எங்கே வரமுடியாதென அவன் பிடிவாதமாய் நின்றால் ரிது அவனை இழுக்காமல் விடமாட்டாள்.
அதனை கொண்டே தன்னை அவள் இழுத்த இழுப்பிற்கு தன் உடலை வளைக்க அவனுடன் மாடிக்கு சென்றாள் ரிது.
“வாக் தானே? இங்க போகலாம்…” என சொல்ல,
“வெய்ட்…” என்றவன் உள்ளே சென்று ஒரு பெரிய சால்வையை எடுத்துவந்து அவளுக்கு போர்த்தி தானும் அணைத்துக்கொண்டான்.
“பிடிவாதம்…” ஆத்மா முணுமுணுக்க,
“உங்களை விடவா?…” என்றவளை முறைத்தான்.
“உன் சேட்டை என் பிள்ளைக்கும் வர போகுது பாரு…”
“இருந்துட்டு போகட்டும். உங்க கோவம் கூட தான் இருக்கும். அதுவும் இவ்வளோ கோவம். ஹப்பா, அங்க எல்லாரும் என்னை தான் சொல்லுவாங்க. புருஷனை எப்படி மாத்திவச்சிருக்கா பாருன்னு…”
“நான் சொல்லலை. எனக்கு நஷ்டமும் இல்லை. போதும்…” என்று அவள் சிணுங்கல் குரலில் விழிகளால் மிரட்ட,
“பேச கூட விடாம. இப்பலாம் ரொம்ப உஷாராகிட்ட நீ…” என கண்கள் மின்ன ஒரு கள்ளப்புன்னகை அந்த கண்ணன் முகத்தில்.
“போதும், உள்ள வா…” என்று அவன் செல்ல,
“மைன்ட் சேஞ்ச்சாகிட்டா?…” என்றாள் அவனை ஆராய்ச்சியாய் பார்த்து.
“என்னவோ யாருமே வேண்டாம்ன்னு வெட்டிவிட்டு சண்டை போட்டுட்டு வந்த மாதிரில பேசிட்டிருக்க நீ? ப்ச், இனி என்ன போகாமலா இருக்க போறோம்?…” என்றவன்,
“அத்தனைபேரை வச்சிட்டு நம்ம வாழ்கையை விமர்சனம் செய்ய அவங்க யார்? அவங்க பேசறாங்கன்னு அம்மாவும் சைலண்டா இருக்காங்க. நீயும் வாயில பிளாஸ்திரி போட்டு ஒட்டின மாதிரி இருக்க?…”
“அதுக்கு சண்டை போடனுமா?…”
“ஏன் சண்டை போடனும்? நீ சொல்லவேண்டியது தானே?…” என்றவன் அவள் முறைப்பில் மௌனமாகிவிட்டான்.
“தெரியுதே அவங்களாம் யாரோன்னு. நம்ம விஷயத்தை அவங்க முன்னாடி நான் சொன்னா அவங்களுக்கு க்ளாரிட்டி குடுத்தமாதிரி இருக்காதா? எனக்கு அந்த மனுஷங்க முன்னாடி சொல்ல புடிக்கலை. சொல்லலை. அதான் நீங்க சொல்லிட்டீங்களே?..”
“ப்ச், சரி விடு. ரொம்ப குளிருது…” என்றவனுக்கு தலை விண்ணென்று தெறித்தது.
“நான் தூங்கறேன் ரிது. தலை வேற வலிக்குது…” என்றதும்,
“மாத்திரை போடறீங்களா?…”
“ம்ஹூம், வேண்டாம். தூங்கறேன்…” என்றவன் உள்ளே சென்று படுத்துக்கொண்டான்.
“ஆமா, நீ டேப்லெட்ஸ் எல்லாம் எடுத்துட்டியா?…” என கேட்க,
“இங்க வாங்க…” என்று தன் மடியில் சாய்த்துக்கொண்டாள் ரிது.
“ம்ஹூம், உனக்கு கஷ்டமா இருக்கும். ஆனாலும் கொஞ்ச நேரம் மட்டும்…” என சொல்லவும் இன்னும் ரிது நன்றாக சாய்ந்து அமர்ந்து தன் முதுகிற்கு தலையணை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ரிதுவின் மடியில் படுத்த நொடி அவளின் தலைகோதலில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் ஆத்மா.
அத்தனை அலைப்புருதலுடன் இருந்தவன் மனதின் அழுத்தங்கள் எல்லாம் கரைவதை போலிருந்தது அவள் லேசாய் நெற்றியை பிடித்துவிடவும்.
“நீயும் சீக்கிரம் படுத்திடு ரிது. நான் அசந்துட்டேன்னா கவனிக்காம போய்ட போறேன்…” என உறக்கத்தினூடே சொல்லியே தான் தூங்கி போனான்.
பத்து நிமிடம் கழித்து அவளின் மொபைல் வைப்ரேட்டானது. எட்டி எடுக்க அங்கே கீழே விழுந்திருந்த பெட்டியை பார்த்தாள்.
“எவ்வளோ கோவம்?…” என ஆத்மாவின் முகத்தை தடவி சொல்லியவள் முகத்தில் மென்னகை.
‘நாளைக்கு அந்த பெட்டியை எடுத்து வைத்துவிடலாம்’ என நினைத்தபடி போனை அட்டன் செய்தாள்.
“கண்ணு தூங்கிட்டியா?…” முருகேஸ்வரி கேட்க,
“இல்லை சித்தி, சொல்லுங்க…” என்றாள்.
“இல்ல தம்பி கோவமா கிளம்பி போச்சு உன்னை கூட்டிக்கிட்டு. அதான் கேட்போம்ன்னு…”
“ஆமா கண்ணு, உன் மாமனார் உன் மாமியார்ட்ட இனி உன் அண்ணன் வீட்டோட உறவே வச்சிக்காதன்னு சொல்லிட்டார். அதுக்கு உன் மாமியாரோட மதினி அவ்வளோ பேச்சு நீங்க எப்படி சொல்லாலாம்ன்னு…”
“அச்சோ? அதான் எதுவும் பேசவேண்டாம்ன்னு சொல்லிட்டு தானே வந்தேன்? யார் இதை மாமாக்கிட்ட சொன்னது?…”
“யாரும் சொல்லலை. உன் மாமியாரே தான் இப்படி மகன் கோவிச்சுக்கிட்டு போய்ட்டான்னு சொல்லிட்டாங்க…”
“போச்சு…” என தலையில் கை வைத்தாள்.
“சொல்லனும்னு சொல்லலை. இந்த மாதிரி நீ மாசமாருக்கன்னு சொல்லும் போது அப்ப ஏன் கிளம்பினாங்கன்னு உன் மாமா கேட்கவும் அந்தம்மா பயத்துல சொல்லிருச்சு…” என்ற முருகேஸ்வரி,
“தம்பி கோவமெல்லாம தணிஞ்சதா? ஒன்னும் சொல்லலையா?…”
“ப்ச், எங்க சித்தி? இங்க இவங்க அதுக்கு மேல் கோவமா இருந்தாங்க. இப்பத்தான் கொஞ்சம் சமாதானமாகி தூங்கறாங்க…” என்றவள்,
“இவ்வளோ கோவமும் அப்படியே அவங்கப்பாவை கொண்டு வந்திருக்கு…” என அலுத்துக்கொண்டாள் ரிது. அதில் சற்று கர்வமும் மிளிர்ந்தது.
“நாளைக்கு உன் பிள்ளையும் அப்படித்தான் பாரு…” என சிரித்த முருகேஸ்வரி,
“சரி கண்ணு. நீ நேரத்துக்கு உறங்கு. உடம்பை பார்த்துக்கோ…”
“சரிங்க சித்தி…”
“எனக்கு தான் உன்னை பக்கத்துல வச்சு பார்த்துக்க குடுப்பினை இல்லாம போச்சு. இந்த நேரம் அம்மா கையால சாப்பிடனும்னு பிள்ளைங்க நினைப்பாங்க. உங்கம்மா அந்த மகராசி இருந்திருந்தா உன்னை உரிமையா கையில வச்சு தாங்கியிருக்கும்…” முருகேஸ்வரி மெல்லிய விசும்பலுடன் பேச,
“ஏன் சித்தி? நீங்களும் என் அம்மா மாதிரி தான். நீங்க தாங்கமாட்டீங்களா?…”
“கண்ணு…”
“நீங்க இங்க வந்து என் கூட கொஞ்ச நாள் இருக்கீங்களா சித்தி?…” என கேட்க அத்தனை ஆசை முருகேஸ்வரிக்கும்.
ரிதுவை இந்த நேரத்தில் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்று.
ஆனால் இவ்வளவு நாட்களில் அவர்கள் தான் கரூர் வருவார்களே தவிர யாரும் சென்னை சென்றதில்லை. அதற்கு அவசியமும் ஏற்பட்டதில்லை.
இப்போது ரிதுவே அழைக்க செல்லும் ஆசை இருந்தாலும் ஆத்மா நிச்சயம் எதுவும் சொல்ல போவதில்லை.