எப்போதும் மற்றவருக்கு காட்சி பொருளாக கூடாதென நினைப்பவர் தங்கையை, அதிலும் இந்த நிலமையில் இருப்பவளை அடிக்கவும் இருந்த கொஞ்சநஞ்ச பொறுமையும் பறந்தது.
எத்தனை தான் தனசேகரன் தவறே செய்திருந்தாலும் அன்றைய சூழ்நிலையில் அவர் பக்கமாக பேச ஒருவருமில்லாமல் போக அவர் மரியாதையை காப்பாற்றுகிறேன் என தமயந்தி கோபத்தில் அண்ணனை தூக்கி எரிந்து பேசினார்.
“எதுக்குண்ணே நீங்க என் புருஷனை அடிச்சீங்க?…” என்று தமயந்தி அண்ணாமலையிடம் சண்டைக்கு நிற்க,
“இவன்லாம் ஒரு மனுஷனா? இங்க பார், ஒழுங்கு மரியாதையா ஒழுக்கமா இருக்க சொல்லு. நம்ம மரியாதை என்ன? இவனுக்கு கொஞ்சமாச்சும் அதுக்கு தகுதி இருக்கா?…” என்று பேச பேச ஊரார் மத்தியில் இப்படி கணவனை பேசவும்,
“தகுதி இருக்கா, இல்லையான்னு நீ சொல்லாத, உன் வேலையை நீ பார். என் புருஷன் என்னை அடிச்சா உனக்கென்ன? நீ ஏன் கேட்கிற?…” என வழக்கமாக கணவனின் தவறை பூசி மொழுகும் மனைவியை போலவே செயல்பட அண்ணன் தங்கை உறவுக்குள் பெரும் விரிசல்.
பேச்சுக்கள் வளர்ந்து கடைசியில் அண்ணாமலை இவள் என் தங்கையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அவரின் வைராக்கியம் பற்றி தெரிந்திருந்தாலும் தமயந்திக்கும் அண்ணாமலை மீது மன வருத்தம்.
“என்னடி இப்படி பண்ணிட்ட?…” என தனியே விசாலாட்சி அவரிடம் அழைத்து கேட்க அழுதுகொண்டிருந்தவர்,
“நீ சும்மா இருக்கா. அண்ணன் மட்டும் தலையிடலைன்னா இவ்வளோ பிரச்சனை இல்லை. அவர் பேசவும் தான் இவருக்கும் கோவம் வந்திருச்சு…”
“அதுக்கு உன் புருஷன் என்ன பண்ணினாலும் தழைஞ்சு போக சொல்றியா? அண்ணன் பேசினா அவர் கம்முன்னு இருக்கமாட்டாரா? அதுவும் அண்ணே சின்னண்ணேட்ட தான பேசிச்சு. இவர் ஏன் வீம்புக்கு வாயை விட்டாரு? இப்ப செண்பகம் வீட்டாளுங்க முன்னாடி எவ்வளோ அசிங்கம்?…”
“அதுக்குத்தான் நான் அங்க வந்திருக்கவே கூடாது…” தமயந்தியும் அழுதுகொண்டே பேச,
“ஏய் என்னடி?…” என அதட்டினார் விசாலாட்சி.
“பின்ன என்னக்கா? இவங்க பார்த்து கட்டிவச்ச மாப்பிள்ளை தானே? இவங்களே அசிங்கப்படுத்தினா நாளைக்கு ஊருக்குள்ள ஒரு பய மதிக்கமாட்டான். உனக்கே தெரியும் தொழில்ல பேர் எவ்வளோ முக்கியம்ன்னு. சம்பாதிக்கன்னு வெளில போகவேண்டிய மனுஷன்….”
“பிரச்சனை வந்து இவ்வளோ பேசறதுக்கு அண்ணன் மட்டும் எடக்கா பதில் சொல்லாம இருந்தா சின்னண்ணனே சமாளிச்சிருக்கும். இவரும் கம்முன்னு இருந்திருப்பார். இது தேவையா? இப்ப நானும் பேசி…”
வாயும் வயிறுமாய் இருந்தவருக்கு எதிர்காலமே இருட்டானதை போல கலக்கமாய் இருந்தது.
மனதே சரியில்லை. அண்ணாமலையின் வீட்டை தவிர மற்றவர்களிடம் முன்பை போலவே பழகி வந்தார்.
அண்ணாமலை பேசுவதில்லை என்று ஆனந்தியும் பாராமுகமாக திரும்பி செல்ல அதற்கு அவருக்கு மேல் முகம் திருப்பி தமயந்தி இருந்துகொண்டார்.
பிரச்சனைக்கு பிறகு சிறிது நாட்கள் ஒழுங்காகவே இருந்தார் தனசேகரன். வளைகாப்பு முடிந்து தமயந்தியை தாய் வீட்டிற்கு அழைக்க மறுத்துவிட்டார் அவர்.
தான் சென்றால் நிச்சயம் தனசேகரன் வம்பிற்கென்றே அவமதிப்பார் என செல்லவில்லை. ஏற்கனவே பேச்சுவார்த்தை இல்லை. மேலும் வேண்டாம் என இருந்துகொண்டார் அண்ணாமலை.
எப்படியும் தங்கை இங்கே நம் வீட்டிற்கு தானே வருவாள், வரட்டும் பார்த்துகொள்ளலாம் என நினைக்க, அது தெரியாமல் தமயந்தியும் செல்ல மறுத்துவிட்டார்.
“இந்தா தான இருக்கேன். வந்து பார்த்துக்கோங்க. அங்க மட்டும் வரமாட்டேன்…” என்றவர் சாஸ்திரத்திற்கு இளவரசுவின் வீட்டிற்கு வந்து இருந்துவிட்டு தங்கள் வீட்டிற்கே சென்றுவிட அண்ணாமலை இன்னும் விலகிக்கொண்டார்.
“அவளுக்கே அவ்வளவு இடும்புன்னா எனக்கு இருக்காதா?…” என கேட்டு இருந்தாலும் அவ்வப்போது தங்கையை பார்க்கையில் மனது உருகத்தான் செய்யும்.
அண்ணாமலையின் மனது புரியாமல் அண்ணன் பார்வையில் தங்களுக்கு மதிப்பில்லை என்று தனசேகரனை இன்னுமே கண்காணிப்பில் வைத்தார் தமயந்தி.
குடித்துவிட்டு வந்தால் உறங்காமல் வெளியே வந்து அமர்ந்துகொண்டு உண்ண மறுத்து, மருந்து சாப்பிட மறுத்து என்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தவர் அதில் தனது ஆரோக்கியத்தை தவறவிட்டார்.
பெண் குழந்தை பிறந்ததும் அத்தனைபேரும் கொண்டாடி தீர்க்க தனசேகருக்கும் மகளின் முகத்தை பார்க்கவும் எல்லாமே மறந்தது.
அண்ணாமலையும் ஆனந்தியுடன் வந்தார். தங்கையிடமோ, தனசேகரிடமோ பேசவில்லை.
மருத்துவமனைக்கே வந்து பார்த்துவிட்டு தாய்மாமன் முறை என்று தங்க சங்கிலி எல்லாம் போட்டுவிட்டு தான் வந்தார்.
அண்ணன் முதலில் பேசட்டும் என தங்கையும், தங்கை பேசட்டும் என்று அண்ணனும் இருந்தனர்.
காலப்போக்கில் ஆனந்திக்கு இவர்கள் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன என தன்னுடைய பிள்ளைகளான ஆத்மாவையும், மனோவையும் அப்பாவுக்கு பிடிக்காது அவர்களோடு பேசுவது என்று சொல்லி சொல்லி விலக்கியே வைத்துவிட்டார்.
ஏற்கனவே மகனின் வளர்ப்பில் கண்டிப்பை காட்டும் அண்ணாமலை. ஆனந்தியும் தன் உடல்நிலையால் மகனை கவனிக்கமுடியாத நிலை.
தன்னாலும் மகனை கவனிக்கமுடியாத நிலை என்று அவனின் எதிர்காலத்தை எண்ணி யோசித்துக்கொண்டிருக்க அதிலும் முடிவெடுக்க தனசேகரனே காரணமாக இருந்தார்.
குழந்தை பிறந்து நண்பர்களுக்கு விருந்து வைக்கிறேன் என உற்சாக பான விருந்தாய் வைத்துவிட்டு மூச்சுமுட்ட குடித்திருந்தவர் வந்து விழுந்ததோ அண்ணாமலையின் வீட்டு வாசலில்.
கையில் குளிர்பான பாட்டில் ஒன்றும் இருக்க அமரமாட்டாமல் எழுந்து படியில் சாய்ந்திருக்க விளையாடிக்கொண்டிருந்த ஆத்மா பயந்துகொண்டே அவரருகே வந்தான்.
“தண்ணி…” என்று அவனிடம் சைகையில் தனசேகரன் கேட்க, அவரின் கையிலிருந்த குளிர்பான பாட்டில் முக்கால்வாசி காலியாக இருக்க அதை நீட்டி கேட்கவும் கையில் வாங்கிக்கொண்டான் ஆத்மா.
“அம்மாக்கிட சொல்லிட்டு கொண்டுவரேன் மாமா…” என்று சொல்லி அந்த பாட்டிலை பார்க்கவும் அண்ணாமலை வரவும் சரியா இருந்தது.
முகத்தை சுளித்தபடி வந்தவர் மகன் நிற்பதையும் அவன் கையில் இருந்த பாட்டிலையும் பார்த்துவிட்டு,
“என்னடா கையில?…” என்றார்.
ஆனந்தியும் உள்ளிருந்து வந்துவிட்டவர் இதனை கண்டு கத்த அடுத்தடுத்து வீடுகளில் இருந்து அனைவருமே வந்து சேர்ந்தனர்.
தனசேகருக்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. சுருண்டு மீண்டும் அங்கேயே படுக்க தமயந்தி பதறிக்கொண்டே ஓடி வந்தார்.
அவர் வந்த வேகத்தில் கணவனை நெருங்கும் முன் அண்ணாமலையின் கை ஆத்மாவின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
சிறுவன் என்று பார்க்காமல் பலமாய் அடிக்க சுருண்டு விழுந்தான் ஆத்மா. அண்ணாமலை மகனின் கையிலிருந்து வாங்கிய அந்த பாட்டிலை கொண்டு தனசேகரன் மேல் விட்டெறிந்தார்.
“மரியாதையா இவனை கூட்டிட்டு எங்கிட்டாவது போயிரு. பச்ச பிள்ளை கையில குடிக்கிறதை கலந்து குடுத்திருக்கானே? இவனெல்லாம் என்ன மனுஷன்?…” என்று பேச,
“அவர் நிதானத்துல இல்லண்ணே. நான் சொல்லுறேன். ஆனா வேணும்னே செஞ்சிருக்கமாட்டாரு…” என்று தமயந்தி சொல்ல,
“ஆனந்தி…” என மனைவியை அதட்டினார். மகனை வந்து தூக்கிய ஆனந்தி,
“இதுக்குத்தான் சொன்னேன். இதையெல்லாம் பார்த்தா இவன் கெட்டு குட்டி சுவரா போய்ருவான்னு. ஏற்கனவே படிப்பிலையும் ஒண்ணுமில்லை. எப்ப பாரு விளையாட்டு, சேட்டை. இப்படி இந்த கன்றாவியையும் பார்த்தா என்னாவான்?…” என்று பேச அங்கே பெரும் கலவரமே வெடித்தது.
எப்படி பேசலாம், எப்படி சொல்லலாம் என்று உறவுகளுக்குள் அத்தனை சண்டை.
இதில் இளவரசுவோ, விசாலட்சியோ யாருமே தமயந்தியின் பக்கம் நிற்க முடியவில்லை.