ஆனால் அண்ணாமலையை எண்ணி தான் ஒரு தயக்கம். இப்போதெல்லாம் முன்பை போல முறைத்துகொண்டு செல்வதில்லை அண்ணாமலை.
எதிர்பட்டாலும் அமைதியாகவே கடந்து சென்றுவிடுகிறார் தான். ஆனாலும் முருகேஸ்வரிக்கே ஒரு தயக்கம்.
“சித்தி என்ன ஒன்னும் சொல்லலை?…” என கேட்க,
“நீ கூப்பிட்டதும் அம்புட்டுக்கு ஆசை நெஞ்சை முட்டி நிக்கிது கண்ணு. ஆனா உன் மாமனார், மாமியாரே அங்க இன்னும் வந்து இருக்கலை. நான் வந்துக்கிட்டு அவங்களுக்கு அது ஒரு மனசடவா போச்சுன்னா?…” என்றவர்,
“அவங்க முதல்ல வரட்டும் கண்ணு. அப்பறமா நான் வாரேன்…” என்றார்.
“அவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க சித்தி…”
“சொல்லமாட்டாங்கதான். இருக்க இடம் குடுத்தா படுக்க பாய் கேட்ட கதையா போக கூடாது பாரு. இப்ப தான் கொஞ்சம் முகம் பார்த்து போறாங்க. வெடுக்குன்னு பேச்சில்லாம மனசுக்கு இதமா இருக்கு. இதையும் கெடுத்துக்க கூடாது பாரு…” என்றார்.
“நீங்க ஏன் சித்தி இன்னும் அதையே நினைக்கறீங்க?…”
“எல்லாமே யோசிக்கனும் கண்ணு. அதுவும் இப்பவும் நீங்க சண்டை போட்டுட்டு கிளம்பி போனப்ப நான் அங்க உனக்கு ஆக்கிப்போட்டு பார்த்துக்க வந்தா கூட ஊரு என்ன பேசும்?…”
“என்ன பேசும்?…” ரிது கோவிக்க,
“பெத்தவங்கட்ட சண்டையை போட்டு போயிருக்க அதை கண்டுக்காம நான் அங்க வந்து உறவு கொண்டாடறேன்னு நினைக்க மாட்டாங்களா கண்ணு? அதுக்கும் மேல உன் மாமனார், மாமியாருக்கு எம்புட்டு சங்கட்டமா இருக்கும்? நம்ம பிள்ளை வீட்டுல நம்மளால போய் இருக்க முடியலையேன்னு?…”
“நீங்க ரொம்ப யோசிக்கறீங்க சித்தி?…” என்றவளுக்கு வேறு என்ன சொல்லி அவரை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
“இருக்கட்டும்ய்யா, நீங்க நல்லபடியா இருந்தா போதும். அவரு சண்டை போட்டுட்டு வந்துட்டாருன்னு விட்டுடாத. நீ தான் பாலமா இருந்து இழுத்து புடிக்கனும். புரியுதா கண்ணு?…”
“சரிங்க சித்தி…” என்ற ரிது,
“பெரிம்மா வீட்டுல இருந்து எல்லாரும் கிளம்பியாச்சா?…”
“ஹ்ம்ம், வளைகாப்பு முடிஞ்சு பொண்ணை கூட்டிட்டு போகவுமே எல்லாருமே கிளம்பிட்டாங்க. நீ தான் அதுவரை இருக்க முடியலையே?…” என்றவர்,
“ப்ச், என்ன சித்தி நீங்க? மனுஷங்க தான் வகைதொகையில்லாம வார்த்தையை விடறாங்கன்னா அதுக்கு சாமி என்ன பண்ணு? பேசறவங்க பேச்சுகேல்லாம் பதில் சொல்லிட்டே இருக்க முடியுமா?…”
“அதுக்கில்லை கண்ணு. என்னவோ ஒன்னு தொட்டு ஒன்னு. இப்பத்தான் கொஞ்ச நாள் நல்லா போச்சு. அதுக்குள்ளே திரும்ப?…” என்றவர்,
“இப்படி ஒரு நல்ல சேதியை எப்படி ஒரு சூழ்நிலையில கேட்க வச்சிட்டாங்க? எவ்வளவு சந்தோஷப்படனும் நாம? எல்லாருக்கும் எவ்வளவு சங்கடமா போச்சு?…” என்றவர் வருத்தத்தில் தானும் மௌனமானவள்,
“சரி விடுங்க சித்தி. வித்யா எங்க?…” என்றாள்.
“இவ்வளோ நேரமா உன் தங்கச்சி முழிச்சிருக்கா? அப்பவே படுத்துட்டா. அதுவும் ரொம்ப நேரம் முழிச்சிருந்தா அவளுக்கு முடியமாட்டிக்கே?…” என பேசிக்கொண்டிருக்க பசுமாடு கத்தும் சத்தம்.
“பின்னாடி கொட்டத்துலையா இருக்கீங்க?…”
“ஆமா கண்ணு, உன்கிட்ட பேசிக்கிட்டே நைட்டுக்கு வைக்கோல் எடுத்து போட வந்தேன். போட்டுட்டேன், இன்னும் வேணுமாமாம். அதான் கத்துது…” என்றவர்,
“சரி நீயும் தூங்கு. நான் நாளைக்கு பேசறேன்…” என்று பேசியபடி முருகேஸ்வரி உள்ளே சென்றுவிட்டார்.
போனை வைத்துவிட்டு ஆத்மாவை பார்க்க உறக்கத்திலேயே உருண்டிருப்பான் போலும். தலையணைக்கு இடம் மாறியிருந்தான் அவன்.
“எப்ப விலகி படுத்தாங்க?…” என்ற முணங்கலுடன் சரிந்து படுத்தவள் அவன் மீது கையிட்டு தலை சாய்ந்துகொண்டாள்.
மனதெங்கும் அன்றைய பிரச்சனையின் தாக்கம் தான் சூழ்ந்திருந்தது. அவனிடம் சொல்லிவிட்டாள் தான் கோபம் வேண்டாம் என்று.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவர்கள் சந்தித்து வரும் கேள்வியின் உச்சம் அன்று நடந்த சம்பவம்.
பரத் மனைவியின் வளைகாப்பு வைபவத்திற்கு கரூர் சென்றிருந்தனர் ரிதுவும் ஆத்மாவும்.
அத்தனை சந்தோஷத்துடன் துவங்கிய பயணம் அது. அவர்களின் திருமணம் முடிந்து வருடம் கடந்திருந்தது.
முன்பை போல எல்லாம் ஆத்மா அவளை தன்னுடனே அழைத்து செல்வது, வருவது எல்லாம் அதன் பின்னர் சாத்தியப்படவில்லை.
‘ஒவ்வொன்றிற்கும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமா?’ என அதற்கொரு சண்டை இருவருக்குமிடையே.
அதனை கொண்டு முன்பே அவள் சென்றாலும் முடிந்தளவு தன்னுடன் அழைத்து வர முயன்றிருக்கிறான்.
“இன்னைக்கு தனியா போறேன்னு சொல்ற வாய் கொஞ்சமும் யோசிக்காம என்னை தனியா அனுப்பின தானேன்னும் கேட்கும். உன்னை எல்லாம் நம்பமுடியாது…” என அத்தனை காய்வான் ஆத்மா அவளிடத்தில்.
அந்த சண்டையும், சமாதானங்களும் தொடர்ந்து இருந்தாலும் இருவருக்குமான நெருக்கத்தை பிணைப்பை அது வலுவாக்கிக்கொண்டே தான் சென்றது.
பரத்தின் திருமணம் முடிந்து அவன் மனைவி தாயான செய்தி வரும் வரையில் எந்தவித சஞ்சலங்களும் வீட்டில் இல்லை.
என்று பரத்தின் மனைவி கர்ப்ப விஷயம் அறிந்திருந்தனரோ அன்றிருந்தே மகன், மருமகளிடம் ஒரு எதிர்பார்ப்பு வந்துவிட்டது ஆனந்திக்குமே.
வெளிப்படையாக கேட்கவில்லை என்றாலும் அவரின் முகமே அதனை காட்ட ஆரம்பித்தது.
இதில் ஊரில் உள்ளவர்கள், உறவுகள் என்று கேட்கவும் ஆரம்பித்திருந்தார்கள் ஆனந்தியிடம்.
“உன் நாத்தனார் மருமக மாசமா இருக்காளாமே? உன் மருமக எதுவும் சொல்லலையா?…” என கேட்டு கேட்டு ஆனந்தியை மட்டுமல்லாது அவ்வப்போது ரிது வந்தாலும் அந்த கேள்வியை அவளை நோக்கியுமே வீச ஆரம்பித்தனர் அக்கறையின் பெயரில்.
“ப்ச், அதெல்லாம் தானா நடக்கறது. நாம நினைச்சதும் குடுக்கறதா? சும்மா எல்லாத்துக்கும் காதை குடுக்காதீங்கக்கா…” என செண்பகம் பிடித்து ஒருமுறை திட்டிவிட்டிருந்தார் ஆனந்தியை.
“நினைச்சா இந்தா பிடின்னு குடுக்க அதென்ன பொருளா? ஏன் நம்ம தமயந்தி கூட ரெண்டுவருஷம் தள்ளி தானே மாசமானா? இதெல்லாம் ஒரு விஷயமா?…” என்று சொல்லியிருக்க அதுவே ஆனந்தியின் நெருடலுக்கு வித்திட்டது.
சாதாரணமாக கடக்கவேண்டிய அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதிற்குள் பெரிதாக ஆரம்பித்தது.
“அவங்களுக்குள்ள பேசி வச்சு கொஞ்ச நாள் கழிச்சு பெத்துக்கலாம்ன்னு கூட தள்ளி போட்டிருக்கலாம்ல மதினி. என்னத்தையாச்சும் யோசிச்சு மனசை போட்டு குழப்பாதீங்க…” விசாலாட்சியும் சொல்லியிருந்தார் ஆனந்தியிடம்.
அந்த நேரங்களில் எல்லாம் அவற்றை வாங்கி மனதிற்குள் வைத்துக்கொள்பவருக்கு பேச வாய்ப்பில்லாமல் போனது.
பரத்தின் மனைவிக்கு வளைகாப்பு என்று சந்தோஷமாய் கிளம்பி வந்திருக்க ஆனந்தியின் மொத்த கவனமும் மருமகளிடம் தான்.
தன்னிடம் இத்தனை பார்வை ஏன் என தெரியவில்லை என்றாலும் புன்னகையுடன் கடந்துவிட்டாள் ரிது.
இருபக்க சொந்தங்களும், ஊரில் உள்ளவர்களும் என்று அனைவருக்குமே அழைப்பு விடுத்திருந்தனர் வளைகாப்பு விழாவிற்கு.
ஆனந்தியின் அண்ணன் குடும்பம் உட்பட அத்தனை பேருமே வந்திருந்தார்கள் அங்கே.
ஆனந்தியின் அண்ணன் வந்து சென்ற பின்னர் போக்குவரத்து மட்டுமில்லை. மற்றபடி பொது விசேஷங்களில் கலந்துகொள்ளும் பொழுது பேசிக்கொள்வர்கள்.
ஆனந்தியும் போனில் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்த ஒன்று தான் அண்ணாமலைக்கு.
பிரச்சனை இல்லாதவரை சரி என்று விட்டுவிட்டார் அவருமே. அதனால் ஆனந்தி தங்குதடையின்றி தங்கள் உறவுகளுடன் உறவாட முடிந்தது.
அன்றும் விசேஷத்திற்கு வந்திருந்தார் ஆனந்தியின் அண்ணன் மனைவியும், இன்னும் சில உறவுகளும்.
வந்ததில் இருந்து அவர்களும் ஆனந்தியிடம் ரிதுவை பற்றி கேட்க அத்தனை சங்கடம் ஆனந்திக்கும்.
அதிலும் ரிது அத்தனை சந்தோஷமாக வளைய வர ஆனந்தியின் பக்க உறவுகளுக்கு பொறுக்கவில்லை.
“வளைகாப்பு போட்டு முடிச்சாச்சு. அடுத்து ரிதுவை மனையில உக்கார வச்சு வளையல் போட்டுவிடுங்க. அந்த ராசி அவளுக்கும் சீக்கிரம் பிள்ளை தகையட்டும்…” என கூட்டத்தில் ஒரு வயதான உறவு பெண் சொல்ல,
“ஆமா, ரிதுவை கூப்பிடு முருகேஸு…” என விசாலாட்சி அழைக்க சொன்னார்.
“உள்ள தான் இருக்கா. சுந்தரி கூட பந்திக்கு எடுத்து குடுத்துட்டு…” என்று முருகேஸ்வரி உள்ளே செல்ல,
“இதோ ரிதுவே வந்துட்டாளே?…” என செண்பகம் சொல்ல வந்ததும் அவளை மனையில் அமர்த்தினார்கள்.