அன்றொருநாள் வாசலில் இருந்த ஈசி சேரில் அமர்ந்தவன், அதன் பின்னர் அந்த எல்லையை அவன் கடக்கவில்லை.
அங்கே வருவதும் இருப்பதும் மட்டுமே, அதற்கு மேல் செல்லவும் தோன்றவில்லை.
முருகேஸ்வரியிடம் பேச்சுக்கள், வித்யாவுடன் இலகுவான பழக்கம் என்று இருந்தாலும் இயல்பாய் அவனால் அவ்வில்லம் உள் செல்ல முடியவில்லை.
அதனை ரிதுவும் எதிர்பார்க்கவில்லை. பலமுறை ஆத்மாவே நினைத்ததுண்டு ‘இவள் தன்னை வா என்று அழைத்தால் தேவலாம்’ என எண்ணியிருக்கிறான்.
அப்படி அழைக்கும்பட்சத்தில் தவறாமல் செல்லவும் தயாராக இருக்க அதனை அவன் மனைவி செய்யவே இல்லை.
உனக்காக தோன்றும் பொழுது வந்தால் போதும் என்றிருந்துவிட்டாள் ரிதுபர்ணா.
ஆனந்தி கூட அவ்வப்போது முருகேஸ்வரியிடம் பேசத்தான் செய்திருந்தார் இந்த இடைப்பட்ட நாட்களில்.
ஆனாலும் வெளியளவில் தான் பேச்சுக்கள். வீட்டிற்குள் வந்து உறவாடுவது என இல்லை.
அதனை முருகேஸ்வரியும் நினைக்கவில்லை. விசாலாட்சி எத்தனையோ முறை ஆனந்தியை சொல்லியிருக்கிறார்.
“ஏன் இந்த வீடென்ன இவங்களுக்கு ஆகாததா? வீட்டு மனுஷங்க மட்டும் வேணும். ஆனா வீட்டுக்குள்ள வரமுடியாதாமா? ஏன் நீ வாயை திறந்து கூப்பிடறதுக்கென்ன?…” என்று முருகேஸ்வரியை சத்தமும் போட்டிருக்க,
“இது அவங்களுக்கு உரிமைப்பட்ட வீடு. ஒண்டவந்த நான் வாங்கன்னு கூப்பிடறதா? அது நல்லாவாக்கா இருக்கும்? சிரிச்சிடமாட்டாங்களா? இங்க அவங்களுக்கப்பறம் தான் எனக்கும். எனக்குமே என் ரிது கண்ணு இருக்கான்ற உரிமை. அம்புட்டு தான்…” என்று சொல்ல,
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. செண்பகம் கூட அப்பப்ப வர போக இருக்க ஆரம்பிச்சிட்டா. உன் சம்பந்திக்கு என்னவாம்? இருக்கட்டும் இருக்கட்டும். பிள்ளை பிறந்தா இங்க தான வரனும். புள்ளையை தூக்கிட்டு போய் நீ குடுத்தாலும் குடுப்ப. நான் கவனிச்சிக்கறேன்…” என்றிருந்தார் விசாலாட்சி.
இப்படி இன்னும் முருகேஸ்வரி அவ்விடம் தனக்கானது இல்லை என்ற மனப்பான்மையிலேயே தான் இருந்திருந்தார்.
இப்போது ஆத்மா வந்திருக்கவும் உள்ளே செல்லமுடியாமல் வாசலில் தேங்கி நின்றவரின் இந்த யோசனைகளில் அவன் திரும்பி பார்த்ததை கவனிக்கவில்லை.
“ஏன் வாசல்ல நின்னுட்டீங்க? உள்ள வாங்க…” என்றான் ஆத்மா.
“தம்பி…” என திடுக்கிட்டு நிமிர்ந்தவர்,
“இருக்கட்டும்ங்க தம்பி. நான் இங்க இருக்கேன். நீங்க பாருங்க…”
முருகேஸ்வரி சொல்லவும் மென்னகை புரிந்தவனுக்கு அவரின் எண்ணம் புரிந்தது.
“சரி முதல்முதல்ல வீட்டு மாப்பிள்ளை வீட்டுக்குள்ள வந்திருக்கேன். குடிக்க எதாச்சும் தருவீங்களா? இல்லை நான் வீட்டுக்கு போகட்டுமா?…” என்று கேட்கவும்,
“யாத்தே, இந்தா வந்துட்டேன் தம்பி. சாப்பிடறீங்களா?…” என்று கேட்டுகொண்டே வந்தவருக்கு அத்தனை தடுமாற்றம்.
என்னவோ பதட்டமாய், படபடப்பாய் வர உள்ளே அடுக்களையில் எதையோ உருட்டிக்கொண்டு இருந்தார்.
ஆத்மா ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
“என்ன சாப்பிடுவீங்க தம்பி? என்ன சாப்பிடறீங்க?…”
“பதட்டம் வேண்டாம். உட்காருங்க. நான் வரும் போது சாப்பிட்டு தான் வந்தேன். வர வழில சித்தப்பாவை கம்பெனில இறக்கி விட்டுட்டு வந்துட்டேன்…”
“இருக்கட்டும், இல்லைன்னா எதாச்சும் குடிக்கலாமே?…” என்றார். முகத்தில் சந்தோஷமும், பதட்டமும் போட்டிபோட்டது.
“சரி குடிக்க என்ன இருக்கு?…” என்றவன் தனது வாட்சை பார்த்துவிட்டு,
“இன்னும் பால் பீய்ச்ச வந்திருக்கமாட்டாங்க. அதுவும் இந்நேரம் டீ, காபி குடிக்க முடியாது. வேற என்ன இருக்கு?…”
“உங்களை தப்பு சொல்லலை தம்பி. சூழ்நிலை அப்படி. அதுவும் நான் வந்தது…”
“அத்தை நான் உங்களை எதுவும் சொல்லலை….” என உரிமையுடன் அத்தை என அழைத்ததும் மகிழ்ந்து போனார் அவர்.
“நான் என்னை தான் நினைச்சேன். சட்டுன்னு வந்ததில்லை இப்படி இங்க. விசாலம் அத்தை, சித்தப்பா வீடுன்னு உரிமையா போயிருக்கேன். ஆனா எனக்கு தெரிஞ்சு இங்க வந்தது எல்லாம் சுத்தமா நியாபகமே இல்லை…” என்றவன்,
“உண்மை தான். ரிதுவை கல்யாணம் பண்ணின பிறகு இத்தனை நாள்ல ஒருதடவையாச்சும் வந்திருக்கனும். ஆனா சட்டுன்னு வர என்னவோ முடியலை. இன்னைக்கு வெளில நின்னு கூப்பிட்டு பார்த்து யாரும் இல்லைன்னதும் தான் வந்துட்டேன்…” என சிரித்தான்.
“இது உங்க வீடு தம்பி. உரிமைப்பட்டவங்க. எப்ப வேணும்னாலும் வரலாம்…” என்ற முருகேஸ்வரி,
“நாங்க இங்க சும்மா ஒதுங்கி இருக்கோம். அவ்வளவு தானே தவிர எங்களை நினைச்சு உங்க சொந்தத்தை விட்டுடாதீங்க. நான் கூட நாங்க இருக்கற சங்கடத்துல வரலையோன்னு நினைக்காத நாளில்லை. ஆனா எங்களுக்கும் வேற போக்கிடம் இல்லை…” என்ற பொழுதே கண்ணீர் வந்துவிட்டது முருகேஸ்வரிக்கு.
“ஏன் இப்படி நினைக்கறீங்க அத்தை? இப்ப உங்களுக்கு இங்க எல்லாருமே இருக்கோம்…” ஆத்மா சங்கடத்துடன் சமாதானம் செய்தவன் ரிது எழுந்து வந்துவிடமாட்டாளா என்ற தவிப்புடன் இருந்தான்.
அவனால் இப்படி தனியாக முருகேஸ்வரி கண்ணீரை எதிர்கொள்ள முடியவில்லை.
‘வாங்க, சாப்பிடுங்க, கேட்ட கேள்விக்கு பதில், சில வார்த்தையில் தகவல் தெரிவிப்பது இப்படித்தான் இதுவரை முருகேஸ்வரியுடன் அவனின் உரையாடல்கள்.
அதை தாண்டி வேறு எதுவும் பேசியதில்லை. இப்போது அவர் அழவும் ஒருவித சங்கடமான உணர்வில் தத்தளித்தான்.
கையில் மொபைலை சுழற்றியபடி இருந்தவன் சட்டென விசாலாட்சிக்கு அழைத்துவிட்டான் ஆத்மா.
“உங்ககிட்ட சொல்லலாமான்னும் தெரியலை. ஆனாலும் மனசு கேட்கலை. நாங்க ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் தம்பி. சாப்பாட்டுக்கே அல்லாடவேண்டிய சூழ்நிலை. வேலைக்கு போனா தான் சோறு…” என்னும் பொழுதே விசாலாட்சி வந்துவிட்டார்.
வந்தவர் அமைதியாக முருகேஸ்வரியின் பேச்சை கேட்டபடி அங்கேயே நின்றுவிட்டார்.
“ஈரோட்டுல நான் வேலை பார்த்த கம்பெனில தான் ரிதுவோட அப்பாவோட பழக்கம். அங்க அடிக்கடி வர மனுஷன் பேச்ச உண்மைன்னு நினச்சேன். சத்தியமா அப்ப எனக்கு தெரியாது தம்பி அவருக்கு கல்யாணமாகிருச்சுன்னு. தெரிஞ்சிருந்தா அவர் பக்கமே நின்னிருக்கமாட்டேன்…”
“ரிது அம்மா இறந்தப்ப தான் ஒருநாள் வந்தாரு. கல்யாணமாகிருச்சுன்னும், பொண்ண பார்த்துக்க யாருமில்லாத அனாதையா நிக்கிறேன்னு கண்ணீர் விட்டாரு. அதையும் இந்த கிறுக்கச்சி நிசம்ன்னு நம்பிட்டேன். யோசிக்காம என் குடும்பத்தை விட்டு வந்துட்டேன்…”
“குடும்பம் பெருசா இல்ல. அப்பா மட்டும் தான். அந்த மனுஷனும் இல்லாம அனாதையா இருந்த என் பாதுகாப்புக்கு இவரை பிடிச்சுட்டு வந்துட்டேன். என்னோட நிலைமை அப்படி. இங்க ஒரு வேலைக்காரியா இருந்திடுவோம்ன்னு இருந்தேன்…”