பரிதாபமாக இருந்தாலும் அத்தனைபேரின் முன்னிலையிலும் அடிவாங்கிய ஆத்மாவை எவரும் கவனிக்கவில்லை.
ஆனந்தி பேச்சிற்கு சொல்லியது நிஜமாகியது. மகனின் எதிர்காலம் மட்டுமே முக்கியம்.
அங்கே சென்றால் தான் ஒழுக்கமாக வளருவான் மகன் என்று மறுக்க மறுக்க கொண்டு போய் விடுதியில் சேர்த்துவிட்டு வந்தார் அண்ணாமலை.
விடுமுறைகள் வந்தால் பெரிதாய் வீட்டை விட்டு மகனை வெளியில் கூட விளையாட அனுமதித்ததில்லை. விசேஷ நாட்களில் கூட அவனுக்கான சந்தோஷங்கள் மறுக்கப்பட்டது.
“பேசாம படி. உனக்கு படிக்கிற வேலை இல்லையா? உன்னோட வேலை படிக்க மட்டும். என்ன பன்ற? படி. டிவி பார்க்காத. படி. படி. படி…” இப்படி விடுமுறைக்கு வருவதையே வெறுக்கும்படி தான் இருந்தது அவர்கள் கண்டிப்பின் அதீதம்.
நாட்கள் செல்ல செல்ல அவர்கள் சொல்லாமலே வந்தால் அறைக்குள்ளேயே முடங்கி கொள்வது, விரும்பியதை எதையும் கேட்காமல் விடுதியில் இருப்பதை போல கொடுப்பதை உண்பது என்று ஆத்மாவின் வாழ்க்கையே தடம் மாறியது.
“கண்ணா என்ன செய்யறான்? கூப்பிடேன். முரளியோட வெளில போய்ட்டு வரோம் நாங்க எல்லாரும்…” என இளவரசு அழைத்தாலும்,
“அவன் எப்பவும் படிப்பு தான். சும்மா எங்க சுத்த நினைக்கிறான்? இப்பவும் படிக்கிறான். கூப்பிட்டாலும் வரமாட்டான்…” என ஆனந்தியே சொல்லிவிடுவார்.
இப்படி அவன் வாழ்க்கை ஒரு பக்கம் செல்ல, தமயந்தியின் வாழ்க்கையோ தடம் மாறியது.
நாளடைவில் தனசேகரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு தொழில் நஷ்டம் என்று நின்றவருக்கு தனது நகைகளில் பாதியை தந்து மீண்டும் தொழிலை தொடங்க உதவி செய்ய வாங்கிக்கொண்டவர் ஓரளவு லாபம் பிடித்து மேலேறி வந்துவிட்டார்.
ஆனாலும் அந்த குடி மட்டும் குறையவில்லை. எவ்வளவு போராடியும் அவரை மாற்ற முடியாமல் தவித்திருந்தவர்,
“என் பொண்ணுக்கு நீயாவது எப்பவும் இருக்கனும் ண்ணே…” என்று தமயந்தி மனதுடைந்து இளவரசுவிடம் புலம்ப ஆரம்பித்த சிறிது நாட்களில் ஓர் இரவில் உறக்கத்திலேயே மரணம்.
மருத்துவமனை கொண்டு செல்ல சிவியர் ஹார்ட் அட்டாக் என்றுவிட்டனர். ஏழு வயது பெண் ரிதுபர்ணா.
தாயை இழந்து தவித்திருக்க தமயந்தி இறந்து முப்பது நாள் ஆகும் முன் முருகேஸ்வரியை திருமணம் செய்துகொண்டு வந்து நின்றார் தனசேகரன்.
“வெளில போடா நாயே. நீ இருந்த இருப்புக்கு உன்னை முதல்லயே விரட்டிருந்தா என் தங்கச்சியாவது மிஞ்சிருப்பா. உன்னால தான் அவ செத்தா….” என வீட்டை விட்டு வெளியேற சொல்ல திமிராகத்தான் நின்றார் தனசேகரன்.
“என் தங்கச்சி மகளை நான் பார்த்துப்பேன். இத்தனை பேர் இருக்கோம். நாங்க வளர்த்துப்போம்…” என்று ரிதுபர்ணாவை தோளில் தூக்கிக்கொள்ள முருகேஸ்வரி மிரண்டு போய் இருந்தார்.
ஏற்கனவே அவருக்கு அதிர்ச்சி தன்னுடன் பழகிய தனசேகருக்கு குடும்பம் ஒன்று இருப்பது.
இப்போது மனைவி இல்லை, மகளுக்கு அம்மாவாக இரு என்று வா என மனதை கலைத்து திருமணம் முடித்து அழைத்தும் வந்துவிட்டார்.
“என்னடா பார்க்கற, வெளில போடா…” என்று அண்ணாமலை தனசேகரன் நெஞ்சில் மிதித்து கீழே தள்ள அவரின் கையில் இருந்த ரிதுவோ அவரிடமிருந்து இறங்கி தகப்பனிடம் ஓடியது.
தாயின் கவனிப்பில் தகப்பனுக்கு இருக்கும் கெட்ட பழக்கம் தெரியாமலே வளர்ந்துவிட்டவள் அறிந்ததெல்லாம் அவள் மீது பாசம் கொண்டிருக்கும் தகப்பனை மட்டுமே.
இப்படி அண்ணாமலை அடிக்கவும் அதுவரை எப்போதுமே சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் அண்ணாமலை மீது பயந்து போயிருந்தவள் தகப்பனின் கழுத்தை கட்டிக்கொண்டு,
எங்கே கூட்டிக்கொண்டு போய்விடுவாரோ என பதறி போனார்கள். எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு தகப்பனை நம்பி தனது மகள் வயிற்று பேத்தியை அனுப்ப முடியும் என மகனை எதிர்த்தனர்.
“நீ சும்மா இரு அண்ணாமலை. பொம்பளை புள்ளை. நம்ம கண்ணு முன்னாடி இருந்தா தான் அதுக்கும் பாதுகாப்பு. என் மக இதையெல்லாம் கவனிச்சிட்டு தான இருப்பா? அவ எப்படியெல்லாம் தவிக்கிறாளோ?…” என அவரின் தாய் அதட்டிவிட்டு அழுதுகொண்டே உள்ளே சென்றுவிட்டார்.
மற்றவர்களின் கீழான பார்வையில் முருகேஸ்வரி தான் கூனி குறுகி போய் இருந்தார்.
அண்ணாமலைக்கு கோபம் ஒருபக்கம், ஆத்திரம் ஒருபக்கம் இருந்தாலும் மனது அடித்துக்கொண்டது.
தனசேகரின் கையை பிடித்துக்கொண்டு செல்லும் ரிதுபர்ணாவை பார்த்ததும் லேசாய் கண்ணீர் கோர்க்க மனதை இறுக்கி கண்ணீரை சுண்டிவிட்டார்.
“இவளும் இவ அம்மா மாதிரி அவனை தான நம்பறா. என்ன பாடுபட போறா பாருங்க…” என்று கோபம் அடங்காமல் சொல்லி செல்ல தங்கையின் உறவோடு தங்கை மகளின் உறவும் அங்கே மரித்தது.
சிறு பெண் விவரம் அறியாதவள் என்று தெரிந்தாலும் அதனை முயன்று ஒதுக்கி வைத்தார்.
இப்படி பாசம், பாசம் என தானாகவே ஒவ்வொருமுறையும் சென்று அவமானப்பட்டு தானே நிற்கிறோம் என்று மொத்தமாய் வெறுத்த நாள் அன்று.
அதிலும் மனைவி இறந்து முழுதாய் முப்பது நாள் கடக்கும் முன் இன்னொரு பெண்ணை தாலி கட்டி அழைத்துவர எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்?
என்ன வாழ்க்கை வாழ்ந்தார்களோ? கொஞ்சமும் மனைவியுடனான வாழ்க்கை புதிதாய் ஒரு பெண்ணை தேட அனுமதிக்கிறதென்றால் முன்பு கொண்ட தாம்பத்தியத்திற்கு என்ன மதிப்பு?
ஏற்கனவே தனசேகரனை ஒரு புழுவை போல தான் பார்ப்பார் அண்ணாமலை. அதன் பின் அந்த கோபம் முருகேஸ்வரியையும் பொசுக்க முருகேஸ்வரிக்கு இதை எல்லாம் கடந்துவர மிகவும் சிரமமாக இருந்தது.
“பாப்பா அப்பா உனக்காக தான் இந்தம்மாவை கூட்டிட்டு வந்திருக்கேன். அம்மா இல்லைல. அதனால இவங்க தான் இனிமே உன்னை பார்த்துப்பாங்க. உனக்கு அம்மா மாதிரி…”
தனசேகரன் சொல்லவும் சட்டென ஏற்கமுடியவில்லை என்றாலும் முருகேஸ்வரி அமைதியும், பொறுமையும், அன்பும் அவரை பிடிக்க வைத்தது கொஞ்சம் கொஞ்சமாக.
அம்மா என அழைக்க சொல்லி தனசேகரன் சொல்ல செண்பகம் அதனை கேட்டு கூடவே கூடாது என சொல்லி சித்தி என சொல்ல வைத்துவிட்டார்.
ஆரம்பத்தில் பெரிதாய் முருகேஸ்வரிக்கு மரியாதை இல்லை அங்கே. ஆனால் ரிதுவிற்காக அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவதும், ரிதுவை அவர் பார்த்துக்கொண்ட பாங்கு மனதை மாற்ற வைத்தது.
நடந்துவிட்டதை நொந்து என்ன பிரயோஜனம் என்று நிதர்சனத்தை பழக்கப்படுத்திக்கொண்டனர் விசாலாட்சியும், இளவரசும்.
இந்தமட்டில் ரிதுவிடம் அன்பாக இருக்கிறாரே? அதுவே போதும் என்றானது மற்றவர்களுக்கு.
விசாலாட்சி பேச்சுவாக்கில் அவர்கள் திருமணம் பற்றி கேட்க அப்போதுதான் தனசேகர் அவரையும் ஏமாற்றியிருந்ததே தெரிந்தது.
ஆனால் என்ன பிரயோஜனம் என்று உள்ளுக்குள்ளேயே கொதிப்பை வைத்துக்கொண்டனர்.
எப்படியோ ரிதுபர்ணா நல்லபடியாக இருந்தால் சரி என்னும் நிலையில் அடுத்ததாக தனசேகரனின் குடல்கள் வெந்து உயிருக்கு போராடும் நிலை.
உள்ள நகைகள், சேமிப்புகள் என எல்லாம் கரைந்து தனசேகரின் தொழிலும் முற்றிலும் சரிந்து என மொத்த பணத்தையும் செல்லும் பொழுது வைத்தியத்திற்காக சுருட்டிக்கொண்டு தான் அவரின் உயிரே பிரிந்தது.
தாய் மறைந்து பத்துவருடத்தில் தந்தையையும் இழந்து முருகேஸ்வரியும், வித்யாவுமே உறவு என்று வளர்ந்துவிட்டாள் ரிதுபர்ணா.
அந்த வேதனையில் மகள் வயிற்று பேத்திக்கு கம்பெனியின் மூலம் வருமானம் செய்துதர முயன்ற தாத்தாவை அண்ணாமலை எடுத்தெறிந்து பேசிவிட்டார்.
அண்ணாமலைக்கு முருகேஸ்வரி அங்கே இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை வார்த்தைகளில் அத்தனை முறை காண்பித்தும் முருகேஸ்வரி முகம் மாறாமல் அமைதியாக சென்றுவிடுவார்.
“நான் உழைச்சு கொட்டி குடுத்து எம்பணத்துல அவளுக சீராடவா? பிச்சையா கூட போடமாட்டேன். பிச்சைக்காரியாவே ஆனாலும் ஒத்த பைசா தரமாட்டேன்…” என வார்த்தைகளால் குத்தி கிழிப்பார்.
அண்ணாமலையின் தாய், தந்தை என்று ஒவ்வொருவர் இறப்பிலும் வாசல் வரை வந்து நின்றுவிட்டு காரியத்தில் கலந்து கொள்வதை கூட ஒதுங்கி நின்றே கலந்துவிட்டு சென்றுவிட்டாள் ரிதுபர்ணா.
எந்த காலத்திலும் அண்ணாமலையிடம் உதவி என்று நிற்பதை அவள் விரும்பியதே இல்லை என்பது அவள் முகத்தில் தெரியும் நம்பிக்கையில் பலமுறை கண்டுகொண்டிருக்கிறார் அண்ணாமலை.
“அப்படியே அவ அம்மாவ மாதிரி இவளும். இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சலில்லை…” என யாருமறியாமல் அவர் பலமுறை நினைத்ததுண்டு.
வருடங்கள் ஓட ஓட வன்மமும், வெறுப்பும் தான் வளர்ந்ததே தவிர அண்ணாமலை மனதில் கொஞ்சமும் அவர்கள் மீது மதிப்பு வரவே இல்லை.
அதில் மகனின் இந்த முடிவு அவரே எதிர்பாராத ஒன்று. இதுதான் கடவுள் ப்ராப்தமாக இருக்கையில் யாரை சொல்லி என்ன செய்வது?
ஒவ்வொன்றையும் நினைக்க இப்போது நடந்ததை போலிருந்தது அண்ணாமலைக்கு.
பெருமூச்சுடன் கண்ணை திறந்தவருக்கு வெளியே பேச்சுக்குரல் பெரிதாய் கேட்டது.
எழுந்து செல்வோமா வேண்டாமா என யோசிக்கையில் மகளே வந்து அழைத்துவிட்டாள்.
“அப்பா சித்தப்பா வந்திருக்காங்க…” என்று சொல்லவும் எழுந்து வெளியே வந்தார்.
“என்னடா?….” என கேட்ட அண்ணாமலை முகமே களைத்து இருந்தது.