“இன்னைக்கு தான் சென்னைக்கே வந்திருக்காங்க போல ரெண்டுபேரும். ஷோரூம்ல இருந்து ரவி விஷயத்தை சொல்லலைன்னா இதுவும் தெரிஞ்சிருந்திருக்காது…”
“அவ்வளவு பெரியாளாகிட்டான் என் மகன். அதுக்கு இந்த சிண்டுப்பயலும் உடந்தை. நல்லா சேர்ந்திருக்கானுங்க…” என சொல்லுகையில் இதழோரம் சிறு புன்னகை போலிருந்தது அண்ணாமலைக்கு.
மீசையை நீவி சிரிப்பை அடக்கிக்கொண்டதை போலிருந்தது அவரின் தோரணை.
“சரி சாப்பிடு வா…” என அழைக்க,
“சாப்ட்டேன். நீங்க சாப்பிடுங்க முதல்ல…” என்று சொல்லியவர்,
“சரி, ஈரோடு வரை முக்கியமான வேலை இருக்குண்ணே. கிளம்பறேன். போன்ல பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் இளவரசு.
அண்ணாமலை எழுந்து வந்து சாப்பிட்டு முடிக்கும் வரை ஆனந்தி அருகே கூட வரவில்லை.
கையை கழுவிவிட்டு கம்பெனிக்கு செல்லவா வேண்டாமா என யோசித்தபடி வாசலை தாண்டி அறைக்குள் செல்லும் முன் கார் வந்து நிற்கும் சப்தம்.
திரும்பி பார்க்க காரிலிருந்து இறங்கினான் ஆத்மா. கழுத்திலும், நெற்றியிலும் பெரிதாய் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது.
பார்த்ததுமே அண்ணாமலைக்கு உயிரெல்லாம் பதற அவன் பக்கம் வேகமாய் செல்ல போனவரின் கால்கள் அப்படியே நின்றது மகன் காரில் சாய்ந்துநின்ற தோரணை.
சரி உள்ளே வரட்டும் என்று பார்த்துக்கொண்டே வாசலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டார்.
சட்டென ஓடி போய் பேசும் குணமில்லையே? அவரின் குணாதிசயம் அப்படி செய்ய தடைவிதித்தது.
ஆனால் ஆனந்தி அப்படி நிற்கவே இல்லை. மகனை கண்டதும் வேகமாய் செல்ல உடன் மனோவும் சென்றாள்.
“கண்ணா…” என்றவரின் அழைப்பில் திரும்பியவன் மீண்டும் முரளியை பார்த்துவிட்டு,
“ஓகே, நீ போ. நான் ரிதுக்கிட்ட பேசிக்கறேன்…” என அனுப்பினான்.
“கண்ணா, என்னப்பா இது? இதென்ன கழுத்துல, நெத்தியில எல்லாம் கட்டு?…” என்று கேட்கவும் அவரை பார்த்தவன்,
“மனோ, நான் உள்ள வரனும்ன்னா இவங்க எதுவும் பேச கூடாது. இத்தனை நாள் எப்படி இருந்தாங்களோ இனியும் அப்படி இருந்தா மட்டும் தான்…” என்றவன்,
“என்னை பேச வைக்காதீங்க…” என்றான் தொண்டையை பிடித்தபடி.
“பெரிம்மா அண்ணனை டென்ஷன் பண்ணாதீங்க. கொஞ்சம் விடுங்க…” என்ற முரளி,
“நான் போய் அண்ணியை வர சொல்றேன்…” என அவள் வீட்டுப்பக்கம் செல்ல போக,
“முரளி, நானே போய்க்கறேன்…” என்று ரிதுபர்ணா வீட்டை நோக்கி நடந்தான் ஆத்மா.
“அண்ணா, அண்ணி இங்க இல்லை…” மனோவின் குரல் அவனின் வேக நடையை தடை செய்தது.
“உங்களை பார்க்க தான் சென்னைக்கு கிளம்பி போய்ட்டிருக்காங்க. போன் எதுவும் பண்ணலையா?…” என கேட்க,
“ப்ச், ஷிட்…” என்று காலை தரையில் உதைத்தான் ஆத்மா.
ஆனாலும் மீண்டும் அவள் வீடிருக்கும் திசைக்கு தான் அவனின் பாதங்களும் சென்றது.
வேகமாய் போனவன் விழிகள் அந்த வீட்டில் அலைபாய வெளியே திண்ணையில் இருந்த மர சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
அவளை காண தான் இத்தனை வேகமாக கிளம்பி வந்திருக்க இவள் என்னவென்றால் இப்படி சொல்லாமல் சென்றுவிட்டாளே என நினைக்கையில் ஒருபக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.
இன்னொருபக்கம் கவலையாகவும் இருந்தது. அத்தனை முறை வரவே மாட்டேன் என்றவள் இப்போது உடனடியாக கிளம்பி சென்றதென்றால் நிச்சயம் விஷயம் தெரிந்து தான் சென்றிருக்க வேண்டும் என அனுமானித்துக்கொண்டான்.
தனது மொபைலை எடுத்து பார்க்க இப்போது அத்தனை அழைப்புகள் தொடர்பு எல்லைக்குள் வந்தது வந்து விழுந்தது. மனோவை பார்த்தவன்,
“தனியாவா போயிருக்கா?…” என்றான் மெதுவாய்.
“ஆமா…” அவளும் அண்ணனை பார்த்து அங்கே வந்து திண்ணையருகே வந்து நிற்க உள்ளிருந்த முருகேஸ்வரி வெளியே வந்தார்.
“தம்பி…” என பதறி வர அவரை பார்த்தவன்,
“டயர்டா இருக்கு, தண்ணி தாங்க…” என்றான்.
மயக்கமே வரும் போலிருந்தது முருகேஸ்வரிக்கு. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
பார்வை தன்னை போல் ஆத்மாவின் வீட்டை பார்க்க அங்கே விக்கித்த பார்வையுடன் ஆனந்தி நின்றிருந்தார்.
“தண்ணி…” ஆத்மா மீண்டும் அவரை திசை திருப்ப,
“இப்ப கொண்டுவரேன் தம்பி…” என்று வேகமாக உள்ளே ஓடினார்.
தண்ணீரை வாங்கி குடித்துக்கொண்டே ரிதுவிற்கு அழைக்க அவனின் அழைப்பை உடனே எடுத்தவளிடம் மௌனம்.
கோபமும், தவிப்புமாக அவனின் குரலுக்கு காத்துக்கொண்டிருந்தவளுக்கு தான் பேசவேண்டும் என்று தோன்றவில்லை.
இப்படி சூழ்நிலையால் தன்னுடைய பிடிவாதம், தன்மானம் எல்லாம் விட்டு அவனை தேடி வரவழைத்துவிட்டானே என்ற கோபம்.
“ரிது…” என்றவன் அழைப்பில் கண்மண்தெரியாமல் திட்ட தோன்ற உதட்டை கடித்தபடி மௌனம் காத்தாள்.
“பேசுடி…” என்றவன் குரல் இன்னும் மெதுவாய் தணிந்து வர முருகேஸ்வரி விசாலாட்சி வீட்டிற்கு சென்றுவிட்டார் அவன் பேசட்டும் என்று.
அவருக்கு அங்கே இருக்கவே முடியவில்லை. அவ்வளவு படபடப்பு தங்கள் வீட்டில் ஆத்மா வந்து அமர்ந்திருந்ததில்.
முருகேஸ்வரி செல்லவும் ஆத்மா இன்னும் சாய்ந்து அமர்ந்துகொண்டான் இருக்கையில். மற்றவர்கள் வந்துவிட்டனர்.
ரிதுவிடம் போனில் பேசுகிறான் என்று தெரிந்து பேசி முடிக்கட்டும் என தள்ளி நின்றனர்.
“இப்ப நீ எதுக்கு சென்னைக்கு போய்ட்டிருக்க?…” என்ற கேள்வியை அவள் கவனிக்கவே இல்லை.
“ஒரு ஷோரூம்ல வேலைக்கு கேட்டிருந்தேன். அதான் போய்ட்டிருக்கேன். வேலை முக்கியமில்லையா?…” நக்கலாக அவள் பதில்.
“உன்னை யார் கிளம்ப சொன்னா?…” என்றவன்,
“ப்ச், நான் இப்ப கரூர்ல உன் வீட்டு வாசல்ல தான் இருக்கேன்…” என்றதும் ரிதுவினால் நம்ப முடியவில்லை. இருந்தாலும்,
“வீட்டு வாசல்ல நிக்கிறது என்ன பெரிய விஷயமா? இருந்துக்கோங்க…” என்றாள் அவன் அங்கிருப்பான் என்பதில் நம்பிக்கை இல்லாது.
பேச்சுக்கள் வளர அவன் அழைக்க அவள் முடியாதென்று மறுத்ததும் போனை கட் செய்தவன் ட்ரைவருக்கு அழைத்து வீட்டிற்கு திரும்பி வரும்படி சொல்லிவிட்டு வைக்க ரிதுவே அவனுக்கு அழைத்தாள்.
“நான் சென்னை போறேன். திரும்பவும் நான் என் வீட்டுல காலடி வச்சிட்டா அடுத்து எப்பவும் சென்னைக்கு வரவே மாட்டேன் பார்த்துக்கோங்க….” என்றவள் வீம்பு எதுவும் அவனிடம் எடுபடவில்லை.
“வாடி பார்த்துக்கலாம்…” என்று சொல்லி வைத்துவிட்டவன் சொன்னது போல அவளை காரை விட்டே இறங்க விடவில்லை.
வந்த கார் மெதுவாய் நிற்கும் முன் தானே சென்று ஏறிக்கொண்டவன் ரிது இறங்கும் முன் அவளின் கையை பிடித்துக்கொண்டு காரை எடுக்க சொல்லிவிட்டான்.
“கீழே இறங்கினா தான திரும்ப வரமாட்டேன்னு சொன்ன? இப்ப என்ன செய்வ?…” என்று சொல்லியவனை தீயாய் உறுத்து விழித்தாள் ரிதுபர்ணா.