“நீ எதுவும் பண்ணலை. உன் மேல என்ன கோவம்? அதெல்லாம் இல்லை…”
“இல்லை என் கிட்ட முன்னாடியே நீங்க ரொம்ப பேசினதில்லை. இப்ப அண்ணி அம்மா அந்த பிரச்சனையால இன்னும் விலகிருவீங்களோன்னு?…” என சிறு தேம்பலுடன் சொல்ல,
“இங்க வா…” என்று அருகே அழைத்தான்.
“நான் பேசலைன்னாலும் உன் அண்ணன் தான். என்னவோ அப்படியே இருந்துட்டேன். அது கோபம்ன்னு இல்லை. இங்க வந்தா ஆட்டோமேட்டிக்கா என்னோட மைன்ட் அதுக்கு செட்டாகிருது…” என்றவன்,
“இதை எல்லாம் நினைச்சு நீ வருத்தப்பட வேண்டாம். சரியா? போ…” என்று அவள் தலையில் கை வைத்து சிறு அழுத்தம் கொடுத்தவன் தலையசைக்கவும் அவளும் சென்றுவிட்டாள்.
தங்கள் அறைக்குள் நுழைந்தவன் கடைசியாக இருவருமாக இருந்த நினைவுகள் நிகழ்வாய் மனதில் எழுந்து நிற்க இதழில் குடிகொண்ட புன்னகையுடன் தனக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
மீண்டும் ட்ரைவருக்கு அழைத்து எங்கே வருகிறார்கள் என கேட்டுவிட்டு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கீழே தூக்கி வந்தவன் தனது காரை எடுத்து பார்க் செய்து கவர் வைத்து மூடினான்.
“முரளி நான் திரும்ப எப்ப வருவேன்னு தெரியலை. அதுவரைக்கும் என் கார் இங்க இருக்கட்டும்….” என்று சொல்ல,
“அப்ப உங்களுக்கு சென்னையில யூஸ் பண்ண கார்?…” என்ற முரளி வேறு எதுவும் கேட்கவில்லை.
தனது காரை யாரும் உபயோகப்படுத்துவதை ஆத்மா அவிரும்பமாட்டான் என தெரியும்.
அத்தனை வைராக்கியமாய் முடியாததோடு சென்னையில் இருந்து தானே ஓட்டிக்கொண்டு வந்திருந்தானே?
இரண்டுமுறை முரளி தான் சிறிது நேரம் ஓட்டுகிறேன் என்றதற்கும் ஆத்மா இலகுவாய் மறுத்துவிட்டான்.
இல்லை என்றால் ஆத்மா கேட்காமலே தானே சென்னைக்கு எடுத்து சென்று விட்டுவிட்டு வரலாம்.
அதனால் காரை ஓரமாய் பத்திரப்படுத்துவதை பார்த்துவிட்டு வேறு ஒன்றும் கேட்கவில்லை முரளி.
“அதான் ஷோரூம் யூஸ்க்கு கம்பெனி கார் இருக்கே. இப்போதைக்கு அதை எடுத்துப்பேன்…” என்று சொல்லிவிட்டு ஒரு டிராலியுடன் நின்றான்.
“நல்ல நியாபகம் வச்சுக்கோ. ரிது கீழே இறங்க முன்ன நான் கார்ல ஏறிடுவேன். அதுக்கப்பறம் இதை தூக்கி டிக்கில போட்டுட்டு நீ…” என சொல்ல முரளிக்கு அப்படி ஒரு சிரிப்பு.
இளவரசுவும், விசாலாட்சியும் இதனை பார்த்து சிரிக்க முகத்தில் லேசாய் அசடு வழிவதை போலிருந்தது ஆத்மாவிற்கு.
‘என்னலாம் செய்ய வச்சிட்டா இவ. இப்ப குரளி வித்தை வேற காமிக்கனும் இவங்க முன்னாடி. நான் என்னவோ படம் காட்ட போற மாதிரி வேடிக்கை பார்க்கன்னே அவ்வளோ பேரும் இங்கயே நிக்கிறாங்க’ என மானசீகமாய் நொந்துகொண்டான் ஆத்மா.
“சித்தப்பா நீங்க போங்க. நான் கிளம்பிப்பேன்…” என இளவரசுவிடம் சொல்ல,
“இருக்கட்டும்பா. உள்ள போய் என்ன செய்ய போறேன்? நீ கிளம்பவும் போய்க்கறேன்…” என்று அவர் மறுத்துவிட அடுத்து ஆத்மா விசாலாட்சியை பார்க்க,
“இந்த பஸ்ல எல்லாம் ஓடும் போதே ஓடி போய் தொத்திக்கிட்டு ஏறுவாங்களே? அப்படியா கண்ணா தவ்வ போற?…” என்றார் கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்க்கும் பாவனையில்.
“அத்தை…” என ஆத்மா விழிக்க,
“நீ அப்படி செஞ்சு நான் பாத்ததே இல்ல…” என்றவர் பார்வை சட்டமாய் வாசலை பார்த்து நிலைத்துவிட்டது.
அவர்களை கிளம்ப வைக்கவென அவன் முயற்சி தெரிந்தாலும் ஒருவரும் செல்லவில்லை. அடக்கப்பட்ட சிரிப்புடன் இதனை பார்க்க காத்திருந்தனர்.
“நேரம்…” என ஆத்மா நெற்றியை தட்டிக்கொள்ள ட்ரைவரிடமிருந்து அழைப்பு.
போனை எடுத்து பேசியவன் மற்றவர்களிடமும் சொல்ல என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அண்ணாமலையும் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார் வந்த உறக்கத்தை விரட்டியபடி தன் அறை ஜன்னலருகே.
காரும் உள்ளே வர மெல்ல சுற்றி ஆத்மாவின் வீட்டை கடப்பதை போல் நிற்க கண்ணை திறந்து மூடும் நொடி தான்.
‘கீழ விழுந்துடாம காப்பாத்திடு சாமி’ என மனதிற்குள் வேண்டியபடி காரை நெருங்கினான் ஆத்மா.
மிதமான வேகத்தில் நிறுத்துவதை போல் வந்து நின்ற கார் கதவை திறந்துகொண்டு உள்ளே ஏறியவன் ரிதுபர்ணா சுதாரிக்கும் முன் அவளின் கையை பற்றி இருந்தான்.
வீட்டினுள் கார் நுழைந்ததும் ஆத்மாவை விழிகள் தேட அவன் எங்கே என்று பார்த்து பார்த்ததும் பார்வை அவன் நெற்றி, கழுத்தில் தான் பதிந்தது ரிதுவிற்கு.
அதில் இமைகொட்ட மறந்து அவள் திகைப்புடன் இருக்க சட்டென உள்ளே வந்துவிட்டான் ஆத்மா.
“கீழே இறங்கினா தான திரும்ப வரமாட்டேன்னு சொன்ன? இப்ப என்ன செய்வ?…” என்று சொல்லியவனை தீயாய் உறுத்து விழித்தாள் ரிதுபர்ணா.
அவன் கேட்ட நொடி சுயம் உணர்ந்தவள் கோபமாய் கதவை திறக்க முயல முடியவில்லை.
“இறங்கிடாத, அப்பறம் இங்க அத்தனை பேர் முன்னாடி உன் காலை பிடிச்சிருவேன் யோசிக்காம…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல திகைத்து பார்த்தாள் அவனை.
“நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை தான செய்யறீங்க?…” என்று ஆற்றாமையுடன் கேட்க ஆத்மா பதில் கூறவில்லை.
“உன்னை இப்படி வரவழைச்சு கூட்டிட்டு போறதுக்கே இவ்வளோ அக்கப்போர். என்னை இவ்வளோ ஸ்டன்ட் பண்ண வைக்கிற நீ? இதுல நீ போற வழியை கேட்டு அங்கயே நில்லுன்னு சொல்லி நான் வந்து ஜாயின் பண்ணிருந்தா பேசியே என்னை ஓடவிட்டிருப்ப நீ…” என்றான் அவன்.
சில நொடிகள் மௌனமாய் கடக்க ரிதுபர்ணா ஆத்மாவின் காயங்களை பார்க்கவும், திரும்பவுமாய் இருந்தாள்.
“எப்படி அடிபட்டதுன்னு நான் சொல்லனுமா?…” அவள் பார்வையில் அவனே கேட்டான்.
“தேவையில்லை, என்கிட்டே சொல்லிட்டா போனீங்க? இல்லை அவசரம்ன்னு என்னை வர சொன்னீங்களா? எதுவும் இல்லை. இதை மட்டும் நான் ஏன் கேட்கனும்?…” என்றாள்.
“அப்ப சரி…” என்றதும் அவன் சொல்லவில்லையே என விழித்தவள் மீண்டும் அவனை பார்க்கவும் திரும்பவுமாய் இருந்தாள்.
வெகு நேரம் கழித்து ஓரிடத்தில் குடிக்க இளநீர் வாங்கிவர ட்ரைவரை அனுப்பியவன் ரிதுவின் புறம் திரும்பினான்.
“எனக்கு தெரிஞ்சிருச்சு…” என்று ஆத்மா சொல்லவும்,
“என்னது?…” என்றாள் அவள் சுரத்தின்றி.
“அந்த எலுமிச்சைப்பழம் நீ தான வச்சிருக்க? தெரிஞ்சிருச்சு….” என்று கேட்க,
“என்ன? என்ன பழம்?…”
“ஹ்ம்ம், பொன்னம்பலம்…” என்றவனை ரிது முறைக்க,
“நீ என்ன பண்ணினாலும் உன் பின்னாடியே என்னை வரவைக்கிறியே. அவ்வளோ வசியம் பண்ணிருக்கியா நீ? எங்க வச்சிருக்க அந்த பழத்தை?…” என்று அவள் கையை பற்ற,
“கதவை திறந்து வெளில தள்ளிவிட்டுருவேன்…” என்றாள் ரிது கோபமாய்.
தன்னுடைய விளையாட்டால் வெகுவாய் கடுப்பில் இருக்கிறாள் என்று புரிந்தாலும் அவளை சீண்டாமல் ஆத்மாவால் இருக்கமுடியவில்லை.
“ஹேய் ரிது…” என்றவனின் திடீர் அழைப்பில் திடுக்கிட்டு அவள் பார்க்க,
“இருக்கு இருக்கு…” என்று நெஞ்சை நீவிக்கொண்டான்.
“என்ன?…”
“அதான் ஜிமிக்கி, உன் காதுல இருக்கு…” என்று சொல்லவும் வந்ததே கோவம்.
சத்தமாக திட்ட கூட முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு அவனை முறைத்துவிட்டு ஜன்னல் புறம் திரும்பிக்கொண்டாள் அவள்.