ஷோரூமில் அந்த ஏசி அறையிலும் கொடும் அனல் பறப்பதை போலிருந்தது.
அத்தனை கோபத்துடன் இருந்தான் ஆத்மா. தனக்கு முன்னிருந்த சாம்பிள் துணிகளை பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் கடுகடுவென்று இருந்தது.
வீட்டிற்கு கிளம்பும் நேரம் தாண்டியும் கிளம்பவில்லை அவன். ரவியும் நெற்றி வியர்வையை துடைப்பதும், ஆத்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்வதுமாக இருந்தான்.
வெளியே கதவு தட்டப்படும் சத்தத்தில் ஆத்மா என்னவென்று ரவியை பார்க்க சொல்லிவிட்டு அந்த சின்ன சின்ன கையகல துணிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.
புதிதாய் டிசைன் செய்து வரவழைக்கப்பட்ட திரை துணிகளும், அதே டிஸைனில் படுக்கை விரிப்பு, தலையணை உரை என்று இருந்தது.
அதன் மாதிரிகளை தான் சரிபார்த்துக்கொண்டு இருந்தான். புருவங்கள் முடிச்சிட அத்தனை தீவிரம் அவன் பாவனையில்.
ரிதுபர்ணா அவனை பார்ப்பதும், எதிரே இருந்த கணினியை பார்ப்பதுமாக இருக்க அதை உணர்ந்த ஆத்மாவின் விழிகள் மட்டும் அவளை தொட்டது.
“என்ன ரிது?…” என்று அவன் கேட்க,
“ஒண்ணுமில்லை. சும்மா பார்த்தேன்…” என்று சமாளித்தாள்.
வேறு ஒன்றும் செய்யமுடியாது. வேலை என்று வந்துவிட்டால் பக்கா வியாபாரி அவன்.
வீட்டிலிருப்பது வேறு. ஆனால் அவனின் ஷோரூமில் அவன் இருப்பதே வேறு என அவன் பரிமாணங்கள் ரிதுவை கலங்கடித்தது.
எவ்வளவுக்கெவ்வளோ வீட்டில் கொஞ்சுகிறானோ வேலை வேளையில் அத்தனை மிஞ்சுபவன்.
சென்னையிலிருந்து வந்த இருநாட்களில் அவனுடன் ஷோரூமிற்கு வந்துவிட்டாள் அங்கே வேலையில் சேர்ந்துவிடுவதாக கூறி.
“நிஜமாவா?…” என அவன் யோசனையுடன் கேட்டும்,
“ஆமா, வீட்டுல சும்மா இருக்கமுடியாது. சும்மாயிருக்கற மூளைல சாத்தான் புகுந்துக்கும். அப்பறம் நான் நிறைய யோசிச்சா இங்க இருந்து திரும்ப கிளம்பினாலும் கிளம்பிருவேன்…” என்று சொல்லிய விதத்தில் ஆத்மா சிரித்துவிட்டான்.
“இங்க வா…” என தன் மடியில் அமர்த்திக்கொண்டவன்,
“உன்னை இனி யார் விடறாங்கலாம் ஊருக்கு?…” என நெற்றியோடு முட்டியவன் முகத்தில் மீண்டும் யோசனை.
“நிஜமாவே நீ வேலைக்குன்னு தான் சேர முடிவு பண்ணியிருக்கியா ரிது?…”
“இதுல என்ன டவுட்? வேலைக்கு தான்..” என்றவள்,
“வெளில பார்க்க கூடாதுன்னு நீங்க சொல்றீங்க. உங்க ஷோரூம்ல முதலாளியா நான். ம்ஹூம் யோசிக்கவே முடியலை. நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது தான்…” என்றதும் ஆத்மாவின் முகம் சிந்தனையில் இருந்தது.
“ஏன் இவ்வளோ யோசனை?…” என ரிது கேட்கவும் தலையசைத்தவன்,
“கண்டிப்பா ஒரு ஸ்டாஃபா தான் ஜாயின் பன்றன்னா அதோட ரூல்ஸ் உனக்காக நான் ப்ரேக் பண்ண முடியாது ரிது. அங்க எல்லாருக்கும் பார்மாலிட்டீஸ் எல்லாம் ஒன்னு தான்…”
“நான் எந்த சலுகையும் கேட்கவே இல்லையே? கண்டிப்பா எல்லா இடத்துலையும் இருக்கும் தானே?…” என நல்ல பிள்ளை போல அவள் சொல்லி வேலையில் சேரவும் தான் ஆத்மா சொல்லியதன் அர்த்தமே விளங்கியது.
முழுதாய் வியாபாரியாக, முதலாளியாக தான் அங்கே அவன் அவளிடமும் பரிமளித்தான்.
வெளி ஆட்கள் வேலைக்கு என்று வருகையில் என்னவெல்லாம் பார்மாலிட்டீஸ் இருந்ததோ அத்தனையும் அவளுக்கும் இருந்தது.
“ஷோரூமை மார்னிங், ஈவ்னிங் ரெண்டுநேரமும் முழுசா கவனிக்கனும். டெய்லி ரிப்போஸ்ர்ட் குடுக்கனும், கரண்ட்ல அப்டேட் பண்ணின ரெக்கார்ட்ஸ் எல்லாம் சரியான்னு வெரிஃபை பண்ணனும்…” என்று அவளுக்கான வேலைகளை அவளுக்கு சொல்லி கற்றும் தந்துவிட்டான்.
முதல் பத்து, பதினொன்று நாட்கள் மெதுவாய் கற்றவள் அதன் பின் தனியாக மேனேஜ் செய்ய துவங்கினாள்.
சிறு தவறை கூட அவளிடமும் அவன் பொறுக்கவில்லை. கொஞ்சமும் யோசிக்காமல் பேசிவிடுபவன் வீட்டில் அதற்கும் நியாயம் பேசினான்.
“அங்க உன்னோட பாஸ் நான். இங்க என்னோட பாஸ் நீ…” என்ற அவனின் பிரத்யோக வசனங்கள் வீட்டில் நித்தமும் தவறாது இடம் பெற்றுவிடும்.
அண்ணாமலைக்கு தெரிந்தது ரிதுவை ஷோரூமில் பணிக்கு அமர்த்தியிருப்பது. அதற்கும் அவருக்கு அத்தனை கோபம்.
“முதலாளி பொண்டாட்டியை வேலைக்கு முதலாளி வச்சிருக்கானே? அங்க வேலை பார்க்கறவனுங்க என்ன மதிப்பானுங்க இவனையும், அவளையும்? என்ன நினைச்சிட்டு இருக்கான்?…” என இளவரசுவிடம் கொந்தளித்தார்.
“ஒன்னு அவளை வீட்டோட இருக்க சொல்லு. இல்லையா கூட்டிட்டு போறவன் பொண்டாட்டியா கூட்டிட்டு போக சொல்லு. அப்படி என்ன வேலைக்கு தான் போகனும்னு அவளுக்கு அம்புட்டு திமிரு?…” என பொரிந்து தள்ளியிருந்தார்.
இதனை ஆத்மாவும் போன் வாயிலாக கேட்டிருக்க அவன் முகத்தில் சிறு புன்னகை.
“என்ன கண்ணா?…” என்ற இளவரசுவிடம்,
“என்னவாம் உங்கண்ணனுக்கு மருமக மேல என்னமோ பொங்குது போல? கம்முன்னு இருக்க சொல்லுங்க அவரை…” என அவனும் பதிலுக்கு சொல்ல,
“ரொம்ப பன்றீங்கடா நீங்க…” என புலம்பியபடி போனை வைத்தார்.
அன்று அத்தனை சண்டைகளுடன் கரூரிலிருந்து வந்த பிறகு திரும்பவும் அங்கே செல்லவில்லை ஆத்மாவும், ரிதுவும்.
ஊருக்கு இடையில் வர சொல்லி அத்தனைமுறை அழைத்துவிட்டனர். இதோ அதோவென்று போக்கு காட்டிக்கொண்டு தான் இருந்தான் ஆத்மா.
இதை பற்றி ரிது வாயை திறந்தால் அவளையும் வாயடைக்க செய்தான் வேலையை காரணம் காட்டி.
“வேலை வேணும்னு சேர்ந்து ஒருமாசமாகலை. அதுக்குள்ளே என்ன ஊருக்கு? லீவெல்லாம் கிடையாது. முடிஞ்சா உன் லீவ் அன்னைக்கு போய்க்கோ…” என்று ஷோரூமில் வைத்து சொல்லுபவன் அதற்கும் விட்டதில்லை.
“வாரம் முழுக்க ஷோரூம்ல இருக்கேன். இந்த ஒருநாள் உனக்கு லீவ் அன்னைக்கு தான் நானும் வீட்ல இருக்கேன். என்கூட இருக்கனும்னு நினைக்கமாட்டியா நீ…” என்று அவள் மண்டையை கழுவிவிடுவான்.
அதோ இதொவென்று பரத்தின் திருமணம் நாளும் நெருங்கிவிட்டது. இப்பொழுது பார்த்து இந்த பிரச்சனை.
ஏற்கனவே சிறு தவறை பொறுக்கமாட்டான். இப்போது நடந்திருப்பதோ பெரிய விஷயம்.
அதையும் தான் இருந்தும் கவனிக்காமல் விட்டிருக்க சமாளித்து பேச கூட ஆத்மாவை நெருங்க முடியவில்லை.
“ஸார் எலெக்ட்ரிக்கல் எல்லாம் வொர்க் முடிஞ்சது. வவுச்சர்…” என்று அவன் நீட்டவும் அதில் கையெழுத்திட்டவன்,
“மேல செக் பண்ணியாச்சா?…”
“எஸ், ஸார். கிளியர்…” என்று சொல்ல,
“ஓகே, இதை முடிச்சுட்டு நீங்க கிளம்புங்க…” என்றான் ரவியிடம்.
“ஓகே ஸார், குட்நைட்…” என்று கிளம்பி செல்ல ஆத்மாவும் எழுந்துகொண்டான்.
ரிது கிளம்பத்தான் எழுகிறானோ என நினைத்து தனது பேக்கை எடுக்க அவளை ஒரு பார்வை பார்த்தவன் கதவை திறந்துகொண்டு மாடிக்கு சென்றான்.
“சுத்தம்…” என்று பேக்கை வைத்தவள் அங்கேயே மேஜையில் தலை சாய்ந்துவிட்டாள்.
மேலே சரி பார்க்க போயிருக்கிறான் என புரிந்தது. மீண்டும் கணினியை இயக்கி அவன் என்ன செய்கிறான் என்று அதன் வழியே பார்த்தாள்.
ஒவ்வொரு இடத்தையும் ஒரு இன்ச் விடாமல் அவன் ஆராய்ந்துகொண்டிருக்க ரிதுவின் போன் அடித்தது.
“இவர் இப்ப பார்க்கறதை நான் மார்னிங் பார்த்திருந்திருக்கலாம்…” என நொந்துகொண்டவள் போனை எடுத்து பார்த்தாள்.
விசாலாட்சி தான் அழைத்திருந்தார். பெரும் ஆயாசத்துடன் அதனை எடுத்தவளுக்கு தலைவலி வேறு.
“சொல்லுங்க பெரிம்மா…” என சோர்வுடன் கேட்க,
“என்னத்த சொல்ல? நீ தான் சொல்லனும். இன்னும் நாலு நாள்ல உன் அண்ணன் கல்யாணம். இன்னும் நீ வந்து சேரலை…” என்று கத்தினார்.
“பெரிம்மா, அதான் மத்தியானம் என்ன விஷயம்ன்னு சொன்னேனே?…” குரலை தழைத்துக்கொண்டு அவள் பேச,
“ஆமால, எங்க அவன்? பக்கத்துல இல்லையா?…” என அவர் அங்கே தன் குரலை கம்மி செய்ய ரிது சிரித்துவிட்டாள்.
“இங்க அவங்களுக்கு கேட்க கூடாதுன்னு நான் மெதுவா பேசறேன். நீங்க ஏன் பெரிம்மா?…” என்று சிரிக்க,
“ஆமால. மறந்துட்டேன்…” என்றவர்,
“என்னாச்சு ரிது? சரி பண்ணியாச்சா?…”
“பண்ணிட்டாங்க. அதை பார்க்க தான் மாடிக்கு போயிருக்கார்…” என்றவள்,
“கொஞ்சம் கவனிக்கலைன்னாலும் அந்த ஷார்ட் சர்க்யூட்டால பெரிய பிரச்சனையாகிருக்கும். அந்த ஃப்ளோரே முடிஞ்சிருக்கும். குறைஞ்சபட்சம் அந்த சைட் க்ளாத் எல்லாம் எரிஞ்சிருக்கும்…” என்றாள் இன்னும் குறையாத நடுக்கத்துடன்.
“இல்லாம எப்படி? எதாச்சும் சின்ன மிஸ்டேக் விட்டாலே கடிச்சு குதறிடுவார். இன்னும் பேச நேரமில்லை. அதை சரி பன்றதுலையும், வேற டேமேஜ் எதுவுமாகிருக்கான்னு பார்க்கவுமே சரியாகிடுச்சு…”
“பெருசா ஒன்னும் சேதாரமில்லையே?…”
“இதுவரைக்கும் ஒண்ணுமில்லை. வீட்டுக்கு போய் பேசுவாங்களோ, இல்லை இங்க பேசிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்களோ? தெரியலை…” என அவள் புலம்ப,
“ப்ச், அதை கேட்கலை. அங்க கடையில பெருசா சேதம் எதுவுமில்லையேன்னு கேட்டேன்…”
“ஓஹ், அவ்வளவுக்கு இல்ல பெரிம்மா, ஒரு ரேக் கர்ட்டன்ஸ் எல்லாம் தீப்பொறி பட்டு ஓட்டை விழுந்திருக்கும் போல. அதை எல்லாம் எடுத்தாச்சு…” என்றாள் வருத்தத்தோடு.
“சரி விடு. நீ என்ன பண்ணுவ?…” என்றார் விசாலாட்சி.
அதற்கிடையே அவரருகில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் கேட்க ரிதுபர்ணா அமைதியாய் அதனை கவனித்தாள்.
“என்ன வளவளன்னு பேசிகிட்டு. எப்ப வரான்னு கேளு…” என்ற ஆனந்தியின் குரலை கவனித்தாலும் ஒன்றும் பேசவில்லை ரிது.
“இருங்க மதினி, அதான் கேட்டுட்டு இருக்கேன். இன்னும் அவங்க வீட்டுக்கே கிளம்பலை….” என்ற விசாலாட்சி,
“பேசாம கண்ணன்கிட்ட நீங்க பேசவேண்டியது தான? எப்ப பாருங்க யாரையாச்சும் பேச சொல்லிட்டே இருக்கறது…” என்று சொல்லியவர்,
“என்ன ரிது கேட்டியா உன் மாமியார் பேச்சை?…” என்றதும்,
“ம்ம்…” என்று மட்டும் சொல்லவும் விசாலாட்சியும் சில நொடி அமைதியாக இருந்தார்.