அப்போது தான் கம்பெனிக்கு வந்துவிட்டு ஈரோட்டிற்கு கிளம்ப இருந்தவர் ஆத்மா வந்துவிட்டான் என்ற தகவலில் செல்லவிருந்ததை ஒத்தி வைத்துவிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஆத்மா ரிதுவுடன் பேச தனியே நின்றிருந்த மகனை வந்ததும் பிடிபிடியென்று வகையாக பிடித்துவிட்டார்.
“உங்களுக்கெல்லாம் வீட்டுல பெரியவங்கன்னு எங்க மேல ஒரு இது இருக்கா?…” என கேட்கவும் எழுந்த ஆத்மா இறங்கி வந்து கீழே திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டிருந்தான்.
“என்ன சித்தப்பா செய்யறது? எவ்வளோ நாளைக்கு பெரியவங்கன்னு உங்களை கேட்டே செய்ய? நாங்க எப்ப யோசிக்க?…” என்று ஆத்மா இலகுவாய் சொல்ல,
அதன் பின் வெகுநேரம் அவன் நலனை குறித்த விசாரிப்புகளும், இப்போது எல்லாம் சரியா என்ற கேள்விகளும் என நேரம் நெகிழ்ச்சியாக சென்றது.
ஆத்மாவின் வீட்டிலோ மகன் அருகே எப்போது வருவான், பார்த்து நலனை தெரிந்துகொள்வோம் என்று ஜன்னல் வழியாக இங்கே பார்ப்பதும், இருக்கையில் அமருவதுமாக இருந்தார் அண்ணாமலை.
“அண்ணா சாப்பிட்டீங்களா ரெண்டுபேரும்…” என மனோ தயங்கி தயங்கி வந்து ஆத்மாவிடம் கேட்க,
“ம்ஹூம், எங்க சாப்பிட? ஒரு இடத்துல நிறுத்தலை. மின்னல் வேகத்துல வந்திருக்கோம்…” என்ற முரளி,
“மனோ செமி சாலிடா எதாச்சும் எடுத்துடுவா…” என சொல்ல அவள் என்ன கேட்கிறான் என ஒரு நொடி விளங்கவில்லை மனோவிற்கு.
“டேய் சும்மா இருடா…” என்ற ஆத்மா,
“சித்தி மோர் சாதம் கரைச்சு குடிக்கிற பதத்துல கொண்டு வாங்க. அப்படியே ஒரு பாட்டில்லையும் ரெடி பண்ணுங்க…” என்றான்.
“பாட்டில்ல யாருக்கு?…” செண்பகம் கேட்க,
“உங்க மருமக வந்திட்டிருக்கா. அவளுக்கு தான். போற வழில வேணுமே?…” ஆத்மா சொல்லவும்,
“அப்ப வந்து இங்கயே சாப்பிட்டும்…” என விசாலாட்சி சொல்ல மறுப்பைய தலையசைத்தான் ஆத்மா.
“அவ கீழே இறங்கறதுக்குள்ள நான் கார்ல ஏறிடுவேன். இல்லைன்னா மாரியாத்தா சாமியாடினாலும் மலையிறக்க முடியாது. ஊருக்கு வரமாட்டேன்னு போன்லயே ஒரே அடம்….” ஆத்மா சொல்லிவிட,
“நம்ம ரிதுவா? அதெல்லாம் சொன்னா கேட்டுப்பாப்பா…”
“ஆனா என் பொண்டாட்டி கேட்டுக்க மாட்டாளே? அதுக்கு தான் போறவழில சண்டை போட தெம்பு வேணுமேன்னு பாட்டில்ல தர சொன்னேன்….” என சிரித்தான் ஆத்மா.
அவனின் முகபாவனையே பார்க்க அத்தனை நிம்மதியாய் இருந்தது. அதிலும் ரிதுவை அவன் புரிந்து வைத்திருக்கும் விதம் அனைவருக்குமே நெஞ்சில் சந்தோஷத்தை விதைத்தது.
இப்படி இருப்பவர்களை பிரிக்க நினைத்தால் முடியுமா? என்ற யோசனை தான் அனைவருக்குமே.
“சரி இப்ப கொண்டுவரேன்…” என்று செண்பகம் செல்ல,
“இதென்னப்பா விளையாட்டு. ஒன்னு அவ வரவும் இங்க ஒருவாரம் போல இருந்து அப்பறம் கிளம்புங்க, இல்லையா நீ ரிது போய்ட்டிருக்கற இடத்துல வெய்ட் பண்ண சொல்லிட்டு கிளம்பி போயிருக்கனும். அதை விட்டுட்டு என்னப்பா இது?..” என்றார் இளவரசு.
“புரியுது சித்தப்பா. ஆனா இங்க இருந்து கூட்டிட்டு போகனும். எனக்கு அதுதான் வேணும். சூழ்நிலை வேற மாதிரியாகிடுச்சு. அதுல என் மேலையும் பெரிய தப்பிருக்கு….” என பெருமூச்சு விட்டவன்,
“அந்த நேரம் கோபம். எப்படி கண்ட்ரோல் பண்ணன்னு தெரியலை. நான் இங்கயே இருந்திருந்தா எதாச்சும் நக்கலா பேசி ரிதுவை இன்னும் கஷ்டப்படுத்திருவேனோன்னு ஒரு பயம். அதான் கிளம்பிட்டேன்…” என்றான் அமைதியாக.
“அதோட நீங்க சொன்ன மாதிரி நாங்க இங்க ஒரு வாரம் இல்லை. ஒரு மாசம் இருந்தாலும் இன்னும் மனசு சங்கடம் தான் அதிகமாகும். அதுவே தான் நியாபகம் இருக்கும். அதனால இங்க வேண்டாம். நான் அங்க கூட்டிட்டு போறேன்….” என்றுவிட்டான்.
அவன் இத்தனை பொறுமையாய் தங்களிடம் விளக்கம் கொடுப்பதே பெரிது, அதிலும் உணர்ந்து பேசுகையில் அதனை நிந்திக்க முடியவில்லை.
“சரி இங்க தான் நடந்தது நடந்துபோச்சு. நீ போன இடத்துல கவனமா இருக்க வேண்டாமா?…” என்று விசாலாட்சி சொல்ல,
“நானே யோசிக்கலை. எதிர்பார்க்கலை…” என்று கழுத்தை தடவிக்கொண்டான்.
செண்பகம் வரவும் அங்கேயே இருந்து சாதத்தோடு கரைத்து கொண்டுவந்திருந்த மோரை குடித்தவன் முகம் இன்னும் தெளிந்தது.
“நீங்க இத்தனை பேர் இருந்தும் அவளை ஏன் தனியா விட்டீங்க?…” என்றான் குடித்து முடித்து.
“அவ கேட்டா தானே? உங்களை என்னைக்கு அவர் அங்க கூப்பிட்டிருக்கார், நானே அழையா விருந்தாளி. வேற வழியில்லாம போறேன். உங்களை அவரா கூப்பிடவும் வாங்கன்னு சொல்லிட்டா…” என செண்பகம் சிரித்துக்கொண்டே சொல்ல ஆத்மா முகத்தில் புன்னகை.
‘என்னை தனியா நாலு சாத்தனும்னே இவங்களை விட்டுட்டு வந்திருப்பாளா இருக்கும். அது புரியாம பேசறாங்களே?’ என வெக்கமின்றி நினைத்து புன்னகைத்துக்கொண்டான் ஆத்மா.
“ஒன்னும் பிரச்சனை இல்லை. வரவேண்டிய நேரம் வந்தா வராமலா போய்டுவோம்?…” என சிரித்தபடி விசாலாட்சி சொல்ல,
“என்னவோ நான் சொன்னப்போ நம்ம ரிதுவான்னு கேட்டீங்க?…” என திருப்பி கேட்டு சிரித்தான் அவன்.
“சரி முதல்ல வீட்டுக்கு போ. வந்ததுல இருந்து மதினி வெளிலையே நிக்கிறாங்க…” என்றதும் சரி என்று தலையசைத்துவிட்டு இறங்கி வீடு நோக்கி நடந்தான்.
மீண்டும் ட்ரைவருக்கு அழைத்து எங்கே வருகிறார் என கேட்டுக்கொண்டவன் தங்கள் வீதிக்குள் நுழையும் முன் தனக்கு அழைத்துவிடுமாறு திரும்பவும் கறாராய் சொல்லிவிட்டே விட்டான்.
“சரி நான் போய் பேக் பண்ணிடறேன் அவங்க வரதுக்குள்ள. அன்னைக்கு அப்படியே கிளம்பிட்டேன்…” என்றவன் தங்கையை பார்க்க,
“ரூம் சுத்தம் பண்ணி தான் இருக்கு ண்ணா…” என்றாள்.
“ஹ்ம்ம், தேங்க்ஸ் டா…” என சிரித்துவிட்டு அவளுடன் நடந்தான்.
இன்னும் ஆனந்தி அங்கேயே தான் நின்றிருந்தார். அவருக்கு அந்த கூட்டத்தோடு வர விருப்பமில்லை.
மகன் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு மனதின் கடுகடுப்பை மறைத்திருந்தார்.
இப்படி முருகேஸ்வரியிடம் அவரின் கையால் தண்ணி வாங்கி குடித்துவிட்டு வந்திருக்கிறானே என அத்தனை எரிச்சல்.
ஆனால் காட்டிக்கொள்ள முடியாதே என அமைதியாக இருந்தவர் மகன் வரவும் அருகே நெருங்க ஆத்மா கண்டுகொள்ளவில்லை.
விறுவிறுவென்று ஆனந்தியை தாண்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய மகன் வரவும் பட்டென்று எழுந்து நின்றார் அண்ணாமலை.
உடல்மொழியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் முகத்தில் அவர் உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஆத்மா சில நொடி தேங்கி தான் நின்றான்.
தகப்பனின் இந்த பார்வையில் அதற்கு மேல் அவரின் முன்னால் நிற்க முடியாமல் கடந்து சென்றவனை,
“இப்ப உடம்புக்கு பரவாயில்லையா?…” என்ற அண்ணாமலையின் குரல் நிறுத்தியது.
“ஹ்ம்ம், பெட்டர்…” என்று மட்டும் ஆத்மாவும் பதிலளித்தான்.
“சரி, இனி கவனம்…” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
ஆத்மாவும் வேகமாய் மாடிக்கு செல்ல மனோவும் பின்னோடே வந்தாள் அவனுடன்.
“என்ன மனோ?…” என தங்கையின் வருகையை கண்டு அறை வாயிலில் வைத்தே கேட்க,
“இல்லைண்ணா…”
“என்னனு சொல்லு மனோ….”
“என் மேலையும் கோவமா? நான் என்ன பண்ணேன்?…” என்றாள்.