“ஏன்டா சொல்லமாட்ட? இந்த மனுஷனுக்கு என்னவோ ஆச்சு போல?…” என்று அண்ணாமலை பேசியதை பண விஷயம் தவிர்த்து மற்றவற்றை முழுக்க சொல்ல தலையசைத்தான் ஆத்மா.
“இதுக்கு தான் பதில் சொல்லமுடியாம தடுமாறுனீங்களா சித்தப்பா?…”
“பின்ன? உங்கப்பா ஒரே நாள்ல இப்படி தலைகுப்பற மாறுவாருன்னு நான் என்ன கனவா கண்டேன்?…” இளவரசு நொந்துகொண்டார்.
“ஆனா பாரேன் இப்படியெல்லாம் இவருக்கு எப்படி தோணுச்சு?…” என்றும் யோசிக்க,
“அப்பப்ப தான் அவருக்கு ஞானம் கிடைக்கும் போல. அந்நேரம் யாரையாச்சும் புடிச்சு காய்ச்சிடனும். இருக்கட்டும், நான் சர்க்கஸா பன்றேன்? அன்னைக்கு வேடிக்கை பார்த்துட்டு இன்னைக்கு நக்கலை பாருங்க….”
“அப்பாவுக்கு தப்பலைடா நீ. சரி அதை விடு. இப்ப இதை பத்தி டாக்டர்கிட்ட பேசலாமா?…” என்றார்.
“ப்ச், அதான் சொல்றேன்ல சித்தப்பா. இங்கைக்கும், கோவிலுக்குமா நடந்துட்டு இருந்தீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு வாங்க. நான் வேண்டாம்ன்னா சொல்றேன்?…” என்றதும் சரி என தலையசைத்தார்.
பரத்தை வரவேண்டாம் மீண்டும் மருத்துவமனைக்கு என்று சொல்லியிருந்தனர். ஏற்கனவே பரத்தின் மாமனார், மாமியாருக்கு பரத் ரத்ததானம் செய்தது விருப்பமில்லை என்பது பேச்சிலேயே தெரிந்து போனது.
“மாப்பிள்ளை, இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இதென்ன இப்படி செஞ்சிட்டீங்க? என்னவோ மனசுக்கு சங்கடமா இருக்கு…” என மேபோக்காய் பேசியிருந்தனர்.
அவர்கள் அண்ணாமலைக்கு பயந்து கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தாலும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு தான் சென்றனர்.
“நாளைக்கு அவ மகளுக்கு இதேதுன்னா கல்யாணமாக போகுதுன்னு ரத்தம் வேண்டாம்ன்னு சொல்லிருவாங்களா? பேசறானுங்க மூளைய கடன் குடுத்தவனுங்களாட்டம்…” என அண்ணாமலை பெண்ணின் தாய்மாமாவிடம் சுள்ளென்று பேசிவிட பதில் சொல்லமுடியவில்லை அவரால்.
விஷயம் பெண்ணின் தாய் தகப்பனிடமிருந்து பஞ்சாயத்து போல தாய்மாமாவிடம் வர அப்போது தான் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து குளித்துவிட்டு அமர்ந்திருந்த அண்ணாமலைக்கு அழைத்து விவரம் கேட்டார் அவர்.
கேட்ட கேள்விக்கு பதிலாக அண்ணாமலை திருப்பி கொடுக்க அவர் திகைத்து போனார்.
“சரிதானுங்க, நான் என்ன விஷயம்ன்னு கேட்போம்ன்னு தான் உங்களுக்கு கூப்பிட்டேன். வேற ஒண்ணுமில்லை. இப்ப அந்த புள்ளை நல்லாயிருக்குங்களா?…” என விசாரித்துவிட்டு வைத்துவிட்டார்.
இளவரசு தான் அதற்கும் சமாதானமாய் பேசி பெண்ணின் வீட்டினரை அனுப்பிவிட்டு கோவில் விஷயத்தை ஏழுமலையுடன் இருந்து முடித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
மாலை சுந்தரியும் தன் கணவருடன் வந்து பார்த்துவிட்டு கிளம்பிவிட்டாள் வீட்டிற்கு.
ஆனந்தி மட்டும் இன்னும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. யாராவது அழைத்தால் போகலாம் என்னும் மனநிலையில் இருந்ததை போலவும் இருந்தது.
ஆனால் யாரும் கேட்கவில்லை. அழைத்தால் வருவாரோ என்னவோ என்று யாரும் கூப்பிடவும் இல்லை.
மனோ மட்டும் முரளியுடன் வந்து இப்போதுவரை அவர்களுடன் இருந்து பேசிக்கொண்டிருக்க அனைவரையும் கிளம்ப சொல்லிவிட்டார் இளவரசு.
என்னதான் ஒரே சுற்று சுவற்றுக்குள் அனைவரின் குடும்பமும் குடியிருந்தாலும் அதிகமாய் அந்தந்த விழா நேரங்களில் கலந்துகொள்வது தான்.
மற்றபடி அனைவருடனும் இரவு வேளைகளில் ஒன்றாக இப்படி சேர்ந்து இருப்பதெல்லாம் நடந்ததில்லை. இப்படி இவ்வளவு நேரம் இருந்ததும் இல்லை.
இதுவே வித்யாவிற்கு இந்த விபத்தில்லை என்றால் கோவிலில் அன்னதானம் முடிந்ததும் அவரவர் வேலை என்று தனித்தனியாய் சென்று அடுத்த நிகழ்வில் சேர்ந்துகொள்வது என்பது தான் நடந்திருக்கும்.
விசாலாட்சி மட்டும் அதில் சற்று விதிவிலக்கு. ரிதுவை இழுத்து பிடித்துக்கொள்வார் முருகேஸ்வரி, வித்யாவுடன் சேர்த்து.
நிறைய முறை விசேஷங்கள் என்று பல இரவுகள் அவர்களுக்கு கலகலப்பாகவே சென்றிருக்கிறது.
மனோ கேட்டதும் அவருக்கும் மனதில் அந்த எண்ணம் எழுந்தது தான். ஆனால் ஆனந்தி அதற்கு விட்டதில்லையே?
“ம்க்கும், நீ இருக்கேன்னா உடனே உங்கம்மா சரியம்மானு உனக்கு சம்மதம் சொல்லிருவாங்க பாரு….” செண்பகம் கிண்டலாய் சொல்ல மனோவின் முகம் வாடிவிட்டது.
“ப்ச், என்ன இது? சின்ன பிள்ளைட்ட என்ன பேசற?…” என இளவரசு மனைவியை அதட்டியவர்,
“மனோ இப்ப இங்க ஹாஸ்பிட்டல்ல அப்படி இருக்க முடியாது. என்னவோ நம்மளை ஆறு மணிக்கு மேல உள்ள இருக்கவிட்டதே பெருசு. இல்லன்னா அட்டண்டர் தவிர வேற யாரையும் அலோவ் பண்ண மாட்டாங்களே?…” என்றவர்,
“கண்ணனும், ரிதுவும் முருகேஸ்வரி கூட இருக்கட்டும். நாம நாளைக்கு வருவோம். நீ தான் காலேஜ் லீவ் போட்டுட்டியே. நாளைக்கு இங்க வா. ரிதுவ மாத்திவிட வேணும்ல?…” என்றதும் மனோவின் முகம் சமாதானமானது.
அனைவரும் கிளம்பி சென்றதும் முருகேஸ்வரி ஆத்மாவும், ரிதுவும் பேசட்டும் என்று தள்ளி அமர,
“நீங்க இருங்க. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்…” என்று நகர்ந்தான்.
இரவு உறங்கும் முன் மீண்டும் ஒருமுறை வித்யாவை சென்று பார்த்துவிட்டு ஆத்மாவும் ரிதுவும் வந்தனர்.
அங்கே ஒரு அறை வாங்கி முருகேஸ்வரிக்கு உறக்கத்திற்கு மாத்திரையும் கொடுத்து அவர் உறங்கவும் ரிதுவின் அருகே வந்தமர்ந்தான்.
இன்னும் ரிதுவிற்கு தங்கையின் இந்த நிலை மீதான அதிர்ச்சி துளியும் நீங்கவில்லை.
ஆத்மா அவளின் விரலை பிடிக்க இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது ரிதுபர்ணாவின் விரல்கள்.
வெளிப்படையாக பார்க்க முகத்தில் அத்தனை தைரியமும், நம்பிக்கையும் இருக்க விரலை பற்றவும் அந்த நடுக்கத்தில் அதுவரை முயன்று பிடித்திருந்த தன் வலுவெல்லாம் சரிவதை போலிருந்தது.
“இவ்வளோ நேரம் தைரியமா இருந்தன்னு பார்த்தா அழுகையை கண்ட்ரோல் பண்ணிட்டிருந்தியா நீ?…” என்று லேசாய் தலையில் குட்டு வைத்தவன்,
“அதான் எதுவும் பிரச்சனை இல்லையே? சரியாகிடும்…” என்று சொல்ல மெல்ல விசும்பல் குறைய துவங்கியது அவளுக்கு.
“சரியாகிடும் தான். நம்பிக்கை இருக்கு. ஆனா…”
“என்ன ஆனா? அதான் நம்பிக்கை இருக்குல. அப்படியே நம்பு…”
“தலையில அடி பட்டிருக்கு. வேற எதுவும் ப்ராப்ளம் இல்லையே? என்னவோ ரெண்டு நிமிஷம் கூட அவளால முழிச்சிருக்க முடியலை. அவ முழிச்சப்போ முகமெல்லாம் வலியை காமிச்சா. அதான் என்னால….” என்றவள் இதழ் கடித்து அழுகையை அடக்கினாள்.
“எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும் சரி பண்ணிடுவோம். பார்த்துக்கலாம். நீ தைரியமா இருக்கனும். இல்லைன்னா உன் சித்தியை யார் பார்க்க?…” என்று பேசி பேசி தேற்றினான்.
நல்லவிதமாய் எல்லாம் நடந்து வித்யா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அன்று மருத்துவ செலவின் மீதியை அண்ணாமலை செலுத்தியிருப்பது தெரிய மாமனார் முன் மருமகள் நேருக்கு நேராய் சென்று நின்றாள்.