“ஹ்ம்ம், நல்லாயிருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க?…” என்று பதிலுக்கு அவனும் கேட்டுவிட அகமகிழ்ந்து போனார்.
“நல்லாயிருக்கோம் தம்பி. இங்க எங்களுக்கு என்ன குறை?…” என நெகிழ்ந்துபோய் சொல்ல தலையசைத்து லேசாய் புன்னகைத்தவன் வித்யாவை பார்த்தான்.
“ஏன் இவ்வளோ அழுகை வித்யா உனக்கு?…” என அவனாக கேட்கவும் திகைத்து நிமிர்ந்த வித்யா பதில் சொல்ல தெரியாமல் விழிக்க,
“ரிது இங்க தான் இருப்பா இன்னும் நாலு நாள். நீ அழாம இருக்கனும்…” என்றும் ஆத்மா சொல்ல தலையாட்டியவள் விழி நீருடன் புன்னகையும் மின்னியது.
“குட், இப்ப நாங்க வீட்டுக்கு போய்ட்டு வரோம். நீ அத்தை வீட்டுக்கு வா…” என்று சொல்ல ரிதுவிற்கும், முருகேஸ்வரிக்கும் ஆச்சர்யத்தில் தலை சுற்றாத குறை தான்.
வித்யா கையாட்டி போய் வருமாறு சொல்ல தலையசைத்து சிரித்தவன் ரிதுவை பார்க்க,
“வரேன் சித்தி…” என்று சொல்லிவிட்டு தங்கள் வீடு நோக்கி நடக்க வித்யாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
முருகேஸ்வரியிடம் என்னவோ சொல்லிக்கொண்டே அவள் சிரித்தபடி செல்ல வார்த்தைகளற்ற அவள் சந்தோஷ மொழியின் சப்தம் இவர்கள் இருவருக்குமே கேட்டது.
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டா போல?…” என ஆத்மா சொல்ல,
“ஹ்ம்ம், ஆமா. இப்ப அவளுக்கும் எக்ஸாம் அது இதுன்னு சரியா பேசவே இல்லை. இந்த தடவை தான் இவ்வளோ நாள் பார்க்காம இருந்தது. அதான் எமோஷனலாகிட்டா…” என்றவள் அப்போது தான் ஆனந்தியை பார்த்தாள்.
இவர்கள் வருகைக்காக அப்போது அவர் நின்ற இடத்திலேயே நிற்பதை கண்டவள்,
“ஒன்னு கேட்டா கோச்சுக்கமாட்டீங்களே?…”
“கேட்டதும் குடுத்துருவேன். நோ கோவம். நோ எரிச்சல். ஒன்லி கிளுகிளுப்பு. எந்த கன்னத்துல குடுக்கனும்?…” என்று ஆத்மா கேட்க,
“என்ன?…” என்று ரிது நின்றுவிட்டாள்.
“நீ தான கேட்ட. அப்ப அதானே ரிது?…” என ராகமாய் சொல்ல முறைக்கவும் முடியாமல் அவனை களைத்து போய் தான் பார்த்தாள்.
“நான் உங்கம்மாவை சொன்னேன். அவங்க ஏன் இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்கறாங்கன்னு…” என கேட்க ஆத்மாவும் சிரிப்பை அடக்கியபடி வீட்டை நெருங்கிவிட்டான்.
“வாங்க, வாங்க…” என்று வேகமாய் அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அண்ணாமலை இல்லை. மனோவோ உடல்நிலை சரியில்லை என்று விரைவிலேயே உறங்க சென்றுவிட்டிருந்தாள்.
“எதாச்சும் சாப்பிடறீங்களா ரெண்டுபேரும்?…” என கேட்க ரிது தான் அரண்டு போனாள்.
திரும்பவும் முதல்ல இருந்தா என்று வெளிறிவிட்ட முகத்துடன் ஆனந்தியை அவள் பார்க்க,
“அதான் அத்தை வீட்டுல டின்னர்ன்னு சொல்லிட்டாங்களே?…” என்ற ஆத்மா வேகமாய் மாடிக்கு செல்ல அடித்துபிடித்து ஓடியேவிட்டாள் ரிதுபர்ணா.
அதிலும் ஆத்மாவை முந்திக்கொண்டு அவள் சென்றதும் அவன் வருகையில் அறையின் முன்னால் இடுப்பில் கைவைத்து மூச்சுவாங்க சாய்ந்திருந்ததையும் கண்டு அப்படி ஒரு சிரிப்புடன் பார்த்தான்.
“இதுக்கா இவ்வளோ வேகமா ஓடிவந்த? கதவ திறந்து உள்ள போ…” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“ஏன் பேசமாட்டீங்க? நான் கீழே போய் ராணிக்கிட்ட காபி குடிக்கறேன்…” என மிரட்டுவதை போல ரிது சொல்ல,
“போயேன். யார் வேண்டாம்ன்னா?…” என்றான் ஆத்மாவும்.
“உங்களை எப்படி தான் சமாளிக்கன்னே தெரியலை எனக்கு…” என உண்மையை ஒப்புக்கொண்டு அவள் நிற்க,
“இதுக்கே எதாச்சும் நீ கேட்காம குடுக்கனும்னு தோணுதே?…” என்ற ஆத்மா,
“ஆனா அதுக்குள்ள அத்தை கூப்பிட்டிருவாங்க…” என்று உள்ளே வந்து வேறு இலகுவான உடைக்கு மாறினான்.
“நீ?…” என எக்ட்க,
“இருக்கட்டும். திரும்பவும் சேரி தான் கட்டனும். அதுக்கு இந்த புடவையிலையே இருந்துக்கறேன். போய்ட்டு வந்து வேற மாத்திப்பேன்…”
“அந்த வேற, என்னை தானே?…” என அவளின் பின்னால் வந்து கட்டிக்கொள்ள,
“வாய், வாய்…” என்று சொல்லியவள் அவனின் கையை கிள்ளி வைத்தாள்.
“எதுக்குடி கிள்ளின?…” என அவளை தன் பக்கமாய் திருப்பி கேட்க,
“இதெல்லாம் நிஜமான்னு தான் கிள்ளி பார்த்தேன். நிஜமாவே தான்…” என்றவள்,
“என்ன அவங்களுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு மாற்றம்?…” என்றாள்.
“பின்ன, நான் சொன்னதை செஞ்சிட்டா? அதான் வந்து கையோட உள்ள கூட்டிட்டு வந்துட்டாங்க…”
“புரியலை…” என விழித்தாள் ரிது.
“அதான் சொன்னேனே, காலி இடம். நமக்குன்னு வந்தா போனா இங்க தங்க தனியா வீடு. குட்டீஸ் வந்தா மாடி. இல்லைன்னா இப்பவே ட்யூப்லக்ஸ்…” என சொல்ல,
“அதெப்படி அவங்களுக்கு?…” என கேட்டவள் அவனை சந்தேகமாய் பார்க்க,
“அவங்க வராங்கன்னு தெரிஞ்சது. அதான் கண்டுக்காத மாதிரி பேசிவச்சேன். சரியா வேலையாகிருச்சு…” என்றவன்,
“எப்படி என் சாமர்த்தியம்?…” என்று புருவம் உயர்த்த ‘அடப்பாவி’ என்று வாயை தன் கையால் மூடிக்கொண்டு பார்த்தாள் அவனை.
அவள் அதிர்ச்சியில் மூடிய கையை எடுத்து அதில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் புன்னகைத்து,
“பின்ன வேற என்ன பண்ண? இந்த தேர் நகராதே?…” என்று அவளை காட்டியவன்,
“வேற வழியும் இல்லை. அதான் சும்மா ஒரு குண்டு போட்டேன். கரெக்ட்டா வெடிச்சது…” என்று சொல்ல,
“அப்ப வீடு இல்லையா?…” என ரிது கேட்க,
“கட்டிடுவோமே? உனக்கு ஓகேன்னா சொல்லேன்…” என்று அவன் கண் சிமிட்ட,
“கிளம்புவோம். பெரிம்மா வெய்ட் பண்ணுவாங்க…” என்றதும் தான் அவளுடன் விசாலாட்சி வீட்டிற்கு சென்றான்.
முருகேஸ்வரி, வித்யா தவிர்த்து மற்ற அனைவரும் இளவரசு குடும்பத்தையும் சேர்த்து அங்கே தான் இருந்தனர்.
ஆத்மாவும், ரிதுவும் வரவும் அப்படி ஒரு வரவேற்பு. நேரம் சென்றதே தெரியவில்லை.
சாப்பிட்டு முடித்த பின்னும் அன்றைய இரவு உறக்கம் மறந்து வெகுநேரம் பேச்சுக்கள் தான்.
அத்தனை குதூகலமாக நேரம் கழிய நள்ளிரவை எட்டும் பொழுது தான் ஒவ்வொருவராக உறங்க கிளம்பினார்கள்.
ஆத்மாவும், ரிதுவும் சொல்லிக்கொண்டு வெளியே வர தாமரைக்குளத்தில் ஒளிர்ந்த விளக்கும், கேட்டின் சுற்று சுவற்றில் இருந்த விளக்கும் மட்டுமே இருந்தது.
“இன்னும் பந்தல் போடலையே?…” என்றான் ஆத்மா அதனை கண்டு.
“நாளைக்கு தான் வருவாங்க. இன்னும் மூணுநாள் இருக்கே கல்யாணத்துக்கு….” என ரிதுவும் சொல்லிக்கொண்டு வர இருவரும் தோள் உரச நடந்தாலும் வெளியே என்பதால் ஒரு இடைவெளி.
அவளை பார்ப்பதும், இருவரின் இடைவெளியை பார்ப்பதுமாக ஆத்மா இருக்க இப்போது என்ன என்று தெரியவில்லை.
“என்னாச்சு?..” என ரிது கேட்க,
“ஒரு விஷயம் யோசிச்சேன்….”
“அதான் என்ன?…”
“சொன்னா மட்டும்?…” என்றவன் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து அறைக்கு செல்ல என்ன இது சட்டென்று ஒரு முறைப்பு என புரியாமல் பின்னால் சென்றாள்.
“எதுக்கு திடீர்ன்னு முறைச்சிட்டு வந்தீங்க?…” என அறைக்குள் நுழையவும் ரிதுபர்ணா கேட்க,
“ஒண்ணுமில்லை சும்மா…” என்று சொல்லியவன் சென்று படுத்துக்கொண்டான்.
அவனின் இந்த திடீர் செயலில் ஒன்றும் புரியாமல் அவள் விழிக்க கோபமோ என பார்த்துக்கொண்டே இருந்தவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
“என்னன்னு சொல்லுங்களேன். பெரியம்மா வீட்டுல நான் எதாச்சும் பேசிட்டேனா?…” என்றவள் அவனின் எதிரே அமர்ந்தாலும் நெருங்கி வந்து கேட்கவில்லை.
“எப்பவும் நான் தான் உன்னை தேடி வரனும். என்ன ரிது?…” என்றான் ஆத்மா.
“புரியலை. என்ன, என்ன தேடி வரனும்? என்னாச்சு?…” என பதட்டமானவள் முகமே சுண்டிவிட்டது.
“நான் என்ன பண்ணேன்?…” என கட்டிலை விட்டு எழுந்துகொண்டாள்.
“என்ன பண்ணலை? நான் தான் உன்னை தேடனும். நினைக்கனும். பக்கத்துல நெருங்கனும். ஆனா நீ மட்டும் ஒட்டாம நிப்ப. அப்படித்தானே?…” தன்னிடுப்பில் கை வைத்து அவளின் முன்னின்று கேட்டான்.
என்னவோ ஏதோ என பதறி இருந்தவள் ‘ஊஃப்’ என்ற ஆசுவாசத்துடன் பார்த்தாள் அவனை. எதிர் நின்ற ஆத்மாவின் கோபத்தில் ரிதுவிற்கு புன்னகை உதிக்க,
“யார் சொன்னா தேடலைன்னு? நெருங்கலைன்னு?…” என அவன் கையோடு தனது கையை கோர்த்துக்கொண்டாள்.
“என்ன இது?…” என்று அப்போதும் முறுக்கிக்கொண்டு அவன் கேட்க,
“நீங்க தானே ஒட்டவே இல்லைன்னு சொன்னீங்க? இது போதுமா?…” என்றாள்.
“ம்ஹூம், போதாது..” என தன் முன் கொண்டுவந்து கைவளைவில் அணைகட்டி நின்றவன்,
“ஒட்டிக்கனும்னா இப்படி…” என்று செயலில் அதனை காண்பித்தவன்,
“எங்க நான் தள்ளி நிக்கறேன். வா, வந்து ஒட்டிக்கோ…” என்று லேசாய் விலக முற்பட அவன் சட்டையை பிடித்து நிறுத்தி ஆத்மாவின் மார்பில் முகம் சாய்த்தாள்.
“எனக்கு இதுதான் வரும். இது போதும்…” வெட்கத்தில் அவள் முகம் நனைந்தது.