மறுநாள் காலை ஆத்மா கண்விழிக்கையில் அங்கிருந்த சோபாவில் ஒருகளித்து சாய்ந்து அமர்ந்திருந்தாள் ரிது.
கையில் போன் இருந்தாலும் அதை எதையும் பார்க்கவில்லை. விழிகள் பார்வையை ஓரிடத்தில் வைத்திருந்தது.
ஆத்மாவின் ஆளுயர புகைப்படம் அது. அவன் நின்ற தோரணையும், பார்வையும், இதழில் மெல்லிய கீற்றாய் ஒட்டியிருந்த புன்னகையும் இயல்பாய் இருந்தாலும் என்னவோ குறைந்தது.
கண்ணுக்கு தெரியாத இறுக்கமும், கண்களின் கண்டிப்பும் அவனிடம் பார்த்ததும் பார்ப்பவர்களை எட்டிவைக்கும் விதமாக இருந்தது.
அந்த புகைப்படத்தில் இருப்பவனுக்கும், தன்னிடம் உறவாடியவனுக்குமான வித்தியாசங்களை மனது வகுப்பெடுத்துக்கொண்டிருந்ததோ என்னவோ பார்வை புகைப்படத்திலிருந்தவனின் விழிகளில் நிலைத்திருந்தது.
என்னவோ யோசித்தாள், தன்னோடு முதல்நாள் அவன் பேசியவற்றை நிழலாய் கண்முன்னிருந்தவனிடம் ஒப்பீடு செய்து பார்த்தாள்.
ஒரு சதவீதம் கூட ஒத்துப்போகாத விதமாய் இருந்தது அந்த நிழற்படத்திற்கும் நிஜமானவனுக்கும்.
‘இவனுக்கு என்னவாகிற்று?’ மீண்டும் மீண்டும் மனதிற்குள் முதல்நாள் நடந்தவரை ஓட்டி பார்த்தபடி இருந்தாள் ரிதுபர்ணா.
ஆத்மா எழுந்தும் ரிதுபர்ணா அப்படியே இருக்க சிறிது நேரம் பார்த்துவிட்டு அதன் பின் அவனே அழைத்தான் இவள் திரும்ப போவதில்லை என்று நினைத்து.
“கொஞ்சம் கொஞ்சம்…” என எழும்பொழுது நேரமென்ன என்பதை மனதிற்குள் துழாவினாள். சட்டென ஞாபகம் வரவில்லை.
“உனக்கு இதுக்கு மேல சத்தமா பேச வராதா?…” என்றான் ஆத்மா.
பதில் பேசாமல் அவள் அமைதியாக இருக்க அவளை பார்த்தபடி எழுந்தமர்ந்தவனின் மீதிருந்த பார்வையை தாழ்த்திக்கொள்ள ஆத்மா முகத்தில் சிறு புன்னகை.
“ஏன் இங்க உக்கார்ந்திருக்க? கீழே போகலாம் தானே?…”
“இல்ல கீழ…” என்று ரிது தடுமாற புரிந்ததாக தலையசைத்தவன்,
“இனி இப்படி எல்லாம் ஒதுங்கி இருக்க கூடாது. நீ பழகிக்கோ…” என்று சொல்ல சரி என்பதாக தலையாட்டினாள்.
“ஏன் மௌனவிரதமா?…” என்றான் அதற்கும்.
அவளின் முகத்தையே அளந்தபடி இருந்தவன் விழிகள் சோபாவின் பின்னே சென்றது.
தலையை பின்னலிட்டிருந்தாலும் அவள் தலைக்கு குளித்ததில் அப்படியே தலைவாராமல் வெறுமனே பின்னலிட்டிருக்க சொட்டு சொட்டாய் நீர் வடிந்துகொண்டிருந்தது.
“சரியா காய வைக்காம பின்னிட்ட போல?…” என்றவன்,
“இன்னைக்கும் ஹெட்டேக் வராம பார்த்துக்கோ…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டு கையை உயர்த்தி நெட்டிமுறிக்க அவன் செயல்கள் எல்லாமே சங்கடமாக இருந்தது ரிதுபர்ணாவுக்கு.
“காபி வந்துச்சா?…” என்றான் அவனே.
“ம்ஹூம்…” என்று கூறினாள்.
“டைமென்ன? இன்னும் எதுவும் வரலைன்னா?…” என்றவன் நேரம் பார்க்க மணி பத்து.
“இவ்வளோ நேரம் ஒன்னும் சாப்பிடாமலா இருந்த?…” என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று மறைய மீண்டும் போனை கீழே வைத்துவிட்டு சோபாவின் கைப்பிடியில் தலைசாய்த்துக்கொண்டாள்.
பத்து நிமிடத்தில் வேகமாய் குளித்து வெளியே தலையை துவட்டியபடி வந்தான் ஆத்மா.
அவன் வருகையில் ரிதுபர்ணா சோபாவில் அமர்ந்தவாக்கில் கண்ணை மூடியபடி முழங்காலிட்டு அதனை கை கொண்டு பிடித்திருந்தாள்.
அவ்வப்போது போனையும் வேறு பார்த்துக்கொண்டே இருந்தவள் இப்போதும் இவனை கவனிக்கவில்லை.
அவளுக்கெதிரே முதல்நாள் முருகேஸ்வரி கொடுத்து சென்ற பை இருக்க அருகே வந்தவன் அதனை எட்டி பார்த்தான்.
திருமண புடவையும், நகைகளும் என்று இருந்தது. உடைகளை மடித்து வைத்திருந்தாள்.
காலை குளித்து முடித்த டவல் முதற்கொண்டு அவள் அதற்குள் வைத்திருக்க ஆத்மாவுக்கே கண்ணை கட்டியது.
‘எப்படி தங்கள் வாழ்க்கை இருக்க போகிறதோ?’ என ஒருநொடி மலைத்து நின்றான்.
இப்படி எல்லாவற்றிற்கும் பேச தயங்கி, ஒற்றை வார்த்தை பதிலளித்து என நினைக்கும் பொழுதே ரிதுபர்ணா லேசாய் தலையை திருப்பினாள்.
தன்னெதிரே நின்று ஆராயும் பார்வையுடன் தன்னையும், தன்னருகே இருந்த பையையும் பார்த்துகொண்டு நின்றவனை கண்டு எழுந்து விட்டாள்.