அதனை கொண்டு வித்யா விலகியே இருந்துகொள்வாள். இப்போதும் முருகேஸ்வரி அழைத்து பார்த்துவிட்டு தான் சென்றிருந்தார். விசாலாட்சி கூட,
“என்னடி நினைச்சிட்டு இருக்க? அதென்ன அவன் வீடா? பெரிம்மா வீடுன்னு சட்டமா வந்து நின்னு பார்த்துப்பியா? அங்க சுந்தரியக்கா உன்னை தேடறா. நீ என்னடான்னா வரமாட்டேன்னு நிக்கற?…” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அங்கே பேப்பர் படித்துக்கொண்டிருந்த பரத் வித்யாவை பார்த்ததும் அதனை போட்டுவிட்டு எழுத்து உள்ளே சென்றுவிட்டான்.
“இவன் ஒருத்தன், இப்ப இவன் கல்யாண மாப்பிள்ளையா போய்ட்டான். இல்லைனா மண்டையில நாலு கொட்டு…” என்று சொல்லி வித்யாவை உள்ளே அழைக்க அவள் கையை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“என்னடி இது? நாய் வாலை நிமித்த முடியாது. நீ உள்ள வா…” என்று சொல்லவும் லேசாய் கண்கள் கசிந்தது.
“வித்யா…” என சுந்தரியும் வந்துவிட அவளையும் பார்த்து சிரித்தவள் தலையசைத்துவிட்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
இப்போது ரிதுவும் அழைக்க மறுத்துவிட்டு வயரால் பின்னப்பட்டிருந்த சோபா போன்ற மர இருக்கையில் அமர்ந்து புக்கை எடுத்து வைத்துக்கொண்டாள்.
அவள் நகரமாட்டாள் என்று பார்த்துவிட்டு ரிது பெரியம்மாவின் வீட்டிற்கு வந்துவிட கோவிலுக்கு கிளம்ப தேவையான தாம்பாளங்கள் எல்லாம் தயாராக இருந்தது.
“உனக்கு விடிஞ்சிருச்சா?…” என கிண்டலுடன் தட்டுக்களை எண்ணி பார்த்து ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டனர்.
கோவிலுக்கு செல்ல வெளியே வர வித்யாவும் வந்து இணைந்துகொண்டாள் அவர்களுடன்.
அனைவருமே கோவிலுக்கு சென்றதும் அங்கே இளவரசு அவசரமாய் வந்து சேர்ந்தார்.
“என்ன உங்க பெரியண்ணனை இன்னும் காணும்?…” என ஏழுமலை கேட்க,
“அவர் கொஞ்ச நேரத்துல வந்திருவார் மாப்பிள்ளை. நாம வேலையை ஆரம்பிப்போம்…” என்று பூஜைக்கு நின்றார்கள்.
அன்று அவர்கள் சார்பில் கோவிலில் அன்னதானம் வேறு ஏற்பாடாகி இருக்க பூஜை முடிந்ததும் அதன் வேலையை கவனிக்க சென்றனர்.
நாளை மறுநாள் திருமணம் என்றிருக்க பரத்திற்காக வேண்டியிருந்த வேண்டுதலை நிறைவேற்ற வந்துவிட விசாலாட்சி முகத்தில் அத்தனை சந்தோஷம்.
அங்கேயே சமையல் வேலைகள் நடந்துகொண்டிருக்க மாற்றி மாற்றி வீட்டு ஆட்கள் மேற்பார்வைக்கு இருக்க ரிதுவுடன் இருந்த முருகேஸ்வரி,
சமையலுக்கு தேங்காய்கள் உடைக்கப்பட்டு துருவ ஆரம்பிக்க ரிதுவை அழைத்த முருகேஸ்வரி,
“இந்தா தண்ணியை குடி. உனக்கு புடிக்கும்ல…” என்று குடுக்க குடித்தவள் வித்யாவுக்கும் எடுத்துக்கொண்டு அவளை தேடி சென்றாள்.
“தேடி போய் குடுக்கனுமாக்கும்?…” என்று முருகேஸ்வரி சொல்ல கண்டுகொள்ளாமல் சிரித்துவிட்டு சென்றாள்.
செல்லும் வழியில் முரளியுடன் ஆத்மா பேசிக்கொண்டிருக்க பரத்தும், சுந்தரியின் கணவரும் சேர்ந்து நின்றனர்.
முக்கியமான விஷயமோ என்பதை போல நினைத்தவள் அவர்களை விடுத்து சாமி அலங்காரம் செய்யப்பட மண்டபத்திற்கு செல்ல அங்கே தான் இருந்தாள் வித்யா.
பூஜை முடிந்து மீதமிருந்த பூக்களை வைத்து கோலம் போல தெய்வத்தை பூக்களால் வரைந்துகொண்டிருந்தாள்.
“வித்யா…” என்ற ரிது அதனை பார்த்துவிட்டு தேங்காய் தண்ணீரை நீட்டியவள்,
“ஹேய் எவ்வளோ அழகா இருக்கு பூ கோலம்…” என அதிசயித்து சொல்லியவள்,
“உன் மொபைல் குடு. போட்டோ எடுக்கலாம்…” என்றாள்.
“இன்னும் முடியலைக்கா. முடிஞ்சதும் போட்டோ எடுக்கலாம்…” என்று சைகையில் சொல்ல,
“இதை நீ பூஜை ஆரம்பிக்கும் முன்னமே போட்டிருக்கலாம். பாரு எவ்வளோ அழகா இருக்குன்னு…” என்று சில்லாகிக்க,
“பரத் அண்ணனுக்கு, செண்பகம் அத்தைக்கு புடிக்காது…” என்று கையசைத்தாள்.
“ப்ச், அவங்களை விடு…” என்றதும்,
“வா, நீயும் போடு…” என்று ரிதுவை வித்யா கை பிடித்து அழைக்க,
“இதை குடுத்துட்டு நானும் அங்க சொல்லிட்டு வரேன். இல்லைன்னா தேடுவாங்க. அதுவரைக்கும் நீ போட்டிட்டிரு…” என்று சொல்லிவிட்டு ரிது செல்ல,
செல்லும் பொழுது ஆத்மா அவளை அழைத்து தங்களுக்கும் தேங்காய் தண்ணீரை கொண்டுவரும்படி சொல்ல தலையசைத்துவிட்டு போனவள் எடுத்து வந்தாள்.
அங்கிருந்த பூ பத்துமோ, இல்லையோ என நினைத்தவள் பூ வாங்கிவர வெளியே வந்தாள் ரிது.
அதே நேரம் அண்ணாமலையும் வந்துவிட்டார் கோவிலுக்குள். இளவரசுவிடம் எங்கே இருக்கிறாய் என கேட்டவர்,
“சரி நான் போய் சாமியை கும்பிட்டுட்டு வரேன்…” என்று போனை சட்டை பாக்கெட்டில் போட்டுவிட்டு விறுவிறுவென மண்டபம் நோக்கி நடந்தார்.
அங்கே யாரோ கோலம் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்தவர் வித்யா என நினைக்கவில்லை.
அருகே வர வர அந்த கோலத்தின் அழகில் புருவம் உயர்ந்தது. என்னவோ அவருக்காகவே அந்த இறைவன் பூவின் வடிவில் இறங்கி வந்ததை போன்ற தத்ரூபம்.
அருகே வந்தவர் கை தானாய் கோபுரமாய் சேர்ந்துவிட்டது அந்த கோலத்தை பார்த்ததுமே.
அருகே நிழலாட யாரோ என வித்யா இலகுவாய் நிமிர்ந்து பார்த்தவள் அண்ணாமலை என்றதும் அதிர்ந்து எழுந்துவிட்டாள்.
லேசாய் தடுமாறி அவள் நகரும் முன் அண்ணாமலையும் அதிர்ந்த முகம் சட்டென சுருங்கவும் சாமியை கூட கும்பிடாமல் அங்கிருந்து செல்ல வித்யாவின் முகமே வாடிவிட்டது.
தான் போய்விட்டால் கும்பிடுவார் தானே என அண்ணாமலையை முந்திக்கொண்டு அந்த மண்டபத்திலிருந்து செல்ல தனக்கு முன்னே வித்யா செல்வதை பார்த்தார் அண்ணாமலை.
மீண்டும் அவர் பார்வை பின்னால் திரும்ப அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தை சமீபித்து, தன்னைப்போல கோலத்தையும் பார்த்தவர் நின்றுகொண்டார்.
கும்பிட செல்வோமா என யோசித்தவர் அங்கே யாருமில்லாது போக என்னவோ மனதுக்கு உவப்பாயில்லை.
“ப்ச், ச்சை, ஒரு நிம்மதியில்லை…” என்றவர் அங்கிருந்து மீண்டும் வந்தவழியே திரும்ப அவருக்கு முன் வித்யா காலில் என்னவோ மாட்டிக்கொண்டதை போல எடுத்துக்கொண்டிருந்தாள்.
அதனை பார்க்காததை போல தன் பார்வையை வேறுபக்கம் சுழற்றியவர் விழிகள் மேல்நோக்க சட்டென இடுங்கியது.
அவர் பார்த்த நொடி அவரே சுதாரித்து செல்லும்முன் வித்யாவும் எழுந்து நிற்க அந்த விபரீதம் நிகழ்ந்துவிட்டிருந்தது.
மேலே தொங்கிக்கொண்டிருந்த கோவில் மணி அறுந்து விழ கண்ணிமைக்கும் நேரத்தில் வித்யாவின் தலையில் விழுந்தது.
“மா…” என்ற அலறலுடன் வித்யா கீழே உடனே சாய சென்று பிடித்திருந்தார் செண்பகம்.
“ஆத்தீ…” என்று அவர் பிடிக்கவும் அண்ணாமலை பதறி ஓடிவந்தார்.
“ஐயோ ரத்தம் போகுதே?…” என்று புடவை தலைப்பால் துடைத்தார் செண்பகம்.
போனை பேசிவிட்டு ரிதுவை காணவில்லை என தேடி வர வித்யா சென்றுகொண்டிருந்ததை பார்த்தவர் மணி அவள் மேல் விழுந்ததை பார்த்ததும் பயந்து போனார்.
“இந்த துண்டை இறுக்கி புடிச்சு தலையை கட்டும்மா…” என தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து நீட்டவும் வாங்கி கட்டிய செண்பகத்தின் கை நடுங்கியது.
“இங்க கொண்டா…” என வித்யாவை நிமிர்த்தி அமர வைத்து தலையில் கட்ட வலியில் சொல்லி கூட அழ முடியாமல் தேம்பிய வித்யாவை பார்க்கையில் மனது கனத்துவிட்டது.
“பாப்பா, ஒன்னுமில்லடாம்மா. இப்ப ஹாஸ்பிட்டல் போய்ருவோம். வலிக்குதா? வலிக்குதாப்பா…” என்றவர் அவள் தலையில் கட்டுபோட்டதும் கையில் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டார்.
“இந்த பசங்களை எங்க காணும்?…” என்று வித்யாவை தூக்கியபடி மண்டபத்தை விட்டு வெளியே வர பிரகாரத்தின் தூணில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தவர்கள் இதனை பார்த்துவிட்டனர்.
கூட்டம் கூடிவிட ஆத்மாவும் மற்றவர்களும் என்னவோ என திரும்பி பார்த்துவிட்டு அருகே வர அண்ணாமலை தோளில் வித்யா.
“கண்ணா காரை எடுடா…” என மகனை பார்த்ததும் சொல்லிக்கொண்டே அவர் வயதிற்கு அத்தனை வேகமாய் ஓடினார்.
அவர் வெளியே வரும்முன் ஆத்மா காரை எடுத்துவிட முரளியும், செண்பகமும் உடனே ஏறிக்கொண்டனர்.
பரத் அதற்குள் உள்ளே சென்று தகவலை சமையல் நடக்குமிடத்தில் சொல்ல முருகேஸ்வரி அலறி அழுததில் அனைவருக்குமே கலங்கி போனது.
“எனக்குன்னு அந்த சாமி குடுத்தது அவ ஒருத்தி தான். எம்புள்ளைக்கு வாய்விட்டு வலிக்குன்னு சொல்ல தெரியாதே?…” என சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.