“கொஞ்சமாச்சும் சாப்பிட்டு போகலாமே? அவ்வளோ தூரம் ஒன்னும் சாப்பிடாம எப்படி போவீங்க?…” என்றார்.
“இல்லை, எனக்கு வேண்டாம். நீங்க சாப்பாடும் சேர்த்து பேக் பண்ணுங்க. இடையில நான் அவங்களுக்கு குடுத்திடறேன்…” என்றாள் அவரிடம்.
“அப்ப சரி…” என்றவர் உள்ளே சென்றுவிட ஆத்மா கீழே இறங்கி வந்தான்.
“டிக்கில வச்சிட்டு வரேன். நீ உட்கார்…” என்று சொல்லி வெளியே செல்ல ஆனந்தி அழைத்துவிட்டார் கிட்சனிற்குள்.
அங்கே போனதும் மலைத்து போனாள் ரிது. மோர் கரைத்து வைத்ததோடு, ஆத்மாவிற்கு உணவு மட்டுமிருக்கும் என்று நினைக்க அங்கே ஜூஸ், நறுக்கிய பழங்கள், இன்னும் சில உணவு பதார்த்தங்கள் என்று இருந்தது.
இதற்கிடையில் இளநீரையும் அடைத்து வைத்திருந்தார் அவர். இத்தனையா? என ரிது பார்ப்பதை கண்டு,
“உங்களால முடிஞ்சதை சாப்பிடுங்க. கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கோங்க. அவ்வளோ தானே?…” என்றார் ஆனந்தி.
வெகு வருடங்களுக்கு பின் இப்படி மகனுக்கு அவர் உணவை கட்டி அனுப்பிவைப்பது என்பதால் நினைத்ததை எல்லாம் எடுத்து கட்டிவிட்டார்.
“பின் சீட்ல வச்சுக்கோ. அப்பப்ப எடுத்துக்கோங்க…” என்று சொல்ல சரி என்று தலையசைத்தவள் முகத்தில் சிறு புன்னகை.
“சரி கிளம்பறோம்…” என்று சொல்லி வெளியே வர ஆத்மாவும் வந்துவிட்டான்.
ஆனந்தி ராணியிடம் இதனை குடுத்தனுப்ப மறுக்க நினைத்தவன் பின் இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.
இருவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு சென்னை கிளம்ப முன்னால் அமரந்திருந்தவளை ஊரின் வெளியே வரவும் பின்னால் செல்ல சொல்லிவிட்டான்.
“நீ படுத்துக்கோ. தூங்கிட்டா பாதி நேரம் போறதே தெரியாது…” என்றதும் ரிதுவாலும் மறுக்கமுடியவில்லை.
“கொஞ்சம் சாப்பிட்டு போகலாமே?…” என அவள் சொல்ல மோரை மட்டும் குடித்துக்கொண்டான் ஆத்மா.
ஒருமணி நேரம் செல்லவில்லை. மீண்டும் காரை நிறுத்த சொல்லியவள் இறங்கி முன்னே வந்துவிட்டாள்.
“என்னடி உன் பிரச்சனை? இதுக்கு தான் வரவேண்டாம்ன்னு சொன்னேன்…” என ஆத்மாவே கடுப்பாகிவிட,
“எனக்கு அங்க பிடிக்கலை. இங்க தான் கம்பர்ட்டபிளா இருக்கு…” என்று சொல்லியவளிடம் அத்தனை அழுத்தம்.
“முரண்டு பன்ற நீ. ஊருக்கு வா. பேசிக்கறேன்…” என்று காரை கிளப்ப போனவன்,
“முன்னாடி நகரு…” என்று சீட்டை முழுதாய் நன்கு சரித்தான்.
“இப்ப படுத்துக்கோ…” என அவளை படுக்க சொல்ல,
“படுத்துட்டா உங்க முகம் எனக்கு தெரியலையே?…” என்றாள் அவள்.
காரை கிளப்பியவன் அதில் ஜெர்க்காகி மீண்டும் நிறுத்திவிட்டு அவளை பார்க்க ரிதுவின் முகத்தில் புதிதாய் என்னவோ இழுத்தது அவனை.
“என் முகத்தை தானே? என் சீட்டையும் சாய்ச்சுக்கறேன். பார்த்துட்டே இங்கயே இருப்போமா?…” என்று முகமெல்லாம் புன்னகையுடன் அவன் கேட்க,
“ஹ்ம்ம், சும்மா. தெரிஞ்சு மட்டும்…” என்று பெருமூச்சுடன் காரை சாலையில் செலுத்தினான்.
அவன் விரித்துவிட்ட இருக்கையில் சரிந்திருந்தாலும் பக்கவாட்டாய் தெரிந்த அவன் முகத்தையும், காரை செலுத்தும் கைகளையும் என்று ஒவ்வொன்றாய் கவனித்தபடி வந்தாள் ரிது.
தன் திருமணம் அன்று ராஜாமணியின் அடாவடியில் ஆத்மா வந்ததை அவன் பேசவும் தான் கவனிக்கவே செய்தாள்.
அன்று நடந்தது இப்போதை போல இருந்தது. இவனுக்கு எந்தவகையில் தன்னை திருமணம் செய்துகொள்ள தோன்றியது என்று கேள்வி இப்போதும் எழ மனதெல்லாம் அன்றைய நாளின் நினைவில் சென்று நின்றது.
தந்தையின் இரண்டாம் திருமணம். அது திருமணம் என்றவரையில் புரிந்தாலும் தனசேகரனின் பேச்சில் தன்னை பார்த்துக்கொள்ள என தனக்காக அந்த திருமணம் என்று நினைத்திருந்தாள் ரிதுபர்ணா.
தாய் தமயந்தி என்றுமே தந்தையை குறைத்து நினைக்கவிட்டதில்லை. அவரின் குறைகளை பார்க்கவும் விட்டதில்லை.
அதனால் தந்தையின் குணாதிசயங்களின் மறுபக்கத்தை அவள் அனுபவித்ததோ, அறிந்துகொண்டதோ இல்லை.
எல்லாம் முழுதாய் புரிந்துகொள்ள முடிந்த நேரம் முருகேஸ்வரியின் மொத்த அன்பிலும் கட்டுண்டு போயிருந்தாள் ரிதுபர்ணா.
அதன்பின் வித்யாவுடனான நேரங்கள் தான் அதிகம். அதிலும் மற்றவர்கள் விலகி நிற்க அரவணைப்பை தேடும் குழந்தைக்கு அதிகமாகவே அதனை தான் கொடுக்க இன்னும் அவர்கள் நெருக்கம் தான் கூடியது.
முருகேஸ்வரிக்கு ரிதுவிடம் அத்தனை நன்றி. பாசத்தை தாண்டிய ஒரு பந்தத்தை அவள் உணர்ந்திருந்தாள்.
எல்லாவற்றிலும் கவனம். முதலில் ரிது தான் அவருக்கு என்பதில் அவர் அத்தனை கவனமாகவும், உண்மையுடனும் இருந்திருக்க எல்லாமாக ரிதுவும் வித்யாவும் இருந்தார்கள் அவருக்கு.
ரிதுவின் படிப்பு முடிந்ததும் வரனை பற்றி முதலில் ஆரம்பித்தது முருகேஸ்வரி. அது ரிதுவிற்கும் தெரியும்.
இளவரசுவின் தலைமையில் மாப்பிள்ளை பார்த்து முதல் வரனே தகைந்து என திருமண ஏற்பாடும் ஜோராக நடக்க அதற்கு அழைத்தும் வரும் மனநிலையில் இல்லை அண்ணாமலை.
இளவரசு, விசாலாட்சி இன்னும் சில உறவுகள் என தாய்மாமாவாக அங்கே வந்து தான் ஆகவேண்டும் என்று சொல்லியிருக்க வழியின்றி வந்திருந்தார்.
ஆனால் சபையில் எதிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிய வந்திருக்க அழைக்காமலே வந்து சேர்ந்திருந்தான் ஆத்மா.
அவன் வந்தது ஆச்சர்யம் என்றால் செய்தது அதிர்வு. சூழ்நிலையை சட்டென கையிலெடுத்தவன் அவன் வாழ்க்கைக்குள் அவளையும் எடுத்துக்கொண்டான்.
பந்தங்கள் என்றும் திடீரென உருவாக்கப்படுவதில்லை. எங்கோ யாராலோ ஏற்படுத்தப்பட்டது அன்று அவர்களுக்கு வெளிச்சப்படுத்தப்பட்டது.