ரிதுவிற்கு அவன் சொல்லியதை கேட்டதும் ஒரு நொடி பொய்யோ என்பதைப்போல பார்க்க இல்லை.
“என்ன நீங்க? மெதுவா பேசுங்க…” என்றாள் பதறி.
‘இவன் என்னை ஒருவழியாக்காமல் விடமாட்டானா?’ என்றானது அவளுக்கு. கிறுகிறுத்து போனாள் ரிதுபர்ணா.
“ஒன் பிஹெச்கே போதும்ல ரிது. நம்ம ரெண்டுபேர் தானே? பிள்ளைங்கன்னாகிட்டா அப்ப மேல ரூம் எடுத்துக்கலாம். சின்னதா இருந்தாலும் நமக்கு தானே?…” என சொல்ல சொல்ல அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
“குக்கிங் நீ செஞ்சுப்ப தானே?…” என்று வேறு கேட்க அவ்வளவு தான்.
“அச்சோ சும்மா இருங்களேன். இன்னும் வீட்டுக்குள்ள கூட போகலை. அதுக்குள்ளே இவ்வளோ அக்கபோரா?…” என்று அவனை சத்தம் போட ஆத்மாவின் பாவனை அப்படியே தான் இருந்தது.
ரிதுவிற்கு தான் பதட்டம் கூடியது. ‘இவன் இஷ்டத்திற்கு முடிவெடுக்கிறானே? வீட்டில் இதனை கேட்டால் என்னை தானே காரணம் சொல்லுவாங்க. நான் சொல்லித்தான் இவங்க தனி வீடுன்னு பேசறாங்கன்னு’ என நினைக்க ஆரம்பித்தாள்.
“என்ன ரிது? வேணும்னா கட்டும் போதே நாம மாடியும் சேர்த்து எடுத்துப்போம். ட்யூப்லக்ஸ். ஓகே தானே?…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த காலியிடத்தை பார்வையிட்டான்.
“ஒன்னும் வேண்டாம். சும்மா இருங்க…” என்று அவள் சொல்ல,
“சும்மா இருங்கன்னா? எங்க இருக்க?…” என்றவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் அவள் பார்க்க இன்னும் வீட்டிற்குள் இருப்பவர்கள் ஒருவரும் வெளியே வருவதை போல தெரியவில்லை.
இரவு உணவு உண்ணும் நேரம். அனைவரும் உள்ளே இருப்பார்கள் என்று அந்த வேளையை வைத்து கணக்கிட்டவள் ஆத்மாவின் பேச்சில் கதி கலங்கினாள்.
“எங்கையா? என்ன இது? ஏன் இப்படி பீதியை கிளப்பறீங்க?…” என சொல்ல,
“பின்ன நீ இந்த வீட்டுக்கு வரமாட்ட. நான் உன் அம்மா வீட்டுக்கு வரமாட்டேன்னுவேன். அதான் ஊருக்கு வந்தா நமக்கே நமக்குன்னு ஒரு வீடு. அங்கயும் இங்கயும் போக நினைக்க வேண்டாம் பாரு…”
அந்த சண்டைக்கு பின் அன்று தான் ஊர் வந்து சேர்ந்திருக்க இப்போது அவனின் வீட்டிற்கு சட்டென சென்றுவிட முடியுமா என அவனை பார்த்தாள்.
“என்ன? ஓகே தானே?…” என்று தலையாட்டி கேட்க,
“என்ன ஓகே? அதுவரைக்கும் எங்க இருக்கவாம்?…” என்று வேண்டுமென்றே அவனை கிண்டலாய் கேட்க,
“அதுவரைக்கும் நாம என் கார்ல இருப்போம். என் ஹைட்க்கு கொஞ்சம் கஷ்டம்னாலும் கூட நீ இருக்கியே. அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுக்க,
“மெதுவா பேசுங்க…” என்றாள் இன்னும் குரலை தாழ்த்தி அவனை நெருங்கி நின்று.
“இவ்வளோ மெதுவா பேசியே கிட்ட வந்துட்ட. அப்ப இன்னும் மெதுவான்னா வாயை மட்டும் அசைக்கட்டுமா? ஆனா கண்டுபிடிச்சிடனும் நீ. அதை கரெக்ட்டா சொல்லிடுவியா?…” என குறும்புடன் கேட்க,
“அதான் வீட்டை கட்டி அங்க பொறுப்பா குடியேறலாம்ன்னு இருக்கேன். எவ்வளவு பொறுப்பு நானு. என்னை போய் மதிக்காம பேசற நீ?…” என்று சொல்ல இவனுக்கு என்னவாகிற்று என பார்த்தவள் அவனை விட்டு எங்கும் செல்லமுடியாமல் நின்றாள்.
தன் வீட்டுக்கும் செல்ல முடியாது. அவன் வீட்டிற்கும் செல்ல மனது இன்னும் இடம் கொடுக்கவில்லை.
யாராவது வந்துவிட்டால் போதும் என்பதை போல அவள் நிற்க இறக்கி வைத்திருந்த பெட்டியை தூக்கி உள்ளே வைக்க போனான் ஆத்மா.
“அட நில்லுங்க…” என அவள் கையை பிடிக்க,
“கண்ணா…” என வந்தார் ஆனந்தி காரின் அந்த பக்கமிருந்து.
பார்த்ததும் திக்கென்றானது ரிதுவிற்கு. ஒரு காபி வேண்டாம் என்றதற்கே இவ்வளவு தூரம் கொண்டுவந்துவிட்டவர் இப்போது இதனை கேட்டிருந்தார் என்றால்?
முடிந்தது. திரும்பவும் ஒரு பிரச்சனையா? வேண்டவே வேண்டாம். அதற்கு மனதிலும், உடலிலும் சுத்தமாக தெம்பில்லை ரிதுவிற்கு.
என்ன பேசினாலும் வாயை திறக்க கூடாதென்று மட்டும் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றாள் அவள்.
இப்படி இருப்பதற்கு ஆத்மாவுடன் அந்த வீட்டிற்கே சென்றால் என்ன என்று கூட தோன்றிவிட்டது அந்த நொடி.
‘ஏன்? என் புருஷன் வீடு. இன்னைக்கு நான் மருமகள் என்றால் அதற்கு முன் இவர் மருமகளாய் வந்தவர். அதே உரிமை தானே எனக்கும்?’ என உரிமைக்குரல் ஒன்று உள்ளே ஓங்கி ஒலிக்க ‘அதானே?’ என தன்னை தானே தட்டிக்கொடுத்துக்கொண்டாள்.
“வாங்க போகலாம்…” என்று அந்த வீட்டிற்குள் செல்ல தான் அழைத்தாள் ரிது.
ஆனால் ஆனந்திக்கு அவள் தனது தாய் வீட்டிற்கு அழைக்கிறாள் போல என நினைத்தவர் இன்னும் வேகமாய் அருகே வந்து ஆத்மாவின் கையை பற்றிக்கொண்டார்.
“அம்மா பண்ணினது தப்பு தான். ஏதோ கோவத்துல அன்னைக்கு ரிதுவை அப்படி பேசிட்டேன். தப்புத்தான். மன்னிச்சிக்கப்பா…” என்றவர் ஒரு கையால் ரிதுவையும் பிடிக்க அவள் சிலை போல் நின்றுவிட்டாள்.
தன்னிடம் எங்கே மன்னிப்பை கேட்டுவிடுவாரோ என்று ஒருகணம் பதறி பார்க்க,
“விடுங்க. மன்னிப்பெல்லாம் வேண்டாம்…” என்று அவரின் கையில் இருந்து தனது கையை உருவிக்கொள்ள,
“கண்ணா…” என்று மீண்டும் நெருங்க நினைத்தவர் அவன் விலகளில் ரிதுவிடம் திரும்பினார்.
“அத்தை பேசினதை மனசுல வச்சுக்காதம்மா. நீ வா. இது நம்ம வீடு. நாளைக்கு உன் வீடு. நீ உரிமையா இங்க தான முதல்ல வரனும். வா நம்ம வீட்டுக்கு கண்ணனை கூட்டிட்டு உள்ள வா…” என்றவர்,
“என்னவோ அன்னைக்கு ரொம்ப பேசிட்டேன். வேணும்னு இல்லை. ஏதோ ஒரு வேகத்துல. ரொம்ப கோவமா இருந்தேன் நான். அதை மறந்திரும்மா…” என்று சொல்ல ரிது பேச்சற்று ஆத்மாவை பார்த்தாள்.
“ப்ச், இப்ப எதுக்கு இந்நேரம் இதெல்லாம்? போங்க. நீங்க…” என ஆத்மா சொல்லவும் ஆனந்தி நகருவேனா என்பதை போல நின்றார்.
அதற்குள் விசாலாட்சி வந்துவிட, உடன் மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்துவிட்டனர்.
“இப்பத்தான் வந்தியா கண்ணா? உள்ள டிவி சத்தத்துல கார் வந்தது கூட கேட்கலை…” என்றதும் மற்றவர்களும் வரவேற்க ஆனந்தி கையை பிசைந்துகொண்டு கலவரமான முகத்துடன் நின்றார்.
“என்ன மதினி, இப்படி முழிக்கறீங்க?…” என்ற விசாலாட்சி,
“சரி கண்ணா முதல்ல சாப்பிட வா. எல்லாம் ரெடி பண்ணிட்டேன். உனக்காக தான் யாரும் சாப்பிடலை…” என்று அழைக்க அவன் வைத்திருந்த பெட்டியை எடுக்க போக,
“ஆனா சீக்கிரம் சாப்பிட வந்திடனும். ஆமா…” என சொல்லிவிட்டு செல்ல மற்றவர்களும் கலைய ரிதுவின் வீட்டில் இருந்து முருகேஸ்வரியும், வித்யாவும் பார்த்துகொண்டு நின்றார்கள்.
“ரிது உன் சித்தியும், வித்யாவும்…” என்றான் ஆத்மா.
இத்தனை நாளில் வித்யாவை அவன் எங்கும் குறிப்பிட்டதில்லை. இப்போது சொல்லவும் ஒருவிதமாய் நெகிழ்ச்சி உள்ளுக்குள்.
“நான் போய் சொல்லிட்டு வரட்டா?…” என்றதும் ஆத்மா தலையசைக்க,
“இல்ல, இல்ல. நீ வா…” என ஆனந்தி சட்டமாய் நின்றுகொண்டார்.
அவரின் இந்த பதட்டத்தில் உண்டான சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கிக்கொண்டு ஆத்மா ரிதுவை பார்த்தான்.
“நான் பேசிட்டு மட்டும் வரேன்…” என சொல்ல,
“உள்ள வந்துட்டு லக்கேஜை எல்லாம் வச்சுட்டு அப்பறம்…” என்ற ஆனந்தி ட்ரைவரை பார்த்து,
“இந்த பெட்டியை கண்ணன் ரூம்க்கு கொண்டு போய் வைங்க…” என்று சொல்ல ரிதுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
இவர் ஏன் இன்றைகென்று பார்த்து வித்தியாசமாக நடந்துகொள்கிறார் என்று தான் ஆனந்தியை பார்த்தாள்.
ட்ரைவர் பெட்டியை உள்ளே தூக்கி செல்ல ஆனந்தியின் முகம் கொஞ்சம் தெளிந்ததை போல இருந்தது.
“சரி நான் போய் சொல்லிட்டு வரேன்…” என்றவள் செல்ல,
“வா நானும் வரேன்…” என்றான் ஆத்மா.
அவனை போகாதே என்றும் சொல்ல முடியவில்லை. தடுக்கவும் முடியவில்லை. உடனும் செல்ல முடியவில்லை.
“சரி நான் இங்கயே நிக்கறேன். போய் சொல்லிட்டு உடனே வாங்க…” என சொல்லியவர் நின்ற இடத்திலேயே இருந்துகொண்டார்.
“வா, வா…” என்று ஆத்மா உடன் நடக்க ஆனந்தியை பார்த்துவிட்டு தன் வீடு நோக்கி சென்றாள் ரிதுபர்ணா.