ஆத்மா தனது வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு கரூர் வந்துகொண்டிருந்தான்.
இன்னும் இரு நாட்களில் கம்பெனியின் சுத்திகரிப்பு ஆலையை பார்வையிட வருகின்றனர் அரசாங்கத்தில் இருந்து.
தங்களின் சுத்திகரிப்பு ஆலைக்கு ஏற்கனவே முறைபடி உரிமம் வாங்கப்பட்டு எல்லாம் சரியாக தான் நடந்துகொண்டிருக்கிறது.
இப்படி ஏதாவது பொய் புகார்கள் அனுப்பப்படும் சமயங்களில் வருவது வழக்கமும் கூட.
அதனால் கம்பெனியை முதலில் பார்த்துவிட்டு கிளம்பிவிடுவது என முடிவுடன் வந்திருக்க வீட்டில் ஒருவருமில்லை.
காரை உள்ளே செலுத்த அங்கே அலங்காரத்தை பார்த்ததும் தான் ஞாபகமே வந்தது ஆத்மாவிற்குமே.
“அந்த பொண்ணுக்கு கல்யாணம்ன்னு சொன்னாங்க சித்தப்பா. இன்னைக்கு தானா?…” என தன் தலையில் லேசாய் தட்டிக்கொண்டவன் இளவரசுவிற்கு அழைத்தான்.
“கண்ணா…” என அவர் பேசுகையிலேயே குரலில் நடுக்கம்.
அங்கே என்னவோ கூச்சல்களுக்கு மத்தியில் அவர் பேசுவது புரியவில்லை ஆத்மாவிற்கு.
“சித்தப்பா நான் ஊருக்கு வந்திருக்கேன். கம்பெனிக்கு போகனும்….” என்று சொல்லும் பொழுதே,
“கண்ணா இங்க மண்டபத்துக்கு வாப்பா….”
“சித்தப்பா நான் எதுக்கு?…”
“கண்ணா ஒருநிமிஷம் வாப்பா..” என்று சொல்லி வைத்துவிட்டார் அவர்.
“ப்ச், என்ன இது? என்னன்னு கூட கேட்காம வச்சிட்டாங்க…” என எரிச்சல் பட்டவன் தன்னறைக்கு செல்ல போக ராணி வந்திருந்தார்.
“தம்பி எதாச்சும் குடிக்கறீங்களா?…” என கேட்க,
“இல்லை வேண்டாம்…” என மறுத்தவன்,
“ஆமா வீட்டுல எல்லாரும் அந்த கல்யாணத்துக்கு தான் போயிருக்காங்களா?…” என்று கேட்டுக்கொண்டே தண்ணீரை எடுத்து பருகினான்.
“ஆமா தம்பி, உங்க சித்தப்பா தான் சபைக்கு ஆளா மட்டும் வந்து நில்லுங்கன்னு கூப்பிட்டாங்க. அதான் போய்ட்டு வந்திருவேன்னு சொல்லி கிளம்பி போனாங்க. நீங்க வரதுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் போனாங்க…”
“ஹ்ம்ம், சரி…” என்றான்.
“தம்பி இன்னும் சாப்பிட்டிருக்கமாட்டீங்க. சாப்பிடுங்க…”
“வேணும்னா நானே கேட்டுப்பேன். பசிக்கலை…” என்று சொல்லி மாடிக்கு சென்றவன் ஐந்து நிமிடம் இருக்காது.
‘அழைத்துவிட்டார், சரி போய் பார்த்துவிட்டு அப்படியே கம்பெனிக்கு செல்வோமே?’ என கிளம்பிவிட்டான்.
அதனுடன் அவசரமாய் இளவரசுவும் தன்னுடன் கம்பெனிக்கு ஒரு அரைமணி நேரம் வந்தால் சிறு வேலை ஒன்று முடித்துவிட்டு அப்படியே தானும் சென்னை கிளம்பிவிடலாம் என நினைத்தபடி மண்டபத்திற்கு சென்றான்.
அங்கிருந்து கால்மணி நேரம் கூட இருக்காது அந்த மண்டபம். மிக அருகில் தான் என்பதால் வேகமாய் வந்துவிட யாரோ நின்று சத்தம் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்தான்.
வந்தவன் கை கட்டி வேடிக்கை பார்க்க ஆத்மாவை அங்கே ஒருவரும் கவனிக்கவில்லை.
ஆத்மா அங்கு பிரச்சனை செய்பவனை பார்த்துக்கொண்டிருக்க இளவரசு முருகேஸ்வரியை சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார்.
“அங்க என்ன பேச்சு? என் மாமன் மக, முறைக்கு நான் இருக்கும் போது என்னை கேட்காம எப்படி அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ண முடியும்ன்னு கேட்டுட்டிருக்கேன். நீங்க என்னவோ பேசறீங்க?…” என்றான் ராஜாமணி.
“தேவையா? இவன் போன் பண்ணி பிரச்சனை பன்றான்னு என்கிட்டே முன்னக்கூட்டியே சொல்லியிருந்தா நான் கவனிச்சிருப்பேன்ல? இப்ப வந்து எப்படி நிக்கிறான் பாரு…” என்றார் இளவரசு முருகேஸ்வரியிடம்.
தன் மகனுக்கு தன் அண்ணன் பெண்ணை தரவேண்டும் என சொல்லி பேச முருகேஸ்வரி அதனை தவிர்த்துக்கொண்டே இருந்தார்.
எங்கே தனசேகரனின் உறவில் இருப்பவர்கள் தங்களிடம் பேசுவது தெரிந்தால் வீண் பிரச்சனையாகுமோ என்று அதனை வெளியில் சொல்லவே அஞ்சினார் முருகேஸ்வரி.
அதனை கொண்டு இளவரசுவிடம் ரிதுவிற்கு வேகமாய் நல்ல வரனை பார்த்து திருமணம் செய்து அனுப்பிவிட்டு தாங்களும் இங்கிருந்து சென்றுவிடுவோம் என நினைத்திருந்தார்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கே வந்து சேரும் முன் திருமணமாகிவிட்டால் என்ன செய்ய முடியும் என்று முருகேஸ்வரி நினைத்திருக்க எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு இருந்தது அவர்களின் வருகையும் பேச்சும்.
திருமண நிச்சயத்தை கேள்விப்பட்டு கொந்தளித்த ராஜாமணி குடும்பம் இருந்த இருப்பிடம் சென்று நேராக பேசிய முருகேஸ்வரி ரிதுவின் திருமண ஏற்பாட்டை தடுக்க நினைத்தால் அவளின் தாய்மாமன்களிடம் சொல்லிவிடுவோம் என்று எச்சரித்துவிட்டு வந்திருந்தார்.
அவரளவில் அதற்கு அவர்கள் பயப்படுவார்கள் என்ற எண்ணம். அவர் சொல்லவும் பயந்ததை போல அவர்கள் பார்க்க இனி அடங்கி இருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் முருகேஸ்வரி வந்துவிட்டார்.
“இவங்கட்ட இப்படியெல்லாம் கேட்டா பொண்ணு தரமாட்டாங்கம்மா. கல்யாண ஏற்பாடு நடக்கட்டும். எங்க பேசனுமோ அங்க பேசறேன்…” என்று வில்லத்தனமாய் காத்திருந்தான் ராஜாமணி.
வெளிநாட்டில் நல்ல வருமானம் என்று இருந்தாலும் வளர்ப்பு அவனுக்கு அப்படி இல்லை.
வருமானத்திற்கு அதிகமான செலவுகள், கடன்கள் என்று அங்கே இருக்கமுடியாமல் அத்தனையும் விட்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்தவர்களுக்கு அடுத்த குறி ரிதுவாக தான் இருந்தது.
விசாரித்தவரை மூத்தவர் எந்தவிதத்திலும் ரிதுவிற்கு உதவியாக இருக்கபோவதில்லை என்பதை எல்லாம் கணித்தே வந்திருந்தான் ராஜாமணி.
“இங்க பாருங்க, இந்த வளவள பேச்செல்லாம் வேண்டாம். உரிமைப்பட்டவன் நான். ஏற்கனவே நான் கேட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. சரின்னு இருந்தா இப்ப இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க…” என்று அப்படியே பழியை முருகேஸ்வரி மேல் போட்டுவிட்டான்.
“இல்லைங்கய்யா, சத்தியமா நான் ஒத்துக்கவே இல்லை. நான் இவன் வீட்டுக்கு போய் கூட ரிது விஷயத்துல தலையிடாதீங்கன்னு கெஞ்சிட்டு தான் வந்தேன்…” என முருகேஸ்வரி சொல்ல,
“வீடு வரைக்கும் போக தெரிஞ்சது. என்கிட்டே சொல்ல தோணலையோ?…” என்று இளவரசு கேட்க அங்கே மணமேடையில் அமர்ந்திருந்தவனை இங்கிருந்தே எழுப்பினான் ராஜாமணி.
ராஜாமணியுடன் அவனை போல அடியாட்கள் என ஒருசிலர் இருக்க உடன் தனசேகரனின் சில உறவுகளும்.
“டேய், எந்திரிடா. இன்னும் மேடையில உக்கார்ந்திருக்க? என்ன ஆஸ்பத்திரிக்கு போகனுமா? உன்னை செஞ்சுவிட்டுட்டு வேற ஒருத்தனை சரண்டர் பண்ணிவிட்டுடுவேன். உசுரு போனா வராது தம்பி…” என்று மிரட்டினான் ராஜாமணி.
“ஏன்ப்பா?…” என கண் கலங்க இளவரசு செய்வதறியாமல் பார்த்தார்.
அண்ணாமலை கூட முகத்தை சுளித்தபடி நின்றாரே தவிர எதுவும் பேசவில்லை. அதிலும் முருகேஸ்வரி மீது ஒரு அபிப்ராயமே இல்லை அவருக்கு.
ராஜாமணி வீடு வரை சென்று பேச்சுக்கள் என்றால் இவர் இத்தனை நாட்கள் அவர்களுடன் உறவில் தான் இருந்திருந்தாரா? என்ற யோசனை தான் அண்ணாமலைக்கு.
அதனை கொண்டே அவ்விடத்தில் பேச்சை நிறுத்தியிருந்தார். இருந்தாலும் ராஜாமணியை தாலி கட்டுமளவிற்கு கொண்டுசெல்ல போவதில்லை என்ற எண்ணமும் இருந்தது.
‘ஏற்கனவே ஒருத்தியை குடுத்து சின்னாபின்னமாகிடுச்சு. அதே இடத்துல இன்னொருத்திய குடுக்கவா? இந்த கல்யாணம் நடந்தாலும், நடக்காட்டிலும் ராஜாமணியை அங்கே இருக்கவிட போவதில்லை’ என நினைத்து அண்ணாமலை பேசும் முன்,
“யார் நீ? எதுக்கு பிரச்சனை பன்ற?…” என்று முன்னே வந்தான் ஆத்மா.
அதுவரை நடந்ததை கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு ஓரளவு யார் என்ன என்று புரிந்துவிட்டது.
“கொஞ்சநேரம் முன்னாடி தான் வீட்டுக்கு வந்தாங்க. பேசினாங்கன்னு சொன்ன? இப்ப தெரியாம கல்யாணம் செய்யறாங்கன்னு சொல்ற? இவ்வளோ நாள் என்ன பண்ணிட்டிருந்த?…” ஆத்மா கேள்வி கேட்க,
“இங்க பாருங்க. இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை. இது எங்க குடும்ப விஷயம்…” என்று கைநீட்டி ராஜாமணி சொல்ல,
“டேய் மாப்பிள்ளை. உன்னால முடிஞ்சா தாலி கட்டுடா. என்னைக்கா இருந்தாலும் உன் சாவு…” என்று ராஜாமணி சொல்ல அவனை அடித்து இழுத்து சென்றார்கள் காவலதிகாரிகள்.
ராஜாமணியுடன் வந்திருந்த அனைவரும் அங்கே கலைந்திருக்க ஒரு பெருமூச்சுடன் திரும்பிய ஆத்மா,
“இவனை மாதிரி ஆளை எல்லாம் இப்படித்தான் டீல் பண்ணனும். ஆகவேண்டியதை கவனிங்க சித்தப்பா…” என்றான் ஆத்மா.
“அண்ணா உட்காருங்க…” என முரளி சொல்ல,
“இங்க தான் இருந்தியா? வந்தவனை சட்டைய புடிச்சு நாலு இறுக்கு இறுக்கறதை விட்டுட்டு எங்கடா போன நீ?…” என முரளியிடம் ஆத்மா பேச,
“நான் இப்பத்தான் வரேன். வெளில வேலையா போய்ட்டேன்…” பரத் தானாகவே கூற மீண்டும் அங்கே சலசலப்பு.
மாப்பிள்ளை அந்த இடத்தில் இல்லை. இறங்கி கீழே வந்துவிட கெஞ்சிக்கொண்டு அவனின் பின்னால் வந்தார் இளவரசு.
“என்னாச்சு?…” என்று ஆத்மா கேட்கவும்,
“இங்க பாருங்க தம்பி. இந்தமாதிரி ஒரு பயத்தோட எல்லாம் என் பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ண முடியாது. போனவன் என்னைக்கு வந்தாலும் என் பிள்ளை உசுருக்கு ஆபத்துன்னு சொல்லிருக்கான்…” என மாப்பிள்ளையின் தாய் சொல்ல,
“ஏங்க என்ன பேசறீங்க? அவன் என்ன செஞ்சிட முடியும்? நாங்க எல்லாம் இருக்கோமே? கல்யாண மேடை வரைக்கும் வந்துட்டு இப்படி கிளம்பறீங்க?…” என்று முரளி சத்தம் போட,
“ம்ஹூம், எனக்குமே இது சரியாப்படலை. இப்படி அடிதடி பேர்வழிகூட சொந்தம் வச்சிருக்கறவங்க எல்லாம் எங்களுக்கு செட்டாக மாட்டாங்க…” என சொல்லிய அந்த அம்மா,
“வாப்பா போகலாம்…” என்று சொல்ல மாப்பிள்ளையும் தாயின் பேச்சில் தலையாட்டிக்கொண்டு அதற்கு மேல் வேகமாய் சென்றான்.
இளவரசு விட்டால் காலில் விழுந்தேனும் திருமணத்தை நடத்திவிடுபவர் போல அவர்களை கெஞ்சிக்கொண்டு செல்ல,