“இங்க தான் அவனும் இருக்கான். இன்னும் கம்பெனிக்கு கிளம்பலை…” என்ற இளவரசு,
“கண்ணா இப்பவே கிளம்பனுமா?…” என்றார் அவனிடம்.
“ஏன் சித்தப்பா?…”
“இல்லை சும்மாதான் கேட்டேன்…”
“நான் கீழே வரேன். வெளில வாங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
கீழே இறங்கி வர இன்னும் அந்த பெண்மணிகள் ஆத்மாவின் தாய் ஆனந்தியிடம் பேசிக்கொண்டு தான் இருந்தனர்.
அதனை பார்த்தபடி வேகமாய் இறங்கி ஹாலில் வந்து நின்றவன் தங்கை தன்னை பார்ப்பதை கண்டுவிட்டு,
“ராணி…” என்றான் சத்தமாய்.
“தம்பி…” அவர் வந்து நின்றதும்,
“ஏன் மார்னிங் ரூம்க்கு காபி வரலை?…” என்று அதிகாராமாய் கேட்க அவரின் பார்வை மனோவை பார்த்தது. இப்போது,
“என்ன?…” என்றான் தங்கையிடம்.
“காலையில அப்பா வந்தாங்க. அண்ணிக்கு எதுவும் தர கூடாதுன்னு…”
“என் பொண்டாட்டிக்கு தரக்கூடாதுன்னு சொல்ல அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? இங்க என்னோட சம்பாத்தியம் அவரை விட அதிகமாவே இருக்கு. சொல்லி வை…” என்று வெளியே சென்றுவிட்டான் கோபமாய்.
“பொய் சொன்னேன்னு அண்ணா கண்டுபிடிச்சிருவாங்கம்மா…” மனோ வாடிய முகத்துடன் சொல்ல,
“சரி நீ போ…” என்றவர் அந்த உறவு பெண்களுடன் அமர்ந்துவிட்டார்.
திருமணமான வீடு போலவா உள்ளது என்று மனது முரண்டியது. இப்படி மகன் செய்வான் என கனவிலும் நினைத்ததில்லை.
செய்துவிட்டு வந்துவிட்டு அப்போதும் கொஞ்சமும் வளைந்துகொடுக்காமல் அவன் இருக்க இப்போது மருமகளை நினைத்து கவலையானது.
“என்ன ஆனந்தி, ஏன் வாட்டமா இருக்க? மகன் அவன் பொண்டாட்டியை தாங்கறான்னு இப்பவே புகைச்சலோ?…” என உறவு பெண்ணில் ஒருவர் கேட்க,
“இதென்ன பேச்சு அத்தை? அம்மா அப்படி நினைக்கிறவங்களா?…” என மனோ சத்தம் போட்டாள்.
“நீ ஏன் பெரியவங்க பேசும் போது ஊடால. போ உள்ள…” என ஆனந்தி எரிச்சலில் மகளை பேச,
“என்னவோ பண்ணுங்க. இன்னும் அண்ணாக்கிட்ட வாங்கிக்கட்டினா தான் தெரியும்…” என்றுவிட்டு கோபமாய் உள்ள சென்றுவிட்டாள்.
“நீங்க என்ன பேச்சு பேசறீங்க மதினி? நானே நொந்துபோய் இருக்கேன். அதுவும் என்னோட கவலையே வேற…” என வருத்தம் மேலிட அவர் சொல்ல,
“சும்மா விளையாட்டுக்கு தான் ஆனந்தி…” என்றவர்,
“இப்ப என்ன உனக்கு வெசனம்? அதை சொல்லு…” என்றார்.
“எல்லாம் கண்ணனை நினைச்சு தான் மதினி. இந்த பொண்ணை கட்டிட்டான். ரெண்டுபேரும் நல்லபடியா சேர்ந்து வாழ்ந்தா பரவாயில்லை. ஆனா இவன் ஒட்டாத குணத்துக்கு?…” என்று பெருமூச்செறிந்தவர்,
“அவளும் அப்படி ஒன்னும் பேசி பார்த்ததில்லை. இத்தனை வருஷமா பார்க்கறோமே இந்த காம்பவுண்ட்க்குள்ளையே. அவ இருக்கற இடமே தெரியாது. அதான் மனசு கிடந்து அடிச்சிக்குது…” என்றார்.
“அதெல்லாம் உம்மவன் வாழ ஆரம்பிச்சிட்டான்…” என இன்னொரு பெண்மணி நக்கலாக சொல்ல,
“ஆமாங்கேன், இப்ப பக்கத்துல போய் பார்த்தேன்ல. எல்லாம் நடக்கவேண்டியதும் நடந்திருச்சு. கவலைய விடு…” என்று சொல்ல,
“என்ன இங்க காலையிலையே மாநாடு? இந்நேரத்துக்கே உங்க வீட்டுல வேலை இல்லையா?…” என்று வந்துவிட்டார் விசாலாட்சி.
“வா…” என்று ஆனந்தி அழைக்க உடனிருந்த பெண்மணி விஷயத்தை சொல்ல,
“என்ன பேச்சு இது? இங்க என்ன நடந்தா உங்களுக்கு என்ன? வெக்காமாயில்லையா இப்படி ஒரு பிள்ளையை பார்க்கறது. எந்திச்சி போங்க முதல்ல…” என்று சொல்லவும் ஆனந்திக்குமே ஒருமாதிரியாகிவிட்டது.
ஆற்றமாட்டாமல் என்னவோ பேச போய் இதை அக்கம்பக்கத்திலும் இவர்கள் ஒப்பிப்பார்களே என தன்னை குறித்தே அவமானமாகி போனது.
இப்போது விசாலாட்சி சொல்லவும் தான் மடத்தனம் உணர்ந்து அவர்களை பார்க்க,
“இப்ப என்ன ஊர் உலகத்தில இல்லாததை பார்த்துட்டோம், சொல்லிட்டோம்? ஆனந்தி வெசனப்பட்டுச்சு. அவளை பார்க்கையிலையே புரிஞ்சு போச்சு. அதான் சொன்னோம்…”
“முதல்ல இப்படி உத்து பார்க்கறதை நிப்பாட்டுங்க…” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு ஆனந்தியை முறைத்தார்.
“என்ன அண்ணி நீங்க? யோசிக்கமாட்டீங்களா? கண்ணா சொல்லி தான் அனுப்பினான் என்னன்னு போய் பாருங்கன்னு….” என்றதும் மழுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது அவருக்கு.
“இப்ப என்ன ஆச்சுன்னு அழறீங்க?…” என அவர் அருகில் அமர,
“இன்னும் என்னவாகனும்? இவனுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா இவர் கால்ல விழுந்தாச்சும் வம்பாடுபட்டு கட்டி வச்சிருப்பேன். இப்படி நிறைஞ்ச சபையில எவனுக்கோ கழுத்தை நீட்ட உக்கார்ந்த பிள்ளையை வம்படியா கட்டிட்டு வந்திருக்கானே?…”
“என்ன பேச்சு இது? என்னவோ கண்ணா எல்லாம் திட்டம் போட்டு செஞ்ச மாதிரி? அவன் காதுல விழுந்தா மொத்தமா வெறுத்துட்டு போய்டுவான். சும்மாவே இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கு உறவு…” என்ற விசாலாட்சி,
“அங்க தான நீங்களும் இருந்தீங்க? என்ன நடந்துச்சுன்னு பார்த்திட்டு தானே இருந்தீங்க. கண்ணாவா ஒன்னும் பிரச்சனை பண்ணலை. அங்க பிரச்சனையாச்சு. அவன் அதை சரி பண்ணிட்டான்…”
“அதுக்குன்னு இப்படியா? பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம். அங்க வச்சு ஒருவார்த்தை எங்ககிட்ட கூட கேட்கலையே? அவனுக்கு முன்னாடியே,…”
“அண்ணி, சும்மா இருங்களேன். அவன் சின்னண்ணனோட வெளில தான் நிக்கிறான். கேட்டுச்சுன்னா அவ்வளோ தான்….”
“என் நேரத்தை பார்த்தியா? பெத்த பிள்ளைக்கு கூட பயந்து பேசவேண்டி வருது…”
“இது நாமளா தேடிக்கிட்டது தானே?…” என்ற விசாலாட்சி,
“அவனுக்கு பிடிச்சிருந்தா இன்னொருத்தனுக்கு பேசி மணமேடை போறரவரைக்குமா அவன் வெய்ட் பண்ணிட்டு இருப்பான். அதை புரிஞ்சுக்கோங்க அண்ணி. இதுதான் நடக்கனும்னு இருக்கு. நடந்திருச்சு…”