சுந்தரியின் கணவர் பரத்தையும், ஆனந்தியையும் கோவில் விஷயங்களை பார்த்துக்கொள்ள சொல்லி தானும் இருந்துகொள்கிறேன் சுந்தரியோடு என்றுவிட்டார்.
விஷயம் கேள்விப்பட்டு இளவரசு வந்துவிட ஏழுமலைக்கு தன் மனைவியால் நிச்சயம் இங்கே இருக்கமுடியாது என விசாலாட்சியை ரிதுவை அழைத்துக்கொண்டு செல்லுமாறு சொல்லிவிட்டார்.
“நான் இருக்கேன்லம்மா. நீ போய் வித்யாவுக்கு என்னன்னு பாரு…” என அனுப்பி வைக்க ரிதுவை தேட அவள் வித்யாவுக்காக இன்னும் நிறைய பூக்களை வாங்க சென்றிருந்தாள்.
“போற வழில தான் இருப்பாண்ணே. வா, கூப்புட்டுக்குவோம்…” என்று விசாலாட்சி சொல்லி முருகேஸ்வரியை அழைத்துக்கொண்டு சென்றார்.
காரை எடுத்து அடுத்த தெருவில் திரும்ப அங்கே ரிது பூக்கடையில் பேசிக்கொண்டிருந்தாள்.
காரை நிறுத்திவிட்டு ரிதுவை தேடி இறங்கி சென்ற இளவரசு வேகமாய் அவளருகே சென்று,
“ரிது வந்து கார்ல ஏறு…” என்றார்.
“வித்யாவுக்கு கோலம் போட பூ வாங்க வந்தேன் மாமா. இதுக்கு கூப்பிட காரை எடுத்துட்டு வந்தீங்களாக்கும்?…” என்றவள் அவரின் கலங்கிய கண்களை பார்த்து,
“என்னாச்சு மாமா?…” என்றாள் பதட்டமாய்.
“வா சொல்றேன்…” என அவளின் கை பிடித்து அழைத்து காரில் ஏற வைக்க பின்னால் முருகேஸ்வரியும், விசாலாட்சியும் அழுதுகொண்டிருக்க ரிதுவை பார்த்ததும் இன்னும் பலமாய் அழுதார் முருகேஸ்வரி.
“வித்யாவுக்கு என்ன? வித்யா எங்க?…” என உள்ளம் நடுங்க ரிது கேட்க,
“ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க. கொஞ்சம் அமைதியா இரும்மா. ஒண்ணுமிருக்காது…” என்று சமாதானம் செய்தார் இளவரசு.
அதற்குள் முரளி அவருக்கு அழைத்து சொல்ல மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.
மேலே அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்துகொண்டிருக்க வெளியே ஆத்மாவும், அருகே செண்பகமும் இருந்தார்கள்.
அண்ணாமலை சற்று தள்ளி ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார் இவர்கள் வருவதை பார்த்து.
“என்னாச்சு? என் பொண்ணு எங்க? என் பொண்ணு எங்க?…” என்றவர் செண்பகத்தின் உடையில் இருந்த குருதியில் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறிவிட்டார்.
“ஐயோ எம்புட்டு ரத்தம்? என் பொண்ணு? அவ வலி தாங்கமாட்டாளே? என்ன செய்யுதுன்னு கூட சொல்ல தெரியாதே? அவக்கிட்ட என்னன்னு கேட்டு என்னன்னு சொல்லுவேன்?…” என சொல்லி சொல்லி அழ அனைவருக்குமே கனமான சூழல் அது.
வெகுநேரமாகிவிட்டது. ரிதுவின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தவரை பார்க்கவே அத்தனை பரிதாபமாய் இருந்தது.
குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தந்தான் முரளி. செண்பகம் மறுக்கவில்லை அப்போது.
எப்படியாவது வித்யா குணமாகி வந்தாலே போதும் என்ற வேண்டுதல் தான் அவருக்குமே.
இளவரசுவிடம் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்க மனைவியின் அருகே அமர்ந்திருந்த ஆத்மா அவளுக்கும், முருகேஸ்வரிக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவனின் பரிவும், அண்ணாமலை, செண்பகம் இவர்களின் உதவியுமே இன்னும் அவரை கண்ணீர் விட செய்தது.
“நாங்க தான். எங்க வீட்டு பொண்ணு தான் வித்யா…” என்று ஆத்மா சொல்லவும் அண்ணாமலையுடன் நின்றுகொண்டிருந்த இளவரசுவும் வந்துவிட்டார்.
“வித்யா எப்படி இருக்கா டாக்டர்?…” என ஆத்மா கேட்க,
“ட்ரீட்மென்ட் போய்ட்டிருக்கு. தலையில சிவியர் இஞ்சுரி தான். பிளட் லாஸ் நிறைய. ஓ நெகட்டிவ் பிளட் க்ரூப் எங்ககிட்ட ஸ்டாக் இல்லை. ப்ளட் பேங்க்ல சொல்லிட்டோம். உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா இமீடியட்டா வர சொல்லுங்க…” என்றார் மருத்துவர்.
“சூர் டாக்டர். இப்பவே நாங்க ஏற்பாடு பன்றோம்…” என்று தனது மொபைலை எடுத்தவன் கவனம் அண்ணாமலையிடம் இல்லை.
அனைவருமே ஆத்மா செய்வதை கவனிக்க இளவரசுவும் தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி விசாரிக்க நினைக்க, முரளி சோஷியல் மீடியாவில், தனது நண்பர்கள் குழுவில் என்று செய்தி அனுப்ப அண்ணாமலை வந்தார்.
“என்னோட பிளட் க்ரூப் அதுதான். வாங்க…” என்று சொல்லிவிட்டு இளவரசுவிடம் தனது மொபைலை தந்துவிட்டு டாக்டருடன் சென்றவரை அனைவருமே அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
முன்னால் சென்றவர் டாக்டரிடம் என்னவோ கேட்டுவிட்டு மீண்டும் இளவரசுவிடம் வந்தார்.
“போனை தா…” என்று வாங்கியவர் யாரோக்கோ அழைக்க இன்னும் அவரின் செய்கையை நம்பமுடியாமல் தான் பார்த்தனர் மற்றவர்கள்.
“பரத், ஹாஸ்பிட்டல் வா. ப்ச், ஆமா. வித்யாவுக்கு தான் ப்ளட் தேவைப்படுது. உன்னோடதும் அதே க்ரூப் தானே? கிளம்பி வா…” என்றவர் அவன் மறுபக்கம் என்ன சொன்னானோ,
“நாளை மறுநாள் கல்யாணத்தை வச்சுட்டு இப்படி உசுருக்கு போராடற பிள்ளைக்கு ரத்தம் குடுக்காதன்னு உன்னை உன்ன பெத்தவ கூட சொல்லமாட்டா. கிளம்பி உடனே வர நீ…” என்று சொல்லிவிட்டு போனை மீண்டும் இளவரசுவிடம் கொடுத்தவர்,
“இங்க ரத்தம் பத்தாதுன்னு சொல்றாங்க. அவன் வரவும் உள்ள அனுப்பு. அப்படியே பரத் மாமனார், மாமியார்ட்ட பேசு. அவங்க தான் என்னவோ பேசிட்டிருக்காங்கலாம். வந்து வாய்க்கிறானுங்க பாரு…” என்று கத்திவிட்டு சென்றார்.
முருகேஸ்வரிக்கு அவர்களின் அன்பில் நெஞ்சம் விம்மியது. தங்களை உறவுகளாக பார்க்கவில்லை என்றாலும் மனுஷத்தன்மையுடனாவது பார்க்கின்றனரே என நெகிழ்ந்தாலும் மகளை எண்ணி மனது பதறிக்கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் கோவிலில் இருந்து பரத்தும் வந்துவிட அவனும் உள்ளே சென்றான் உடனே.
“மக பிழைச்சு வரவும் அவளை பார்க்கவும், தேத்தவும் நம்ம உடம்புல கொஞ்சமாச்சும் பலம் இருக்கனும். அழுதுட்டே இருந்தா ஆச்சா? குடுக்கறத கால் வயித்துக்காச்சும் முழுங்கு. அப்பத்தான் பொண்ணு நல்லாருக்கான்னு சொல்லும்போது சந்தோஷப்பட தெம்பு வேணும்…” என்றார் செண்பகம்.
கடுமையாக சொன்னாலும் அதன் பின்னால் இருந்த அக்கறையில் முருகேஸ்வரி விம்மலுடன் தலையசைத்தார்.
குடிக்க ஜூஸ் வாங்கி வர கொஞ்சம் குடித்துவிட்டு மகள் எப்படி இருக்கிறாள் என தெரிந்துகொள்ள காத்திருந்தார்.
சற்று நேரத்தில் அண்ணாமலையும், பரத்தும் வெளியே வந்தனர். ஒரு கையை தூக்கி பிடித்தபடி அவர்கள் இருவரும் வரவும் முருகேஸ்வரி யாரும் எதிர்பாராமல் அவரின் காலில் விழுந்தார்.
“சாமி, இது போதும் சாமி. நீங்க ரெண்டுபேரும் தான் இப்போதைக்கு என் கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா இருக்கேங்கய்யா. வாழ்க்க முழுசுக்கும் நன்றியோட கிடப்பேன்…” என்று அண்ணாமலை காலை பிடிக்க பரத் பதறி அண்ணாமலையின் பின்னால் சென்று நின்றுவிட்டான் பதறி.
“ம்மா, தூக்குங்கம்மா…” என பரத் விசாலாட்சியிடம் சொல்ல,
“அத்தை எழுந்திரிங்க…” என்றான் ஆத்மா.
“இல்லைங்கையா. எனக்கு இதவிட வேற என்ன வேணும்? போதும்ய்யா. இப்ப ஒத்தவார்த்தை எங்கியாச்சும் போன்னு சொல்லுங்க போயிடறேன். ரிது வயசு பொண்ணுன்னு தான் அவளை தனிச்சி விடாம கூடவே இருந்தேன். எனக்கும் போக்கிடம் என்னருக்குன்னு?…” என கதறினார்.
தன் மனதில் உள்ளவை எல்லாம் சொல்லி நன்றி சொல்லி அழ யாராலும் எழுப்ப முடியவில்லை அவரை.
அனைவரின் கண்களுமே பனித்துவிட்டது. எச்சிலை கூட்டி விழுங்கிய அண்ணாமலைக்கு அத்தனை மனதில் சஞ்சலம்.
அதுவரை இருந்த வீம்பு எல்லாம் என்னவோ ஆட்டம் கண்டதை போலிருந்தது முருகேஸ்வரியின் கண்ணீரில்.
எவனோ செய்த தவறுக்கு இவரையும் சேர்த்து தானே தண்டித்தோம்? தெரியாமல் தனசேகரின் வலையில் விழுந்தவரை தண்டித்து என்ன செய்ய என தோன்றியது.
“ஏம்மா, எழுந்திரிம்மா. எழுந்திரின்னு சொல்றேம்ல…” என்று அண்ணாமலை அதட்டவும் தான் எழுந்து நின்றார்.
“அதான் இத்தன பேர் இருக்காங்கல்ல. உள்ள உன் மக நல்லா இருக்கா. சும்மா அழறத நிப்பாட்டிட்டு செத்த அமைதியா இரு. கொஞ்ச நேரத்துல புள்ளயை பார்க்கலாம். புரியுதா?…” என்றவர்,
“நான் விசாரிச்சுட்டேன். இனி பயப்பட ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்க…” என்றார் அனைவருக்கும் பொதுவாக.
“கண்ணா, என்னை கொஞ்சம் வீட்டுல இறக்கி விடு. வா…” என்று சொல்லிவிட்டு அவர் முன்னே நடக்க பரத்தையும் பார்த்து அவர் கை கூப்பினார்.
“இருக்கட்டும்ங்க…” என்று சொல்லிவிட்டு என்ன செய்வது என பார்த்தான்.
அதற்குள் மருத்துவர்களும் வந்து பிரச்சனை எதுவுமில்லை என சொல்லிவிட்டு செல்லவும் தான் அனைவருக்குமே உயிர் வந்தது.
“அதான் உங்கண்ணன் சொல்றார்ல. இங்க என்ன சிங்கமும், புலியுமா இருக்கு? நான் இருக்கமாட்டேனா? உங்க மகன் விசேஷம். போய் அங்க நடக்கறதை பாருங்க. நான் இருக்கேன்…” என்று செண்பகம் சொல்லிவிட அவரையும் முருகேஸ்வரி நன்றியுடன் பார்க்க,
“பேசாம உக்காரனும். அழுதுக்கிட்டே இருக்க கூடாது. புரியுதா?…” என அவரை அதட்டிய செண்பகம்,
“எனக்கு மாத்து சேலை மட்டும் குடுத்துவிடுங்க. கிளம்புங்க…” என்று சொல்லிவிட அவர்கள் கிளம்பினார்கள்.
மருத்துவமனையில் ரிதுவும், முருகேஸ்வரியும் இருக்க அவர்களுக்கு துணையாக செண்பகமும், முரளியும்.
மனிதர்கள் மனதின் உணர்வுகள் கூட ரத்தமும், சதையும் கொண்டது தான். கொடுப்பதற்கு, எடுப்பதற்கும் உடல் மட்டுமா கண்ணீரும், ரத்தமும் சிந்துகிறது? உணர்வுகள் கூட தான். அதில் உறவுகளும் கூடத்தான்.