அதுவரை அங்கு நடந்த எதிலும் வாய் திறக்காமல் இருந்தவள் எங்கே முருகேஸ்வரியை இன்னும் பேசிவிடுவாரோ என்று அவரை தடுக்க,
“உன் சித்தி மட்டும் முன்னாடியே எல்லாம் சொல்லியிருந்தா?…” என இளவரசு முழுதாய் பேசும் முன் ஆத்மாவும் வந்துவிட்டான் மேடைக்கு.
“சொல்லியிருந்தா? அப்ப மட்டும் எல்லாம் சரியாகியிருக்குமா? பாருங்க ஒரு பிரச்சனைன்னதும் எப்படி ஓடறாங்கன்னு…” என்றான் அவன்.
“இல்லப்பா…” என்ற இளவரசுவை பேசவே விடவில்லை ஆத்மா.
“இதுதான் நீங்க இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கற லட்சணமா? ஒன்னு தைரியசாலியா இருக்கனும். இல்லையா பிரச்சனை வந்தா என்னன்னு பார்க்கற நிதானத்தோடவாச்சும் இருக்கனும். இவன் பயந்தாரியா இல்ல இருக்கான். இவனை நம்பி இவளை கட்டி வைக்கறேன்னு நிக்கறீங்க?…”
அத்தனை கூட்டத்தின் மத்தியில் மண்டபத்தின் மணமேடையில் நின்று ஆத்மகண்ணன் கேட்ட கேள்வியில் கூனி குறுகி நின்றார் இளவரசு.
“ஒரு பொறுப்பை ஏத்துக்கிட்டா மட்டும் போதாது. அதை எப்படி சரியா செய்யறோம்ன்றதுல இருக்கு சித்தப்பா எல்லாம். நீங்க கடமை முடிஞ்சா போதும்ன்ற மாதிரி பண்ணிட்டீங்க…” என்ற குற்றச்சாட்டலில் அவர் எத்தனை துடித்து போனார்.
“கண்ணா? என்ன பேச்சு இது?…” என்று அதட்டிய விசாலாட்சி,
“எல்லாம் எங்க நேரம் மதினி, அந்தம்மா தான் பொண்ணுக்கு வரன் பாருங்க. பாருங்கன்னு நச்சரிச்சது. இப்ப எங்க கொண்டுவந்து நிப்பாட்டியிருக்கு. இதுல இவர் பார்த்தது குத்தமாம்?…” என்று செண்பகம் முருகேஸ்வரியை தாக்கி பேச அவரின் அழுகை கூடியது.
“நானே உன் வாழ்க்கையை பாழாக்கிட்டேனா கண்ணு? இப்ப நான் என்ன செய்வேன்?…” என்று அவர் அழ,
“இப்ப அழுது என்னத்த செய்ய? இனி அடுத்து பார்க்கிற மாப்பிள்ளையாச்சும்…” என செண்பகம் பேசும் முன்,
“அத்தை, வேண்டாம். விட்டுடுங்க. இனி கல்யாணத்தை பத்தி பேசவேண்டாம்…” என கழுத்தில் இருந்து மாலையை கழற்ற முயன்றவளை பார்த்தான் ஆத்மா.
அவன் அவளை முதன்முதலாய் கவனித்து பார்க்கும் ஒரு பார்வை. பார்த்த நொடி அவன் கண்ணோட்டமுமே மாறியிருக்க எரிந்துகொண்டிருந்த அக்கினியை பார்த்தான் ஒரு நொடி.
அடுத்த நொடி ஒரு தோள் குலுக்களுடன் நிமிர்ந்தவன் மீண்டும் ரிதுவை பார்க்க அவள் மாலையை கழற்றியிருந்தாள்.
“சித்தப்பா அவக்கிட்ட சம்மதமான்னு கேட்டு சொல்லுங்க…” என்று சொல்லியதும் அத்தனைபேரின் பார்வையும் நிலைகுத்தி நின்றுவிட்டது.
கேட்டது நிஜமா பொய்யா என்னும் யோசனை கூட எழவில்லை. காதில் விழுந்தது ஆத்மாவிடமிருந்தா? என்று தான் பார்த்தனர்.
“என்ன?…” இளவரசு கேட்க,
“எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கனும். சம்மதமான்னு கேட்டு சொல்லுங்கன்னு சொன்னேன்…” என்றான் ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை தெளிவை தந்து.
அதிலும் ரிதுபர்ணா அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அந்த விரிந்த விழிகளில் ஒரு நொடி விழுந்து கலந்து எழுந்தவன் மீண்டும் இளவரசுவிடம் திரும்பினான்.
“சொல்லுங்க சித்தப்பா…”
“கண்ணா அம்மா, அப்பா…” என்றதும் மேடையில் இருந்தவர்களின் அதிர்ச்சியில் அருகே சென்ற மனோ மீண்டும் ஓடிவந்து ஆனந்தியிடமும் அண்ணாமலையிடமும் சொல்ல,
“கண்ணா…” என அருகே வரும் முன்,
“இது என் கல்யாணம். யார்கிட்டயும் கேட்கவேண்டிய அவசியமில்லை. நான் முடிவு பண்ணிட்டேன். நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு நான் ஒன்னும் குறைச்சல் இல்லையே? ஏன் உங்களுக்கு அப்படி தோணுதா?…” என்றான் ஆத்மா.
“என்னடா பன்ற?…” அண்ணாமலை கேட்க அவரிடம் திரும்பவே இல்லை அவன்.
“சித்தப்பா அவக்கிட்ட கேட்டு சொல்லுங்க. அவ சம்மதம் மட்டும் போதும்…” என்ற பிடிவாதத்தில் இளவரசுவும்,
“மாமாவுக்காக ப்பா, ரிதும்மா…” என இறைஞ்சுதலாய் இளவரசு ரிதுவை பார்க்க அங்கே எதுவும் அவளின் கையில் இல்லை.
செண்பகம், விசாலாட்சி, சுந்தரி, ஏழுமலை, முரளி, பரத் என்று ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி சம்மதிக்க சொல்ல ஆனந்தி அத்தனை சத்தம் போட்டார்.
“இங்க பாருங்க மதினி, எதுவானாலும் கண்ணன்கிட்ட பேசிக்காங்க. இங்க வேண்டாம்…” என்று விசாலாட்சி சொல்லிவிட இப்பக்கம் அண்ணாமலை மகனிடம் பேச அவன் அவரிடம் வாயே திறக்கவில்லை.
“கண்ணா அம்மா…” என்று ஆனந்தி வரவுமே அங்கிருந்தே ரிதுவின் முகம் பார்த்தவன் வேகமாய் அவளருகே வந்து கைபிடித்து மேடையில் அமர்ந்து அவளையும் அமர்த்திவிட்டான்.
விக்கித்த பார்வையுடன் ரிது அமர்ந்திருக்க சில நொடிகளில் மொத்தமாய் அவள் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டான் ஆத்மா.
திருமணம் முடிந்துவிட்டது. ஆத்மாவை உறுத்து விழித்த அண்ணாமலை வேகமாய் அங்கிருந்து செல்ல அழுகையுடன் ஆனந்தியும் கிளம்பிவிட்டார்.
நடப்பதை உணர முடியாமல் இன்னும் பிரம்மையில் தான் இருந்தாள் ரிது. இன்னும் அவளிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை அவன்.
அவனின் அன்றைய வரவும், இந்த செயலும் புயலை சுழற்றிக்கொண்ட சூறாவளியை போல தான் இருந்தது.
எப்படி அவன் வீட்டிற்கு வந்தாள் என்றும் தெரியவில்லை. மண்டபத்தில் தாலி காட்டி முடிந்த சில நிமிடங்களில் புறப்பட்டிருந்தான்.
நேராக வந்தவன் தன் வீட்டிற்கே அழைத்து வந்து அறைக்குள் விட்டுவிட்டு கீழே சென்றுவிட அவளுடன் இருந்தனர் சுந்தரியும், விசாலாட்சியும்.
சற்று நேரத்தில் குடிக்க என்று ஒன்று கொண்டுவந்து தர பருகியவள் தான். எப்படி உறக்கம் என்றில்லாமல் இரவு வரை ஆழ்ந்த உறக்கம்.
அதற்குள் ஆத்மாவின் தாய்மாமா விஷயம் கேள்விப்பட்டு வந்து தாம்தூம் என்று குதிக்க,
“இது என் கல்யாணம். என் கல்யாணம் என் விருப்பம். நான் தான் முடிவு பண்ணினேன். அதை விமர்சிக்க இங்க யாருக்கும் உரிமை இல்லை…” என்று சொல்லியவன் வேறு எதற்கும் வாய் திறக்கவில்லை.
“கண்ணா, நாங்க நினைக்கவே இல்லைப்பா. ஆனா ரிது உன் வீட்டுல…” என இளவரசு நெகிழ்ந்து போய் கூறியவர் முழுதாய் பேசமுடியாமல் தடுமாற,
“அவ தான் எனக்குன்னு நான் முடிவு பண்ணினப்பவே முழுமனசா தான் கல்யாணம் பண்ணினேன் சித்தப்பா. பயப்படவேண்டாம். நான் ரிதுவை பார்த்துக்கறேன்…” என்று சொல்லியவன் சொல்லியது போலவே நடைமுறையிலும் முழுமையாய் அவளோடு வாழ்ந்திருந்தான்.
இறைவன் சித்தம் இதுவாக இருக்கையில் மாற்றாக நினைக்கவோ, மாற்றவோ மனிதர்கள் யார்?
நினைக்க நினைக்க மலைப்பு தான் இப்போதும் ரிதுவிற்கு. அவன் மட்டும் அந்த நொடி வராமல் இருந்திருந்தால்? வரவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லாமல் இருந்திருந்தால்?
நினைவே அவளுக்கு உவப்பாக இல்லாமல் போக பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள் அவள்.
“ஹேய் என்னாச்சும்மா?…” என பதறிவிட்டான் ஆத்மா.
“ஹாங், ஒரு கனவு…” என்று அசடு வழிய அவள் சமாளிக்க,
“என்ன கனவாம்? கனவுல நானா?…” என்றவன்,
“எழுந்துக்கும் போது ஒருவார்த்தை சொல்லு தாயி. பதட்டத்துல காரை ஒரே ஏத்தா ஏத்திருப்பேன் மரத்துல…” என்றவன் மீண்டும் காரை கிளப்பினான்.
ராஜாமணியை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து மனதெல்லாம் அலைகழிப்புடன் கடந்திருக்க இப்போது சிலமணி நேர உறக்கம் கொஞ்சம் அந்த பதட்டத்தை அமைதிப்படுத்தியிருந்தது.
அந்த இருக்கையை நன்றாக நிமிர்த்திவிட்டவள் தண்ணீரை குடித்துவிட்டு அவனை பார்க்க,
“என்ன?…” என்றான் ஆத்மா.
“இன்னும் எவ்வளோ நேரம்?…”
“டூ ஹவர்ஸ் தான். போய்டலாம்…” என்று சொல்லியவன்,
“சாப்பிடவே இல்லை. ஏதாவது எடுத்துக்கோ ரிது. நைட் டின்னர் சென்னை போய் சாப்பிடலாம்…” என்றதும் தலையசைத்தாள் ரிது.
“என்ன ரொம்ப நேரமா என் முகத்தையே பார்த்துட்டு வர?…” என அவளை கேட்கவும் தன்னை கவனித்ததில் புன்னகைத்தவள்,
“ஒன்னு கேட்கனும்…”
“கேளு…”
“ம்ஹூம் இங்க இல்லை. வீட்டுக்கு வந்து தான் கேட்கனும்…” என்றாள்.
“கேட்டுமட்டும்? அட போம்மா…” என்று சலித்துக்கொண்டான்.
“எங்க போக?…” என்று வம்பிழுக்க இப்படி பேச்சுக்களுடன் ஊர் வந்து சேர்ந்தனர்.
வந்ததும் ஊருக்கு அழைத்து சொல்லிவிட்டு வேறு உடை மாற்றி சாப்பிட்டு மீண்டும் அறைக்கு வந்ததுமே ரிதுவை கட்டிக்கொண்டவன்,
“புகை பலமா இருக்கே? என்ன நெருப்பா இருக்கும்?…” என கிண்டல் பேசியவன்,
“நீ கேட்கிறத பொருத்து…” என்றும் பிடிகொடுக்காமல் பேச கேட்டுவிட்டாள் ரிது.
“என்னை கல்யாணம் பண்ணினதால தான என்னை உங்களுக்கு புடிச்சது?…”
“ஆமா…”
“அப்ப கல்யாணம் பண்ணலைன்னா என்னை புடிச்சிருக்காது. அப்படியா?…” அவனை பார்த்துக்கொண்டே கேட்க,
“ஆமா, கரெக்ட் தானே?…” என இலகுவாய் சொல்லவும் அவனை முறைத்தவள்,
“யாரை கல்யாணம் செஞ்சிருந்தாலும் உங்களுக்கு அவளை புடிச்சிருக்கும். அதுவும் கரெக்ட்டா?…”
அவளின் கேள்வியில் அபத்தம் தான். ஆனால் அவன் அவள் எதிர்பார்த்த பதிலை சொல்லவேண்டும் என நினைக்க அவன் அப்படி அடங்குபவனில்லையே?
“அதுல என்ன டவுட்டு? பொண்டாட்டினாலே புடிக்கும்ல…” என்றதும் மூக்கில் பலமாய் கற்றடித்தபடி இடுப்பில் கை வைத்து அவள் முறைத்து நின்ற விதத்தில் ஆர்ப்பாட்டமாய் சிரித்தான் ஆத்மா.
“இதென்னடி வம்பா போச்சு? நான் எவளையோ கல்யாணம் பண்ணிட்டு உன்னை புடிக்கும்னு சொன்னா தான் தப்பு. கட்டிக்கிட்டவளை புடிக்கும்ன்னு சொன்னா என்ன தப்பு?…” என்றவன் எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து,
“நான் சரியா தானே பேசறேன்?…” என்று தனக்கு தானே கேட்டுக்கொள்ள கோபமாய் அவனை கட்டிலில் தள்ளிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல,
ஹேய் நில்லுடி. அப்ப இப்ப உன்கிட்ட வேற யாரையும் புடிக்கும்ன்னு சொன்னா தப்பில்லையாமா? சொல்லவா?…” என்றதும் சென்றவள் மீண்டும் வந்து தலையணை எடுத்து அத்தனை மொத்தினாள்.
“மனுஷனா நீங்க? எதாச்சும் மனசு சந்தோஷப்படற மாதிரி சொல்றீங்களா?…” என கேட்டு அடிக்க,
“இப்ப என்ன சொல்லி சமாதானம் பண்ணனும்? சொல்லிட்டு அடிடி…” என்று கத்தினாலும் அவளின் அடிகளை வாகாய் வாங்கிக்கொண்டான் சிரித்தபடி.
“ஒன்னும் தேவை இல்லை. எப்ப பாரு ஏடாகூடமாவே பன்றது…” என்றவளை தன்னோடு இழுத்துக்கொண்டவன்,
“இப்ப என்ன ஏடாகூடம் பண்ணிட்டேன்னு காயற நீ? இல்லை நீ பர்மிஷன் குடுத்திடுவியா இப்போ இருக்கற நிலைமைல?…” என்று கேட்டு சிரிக்க,
“வாய் வாய்…” என்று அதில் இரண்டடி வைத்தாள் ரிது.
“வாய் தான். பாவம் தனியா இருக்குதுன்னு வேற ஒரே பீலிங்…” என்றவன் அவளின் மேனியில் இஷ்டத்திற்கு இதழ் பதிக்க இறுதியில் வயிற்றில் சாய்ந்துவிட்டான் ஆத்மா.
“என்ன பன்றீங்க?…” என கூசி சிலிர்த்தவள் அவன் தலைமுடியை பற்றி இழுக்க,
“சும்மா. கொஞ்ச நேரம் ரெஸ்ட். ஏன் உனக்கு பெய்னா இருக்கா?…” என வருடியபடி கரிசனையாக கேட்டான்.
“ம்ஹூம், இல்லை. குறைஞ்சிருக்கு…” என்று சொல்ல இன்னும் அவன் வருடல் நிற்கவில்லை.