ஒருவருக்கும் நிம்மதியில்லை ரிதுபர்ணா அங்கே சென்று சேர்ந்த தகவலை அறிந்துகொள்ளும் வரை.
இங்கே அண்ணாமலை ஆடி ஓய்ந்தவராக ரிதுபர்ணா கிளம்பியதை கண்டதும் மனதில் எழுந்த நிம்மதியுடன் கண்ணை மூடி சாய்ந்துவிட்டார்.
அத்தனை கோபத்தில் இருந்தவருக்கு அவள் கிளம்பியது பெரும் ஆறுதலாக இருந்தது.
‘எப்படியோ இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் சரி’ என்று தான் அவரின் நிலைப்பாடு இப்போதும்.
ஊரிலேயே பெரிய குடும்பம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க கூடிய குடும்பம் என்னும் கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு.
அத்தனை ஒழுக்கமும், மரியாதையும், மனதின் எண்ணங்கள் கூட சுத்தமாக இருக்கவேண்டும் என நினைத்திருந்தவர்.
அவரின் எண்ணங்களை போலவே வாழ்க்கையையும் அமோகமாக வாழ்ந்து காட்டியவர்.
பிடிக்கவில்லை என்றால் கோபம் எந்தளவுக்கு உள்ளதோ அந்தளவுக்கு அன்பிற்கும் மதிப்பு தருபவர்.
குடும்பமாக அதிலும் அருகருகே உடன் பிறந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக ஒரு கூட்டுக்குள் வசிப்பதை போல தான் இருந்து வந்தனர்.
தமயந்திக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்கவுமே அவருக்குமான வீட்டை அங்கே கட்டி தயாராக வைத்து மாப்பிள்ளை வீட்டோடு தான் வேண்டும் என சல்லடை போட்டு சலித்ததில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் தனசேகரன்.
தங்களை போல பெரிய மில், கம்பெனி இல்லை என்றாலும் அவர் அளவிற்கு சொந்த தொழிலை சிறப்பாகவே செய்து வந்தார்.
பார்க்க முகலட்சணமும், அழகுமாக தமயந்திக்கு ஏக பொருத்தமாக இருந்தவர் பெண் வீட்டினரை வசீகரித்துவிட்டார்.
கடைசி பெண்ணின் திருமணம். கல்யாணமும், அதன் விசேஷங்களும் தடபுடல்பட்டது.
ஊரே வியக்கும் அளவிற்கு சிறப்பாக செய்தவர்கள் மகளை கண்ணுக்கெதிரே குடி வைத்து கண்ணார ரசித்தனர்.
திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் எந்தவித நெருடலும் இல்லாமல் தான் சென்றது.
தனசேகருக்கு தாய் மட்டுமே இருக்க உடன் பிறந்த தங்கையும் வெளிநாட்டில். தங்கைக்கு துணையாக தாய் சென்றுவிட இங்கே தனசேகரை கேட்பார் யாருமில்லை.
தமயந்தி அமரிக்கையும், அமைதியுமாக இருப்பவர். கண்ணுக்கு நிறைவாய் கணவன், இன்னும் பொத்தி பாதுகாத்து சீராட்டும் தாய் தந்தை என நன்றாகவே இருந்தார்.
அன்று இரவு கணவனுக்காக காத்துக்கொண்டு வெளி வாசலில் அமர்ந்திருக்க தனது மகனை தோளில் போட்டு தட்டிக்குடுத்தபடி வாசலில் நடந்துகொண்டிருந்தார் விசாலாட்சி.
“இன்னும் பரத் தூங்கலையாக்கா?…” என களைப்புடன் வந்து படியில் அமர்ந்துகொண்டார் தமயந்தி.
“நான் கேட்கனும் அதை. நீ இன்னும் தூங்கலையா?…” என்றதும் தமயந்தி முகமே வாடிவிட்டது.
“இன்னும் உன் புருஷன் வரலையாக்கும்?…” என்று கேட்கவும் தலையசைத்தவர்,
“இப்ப வந்திடுவார்க்கா…” என பேச,
“நீ என்னைக்கு உன் புருஷனை விட்டுக்குடுத்திருக்க?…”
“ப்ச், அதை விடு. இந்நேரம் என்ன இவனை தோள்ல போட்டு சுத்திட்டு இருக்க?…”
“என் நேரம்டி. தூக்கத்துல என்ன கனவு வந்துச்சோ. புள்ளை அரண்டு எந்திச்சிட்டான். எல்லாரையும் எழுப்பிருவானோன்னு தூக்கிட்டு வெளில வந்துட்டேன்…”
“ஹ்ம்ம்…” என்ற தமயந்தி,
“தூங்கிட்டான் போல, கொண்டா நான் மடில போட்டு தட்டி குடுக்கறேன்…” என்று சொல்ல விசாலாட்சியும் வந்து அமர்ந்துகொண்டார்.
“என்ன தான்டி பன்றீங்க? இவரை கண்டிச்சே வைக்க மாட்டியா? பெரியண்ணனுக்கு அவ்வளோ கோவம். அரசல் புரசலா கேள்விப்படறது ஒன்னும் சரியில்லை…”
விசாலாட்சி சொல்ல தமயந்தி தலையை குனிந்தபடி பரத்தை மடியில் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தாரே தவிர பதில் சொல்லவில்லை.
“வாய திறயேன். உன்னை ஒரு சொல்லிட கூடாதே? உடனே முகத்தை தூக்கி வச்சுப்ப?…” விசாலாட்சி நொடிக்க,
“என்னவோ சொல்லுற. சரியா படலை எனக்கு. சரி நீ போய் தூங்கு. வந்தா கதவை திறந்து உள்ள வந்து படுத்துக்கட்டும். கண்ணு முழிக்காத. நாளைக்கு வெள்ளன எந்திக்கனும்…”
“ஆமா, செண்பகம் மதினி கூட தலையலங்காரம் தான் தான் பண்ணனும்னு சொன்னாங்க. அதுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேன். தூங்கி எந்திச்சா தெம்பா வேலையை பார்க்கலாம்…” என்று பேசியபடி எழுந்து நிற்க விசாலாட்சியும் பரத்தை மீண்டும் தூக்கி தோளில் போட்டு திரும்ப வாசலில் சத்தம் கேட்டது.
யாரோ பைக்கை ஓட்டி வர பின்னால் அமர்ந்திருந்த தனசேகரன் தள்ளாட்டத்துடன் இறங்கி அவர்களை கிளம்பும்படி சொல்லிவிட்டு வந்தார்.
கண்ணில் நீர் நிறைய இதனை பார்த்துக்கொண்டே மேலிட்ட வயிற்றை பிடித்தபடி தமயந்தி நிற்க விசாலாட்சி அங்கே நிற்காமல் சென்றுவிட்டார் வேதனையுடன்.
தனது குடும்பத்தில் ஒருவருக்கு இந்த பழக்கம் இருந்ததில்லை. தனசேகரனை விசாரித்த பொழுது இதை பற்றி தெரிந்திருக்கவில்லை.
ஆனால் திருமணம் முடிந்து நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர அண்ணாமலை ஆடி தீர்த்துவிட்டார்.
“எப்பேர்ப்பட்ட குடும்பம், எப்படி வீடு. இங்க போய் இப்படி குடிச்சிட்டு வந்து மானத்தை வாங்கறாரே?…” என பேசி இதனை கொண்டு தமயந்திக்கும், அண்ணாமலைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட்டது.
தமயந்தி கணவரை தாங்கி பேச, அண்ணாமலை கண்டித்து வைக்கும்படி சொல்ல அண்ணனின் கோபமும், அப்படி நேரத்தில் வரும் வார்த்தையையும் நன்றாக தெரிந்திருந்தும் அவரால் தாங்க முடியவில்லை.
“அவர் சரியாகிடுவாரு. என் குழந்தை பிறந்தா மாறிடுவார். கொஞ்சமாச்சும் அவருக்கு தங்கச்சி புருஷன்னு மதிப்பு குடுக்கனும் நீங்க…” என்று சொல்ல இப்படியாக அண்ணன் தங்கைக்கிடையே சண்டை.
பேச்சு வார்த்தைகள் குறைந்தது. ஆனால் முற்றிலும் பேசிக்கொள்ளாமல் ஒன்றும் இல்லை.
தங்கையின் வாழ்க்கை பாழாகிவிடுமோ என பரிதவிப்பில் அண்ணாமலை இன்னும் வார்த்தைகளை விட்டு தனசேகரிடம் பேசுவதையே அறவே தவிர்த்துவிட்டார்.
அந்த இடைவெளி தங்கை கணவன் என்னும் மதிப்பை முற்றிலும் குறைத்து இவன் என்னிடம் பேசும் அளவிற்கு தகுதியானவனா? என்று நினைக்கும் அளவிற்கு தான் தனசேகரும் நடந்துகொண்டார் செண்பகத்தின் வளைகாப்பு விழாவில்.
அடுத்த சில நாட்களில் தமயந்திக்கும் வளைகாப்பு. அதற்கு முன் செண்பகத்தை தாய் வீட்டிற்கு அனுப்பவேண்டும்.
காலையில் விறுவிறுப்பாக எழுந்து குளித்து கிளம்பி இருந்த தமயந்தி உறங்கிக்கொண்டிருந்த தனசேகரனை எழுப்பினார்.
“ப்ச், இப்ப எதுக்கு என்னை எழுப்பற நீ? உனக்கு வேணும்னா போய்க்கோ…” என்று விட்டேற்றியாகவும், இன்னும் தெளிவில்லாமலும் பேச,
“பெரியண்ணன் மேல இருக்கற கோவத்த சின்னண்ணன் மேல காமிப்பீங்களோ? கோவமாவே இருந்துக்கோங்க. ஒரு மரியாதைக்காக வந்து ரெண்டுநிமிஷம் சபையில நின்னுட்டு வந்திருங்க. இப்ப நான் போறேன்…” என கிளம்பிவிட்டார்.
ஆனால் மதியவேளை உணவு நேரம் வரை அவர் வரவே இல்லை. தமயந்தி தான் சென்று பார்க்க இன்னும் உறக்கத்தில் இருந்தவரை நெருங்கி எழுப்பினார்.
“வரேன் வரேன்…” என்று சொல்லி ஏனோதானோவென்று கிளம்பி அடுத்த வீட்டில் நடந்துகொண்டிருக்கும் விசேஷத்திற்கு வந்தமர்ந்தார்.
தனசேகரனை பார்த்த அனைவருமே மரியாதைக்கு ஓரிரு வார்த்தை பேசிவிட்டு செல்ல இளவரசு வந்துவிட்டார்.
“வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்…” என அழைக்க,
“இருக்கட்டும். கொஞ்ச நேரமாகட்டும்…” என மறுக்க,
“என்ன மாப்பிள்ளை உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டிருந்தோம். காலையிலயும் சாப்பிடலை நீங்க…” என சொல்லி இளவரசு அத்தனை இறங்கி போய் அழைக்க அண்ணாமலைக்கு இதனை கண்டு அவ்வளவு கோபம்.