“தெரியலையா? இதான் வார்ம் வெல்கம். நைட் டைம், மழை வர மாதிரி இருக்கற இந்த சில் க்ளைமேட்க்கு ஒரு வார்ம் ஹக்…” என்றவனின் வாயில் தொப்பென்று விரல்களால் ஒரு போடு போட்டவள் அவனையே பார்த்தபடி நிற்க அவளின் விழிகளுக்குள் நீர் சுரந்து நிறைய ஆரம்பித்தது.
“என்னடி?…” என்றான் அயர்ச்சியுடன் ஆத்மா.
“உங்க கழுத்துல இந்த பக்கம் கட்டு போடாம சும்மா இருக்குது…” என்றாள் கண்ணீரை உள்ளிழுத்து அவனை முறைத்துக்கொண்டு.
“உனக்கு ரொம்ப வருத்தம் போல இந்தப்பக்கம் காயமில்லாம இருக்கறது?…” என்று சிரித்தவன்,
“அதுக்கு தான் கட்டிப்பிடிச்சேன். நீ அங்க கடிக்கனும்னா கடிச்சுக்கோ. நோ இஷ்யூஸ் ரிது…” என மீண்டும் அணைக்க வர அவனை விட்டு தள்ளி நின்றாள்.
அவளின் காதோரம் ஜிமிக்கி அவனை வா என்று அழைக்க அவளை நெருங்க முடியாமல் இடுப்பில் கை வைத்து பார்த்து நின்றவன்,
“ஊஃப், இங்க வச்சு பேச முடியாது. வா ரூம்க்கு போகலாம்…” என இருவரின் லக்கேஜையும் எடுத்துக்கொண்டான்.
அப்போது தான் கதவு தாழிட்டிருப்பதை திரும்பி பார்த்தவள் தங்களை அழைத்து வந்த ட்ரைவர் எங்கே என்பதை போல அவனிடம் திரும்பினாள்.
“ட்ரைவர் அண்ணா எங்க? கிளம்பிட்டாங்களா?…” என்று கேட்க,
“ம்ஹூம், நம்ம படுத்தின பாட்டுக்கு அவர் ரெண்டுநாளைக்கு நல்லா தூங்குவார். அதான் இப்ப அவுட்டோஸ்ல ரெஸ்ட் எடுக்கறார். நாளைக்கு கிளம்புவார்…”
“நம்மளா? நானில்லை. நீங்க. நீங்கதான் இங்கைக்கும் அங்கைக்குமா இழுத்தடிச்சீங்க. என்னை சொல்லக்கூடாது…”
“செம்ம ஹாட் மச்சி…” என்றான் அவளின் கோபத்தில் குறும்பாய் ஒரு புன்னகையுடன்.
“என்ன?…”
“உன் கோபத்தை சொன்னேன்…” என்று தோளில் லேசாய் இடித்தவன்,
“நீங்க எப்ப இருந்து இப்படி பேச ஆரம்பிச்சீங்க?…” ரிதுவிற்கு தலைசுற்றியது.
“எல்லாருக்கும் எப்ப பேச்சு வருமோ அப்ப இருந்துதான். அதான் என் சின்ன வயசுலையே பேச ஆரம்பிச்சிட்டேன்….” என்று சொல்லிக்கொண்டு அறைக்குள் நுழைந்ததும் கடுப்புடன் தான் அவனுடன் சென்றாள்.
அவன் தன்னை வெறுப்பேற்றி குளிர் காய்கிறான் என்று புரிந்தது ரிதுபர்ணாவிற்கு.
அதன் பின் பேச்சுக்களில்லை இருவருக்கும். குளித்து முடித்து வெளியே வரவும் ஆத்மா உடைமாற்றி கழுத்தின் காயத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனிடம் என்னவென்று கேட்க மனது முரண்டியது. ஆனாலும் வாயை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
பேசினால் பதிலுக்கு பதில் பேசி தன்னை கரைக்கும் வேலையில் தான் அவன் இருக்கிறான் என்று தெரிந்தது.
வரும்வழியில் வேறு அவனை ட்ரைவ் செய்ய சொல்லியதற்கு மறுத்துவிட்டவன் உறங்கியிருக்க ரிதுவும் சென்னை வரும் வரை நல்ல உறக்கத்தில் தான்.
அதனால் இப்போது உறக்கம் வராமல் இருந்தாலும் அவனிடம் பேச்சை தவிர்க்கவேண்டும் என சென்று படுத்துக்கொண்டாள்.
முன்பு அவளுக்கு ஒட்டுதலில்லாமல் காட்சியளித்த அனைத்தும் அவளுக்கு உரிமையானதாய் தோன்ற அவனை மட்டும் எட்ட நிறுத்தினாள்.
மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் அவளை சூழ்ந்தது. இப்படி கிளம்பி வந்துவிட்டாயே என அவளை எள்ளி நகையாடியதை போல உணர்ந்தாள்.
அதுவே அவளை குன்ற செய்ய உடலை குறுக்கி படுத்திருந்தவள் மனதிற்குள் அவனிடம் கேட்க எக்கச்சக்க கேள்விகள் இருந்தது.
இன்னும் ஆத்மா வந்து படுக்கவில்லை. அங்கிருந்த சோபாவில் அமர்ந்து யாருக்கோ செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தான்.
தானும் வீடு வந்துவிட்டதை இன்னும் ஊரில் யாருக்குமே சொல்லவில்லை என்று அப்போது தான் தோன்றியது.
மீண்டும் எழுந்து தனது மொபைலை தேடினாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தான் கொண்டுவந்த பேக்கை எடுத்து பார்க்க அதிலும் இல்லை. ஒருவேளை காரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோமோ என தோன்றியது.
கையில் கொண்டுவந்ததை போல ஞாபகமும் இல்லை ரிதுவிற்கு. அப்போ நிச்சயம் காரில் தான் இருக்க வேண்டும் என நினைத்தவள் கதவை திறக்க போக,
“எங்க ரிது?…” என்றான் ஆத்மா.
“என் மொபைல் கார்ல இருக்கு போல. இங்க காணும். தேடிட்டேன்…”
“அதனால…”
“போய் எடுத்துட்டு வரேன்…”
“இப்ப எதுக்கு?…” என்று கேட்டவன் எழுந்து வர,
“எதுக்குன்னா? வீட்டுக்கு தகவல் சொல்ல தான். சித்தி, வித்யா தூங்காம இருப்பாங்க. வித்யாட்ட கூட சொல்லாம கிளம்பிட்டேன்…” என்றவள் கையை பிடித்தவன்,
“நான் சொல்லிட்டேன். அத்தை போய் அங்க சொல்லிருப்பாங்க. நீ படுத்து தூங்கு…” என்றான்.
“இல்ல நான் சொல்லிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என மீண்டும் கதவை திறக்க திரும்ப,
“கேட்கவே மாட்டியா நீ?…”
“என்ன கேட்கனும்? மொபைல் தானே எடுக்க போறேன்…” என்றவள்,
“சரி அப்ப உங்க போன் குடுங்க. நான் சித்திக்கு கால் பண்ணி சொல்றேன். தருவீங்களா?…” என கேட்டதும் யோசிக்கவே இல்லை அவன். தனது மொபைலை எடுத்து அவள் கையின் மீது வைத்தான்.
“பேசு…” என்று சொல்லவும் திகைத்து போனவளாய் அவனையே விழிவிரித்து பார்க்க அதில் ஆத்மா சிரித்தபடி,
“ஹ்ம்ம், இந்த கண்ணு இருக்கே…” என்று அவளை நோக்கி குனியவும்,
“நிஜமாவே நீங்களா?…” என அவன் செய்கையை கூட கவனிக்காமல் அதிர்ச்சியில் அவள் நிற்க அவன் நிமிர்ந்துகொண்டான்.
“ஓய், என்ன நிஜமாவே நீங்களான்னா? ஒரு போன் குடுத்தா இவ்வளோ டவுட்டா?…” என சிரித்தவன் அவளின் கையில் அழுத்தம் தர அவனிடமே திருப்பி நீட்டினாள் அவள்.
“நான் என் போன்லயே பேசிக்கறேன். வேண்டாம்…” என்றாள்.
அவன் தனக்காக தான் இதனை செய்கிறான் என்று அவளுக்கு புரிந்திருந்தது. அதனாலேயே மறுத்துவிட்டாள்.
“என்னதான்டி வேணும் உனக்கு? அங்க இருக்கு பார் உன் மொபைல். எடுத்துக்கோ…” என சொல்லிவிட்டு அறை கதவை திறந்துகொண்டு செல்ல அவன் காட்டிய இடத்தில் மொபைல் இருந்தது.
சற்றுமுன் அவன் அமர்ந்திருந்த இடம் அது. மொபைலை அருகிலேயே வைத்துக்கொண்டு தான் இத்தனை பேச்சா இவனுக்கு என தோன்ற போனை எடுத்தாள்.
சுவிட்ச் ஆஃபாகியிருந்தது மொபைல். எடுத்து அங்கிருந்த சார்ஜரில் போட்டவள் அவனை தேடி வந்தாள்.
பால்கனியில் தான் அமர்ந்திருந்தான் ஆத்மா. கடலலையை வெறித்தபடி அவன் இருக்க அருகே செல்வதா வேண்டாமா என்று கதவை ஒட்டியே நின்றவளை திரும்பி பார்த்தவன் தலையசைத்தான் அவளை பார்த்து.
“வா…” என்று அவனது கையை நீட்டி அழைக்கவும் ரிதுவும் மறுக்காமல் செல்ல அவளை தன் அருகே அமர்த்திக்கொண்டான்.
சிறிதுநேரம் இருவரிடமுமே பேச்சுக்கள் இல்லை. மௌனமாய் இருக்க ஆத்மாவின் கைகள் ரிதுவின் தலையை வருடியபடி இருந்தது.
இருவருக்குமே அது ஆசுவாசமான தருணம். பேச, சண்டை போட, சமாதானம் செய்ய என வார்த்தைகள் முண்டியடித்தது.
அத்தனையும் மௌனத்தின் பின்னால் நின்றுகொண்டு நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு ஆட்டமாடினாலும் மௌனம் அதனை மொத்தமாய் சிறையிட்டது.
வார்த்தைகளுக்கு விடுதலை கொடுத்து மனங்கள் இரண்டும் மௌனத்தில் சஞ்சரிக்க ஆத்மா ரிதுவின் புறம் திரும்பினான்.
“ஸாரி ரிது…” அந்த ஒற்றை மன்னிப்பில் இருந்த அந்த வார்த்தையின் கனத்தை அந்த கணம் ரிதுவால் சுமக்கமுடியவில்லை.
ஏற்கனவே கேட்ட மன்னிப்பு தான். ஆனால் அதனை அலட்சியமாய் புறந்தள்ளியவளால் இப்போது முடியாது போனது.
அமைதியாய் மட்டுமே அவளிருக்க அந்த மன்னிப்பு அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற எந்த கேள்வியும் ஆத்மாவிடம் இல்லை.
அவளிடம் சேர்ப்பிக்கவேண்டிய மன்னிப்பை அவள் காலடியில் வைத்துவிட்டான்.
அதனை மனதார ஏற்பதும், எட்டி வீசுவதும் அவள் பாடு என அவன் இருந்துகொண்டான்.
“அன்னைக்கு அப்படி உன்னை விட்டுட்டு போகனும்ன்ற எந்த பிளானும் இல்லை. எப்படியும் மதியம் கிளம்பிருவோம் ரெண்டுபேருமே. அதனால தான் எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு…” என்றான்.
ஆத்மா பேசவும் அந்த நிகழ்வு இப்போது நடந்ததை போல அவன் விட்டு சென்ற தாக்கத்தில் சுருண்டு போய் இருந்தாள் ரிது.
மீண்டும் ‘தன்னை விட்டு சென்றவனிடம் தான் இப்படி அவனை தேடி வந்தோமே?’ என தன்மானம் செவிட்டில் அறைந்தது.
அவன் நியாயமாக லட்சம் காரணங்கள் சொன்னாலும் அந்த நிகழ்வு காலத்துக்கும் அழியாத கசப்பை அல்லவா கொடுத்திருந்தது.
தன் பேச்சில் நிச்சயம் தவறு இருக்கிறது. ஆனாலும் அதனை உணர்ந்து தானே பரிதவித்து நின்றோம். அந்த வேளையில் அவன் விட்டு சென்றது இன்னுமே வலித்தது.
அமைதியாய் அவனின் பேச்சுக்களை கிரகித்தாள். பேசாதே, சொல்லாதே, மன்னிப்பை கேட்காதே என எதையும் அவளால் சொல்ல முடியவில்லை.
அன்றைக்கு இவை எல்லாவற்றையும் மீறிய ஒரு பயம் அவளை பிடித்து ஆட்டியது.
ஆத்மா விட்டு சென்றதோடு தன்னிடம் பேசாமல் இருந்தது என எல்லாம் அவனுக்கு தன் மீது வெறுப்பை விதைத்துவிட்டதோ என அச்சத்தை தந்ததிருக்க உடைந்து போயிருந்தாள்.
“ரிது, கேட்கிறியா?…” என்றவனின் விரல்கள் அவளின் முகத்தை கன்னம் பற்றி நிமிர்த்த தலையசைத்தாள்.
“மனசு கஷ்டம் தான். ஆனா இப்ப இல்லை. அன்னைக்குமே நீ பேசினது தப்பில்லைன்னு சொன்னாலும் சுருக்குன்னு ஒரு வலி இல்லாம இல்லை. அதான் கிளம்பிட்டேன்…”
“கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பிருவோம்ன்னு நினைச்ச நேரத்துல தான் திரும்பவும் மும்பை ஹார்பர்ல கஸ்டம்ஸ்ல இருந்து கால். சரக்கு லோட்ல ப்ராப்ளம்ன்னு. இந்ததடவை அடிக்கடி நடக்குதேன்னு தான் உடனே கிளம்பிட்டேன். கிளம்பித்தான் போகவேண்டிய சூழ்நிலை…”
“உன்கிட்ட வந்து சொல்லியிருக்கலாம். ஆனா உன்னை கூட்டிட்டு போக முடியாது. என்னவோ அப்ப மனசு வரலை. சரி இருக்கட்டும்ன்னு தான் கிளம்பினேன். என்னவோ சட்டுன்னு பேச தோணலை. எனக்கே கண்ணுக்கு தெரியாத ஒரு ஆணவம்ன்னே வச்சுக்கோயேன்…”