“இன்னைக்கு தொலைஞ்சோம் போங்க. திரும்ப இப்படியே பேசறீங்க. பிடிக்காததை செய்ய வைக்கமுடியுமா உங்களால? எங்க அவன் நினைச்சதை தடுக்க முடிஞ்சதா? சும்மா இதையே பேசிகிட்டு…” என்று அதட்டி வைத்தார்.
சத்தங்கள் குறைவாக இருப்பினும் ஆனந்தியின் புலம்பல் கொஞ்சமும் ஓய்ந்தபாடில்லை.
ரிதுபர்ணாவின் மீது வருத்தங்கள் எதுவும் இல்லை என்றாலும் என்னவோ ஏற்க முடியவில்லை அவரால்.
ஆரம்பத்திலிருந்தே ஒரு ஒதுக்கம். கணவருக்கே சொந்த தங்கையை ஆகவில்லை. அதிலும் அத்தனை பெரிய அவமானத்திற்கு பின்னும் எப்படி உறவாக நினைக்க என்று தான் தள்ளியே இருந்தார்.
தாய் தகப்பனற்ற பெண். அதனை கொண்டு ஒரு இரக்கம், பரிதாபம் மட்டுமே ரிதுபர்ணாவிடம்.
பெரிய குடும்பத்தில் மூத்த மருமகளாக வந்து சேர்ந்தவர் பிரிந்த குடும்பத்தை சேர்க்கவேண்டும் என்று கூட நினைக்கவில்லை.
அண்ணாமலையில் கோபத்திற்கு எல்லாம் தூபம் போடவில்லை என்றாலும் அதனை குறைக்க வேண்டும் என்றுமட்டும் தோன்றவே இல்லை.
மகன் வளர வளர மனது ரிதுபர்ணா உறவு இப்படி ஒட்டாமல் இருப்பதே நல்லது தான் போல என்று தோன்ற தனது அண்ணன் மகளை முடித்துவைத்துவிடலாம் என்று உறுதியாய் இருந்தார்.
படிப்பை முடிக்கட்டும், பேசலாம் என அவரின் அண்ணனும், அண்ணாமலையும் முடிவு செய்திருக்க இப்படி ஒரு திருப்பம் யாருமே எதிர்பார்க்காதது.
வெளியே இளவரசுவிடம் பேசிக்கொண்டிருந்த ஆத்மாவின் பேச்சுக்கள் எதையும் அவரால் மறுக்க முடியவில்லை.
“திடீர்ன்னு கிளம்பனும்னா பொண்ணு கொஞ்சம் யோசிக்கும்லப்பா…”
“அவ புருஷன் இப்ப நான் அப்படின்றதாலயா சித்தப்பா?…” என்றவன்,
“கல்யாணம் முடிஞ்சா மாப்பிள்ளை வீட்டுல தானே எல்லாம். அங்க தானே பொண்ணு அன்னைக்கே போகனும். இது நம்ம வழக்கம் தானே?…” என்று அழுத்தமாய் சொல்ல இளவரசுவால் மறுக்க முடியவில்லை.
ஆத்மா பேசியதன் பொருளை அவர் தெளிவாகவே புரிந்துகொண்டார். மண்டபத்தில் நின்ற அந்த திருமணம் நடந்திருந்தால் கூட நடப்பவை தானே இதுவும் என அவன் மறைமுகமாக சொல்ல அவரால் மறுக்க முடியவில்லை.
“சித்திட்ட சரி பண்ண குடுத்திருக்கேன். கண்ணி தான் விட்டிருக்கு. நகை செஞ்ச கடையிலையே குடுத்தா சரி பண்ணிருவாங்க…”
“ஸ்ட்ராங்கா ஒரு ஜிமிக்கி கூட செய்ய தெரியலை. இவங்கலாம்…” என முணுமுணுத்து பின்னங்கழுத்தை தேய்த்துக்கொண்டவன்,
“ஹ்ம்ம், ஓகே, லக்கேஜ் எங்க?…” என்று கேட்க வெளியே வைத்தும் தான் நினைத்ததை பேசமுடியாமல் அவள் நின்றாள்.
“என்ன?…”
“காலேஜ்க்கு ரெண்டுவாரம் தான் லீவ் சொல்லியிருக்கேன். லீவ் முடிஞ்சதும் திரும்ப ஜாயின் பண்ணனும்…” என்று சொல்ல,
“அதான் இன்னும் நாள் இருக்கே. இப்ப என்னோட கிளம்பு…” என்று சொல்லியவன் இளவரசுவை பார்த்தான்.
ரிதுவும் அவரை தான் பார்த்தாள் இறைஞ்சுதலாக. ‘நீங்களாவது சொல்லுங்களேன்?’ என்பதை போன்ற பார்வை.
ஆனால் தள்ளி நின்றவருக்கு ஒன்றும் கேட்கவுமில்லை. என்ன பேசுகிறார்கள் என தெரியவுமில்லை.
இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே முருகேஸ்வரியும், வித்யாவும் ரிதுபர்ணாவின் உடமைகள் என்று மூன்று ட்ராலிகளை கொண்டுவர முரளி சென்று வாங்கிவந்தான்.
ரிதுபர்ணாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வர பல்லை கடித்துக்கொண்டு அதனை அடக்கினாள்.
முருகேஸ்வரியை அத்தனை வருத்தத்துடன் பார்த்தது அவள் பார்வை. இனி தானின்றி இவர்களை இங்கே இருக்க விடுவார்களா என தோன்ற தங்கையை பார்த்தாள்.
அதிலும் முந்தைய நாள் நிகழ்வில் இளவரசு கூட முருகேஸ்வரியை கண்டனத்துடன் பார்த்து பேசிவிட அவளுக்கிருந்த சிறு நம்பிக்கை கூட இப்போது இல்லாது போனது.
“அவங்களை இங்க யார் என்ன சொல்வாங்க? சித்தப்பா இவங்களை பார்த்துப்பாங்க…” என்றான் ஆத்மா அவளின் பார்வையை கண்டு.
தான் நினைத்து கலங்கும் விஷயத்தை அவன் கவனித்து சொல்ல வியப்புடன் பார்த்தவள் இளவரசுவை பார்த்தாள்.
“சித்தப்பா இவங்களை நீங்க…” என்று ஆத்மா முடிக்கும் முன்,
“நான் பார்த்துக்கறேன் கண்ணா. ஏன் இதுல என்ன? இங்க தானே இருக்க போறாங்க?…” என்று சொல்லியவர்,
“ஏன்ம்மா என் மேல நம்பிக்கை இல்லையா?…” என்றார் ரிதுவிடம்.
“அப்படியில்லை மாமா, நேத்து உங்களுக்கும் கோவம் தானே நடந்ததுல. அதுதான்….” என்றவள்,
“அதோட இப்ப அவங்களே இங்க இருந்து போறேன்னு சொல்லிட்டிருக்காங்க மாமா…” கரகரக்கும் குரலுடன் அழுகையை அடக்கியபடி சொல்ல இளவரசு மட்டுமல்லாது மற்றவர்களும் திகைத்து பார்த்தனர்.
“தெரிஞ்ச இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். வித்யாவுக்கு படிப்பு முடியற வரைக்கும் ஹாஸ்டல் கேட்டிருக்கேன். அதான்…” முருகேஸ்வரி சொல்லியதே அவரின் நிராதரவு நிலையை காண்பிக்க இளவரசு பேசும் முன் முரளி பேசினான்.
“இப்ப அதுக்கு என்ன அவசியம் வந்தது? அதுவும் இப்படி கிளம்பி போகனும்னு….” முரளி வேகமாய் அவரிடம் கேட்கவும்,
“முரளி அப்பா பேசும் போது நீ என்ன? சும்மா இரு…” என்றார் இதனை கவனித்த செண்பகம். இளவரசுவின் மனைவி.
ரிதுபர்ணா வரை அவர் கணவனையோ, மகனையோ தடுப்பதில்லை. ஆனால் முருகேஸ்வரி என்று வருகையில் மகனை தள்ளி நிறுத்திவிடுவார்.
“நான் பேசறேன் ப்பா…” என்ற இளவரசு முருகேஸ்வரியிடம்,
“நேத்து என்கிட்டே முன்னாடியே பிரச்சனை இப்படின்னு சொல்லியிருக்கலாமேன்னு கோவத்துல ரெண்டுவார்த்தை அங்க வச்சு பேசிட்டேன். அதுக்காக இப்படி ஒரு முடிவா?…” என்று கேட்க,
“என் மேலையும் தப்பு தானங்க. நான் சொல்லியிருக்கனும். ஆனா என்னவோ இந்த மடச்சிக்கு சொல்ல தோணாம போய்டுச்சு. அவன் சும்மா உளறிட்டிருக்கான். மண்டபத்துக்கு வரமாட்டான்னு நினைச்சேன்…” என்றார் தலையை குனிந்தபடி.
“சரி, அது முடிஞ்சுபோச்சு. பேசவேண்டாம், கொஞ்சம் அண்ணன் மாதிரினு நினைச்சு மதிப்பு தரதா இருந்தா இங்க இருந்து போகமாட்டன்னு நினைக்கறேன். என்னம்மா?…” என்ற பேச்சின் தொனியே முருகேஸ்வரியை மறுக்கவிடவில்லை.
“மாமாட்ட சொல்லாம எங்கயும் போக கூடாது. சரியா?…” என்றார் சத்தமாகவும், சைகையுடனும்.
வித்யா உடனே தலையசைத்து சிரித்தவள், ‘நான் சொன்னேன் , அம்மா தான் போகனும்னு சொன்னாங்க’ என்பதை போல பதில் சொல்ல முருகேஸ்வரி சங்கடத்துடன் நின்றார்.
“நான் ரிதுவுக்காக மட்டும் சொல்லலை, வித்யாவுக்காகவும் தான் சொல்றேன். புரியுதா? தனியா போறது பாதுகாப்பில்லைன்னு தெரிஞ்சும் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கறது புத்திசாலித்தனமில்லை….” என இளவரசு சொல்லிவிட்டு,
“நீ இப்படி செஞ்சா ரிது கண்ணாவோட போகமாட்டா. என்ன சொல்ல போற?…” என இளவரசு அவரை அதட்டினார்.
“இல்லைங்க, இனிமே நான் எங்கையும் போகலை…” என உடனே சொல்லிவிட்டு,
அந்த சந்தோஷம் அவளின் முகத்தில் தெரிய ரிது ஆத்மாவை அதே புன்னகையுடன் பார்க்க அவன் இருபுறமும் தலையசைத்தபடி கொண்டுவந்திருந்த பெட்டிகளை தூக்கி காரில் வைத்தான்.
மதிய உணவை இளவரசு வீட்டில் முடித்துக்கொண்டு அண்ணாமலை வருவதற்கு கூட காத்திருக்காமல் கிளம்பியிருந்தான் மனைவியுடன் சென்னைக்கு.
எழில் குழுமம் மிகப்பெரிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம். பூத்துவாலைகள், திரை சீலைகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள் என்று தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் தான் வர்த்தகம். ஆத்மாவின் தலையெடுப்பில் சென்னையில் தனியாய் இதற்கென்றே ஷோரூம் ஒன்று நிறுவி அதனை கவனித்து வருகிறான்.
வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து தொழிலின் அடுத்த கட்டத்தை அவன் எட்டியிருக்க இன்னும் ஏறுமுகம் தான் வரவிலும், பெயரிலும்.
அண்ணாமலை உடன் பிறப்புகளாக இளவரசு இரண்டாவதும், மூன்றாவதாக விசாலாட்சியும் இருக்க நான்காம் பெண்ணாக கடைசி வாரிசு தமயந்தி.
ரிதுபர்ணாவின் தாய். விசாலாட்சியை சொந்தத்தில் மணம் முடித்து கண்ணுக்கேதிரே வீட்டின் அருகே குடி வைத்தவர்கள், தமயந்திக்கும் வீட்டோடு மாப்பிள்ளை வெளியிடத்தில் பார்க்க ஏற்றார்போல அமைந்தது அவருக்கும் வரன்.
ஒரே சுற்று சுவற்றுக்குள் நான்கு குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் அண்ணாமலைக்கும் தமயந்தியின் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை அண்ணன் தங்கை சண்டையாக மாறி பூதாகரமாக அதன் அடுத்தடுத்த நிகழ்வுகள் உடன் பிறக்காதவர்களை போல மாற்றியிருந்தது.
தனக்கு அப்படி ஒரு தங்கையே இல்லை என்று சூழுரைத்திருந்தவரின் மருமகளாய் தன் இரண்டாம் தங்கையின் மகளே தன் வீட்டின் மருமகளாகி போனது தான் விதியின் வசம்.