை.
“என் மக நல்லா இருக்கனும்னு யோசிச்சதால தான் ரெண்டாந்தாரம்ன்னு தெரிஞ்சும் குடுக்கறேன். இது நாம ஏற்கனவே பேசி முடிவு பண்ணினது தான? இந்த ஒருமாசம் நடந்ததை மறந்திடுவோம். கண்ணனுக்கு கல்யாணமே ஆகலைன்னு நினைச்சிக்கிடுவோம்…” என இகழ்ச்சியாக குருமூர்த்தி சொல்ல,
“அறிவுகெட்டவனே இதத்தான் சொன்னேன், ஒரு பொம்பளைப்புள்ளைக்கு அப்பனா யோசின்னு. இப்படி உன் மகளை ஒருமாசம் கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணி எவனாச்சும் விட்டுட்டு போனா இப்படித்தான் பேசுவியா நீ?…” என்று கேட்க குருமூர்த்தி கொதித்து போனார்.
“அவளை போய் என் மகளோட சேர்த்து பேசறீங்க? இந்த எடை போடற வேலை என்கிட்டே வேண்டாம். அப்படி ஒரு நிலைமை என் மகளுக்கு ஏன் வர போகுது? அப்பன் நான் இருக்கேன்…” என மீசையை முறுக்க,
“எந்த அப்பனும் இவ்வளோ கீழ்த்தரமா யோசிக்கமாட்டான். நீ யோசிக்கிற பாரு அசிங்கமா…” என்ற அண்ணாமலை,
“ஆனந்தி எனக்கு இது சுத்தமா புடிக்காதுன்னு தெரிஞ்சும் நீ எப்படி இதுக்கு சம்மதிச்ச?…” என்று மனைவியிடம் எகிறினார் அண்ணாமலை.
“அங்க எதுக்கு பேசறீங்க? அவளே மகன் வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு கவலைப்பட்டுட்டு இருக்கா. உங்களை மாதிரியா?…” குருமூர்த்தி அண்ணாமலையை தன் பக்கம் திசை திருப்பினார்.
“ஆமாய்யா, சண்டை தான். இப்ப இங்க விட்டுட்டு போய்ட்டான். அதுக்கு ரெண்டாவது கல்யாணம்ன்னு வாய் கூசாம பேசுவியா நீ? வெக்கமாயில்லையா?…”
“அப்ப இப்படியே பிரிஞ்சே கிடக்கட்டும்ன்னு விட சொல்றீங்களா? இப்படி வருஷமெல்லாம் பிரிஞ்சு இருந்தா என்ன செய்வீங்க?…” இதை கேட்டாலாவது அண்ணாமலை யோசிப்பார் என குருமூர்த்தி நினைக்க,
“இருந்தா இருந்துட்டு போகட்டும். கட்டிக்கிட்டவனுக்கு வாழனும்னு நினைப்பு எப்ப வருதோ அப்ப வரட்டும். இவளுக்கும் போகனும்னு நினப்பிருந்தா போய் தொலையட்டும். உனக்கென்ன வந்துச்சு?…” அண்ணாமலை கோபம் கூடிக்கொண்டே சென்றது.
“அண்ணே இந்த பேச்சை விடுங்கண்ணே. என் பிள்ளை என்னவோ பண்ணிட்டு போறான். விடுங்க…” ஆனந்தி அழுகையுடன் பயந்துகொண்டே சொல்ல,
“நீ சும்மா இரும்மா. வாழவேண்டிய வயசுல வாழாம. இவ பிச்சைன்னு பேசுவா. என் மருமகன் அதை கேட்டுட்டு ரோஷம் கெட்டு திரும்ப சேர்ந்து வாழனுமா? இல்லை இவளா வரட்டும்ன்னு வாழ்க்கையை தொலைக்கனுமா? என்ன தேவைன்றேன்?…” என்ற குருமூர்த்தி பேச்சில் அண்ணாமலை கூர்மையாய் பார்த்தார் ஆனந்தியை.
“ஆனந்தி இவனை வெளில போக சொல்லு. இல்லை நடக்கறதே வேற…” என எச்சரிக்க,
“என்கிட்டே பேசுங்க மாப்பிள்ளை. தங்கச்சி மக பாசம் தடுக்குதோ?…” என மீண்டும் சொல்ல,
“நிறுத்துடா. தங்கச்சியாம் தங்கச்சி. தங்கச்சியே இல்லைன்னுட்டேன். அவளே போய்ட்டா. பாசமாம். மனசுல ஈரம்ன்னு ஒன்னு இருக்கனும். ஒழுக்கம் இருக்கனும். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இருக்கனும். கட்டினவ எப்படியாப்பட்டவளா இருந்தாலும் அவளுக்கு உண்மையா இருக்கனும்…” அண்ணாமலை சொல்ல சொல்ல குருமூர்த்தியும், ஆனந்தியும் விக்கித்தனர்.
“நான் நினைச்சிருந்தா என்னைக்கோ உன் தங்கச்சியை காரணம் காட்டி இன்னொருத்திய கட்டிருக்கமாட்டேனா? வந்துட்டான் குப்பத்தனமா பேச….”
“மாப்பிளை…” என குருமூர்த்தி விரலை நீட்டி எச்சரிக்க,
“என்னிக்கு அவ அப்பன் தமயந்தி செத்த வீட்டுல ஈரம் காயறதுக்குள்ள ரெண்டாவதா ஒருத்திய இழுத்துட்டு வந்து நின்னானோ அன்னைக்கே ஒட்டிக்கிட்டு இருந்த உறவும் செத்து போச்சு. பொண்டாட்டி செத்த இடத்துல அனலு அடங்கமுன்ன இன்னொருத்தியை தேடி போறவனெல்லாம் ஒரு ஆம்பள?…”
“அவன் செஞ்ச அதே கேவலத்தனத்தை என் மகனும் செய்யனுமா? அதுக்கு நான் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன். கட்டினவளை வச்சிருந்து காலந்தல்ல முடியாதவனெல்லாம் என்ன மனுஷன்? எம்மகன் அப்படி இல்லை. தெரியாமலா தாலி கட்டினான்?…” என்றதும் குருமூர்த்தி இகழ்ச்சியாய் பார்க்க,
“இங்க பாரு, இந்த பார்வை எல்லாம் என்கிட்டே வச்சுக்காத. அமைதியா சொல்லும் போதே வெளில போயிரு…” என்று சொல்ல,
“கிளம்புங்கண்ணே…” என்றார் ஆனந்தியும்.
“இங்க பாரு ஆனந்தி, நீ ஒன்னும் அழுகாத. இவர் இப்படித்தான் பேசுவாரு. நான் நாளைக்கே போய் மருமகனை பார்க்கறேன். பேசற விதமா பேசி…” என சொல்லவுமே அண்ணாமலை வெகுண்டுவிட்டார்.
“சொல்லிக்கிட்டே இருக்கேன்…” என சட்டையை பிடித்துவிட்டவர் வாசலுக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
“இனி உறவுக்காரன்னு கூட சொல்லிக்கிட்டு இங்கிட்டு வந்திடாத பார்த்துக்கோ. குடியை கெடுக்கன்னே கிளம்பி வருவானுங்க…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டார் அண்ணாமலை.
“ஆனந்தி…” என்ற அழைப்பில் ஆனந்தியும் வீட்டிற்குள் வந்துவிட்டார் தன் அண்ணனை இயலாமையுடன் பார்த்துக்கொண்டே.
“எவ்வளோ தைரியம் இருக்கனும் உனக்கு?…” என்றவர்,
“உள்ள வா…” என அறைக்குள் சென்றுவிட நடுங்கிக்கொண்டே ஆனந்தி சென்றார்.
உள்ளே சென்ற வேகத்தில் பளாரென்று கன்னத்தில் ஒரு அரை விழ சுருண்டு விழுந்து கன்னத்தை பிடித்தபடி எழுந்து நின்றார்.
“கல்யாணமானத்துல இருந்து முதல் அடி இது உனக்கு. அப்படித்தானே?…” என கேட்க ஆமாம் என்ற தலையசைப்பு ஆனந்தியிடம்.
“உரிச்சிருவேன் பார்த்துக்கோ, கல்யாணமா பன்றீங்க கல்யாணம்? நான் பண்ணவா கல்யாணம்?…” என கேட்கவும் ஆனந்தி குலுங்கி அழ,
“பேசலைன்னா? என்ன நினைச்ச உன் மகனை? அவன் விட்டுட்டு போக எவ்வளவு காரணமிருக்கும். ஆனா ஒரேடியா விட்டுட்டு போறதா இருந்தா உன்கிட்ட அவ பதில் சொன்ன நிமிஷமே வெளில போடின்னு கழுத்தை பிடிச்சு தள்ளிருப்பான். செஞ்சானா?…”
உண்மை தானே அண்ணாமலை சொல்லுவதும் என்று புரிந்து இல்லை என்பதை போல ஆனந்தி தலையசைக்க,
“அவளை கட்டினா என்னெல்லாம் பிரச்சனை வரும்ன்னு எல்லாம் தெரியாமலா கட்டிருக்கான்?…” என்றவர்,
“இங்க பாரு இப்பவும் எனக்கு அவளை புடிக்காது. அவ சங்காத்தமே வேண்டாம், அவ மூஞ்சிலையே முழிக்க கூடாதுன்னு தான் நினைக்கேன். கண்ணா அவளை தொழில்ல கொண்டுவரதும் பிடிக்காது. அதுக்குன்னு கல்யாணத்தை இல்லைன்னு ஆக்குவீங்களா அண்ணனும் தங்கச்சியும்?…”
“அப்படி நினைச்சீங்க ஒழிச்சுக்கட்டிடுவேன். அவன் எண்ணமும் பண்ணிட்டு போறான். அவன் பாடு. அவன் பொண்டாட்டி பாடு. ஊடால வந்து எதாச்சும் சண்டித்தனம் செஞ்ச….” என்று கண்களை உருட்டி எச்சரிக்க வாயை பொத்திக்கொண்டார் ஆனந்தி.
அண்ணாமலையின் மனக்கண்ணில் மகன் அவளுடன் நின்று விளக்கேற்றியதும், இணக்கமாய் பேசி புன்னகைத்ததும், அந்த தருணம் அவன் முகத்தின் உணர்ச்சிகளும் தான் வந்து நின்றது.
“கல்யாணம் பேசறாங்கலாம் கல்யாணம். இங்க ரெண்டுபேரும் அப்படியே கிடங்கன்னு ஒன்னும் அப்படியே யாரும் விட்டுடவும் போறதில்லை. அதுக்குன்னு எவ்வளோ பெரிய முடிவு. கல்யாணம்ன்னா என்ன விளையாட்டா?…”
“இல்லங்க. கண்ணா அங்க தனியா. அவன் வாழ்க்கை…” என்று திக்கி திக்கி ஆனந்தி பேச,
“என்ன தனியா? தேவைக்கு, அதனால வர வாரிசுக்கு அவனுக்கு இன்னொரு பொண்ணை கட்டிவைக்கனும்னு சொல்ற. அதான?…” என்றதும் நிலைகுலைந்து பார்த்தார் ஆனந்தி.
“அப்படின்னா எதுக்குமே உதவலைன்னு உன்னை நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டு அப்பவே என் தேவைக்கு இன்னொருத்தியை கட்டிருந்தா தப்பில்லைன்னு சொல்றியா?…” என்று கேட்க முகத்தில் வெந்நீர் ஊற்றியதை போலிருந்தது ஆனந்திக்கு.
அண்ணாமலையை பற்றி தெரிந்திருந்தும் இப்படி யோசிக்காமல் முட்டாள்த்தனமாக முடிவெடுத்துவிட்டோமே என்று இருக்க,
“பொண்டாட்டி ஒத்துவரலைன்னா ரெண்டாவது கல்யாணம் செய்யறதுல தப்பில்லைன்னு நான் நினைச்சிருந்தா மனோ பிறந்த அடுத்த வருஷத்துலயே அதை நான் பண்ணிருந்திருப்பேனே?…”
“காலுக்கு உதவாத செருப்புன்னா கழட்டி வீசனுமாம். இப்ப உன் அண்ணே சொன்னது தான? அது எல்லாருக்கும் தான். விளங்குச்சா?…”
அண்ணாமலை எகிற ஆனந்தி மூச்சுவிடவே பயந்து போய் அடங்கி நின்றிருந்தார்.
“இப்பவும் பிரச்சனை இல்லை. எதாச்சும் ஏடாகூடமா பண்ணினன்னு தெரிஞ்சது நான் யோசிக்கவே மாட்டேன். தரதரன்னு இழுத்துட்டு போயி உன் அண்ணன் வீட்டுல விட்டுட்டு வந்துருவேன் அங்கயே இருன்னு…” என்று சொல்லிவிட்டு செல்ல மிரண்டு போய் நின்றார் ஆனந்தி.
சர்வாங்கமும் ஒடுங்கி போனது அவருக்கு. அதிலும் நடுவீட்டில் வைத்து பிரச்சனை நடந்திருக்க அத்தனை அவமானமாக இருந்தது.
விஷயம் வெளியே தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கையிலேயே யாருக்கும் தெரிந்திருக்குமோ?
யாரும் கவனித்தார்களோ என்று யோசிக்க அதற்குள் அண்ணாமலையின் மூலம் இளவரசு காதுக்கு விஷயம் வந்துவிட்டது ஒன்றுவிடாமல்.
“நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் எல்லாம் மூட்டையில அடைச்ச பஞ்சாட்டம் கம்முன்னு இருக்கீங்க? இத்தனை நாளா விட்டுவச்சுட்டு இவ்வளவுக்கு கொண்டுவந்துட்டீங்க? என்ன ஏதுன்னு பார்த்து தொலைடா…” என தம்பியிடமும் கத்திவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து அறைக்குள் சென்று மறைந்தார்.
ஆனந்திக்கு அத்தனை அவமானமாக இருந்தது இப்படி இளவரசுவிற்கு சொல்லிவிட்டாரே என்று.
கூனி குறுகி போய் ஒருபக்கம் அமர்ந்திருந்தவருக்கு அன்றைய அதிர்ச்சிகள் குறையவில்லை.
பொழுது மதிய உணவு நேரத்தை நெருங்கி இருக்க மனோவும் கல்லூரி முடித்து மதியம் வந்துவிட்டாள்.
ராணியின் மூலம் விஷயம் அவளுக்கு தெரியவர அடுத்ததாக ஆத்மாவிற்கு அழைத்து அதனை தெரிவித்திருந்தாள் மனோ.
அங்கே விசாலாட்சியின் வீட்டில் வைத்து இதை எல்லாம் கேட்டிருந்த ரிதுபர்ணாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
‘இப்படியும் மனிதர்கள்?’ என யோசித்தாலும் அப்போதும் அண்ணாமலையின் பேச்சும், அவர் நிலைப்பாடும் ஒருவகையில் பிடிக்கவும் செய்தது.
“என்னமா? என்ன பண்ணலாம்?…” என இளவரசு கேட்க,
“இதை பத்தி பேச என்ன இருக்கு மாமா? எதுவும் பேச வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
ஆனால் அவளால் அப்படியே இருக்க முடிந்ததா? சூழ்நிலையின் ஓட்டத்தில் தான் நம்முடைய பயணமும் என்பது எவ்வளவு நிதர்சனம்.
எடுத்த முடிவை அவளே முறித்து அங்கே அவனை பார்க்க செல்லவே கூடாதென்று பிடிவாதமாய் இருந்தவளோ அடுத்த ஒருமணி நேரத்தில் சென்னைக்கு கிளம்பி இருந்தாள்.
“இந்த பயலுங்களை பார்த்தியாம்மா? எவ்வளவு ஏமாத்திருக்கானுங்க? நம்மக்கிட்ட இப்படின்னு சொல்லவே இல்லையே?…” என்று இளவரசு தன் கையில் போனுடன் வர ரிதுபர்ணாவிற்கு கோபமான கோபம்.
“இவர் என்னை நினைக்கவே மாட்டாரா மாமா? இப்டியே விட்டா என் தலையில மிளகாய் அரைச்சுட்டே தான் இருப்பார். போய் வச்சுக்கறேன்…” என்றவள் அப்போதே சென்னைக்கு காரை எடுக்க சொல்லி கிளம்பிவிட்டாள்.
அதிலும் ட்ரைவர் அண்ணாமலை வீட்டிற்குள் நின்றிருக்க அங்கே வந்து காரை எடுக்க சொல்லி வந்தாள் ரிதுபர்ணா.
அந்த வீடு, அங்கே நடந்தது எதையும் அப்போது நினைக்கவில்லை. ட்ரைவர் காருக்கருகே கானவிழலி என்றதும் வீட்டிற்குள் இருப்பதை கண்டு வந்துவிட்டாள் அத்தனை வேகமாய்.
அவள் உள்ளே தனியாய் வந்ததே அதிர்ச்சி என்றால், அதிகாரமாய் காரை எடுக்க சொல்லியது இன்னும் அதிர்ச்சி.
“ஏய்? என்ன?…” என ஆனந்தி பேச ஆரம்பிக்கும் முன்,
“இது கம்பெனி கார். கம்பெனில என் புருஷனுக்கும் ரைட்ஸ் இருக்கு தானே? அப்ப அதை நான் யூஸ் பண்ண எனக்கு அதிகாரம் இருக்கு. நீங்க சொல்லாதீங்க கூடாதுன்னு…” என்றவள்,
“என்ன பார்க்கறீங்க ட்ரைவர் அண்ணா? காரை எடுங்க. கிளம்பனும்…” என்றவள் மனோ மீண்டும் வெளியே செல்ல வர ட்ரைவர் மனோவை பார்த்தார்.
“நீங்க எனக்கு கார் எடுக்க முடியுமா முடியாதான்னு கேட்கலை. நீங்க கார் எடுக்கறீங்க. என்னை கொண்டுபோய் சென்னையில ட்ராப் பன்றீங்க. அவ்வளோ தான்…” என்று சொல்லிவிட்டு தனது பேக்கை எடுக்க வீட்டிற்கு சென்றவள் அதே வேகத்துடன் காரில் வந்து அமர்ந்தாள்.
இதனை கவனித்திருந்த அண்ணாமலைக்கு எத்தனை நிம்மதி என அந்த நொடி அவரின் முகத்தை ஆனந்தி கண்டிருந்தால் தெரிந்திருக்கும்.
கார் கிளம்பி செல்லும் வரை இதனை பார்த்திருந்த ஆனந்தி கணவரிடம் கூட குறையாய் முறையிட முடியாமல் புழுங்கிபோய் பார்த்துக்கொண்டிருந்தார்.
ரிதுபர்ணாவுடன் கார் சென்னை நோக்கி செல்ல அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆத்மா கரூர் வந்தடைந்திருந்தான் தனது வீட்டிற்கு.