ஆத்மா ரிதுவை அழைத்துக்கொண்டு வரும்படி போனில் ட்ரைவரிடம் சொல்லவும் அவருக்கு யார் சொல்வதை கேட்பதேன்றே தெரியவில்லை.
“தம்பி…” என இழுக்க,
“இப்ப எந்த இடத்துல போய்ட்டிருக்கீங்க?…” என்றான் ஆத்மா.
அவர் இடத்தை சொல்லவும் இமைமூடி யோசித்தவன் நெற்றியை விரலால் தட்டிக்கொண்டான்.
“நீங்க கிளம்பி ரெண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். திரும்பி வாங்க. நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து போய்க்கறோம்…” என்று சொல்ல பின்னால் இருந்து ரிது அழைத்தாள் அவரை.
“அண்ணே, ட்ரைவ் பண்ணும் போது என்ன பேச்சு? போன் காலை கட் பண்ணிட்டு வேகமா போங்க…” என்று சொல்ல,
“தம்பி…” என்றார் ட்ரைவர் பாவம் போல ஆத்மாவிடம்.
“அவக்கிட்ட நீங்க ஒன்னும் சொல்லவேண்டாம். டோர் ஓபன் பண்ண முடியாம லாக் பண்ணுங்க. காரை திருப்புங்க. இங்க வாங்க. நானும் வரேன். என்னை சேர்த்து கூட்டிட்டு போங்க…” என்று
அவன் அழுத்தமாய் சொல்லவும் வேறு ஒன்றும் சொல்லாமல் ட்ரைவர் ஆத்மா சொல்லியதை போல மீண்டும் வந்தவழியே திரும்பினார்,
“என்ன, நீங்க என்ன காரை இப்படி திருப்பறீங்க?…” என ரிதுபர்ணா கோபமாய் கேட்க,
“தம்பியும் வராங்களாம். அதான் போய் கூட்டிட்டு வந்திருவோம்…” என்று சொல்லிவிட்டு அவர் காரின் வேகத்தை அதிகப்படுத்தினார்.
“அண்ணே நீங்க காரை திருப்புங்க. இல்லன்னா விடுங்க. நான் இங்கயே இறங்கிக்கறேன். பஸ்ல போய்ப்பேன்…” என்று சொல்ல அவர் காது கேட்காததை போல இருந்துகொண்டார்.
அவர்கள் வீட்டில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளை ஆரம்பத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பவர் தானே?
அதிலும் சில நாட்களுக்கு முந்தைய ஆத்மா, ரிது விஷயமும் அனைவருக்கும் தெரிந்திருந்தது.
வேலை செய்யும் இடம் என்பதனால் தெரிந்ததை தெரியாததை போல கட்டிக்கொண்டனர்.
ட்ரைவரிடம் சொல்லி பார்த்து ஓய்ந்தவள் கோபத்துடன் ஆத்மாவிற்கு அழைத்தாள்.
“என்ன மேடம்? பேக் டூ பெவிலியனா?…” அவன் சிரிக்க,
“ஏன் இவ்வளோ பிரச்சனை பன்றீங்க?…” என்றாள்.
“நானா?…”
“ஆமா, நீங்களா தான் கூப்பிடலை. ஆனா புருஷனாச்சேன்னு ரோஷம், மானம், எல்லாத்தையும் விட்டுட்டு கொஞ்சம் கூட சாப்பாட்டுல உப்பு உரைப்பு சேர்க்காதத மாதிரி சொரணை இல்லாம உங்களை தேடி போறேன்ல?…” குரல் தழுதழுக்க அவள் கேட்க,
“உன்னை கூட்டிட்டு போறதுக்கு தான் வந்திருக்கேன் ரிது…” என்றான் நிதானமாக.
“தேவையில்லை. உங்களுக்கு முடியலைன்ற ஒரு விஷயத்துக்காக பொறுமையா இருக்கேன். என்னை விடுங்க. இல்லன்னா இப்படியே எங்கையாவது போய்டலாமான்னு இருக்கு…”
“சரி, வா. சேர்ந்தே போகலாம்…” என்றான் அதற்கும் சளைக்காமல்.
“ஆமா, பேசுவேன். நீங்க தான பேசுன்னு சொன்னீங்க. நீங்க செஞ்சது எனக்கு புடிக்கலை. சொல்லிட்டேன். ஏன் எதுவும் நான் சொல்ல கூடாதா?…” என கேட்டு அவனை வாயடைக்க செய்தாள்.
“ரொம்பத்தான்…” என்றவன்,
“தப்பு தான். ஸாரி. வேற என்ன பண்ணட்டும்?…” என்றதற்கு அவள் பதில் சொல்லவில்லை.
எல்லாம் தெரிந்தது. அவனின் சூழ்நிலை, மனநிலை. அதன் பின்னான கஷ்டம் என்று எல்லாம் தெரிந்தாலும் அந்த சூழ்நிலைக்குள் மாட்டும் முன்பாவது தன்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா?
‘வந்து அழைத்து செல்கிறேன்’ என்ற வார்த்தையை சொல்லியிருந்தால் இத்தனை அவசியமா?
அதை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை. இவ்வளவிலும் அவனை தேடி அவளே கிளம்பியது இன்னுமே குத்தியது.
‘அவன் உன்னை எங்கே நிறுத்தி சென்றான்? அவனுக்காக நீ இப்படி கிளம்பி செல்கிறாயே?’ என்று மனசாட்சியே இடித்துரைத்தது.
“ரிது?…” ஆத்மா அழைக்க,
“நான் அங்க வந்தா நிச்சயம் திரும்ப உங்க கூட வரமாட்டேன். என் பிடிவாதம் அதுக்கு இடம் தராது. நீங்க தனியா தான் போகனும். என்னை விடுங்க, இப்படியே இதே வேகத்தில நான் சென்னைக்கு போறேன்..” என்றவள்,
“இப்பவே உங்க இழுப்புக்கு நான் போகக்கூடாதுன்னு என் மனசு சொல்ல ஆரம்பிச்சிருச்சு. முடியாதப்பவே என்னை தேடலை நீங்க. இப்ப நல்லா இருக்கீங்க. ஏன் தேட போறீங்க?…” என்றாள்.
“உன்னை நான் தேடலைன்னு உனக்கு தெரியுமா? ஏன் இப்படி பேசற ரிது?…”
“இப்பவும் எனக்காக வரலை. நான் பேசினதால வந்திருக்கீங்க. இல்லன்னா இல்லை தானே? நீங்க வரது இல்லை தானே?…” என்றவளுக்கு எப்படி புரியவைக்க என்று தெரியவில்லை.
“போதும்டி, தயவு செஞ்சு இவளோ கஷ்டப்படாத. மன்னிப்பும் கேட்டுட்டேன். உன் காலை பிடிக்கவா? என்ன செய்யனும்? வேணும்னா என்னை நாலு அடி அடிச்சுக்கோ..” என குரலை தழைத்துக்கொண்டு அவ்வளவு கெஞ்சலாக கூறினான் ஆத்மா.
“அடிக்கனும்னு தான் தோணுது. ரொம்ப ரொம்ப. ஆனா…”
“ஹ்ம்ம், என்ன ஆனா? அடிச்சுக்கோ. உன் புருஷன். என்னோட மொத்தமும் நீ. உன்னோட எல்லாம் நான். என்னை நீ அடிக்க என்ன ஆனா?…” அழகாய் பேசி மனதை கவர முயன்றான் ஆத்மா.
“இப்படி பேசாதீங்க, அவ்வளோ தான்…” நழுவ இருந்த மனதை இறுக்கி பிடித்தாள்.
“இப்பவும் எனக்கு ஒரு ஜாப் வேணும். அதுக்காக தான் வரேன்…” சிறுபிள்ளை போல மீண்டும் மீண்டும் சொல்ல ஆத்மாவின் முகத்தில் இளநகை.
“ஓகே, வா. வேலை மட்டும் போதுமா? இப்ப அமைதியா வருவியாம். நான் ரெடியா இருப்பேன். நாம சேர்ந்து போகலாம்…” என்றதும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது.
“நான் அங்க வந்தா திரும்ப வரமாட்டேன். நீங்க என்னை விட்டுட்டு போனது தான் முதல்ல என் மனசுல நிக்கும்…” என அவனை படுத்தி வைத்தாள்.
“அதனால தான் உன்னை திரும்ப வரவழைக்கேன். இல்லைன்னா அங்கயே நில்லுன்னுட்டு நான் வந்து பிக்கப் பண்ணிருக்கமாட்டேனா? அப்படியே சென்னைக்கு போயிருக்கமாட்டோமா?…”
“நிஜமாவா?…”
“நிஜமா தான். உன்னை கூப்பிட தான் அடிச்சு புடிச்சு கிளம்பி வந்தேன். ஆக்சுவலி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இன்னைக்கு நைட் கிளம்பி வரதா தான் ப்ளான்…”
“ம்ஹூம், நம்ப மாட்டேன். மும்பைல அவசர வேலைன்னு கிளம்பின மாதிரி இங்க உங்க கம்பெனில வேலைன்னு வந்திருப்பீங்க. போனா போகுதுன்னு என்னையும் கூட்டிட்டு போகலாம்ன்னு இருக்கீங்க…”
ரிதுபர்ணா சொல்லவும் ஆத்மாவிற்குள் பெரும் வலி ஊடுருவியது. அவளின் நம்பிக்கையை இழந்திருக்கிறோம் என்பதை முழுமுற்றாய் உணர்ந்துகொண்டான் ஆத்மா.
அதனை எப்படி மீண்டும் பெற முடியும் இனி? கொஞ்சமும் தன்னை அவள் நம்பவில்லையே.
தன்னுடைய சிறு தவறு மனைவியின் மனதை எவ்வளவு பாதித்துள்ளது என்று புரிந்துகொண்டான்.
“ப்ச், இதென்ன பேச்சு ரிது? நான் உன்னை தான் கூப்பிட வந்தேன்…” என்றதற்கு அவள் பதில் கூறாமல்,
“எனக்கு தூங்கனும். சரியா தூங்கியே ரொம்ப நாளாச்சு…” சத்தமில்லாமல் விசும்பிக்கொண்டே அவள் சொல்ல,
“சரி தூங்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில இங்க வந்திருவ…”
“ம்ஹூம், முடியாது. கண்டிப்பா மாட்டேன். அங்க வரேன். ஆனா அங்கயே தான் இருப்பேன். உங்க கூட திரும்ப நோ வே…”
“ரிது…”
“நீங்க சொல்லி ஒன்னும் நான் கிளம்பலை. வான்னா வரனும். இருன்னு சொல்லலைன்னாலும் இருக்கனுமா?…”
“சரி நான் சொல்லலை, நீ வா. எங்கனாலும் சேர்ந்தே போவோம். இனி சத்தியமா உன்னை விட்டு நீ இல்லாம எங்கயும் போகமாட்டேன்….”
அவன் பின்னர் சொல்லியதை விட்டுவிட்டவள் முதலில் சொன்னதை பிடித்துக்கொண்டாள்.
“எங்க கூப்பிடறீங்க? திரும்பவும் சொல்லாமகொள்ளாம எங்கையாவது என்னை நிப்பாட்டவா?…” அதிலிருந்து கொஞ்சமும் பின்வாங்க முடியவில்லை ரிதுவால்.
மீண்டும் மீண்டும் அவளின் மனது அதில் சுழல ஆரம்பித்துவிட்டது. ஆத்மாவின் மீதான அன்பை போல அதற்கு சரிசமமாய் இந்த ஆதங்கமும் சேர்ந்து ஆத்மாவை ஆட்டி படைக்கவென்றே அவளை ஆட்டி வைத்தது.
“எங்கயும் நிப்பாட்ட மாட்டேன். நீ என்னை விட்டுட்டு போகாம இருந்தா சரி…”
“நம்பமாட்டேன்…”
“இதென்னடி இவ்வளோ அடம்?…” என குரலை உயர்த்த முயன்று குறைத்தான்.
“ஏன் சத்தம் போடறீங்க? தொண்டை வலிக்கும்…” என்ற பொழுதே கண்ணில் நிறைந்திருந்த நீர் இறங்கிவிட்டது கன்னத்திற்கு.
“வலிச்சாலும் பரவாயில்லை. வா பேசிக்கலாம்…”
“ம்ஹூம், எனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. திரும்ப ஊரை நெருங்க நெருங்க நிச்சயம் நான் உங்களோட வரமாட்டேன்…” அவள் குரல் மிரட்டலாகவே வர,
“வாடி பார்த்துடலாம்…” என்று போனை வைத்துவிட்டான்.
அவன் பேசி முடிக்கும் வரை ஒருவரும் அவனிடம் வரவில்லை. போனை வைத்துவிட்டு நிமிர அங்கே அண்ணாமலை, ஆனந்தியை தவிர மற்ற எல்லோருமே அந்த வீட்டு வாசலில்.