வளைகாப்பு என முதல்நாள் தான் ரிதுவுடன் கரூருக்கு வந்திருந்தவன் அன்று இளவரசுவை அழைத்துக்கொண்டு திருப்பூர் வரை வந்திருந்தான் முக்கிய வேலையாக.
அண்ணாமலை வரவேண்டியது. அவரும், ஆனந்தியும் முக்கியமான ஒருவர் இல்ல திருமணத்திற்கு தம்பதி சமேதரராக சென்றிருக்க அவரின் சார்பாக ஆத்மா அவ்விடத்திற்கு வந்திருந்தான்.
மதியம் தான் கிளம்பிவிட்ட தகவலை சொல்ல என்று ரிதுவிற்கு அழைக்க அழைப்பு ஏற்கப்படவில்லை.
இப்படி எடுக்காமல் இருப்பவளில்லை என்பதால் உடனே முருகேஸ்வரி எண்ணிற்கு அழைத்துவிட்டான் ஆத்மா.
“சொல்லுங்க தம்பி…” என அவர் எக்ட்க,
“ரிது எங்க? கால் பண்ணேன்…” என்ற பொழுதே பின்னால் என்னவோ சத்தம்.
“ரிதுவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை முருகேஸு. சாதாரண வலி தான். டாக்டர் கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. கிளம்புவோம்…” என்று விசாலாட்சி சொல்ல ஆத்மாவிற்கு கேட்டுவிட்டது.
“ரித்து எங்க? நீங்க எங்க இருக்கீங்க?…” என்று அவன் கேட்கவும்,
“இல்ல தம்பி, இப்ப ஹாஸ்பிட்டலுக்கு வந்தோம்…”
“ரிதுவுக்கு என்ன? என்னாச்சு? மார்னிங் நான் கிளம்பறப்போ நல்லா தான இருந்தா?…” என்று பதட்டமாய் கேட்டான்.
“ஒன்னும் இல்லை தம்பி. பதட்டப்படாம வாங்க. இங்க எல்லாம் நல்லாயிருக்கறதா சொன்னாங்க…” என்று சொல்லியும் அவனுக்கு பதட்டம் குறையவில்லை.
“இங்க கொண்டா. கண்ணன் தானே?…” என்று வாங்கிய விசாலாட்சி,
“ஏன் கண்ணா, ஒன்னொன்னுக்குமா பதறுவ? பிரசவம்ன்னா சும்மாவா? அப்பப்ப இந்த மாதிரி ஒரு குடைச்சல் இருக்கத்தான் செய்யும். அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றோம்ல…” என்று சத்தம் போட,
“போச்சு, இன்னைக்கு ஆட போறாங்க. அவங்க பரவாயில்லை. அத்தைக்கிட்ட சொன்னா தொலைஞ்சேன் நான்…” என பாவமாய் அவள் பார்க்க முருகேஸ்வரி, விசாலாட்சி இருவர் முகத்திலும் புன்னகை.
“ம்க்கும், மாமியாருக்கு பயந்தவ தான் நீ. கிளம்பு போவோம்…” என்ற விசாலாட்சி,
“ரொம்ப கவலைன்னா மதினிக்கு போன் போட்டு தரேன். இப்படின்னு விவரத்தை சொல்லிடேன்…” என கிண்டல் வேறு பேச அவரை முறைத்தாள் ரிது.
“சரி கிளம்புவோம். போய் அவ சாப்பிட வேற செய்யனும்…” என்ற முருகேஸ்வரி,
“ஹ்ம்ம், ரிதுவுக்கு பிள்ளை பிறந்து அந்த பிள்ளைக்கு பிள்ளை பிறக்கற வரைக்கும் இன்னும் பயந்துட்டே இரு. நானே என் அண்ணனை என்னவோன்னு நினைச்சேன். மனுஷன் வேற ரகம். இப்ப இதை சொன்னாலும் ஒன்னும் நினைக்க மாட்டாரு…”
விசாலாட்சி தைரியம் சொல்லி இருவரோடும் வீடு வந்து சேர ரிது தன் வீட்டில் சென்று படுத்துக்கொண்டாள்.
“லேசா புடவையை விலக்கு ரிது. இந்த எண்ணெயை வயித்துல தடவறேன்…” என்று வந்தார் விசாலாட்சி.
மூவருக்குமே எடுத்து வந்திருந்தார். வித்யா கல்லூரிக்கு சென்றிருக்க செண்பகமும் அவரின் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார்.
“என்னை விட்டுட்டு நீங்கலாம் சாப்பிடறீங்க? என்னடா சத்தம் கேட்டுச்சே ஆளை காணுமேன்னு எட்டி பார்க்கறதுக்குள்ள என் மகன் முழிச்சிட்டான். அவனுக்கு துணி மாத்திட்டு வாரதுக்குள்ள இங்க நடக்கறத பாரு…” என்று பரத்தின் மனைவி சபர்மதியும் வந்துவிட்டாள்.
கையில் குழந்தையை வைத்து லேசாய் இங்குமங்கும் ஆட்டிக்கொண்டே அவள் வந்து ரிது அருகில் அமர்ந்துகொண்டாள்.
“உங்க உருண்டை சோறு எனக்கில்லையா சின்னத்தை? என் மாமியார் தான் கண்டுக்கலை. நீங்களுமா?…” என்று முகத்தை சுருக்க,
“நீ புள்ளையோட தூங்குவியோ என்னவோன்னு தான் கூப்பிடலத்தா. இந்தா வாங்கிக்க…” என்று உருண்டை பிடித்து அவளுக்கும் தர,
“நீங்க வரட்டும் வெய்ட் பண்ணலாம்ன்னு இவனை தூங்க வச்சிட்டு இருந்தேன்…” என்று பேசியபடியே சாப்பிட அதற்குள் அவள் மகன் நன்றாக விழித்து விளையாட ஆரம்பித்திருந்தான்.
“பாருங்களேன் இப்ப கொட்ட கொட்ட முழிச்சிருக்கறதை?…” என்று குழந்தையுடன் விளையாடியபடி மருத்துவமனையில் என்ன சொன்னார்கள் என்று கேட்டு பேசிக்கொண்டே உண்டு முடித்தனர்.
“இந்த மாத்திரையை போடு. எண்ணெய் தேய்ச்சிட்டு நல்லா தூங்கி எழுந்திரி. இனிமே பருத்தி சேலை மட்டும் கட்டு. ஏற்கனவே சூட்டு உடம்பு உனக்கு…” என்று சொல்லிக்கொண்டே ரிதுவின் வயிற்றை சுற்றி குளிர எண்ணெயை தேய்த்துவிட்டார் முருகேஸ்வரி.
“ஆமா, இப்பலாம் காட்டன்னு சொல்லி நம்பி எடுக்க முடியுதா? அதுலயும் மிக்ஸ் பண்ணிடறானுங்க. அடிக்கிற வெயிலுக்கு புள்ளைத்தாச்சிங்க பாடுதான் பெரும்பாடு….” விசாலாட்சி அங்கலாய்க்க,
“அப்ப கைக்குழந்தைய வச்சிருக்க எங்களுக்கு குளுகுளுன்னு இருக்காக்கும்? எல்லாருக்கும் அதுதான். உங்க மகன் பகல்ல நைட்டியை போடவே கூடாதுன்னு சண்டைக்கு நிக்கிறாரு. சேலையும் அக்ட்டிட்டே இருக்க முடியலை…” என பெருமூச்சு விட்டாள் சபர்மதி.
“ம்க்கும், அவன் கிடக்கான் மூக்கு வேர்த்தவன். நான் என்ன வேண்டாம்ன்னா சொல்றேன்?…” என்ற விசாலாட்சி,
“அவன்கிட்ட எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு என்கிட்டே வந்து புலம்புவா இவ. இவள நம்பி அவன்கிட்ட சண்டை கூட போடமுடியாது…” என்று முருகேஸ்வரியிடம் புலம்பினார் அவர்.
சிரித்தபடி அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்ட முருகேஸ்வரி வெளியே திண்ணையில் வந்து அமர்ந்தார்.
பெரிய தட்டு நிறைய கீரை இருக்க அவற்றை எடுத்து கால் நீட்டி அமர்ந்துவிட்டார்.
“அடுத்த வேலையா?…” விசாலாட்சி சேர்ந்து அமர்ந்து காலை நீட்டி பேரனை மடியில் போட்டுக்கொண்டார்.
“ஆமாக்கா, ரிதுவுக்கு சாயங்காலம் சூப்பு வச்சு குடுக்கனும். அதுக்குத்தான் இப்பவே பக்குவம் பார்த்து வைப்போம்ன்னு. இந்த பிள்ளைக்கு சளியும் பிடிக்காம, உடம்பையும் குளிர்ச்சியா வச்சுக்கனும்ல…” என்றார்.
சிறிது நேரமிருந்த சபர்மதி உறங்க சென்றுவிட்டாள். விசாலாட்சியும் பேரன் மடியில் நன்றாக உறங்கியிருக்க தானும் சென்றுவிட்டார் வீட்டிற்குள்.
பெரிய வளாகத்தில் ஒருவருமில்லை. வெளியே காற்று நன்றாக இருக்க வெயில் குறைவதை போலிருந்தது.
இத்தனை நேரமாகியும் இன்னும் அண்ணாமலை வந்திருக்கவில்லை. பூட்டியிருந்த கேட்டை பார்ப்பதும், கீரையை பார்ப்பதுமாக இருந்தவர் எழுந்து பின்பக்கமாக சென்றார்.
கீரை கழிவுகளை கொண்டு சென்று கொட்டிவிட்டு வரும் முன் வெளியே கார் நின்றிருக்க ஆத்மா வந்துவிட்டது தெரிந்தது.
வீட்டில் இருக்கிறான் போல? இங்கே ரிதுவை தேடுவானே என அவளை எழுப்பலாம் என்று வர ஆத்மாவின் காலணி வாசலில்.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. நிஜமாகவே இந்த வீட்டிற்குள் இருக்கிறானா என்ற வியப்பு குறையாமல் படி ஏறியவர் நிலைவாசலுக்கு வர உள்ளே ஆத்மாவின் இருப்பு.
தான் உள்ளே சென்றால் வெளியேறிவிடுவானோ இல்லையோ என்ற குழப்பமும், அவன் வந்துவிட்ட மகிழ்ச்சியுமாக நின்றார்.