“பேசின தானே? கொஞ்சம் அனுபவின்ற மாதிரி எனக்குள்ள ஒரு வெஷப்பய புகுந்துட்டான். சென்னை போய்ட்டு உனக்கு பேசலாம்ன்னு சித்தப்பாட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்பிட்டேன். ஒருவேளை வீட்டுல இருந்து கிளம்பும் போது உன் முகத்தை பார்த்திருந்தா விட்டுட்டு போக தோணிருந்திருக்காதோ என்னவோ?…”
“விதி, உன் கால்ல விழுந்து கதறனும்னு இருக்கும் போது என்ன பண்ண முடியும்?…” என அவனாக சிரிக்க அவனோடு ரிதுவின் முகத்திலும் வலியுடன் கூடிய புன்னகை.
“சென்னை வந்தா விஷயம் ரொம்ப சீரியஸ். வேற யோசிக்க முடியலை. என்ன ஏதுன்னு பார்த்து அன்னைக்கே மும்பை கிளம்பி அங்க ரெண்டுநாளா அதே வேலை தான். தூங்க கூட முடியலை…”
“கஸ்டம்ஸ் ப்ராப்ளம் கிளியராகவும் தான் என் மைண்ட்ல மத்த விஷயமே வந்தது. முதல்ல நீ. உன்கிட்ட பேசலாம்ன்னு நினைச்சு கால் பண்ணலாம்ன்னு இருந்தேன். முதல்ல அன்னைக்கே டிக்கெட் திருச்சிக்கு தான் புக் பண்ணியிருந்தேன்…”
“சென்னை போய் கரூர் வரதெல்லாம் தேவையில்லைன்னு தோணுச்சு. அதான் நேரா திருச்சி வந்து அங்க இருந்து கரூர் வந்து உன்னை முதல்ல பார்க்கனும்னு. அப்பவும் அதே வெஷப்பய தான் என்னை டைவர்ட் பண்ணினது…” மீண்டும் ஒரு புன்னகை ஆத்மாவின் முகத்தில்.
“ஹார்பர்ல இருந்து கார்ல ரூம்க்கு திரும்பும் போது ஏதோ ஊர்கோலம்ன்னு ட்ராபிக். எனக்கு ப்ளைட்க்கு டைமாகுது. ரூம்க்கு போனா தான் கிளம்ப முடியும். காரை விட்டு இறங்கிட்டேன். பக்கம் தானேன்னு…”
“எங்க இருந்து அந்த ரெண்டுபேர் வந்தாங்களோ? நினைக்கவே இல்லைடி. தலையில ஒரே அடி. பர்ஸ், போனுக்கு, கோல்ட் செயினுக்கும் உயிரை எடுக்கற அளவுக்கு அட்டாக் பண்ணினாங்க…..” என தனது கழுத்தை தடவ,
“செயின் தானே? போகுதுன்னு விடவேண்டியது தானே? உங்களுக்கு உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா?…” நினைக்கும் பொழுது நெஞ்செமெல்லாம் ஒரு நடுக்கம்.
தன்னுடைய பிடிவாதம் எல்லாம் அவ்விடம் மொத்தமாய் சரிந்தது போலொரு தோற்றம்.
அவனிருக்க போய் இவ்வளவு கோபத்தையும், எதிர்ப்பையும், தனது ஆதங்கத்தையும் அவனிடத்தில் காண்பிக்கிறோம்.
இதுவே அவனுக்கு எதாவதென்றால் ‘ஒருவார்த்தை என்னிடம் பேசிவிடு என கதறி துடித்திருக்க மாட்டோமா?’ என்றே தோன்ற அவளாக அவனின் கை வளைவை பற்றிக்கொண்டாள்.
உயிர். உயிரல்லவா? அந்த உயிர் இருக்கும் வரை தானே இந்த கோபம், சண்டை, வாக்குவாதம், என் நியாயம், உன் நியாயம் எல்லாம்.
நேசம் கொண்ட நெஞ்சங்களிடையே இதென்ன தர்க்கமும், தவிர்ப்பும் என்று அவளுக்கு விளங்க தன்மானத்திற்கும், தன் மனதிற்கும் இடையே ஒரு அல்லாட்டம் ரிதுபர்ணாவிற்கு.
“என்னாச்சு ரிது?…” என அவள் கைகள் நடுங்குவதை உணர்ந்து அவன் கேட்க,
“ஹாங், ஒண்ணுமில்லை. நீங்க போகுதுன்னு விட்டு வந்திருக்கலாமே?…” மீண்டும் அதையே கேட்க,
“வந்திருக்கலாம். ஆனா அவ்வளோ ஈசியா ஒருத்தனை சாய்ச்சு அதுல சம்பாதிக்க நினைக்கிறானுங்க. சும்மா விட சொல்றியா? எனக்கு கிடைச்சதுக்கு பத்துமடங்கு அவனுங்களுக்கு குடுத்துட்டேன்…”
“போலீஸ்ல ஒப்படைச்சாச்சு. ஆனா செயினை அறுத்ததுல கழுத்தில பலமா காயம். நெத்திலையும். உனக்கு சொல்லியிருந்தாலோ, தெரிஞ்சாலோ நிச்சயம் வந்திருப்ப. ஆனா நான் வராம இருந்த ஒவ்வொரு நிமிஷமும் உன்னை அப்படி விட்டுட்டேனேன்னு மனசு குத்திட்டே இருந்துச்சு…”
“அதான் சொல்லலை. பேசலை. முரளிக்கு மட்டும் சொன்னேன். ஏனா இங்க எனக்கு முடியலை. ஹெல்ப்க்கு வேற யாரையும் கூப்பிடமுடியாது…” என்றவன் அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
“எனக்கு உன்னை எந்த இடத்தில அப்படி விட்டுட்டு கிளம்பினேனோ அங்க இருந்து நானே வந்து உன்னை கூட்டிட்டு வரனும். அதுக்கு தான் வெய்ட் பண்ணேன். இன்னைக்கு மார்னிங் தான் இங்க வந்தேன். அதுக்குள்ளே ஷோரூம்ல இருந்து ரவி சித்தப்பாட்ட சொல்லிட்டான் போல?…”
மொத்தமாய் மூச்சுவிடாமல் அவன் சொல்லி முடிக்க இங்கே யாரை குற்றம் சொல்வது என தெரியாமல் அமைதியாய் இருந்தாள்.
“ஆனா நீ சொன்னதுக்காக நீ கில்ட்டா இருக்கவேண்டிய அவசியமில்லை ரிது. பிச்சைன்றதும் அவ்வளவு ஈஸி இல்லை. அதுக்குமே மனபலமும், தைரியமும் நிறையவே வேணும். அப்படி பார்த்தா உன்கிட்ட நான் பிச்சை கேட்டவனாவே இருந்துட்டு போறேன். வச்சுக்கோ…”
ஆத்மா சொல்லவும் அதுவரை அடக்கி இருந்த அழுகை எல்லாம் வெடித்து அவன் மீது கண்ணீராய் பொழிய தேம்பிக்கொண்டே இருந்தாள் அவள்.
“ஹேய் என்னடா இது?…” என அவளை தோளோடு அணைத்துக்கொண்டவன்,
“சண்டை போடுவன்னு பார்த்தா அழற?…” என சிரித்தான்.
“சண்டை தானே? போடுவேன். இனிமே சண்டை தான் உங்களோட…” என்று விசும்பிக்கொண்டே சொன்னாலும்,
“ஆனா எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? இப்பவும் அந்த கோவம் குறையலை. அந்த நம்பிக்கை, எப்பவும் எனக்கு நீங்க இருப்பீங்கற்ற நம்பிக்கை, என்னவோ அது இப்ப இல்லை…” அவள் சொல்லாமல் வார்த்தையை விழுங்கிக்கொள்ள முயன்று முடியாமல் கூறிவிட மீண்டும் ஒரு மௌனம்.
“ஓகே, லீவ் இட். சரியாகிடும். வா உள்ள போகலாம்…” என்று அவளுடன் உள்ளே வர ரிது சென்று படுத்துவிட்டாள்.
கதவை சாற்றிவிட்டு மொபைலை அருகிலிருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளருகே வந்து படுத்தான் ஆத்மா.
அவனை திரும்பி பார்த்தவள் மறுபக்கம் முதுகு காண்பித்து திரும்பி படுக்க சட்டென வந்து அட்டையாய் ஒட்டிக்கொண்டான் அவள் கண்ணாளன்.
ஆத்மாவின் கைகள் அவளின் கைகளை வருடி இடையோடு இறுக்கி அணைக்க அதனை ஏற்க முடியாமல் மெல்ல விலக முயன்றாள்.
இன்னும் மனதில் ஒரு தெளிவில்லை. ஆத்மாவிற்கும் உடல்நிலை சரியில்லாததால் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்றே தோன்றியது.
“இல்லை, என்னால முடியும்ன்னு தோணலை…” என சொல்லிவிட்டாள் உடனே.
“ஓகே, சில். உன்னை ஒன்னும் பண்ணலை. என் கூட மட்டும் பேசு. தூக்கம் வரலை எனக்கு…” என அவள் காதில் சரிந்திருந்த ஜிமிக்கி மீது தன் மீசையோடு உரசினான் கிசுகிசுப்பாய்.
“நீங்களே பேசுங்க. இவ்வளோ பேசறீங்களே…”
“அப்ப என் கிட்ட நீ பேசமாட்ட…”
“ம்ஹூம், மாட்டேன்…”
“நிஜமா?…”
“ஆமா…” என்றவளை தன் புறம் திருப்பி ஆழ்ந்து பார்த்தான்.
“சூர்…”
“ப்ச்…” என்றவளை விலகியவன் தனது மொபைலை எடுத்து ஏதோ ஒரு நம்பருக்கு அழைப்பு விடுக்க இந்த நடுராத்திரியில் யாருக்கென ரிதுவும் எழுந்தமர்ந்து பார்த்தாள்.
“இப்ப இந்த நேரத்துல யாருக்கு?…” என ரிது கேட்க,
“ஜிமிக்கி வாங்கினோமே, அந்த நகைக்கடைக்கு தான் போன்…” ஆத்மாவும் சீரியஸாக பதில் கூறினான்.
“என்ன?…” என்றாள் ரிதுபர்ணா அதிர்ச்சியுடன்.
அர்த்த ராத்திரியில் இப்படி நகைக்கடைக்கு என்று சொல்கிறானே என ஒருபுறம் நம்பவில்லை என்றாலும் அவன் முகத்தில் விளையாட்டில்லை.
“நிஜமாவே நகைக்கடைக்கா?….” அவனருகே தவழ்ந்து வந்து அமர்ந்து அவள் கேட்க,
“ஆமா…” என்றான் ஆத்மா.
அவள் தன்னருகே வந்து அமர்ந்த விதத்தை கண்டு ஆத்மாவின் முகத்தில் அழகாய் குறுஞ்சிரிப்பு.
“எதுக்கு? இப்ப ஏன்?…” என அவனின் கையை பிடித்து போனை வாங்க முயன்றாள்.
சிறிது நேரம் இருவரிடமும் பேச்சில்லா நெருக்கம். சிறு சிறு இணக்கமும், சுணக்கமுமாய் நொடிகள் கரைய மீண்டும் அவளை விட்டவன் முகத்தில் பேரமைதி.
“கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் கொஞ்ச நேரம். உன் மடில தூங்கறேன், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ….” என்றதும் ரிது எதற்கென பார்த்தாள்.
அவளின் இடையை சுற்றி கட்டிக்கொண்டவன் முகம் ரிதுவின் வயிற்றில் பதிய சற்று நேரத்தில் சீரான மூச்சில் ஆத்மாவின் உலகம் மனைவியின் மடியில் நெகிழ்ந்திருந்தது.
அவனின் இந்த செயலில் மனது மொத்தமாய் புரண்டது. மெதுவாய் அவன் தலையை கோதினாள் ரிது.
மனதெல்லாம் மீண்டும் ஒரு பாரம். அவனின் பக்கமாய் நின்று பார்க்க சொல்லி மனது அவளை தள்ள இப்போது அவனின் இந்த செயலில் கரைந்துதான் போனாள்.
அவனின் சிறுவயதிலிருந்து தங்கள் திருமணம் வரை தெரிந்திருந்தது. அதிலும் இந்த பிரச்சனையின் பொழுது விசாலாட்சியும் இன்னும் தெளிவாய் விளக்கியிருந்தார்.
அவனை எப்போதாவது முன்பு பார்த்த பொழுது இருந்ததற்கும், இப்போது தன் கணவனாய் அவன் இருப்பதற்கும் வானுக்கும், மண்ணுக்குமான வித்தியாசம் இருந்தது.
அவனுள்ளும் காட்டப்படாத சில பக்கங்கள் நிறைக்கப்படாமல் வெற்றிடமாகவே இருக்க அவன் தன்னை அதில் ஓவியமாய் இட்டு நிரப்புவதை உணர்வுகளால் உணர்ந்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் முகத்தில் மெல்லிய சிரிப்பு ஒட்டியிருக்க அவன் புன்னகை அவள் முகத்தையும் நிறைத்தது.
அப்படியே அமர முடியாமல் பின்னால் வாகாய் சாய்ந்து அமர்ந்திருந்தவள் மனதில் அவன் சொல்லிய வார்த்தைகள் தான்.
“வாழ்க்கை, நாம நினைச்ச மாதிரி இருக்காது. நம்ம திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நடக்கும் விஷயங்களை எப்படி ஓவர்கம் பண்ணி வரோம்ன்றதுல தான் இருக்கு நமக்கான வாழ்க்கை. அதை வாழலாம் ரிது…” என்றது காதில் ஒலித்தது.
பார்வை அவன் முகத்தையே அளக்க அத்தனை பேச்சுக்களை பேசிய அவனின் அதரங்கள் அழுத்தமாய் மூடியிருந்தது.
“எவ்வளோ பேசுது இந்த வாய்?…” என அவனிடமே கேட்டுக்கொண்டவள்,
“ஹ்ம்ம், பார்க்கலாம். இன்னும் எவ்வளோ பேசறீங்கன்னு…” என்று சொல்லிக்கொண்டாள்.
முரண்டுபிடிக்கும் மனதை கண்டித்து வைத்தவள் தானும் உறங்க முயன்றாள் அவனுடனே.