வித்யாவுடன் மருத்துவமனையில் ரிதுவும், முருகேஸ்வரியும் உடன் இருந்தனர். அவர்களுக்கு துணையாக ஆத்மா.
அடிபட்ட அன்று முழுவதும் செண்பகம் அங்கே தான் இருந்தார். மாலையே கோவில் பூஜைகள், அன்னதானம் எல்லாம் முடித்துவிட்டு வந்துவிட்டனர்.
இடையில் ஒருமுறை கண் விழித்த வித்யாவை அனைவருமே சென்று பார்த்துவிட்டு வர அண்ணாமலை போன் செய்து இளவரசுவிடம் கேட்டுக்கொண்டார்.
“இப்பத்தான் கொஞ்சம் முன்ன கண்ணு முழிச்சதுன்னு டாக்டர் போய் பார்க்க சொன்னார் ண்ணே. எல்லாரும் போய் பார்த்துட்டு தான் வந்தோம். முழிச்சு பார்த்துச்சு. திரும்ப மயங்கிருச்சு…” என்றதும்,
“முழுசா குணமாகற வரைக்கும் அப்படித்தான் இருக்குமாம். நான் கேட்டுட்டேன். மருந்து எல்லாம் போய்ட்டிருக்குல. உடம்பு தாங்கனும்…”
“ஆமாண்ணே…” இளவரசு ஆமோதித்தார்.
“திரும்ப ஒரு ஸ்கேன் பண்ணனும்னு சொன்னாங்கடா. எதுவும் பிரச்சனை இருக்கான்னு தெளிவா கேட்டுக்க. ஏனா அடி விழுந்திருக்கறது தலையில. இன்னும் ரெண்டுமூணு வருஷத்துல கட்டிக்குடுக்கவேண்டிய பொண்ணு…” என்ற அண்ணாமலை,
“செலவெல்லாம் நீயே பாரு…” என்று சொல்ல இளவரசுவிற்கு அத்தனை சந்தோஷம்.
“கண்ணனே முன் பணம் கட்டிட்டான் போல. நம்மளை எங்க பார்க்க விடபோறான்?…” என்றார் அவர் தன் அண்ணனிடம்.
“அவன் செய்வான் தான். பொண்டாட்டிக்காக செய்யாம இருக்கமாட்டான். இருந்தாலும் அவளுக்கு கொஞ்சம் ரோஷம் இருக்கும்ல. புருஷன் கடையிலையே வேலைக்கு வரவ. அவனை கட்ட விடமாட்டா. பார்த்துக்கிட்டே இரு. அதையும் திருப்பி தருவா…”
தன் மருமகளை பற்றி அத்தனை தூரம் சரியாக கணித்து வைத்திருந்தார் அண்ணாமலை.
அதில் அவரை குறித்தான இளவரசுவின் ஆச்சர்யங்கள் இன்னும் அதிகமாகிக்கொண்டே தான் சென்றது.
“என்னத்த சொல்ல போற? பொம்பளை புள்ளைங்க அப்படித்தான் இருக்கனும். என்னதான் புருஷன் சம்பாத்தியக்காரனா இருந்தாலும் பொண்டாட்டிக்கும் கை கொஞ்சமாட்டும் ஓங்கி இருக்கனும். அவ அப்படியே இருக்கட்டும்…” என்றார் அண்ணாமலை.
“என்னண்ணே பண்ணனும்ன்றீங்க?…” இளவரசு தலை கிறுகிறுத்து போனார்.
அண்ணாமலை என்ன செய்ய சொல்கிறார் என்று அவருக்கு புரிந்தும் புரியாத நிலை.
செய் என்கிறாரா? செய்யாவேண்டாம் என்கிறாரா? என ஒரு தெளிவில்லாமல் இளவரசு குழம்பி போய் கேட்டார்.
“ஒன்னும் பண்ண வேண்டாம். கண்ணன்கிட்ட ஒத்தவார்த்தை கேட்டுக்கோ. எவ்வளவு என்னன்னு தெரிஞ்சுக்கோ. அவங்க கட்டாம இருந்தா நீ கட்டறேன்னு சொல்லாத. சொன்னா விடமாட்டான். நீயே போய் பணத்தை கட்டிட்டு வா…” என்றார்.
“அப்ப மட்டும் ரிது திருப்பி தரமாட்டாளா?…” இளவரசு கேட்டேவிட்டார்.
“தரட்டும். எங்கிட்ட குடுக்கட்டும் அவ. நான் பார்த்துக்கறேன்…” என்ற அண்ணாமலை,
“என்னவோ மனசு கசங்குதுடா இளவரசு. இன்னிக்கு அந்த வாயில்லா புள்ளைய கையில தூக்கமுன்ன என்னைய ஒத்த பார்வை பார்த்துச்சுடா அது. நான் போய் நிக்கவும் என்னைய பார்த்ததுமே திட்டத்தான் வரேனோன்னு அரைமயக்கத்துல கூட என்னைவிட்டு பின்னாடி நவுருது…”
தங்கையின் இறப்பும், கண் முன்னே தங்கை மகளின் நடமாட்டமும் கூட மாற்றாத இரும்பு மனதை இப்படி ஒரு நிகழ்வு பிரட்டியுள்ளதே? என்னவோ என பயந்து தான் போனார் இளவரசு.
“என்னடா நானெல்லாம் மனுஷங்களை மதிச்சிருக்கேன்? அந்த போக்கத்தவன் செஞ்ச வேலைக்கு வந்த புள்ளையும், இந்த புள்ளையும் என்ன பாவம் பண்ணுச்சுன்னு தோணவே இல்லை. இந்த கிழவன் புத்திக்கு அது உரைக்கலை பாரேன்?…”
“அண்ணே என்னண்ணே நீங்க?…” அவரை சமாதானம் செய்யவே முடியவில்லை.
“என்னன்னா? அதான் சொல்றேம்ல? அந்த புள்ள என் கால்ல விழுந்துச்சு பாரு. மனுஷனுக்கு மனுஷன் செய்யக்கூடியத தான நான் செஞ்சேன். சாமியாம் நானு? என்னடா சாமி? அப்படியே இம்புட்டு நாள் பண்ணுனேன்? கண்ணுல காண்கவிடாம கரிச்சுக்கொட்ட தான செஞ்சேன்?…”
இளவரசு மருத்துவமனை வராண்டாவில் பேயறைந்ததை போல நின்றிருக்க அவரை கண்டு ஆத்மாவும் அருகே வந்தான்.
வந்தவனை பார்த்தவர் எதுவும் பேசாதே என்பதை போல சைகை செய்து அண்ணாமலை பேசுவதை அவனும் கேட்க செய்ய ஆத்மாவின் முகத்தில் சிறு புன்னகை.
“சரி சரி. இருந்து கவனிச்சுக்க. அப்பறம் கண்ணனை அங்க இருந்து பார்த்துக்க சொல்லு. கூட நீயும் இரு. இங்க கல்யாண வேலை எல்லாம் இருக்கு. அதை நான் கவனிச்சுக்கறேன். புரியுதா?…”
“ம்க்கும், என்ன புரிஞ்சுச்சோ? விளங்குச்சோ போ. புரிஞ்சவனுக்குத்தான் ஒருத்தி கால புடிக்க வரப்ப அதை தடுக்கனும்னு தெரியாதாக்கும்?…” என மீண்டும் முதலில் இருந்து தொடங்க இளவரசு முகம் பரிதாபமானது.
“என்கிட்டே குடுங்க…” என ஆத்மா போனை வாங்கி தன் காதில் வைத்துக்கொண்டான்.
“ஹ்ம்ம்…” என்றுமட்டும் சொல்ல அண்ணாமலைக்கு அந்த குரல் மாறுபாடு கூட அந்த தெரியவில்லை.
“உடனே என்ன சத்தத்த காணும்? இத்தனை வருஷம் அந்த குடும்பத்த பார்த்துக்கிட்டேன்னு சொல்லுற, அப்ப இத பாக்கனுமா இல்லையா? என்னதான் மனுஷன் மனுஷன் கால்ல விழுந்தாலும் யாரும் சாமியாக முடியாது. சொல்லி வை இன்னொருக்க இந்தமாதிரி செய்ய கூடாதுன்னு…”
“ம்ம்ம்…”
“அப்பறம், அவ கூட இருக்கட்டும் இவன். விசாலத்துக்கிட்ட சொல்லிரு. அவ பார்த்துக்கிடுவா எல்லாத்தையும். கண்ணன் கூட இருக்கான், பிரச்சனையில்லை. ஆனா அவனே கிளம்பு, வா போவோம்ன்னுட போறான். அப்பறம் மறுக்கா ரெண்டும் முட்டிக்கிட்டு நிக்கும்ங்க…” என்றதும் ஆத்மாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்னடா கேட்டுச்சா? அப்பறம் சண்டைன்னு சமாதானமா போய் குடும்பமே பார்க்க வாசல் முன்னாடி காரை சுத்தறேன்னு பொண்டாட்டிக்கிட்ட சர்க்கஸ் காமிக்க வேண்டியது தான் இந்த பையன்….” என்று சொல்லவும் வயிற்றை பிடித்தபடி சிரிப்பை அடக்கிக்கொண்டு லேசாய் முறைப்புடன் இளவரசுவிடம் போனை தந்துவிட்டான் ஆத்மா.
“என்னடா?…” என இளவரசு போனை வாங்கியபடி கண்ணனை பார்த்துக்கொண்டே காதில் வைக்க,
“என்ன என்னடா? யார பார்த்து என்னடா?…” அண்ணாமலை அங்கே மீசையை முறுக்க பதறி போனார் இளவரசு.
“அண்ணே இங்க வார்ட்பாய் வந்தான். அதான் என்னடான்னேன்…” என்று சமாளிக்க அதற்கும் ஆத்மா சிரிக்க,
“ம்ம், சரி சரி இங்க என்னத்த பேச்சு? போய் அங்க பாரு. அப்பப்ப எனக்கும் சொல்லு…” என்ற அண்ணாமலை,
“வலிக்காம இருக்க ஊசி, மாத்திரை குடுப்பாங்கல்ல. காயம் ஆறி வீட்டுக்கு வார வரைக்கு அத குடுக்க சொல்லு. சின்ன புள்ளை வேற…” என்று வேறு சொல்ல இளவரசுவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“ஆமாடா, கேட்கனும்னு நினைச்சேன். அந்த புள்ளைக்கு பேச்சு வர எதாச்சும் வாய்ப்பிருக்காமா?…” என்று கேட்டார் அண்ணாமலை.
“அண்ணே, இல்ல, தெரியலையே?…” என்ற இளவரசுவிற்கு உண்மையில் தெரிந்திருக்கவில்லை.
பிறந்ததிலிருந்தே வித்யா பேசுவதில்லை என்று தெரியும். அந்த நேரம் பெரிதாய் முருகேஸ்வரியிடமும் பேச்சுவார்த்தைகள் இருந்ததில்லை.
வித்யா வளர்ந்த பின்னர் தான் முருகேஸ்வரியிடம் கூட ஓரிரு பேச்சுக்கள். அதுவும் ரிதுவை கொண்டு. அதன் பிறகு இதனை கேட்பதற்கு என்று என்றுமே தோன்றியதில்லை.