“இங்க வந்தப்ப தான் நான் இல்லைன்னாலும் ரிதுவை பார்த்துக்க இங்க அத்தனை பெரிய குடும்பம் இருக்கறதே தெரிஞ்சது. திரும்பி போகலாம்ன்னா எங்க போக? எனக்கு யாரையும் தெரியாதே? அதான் இருந்துட்டேன். அதையும் விட ரிது அப்பா மேல ஒரு பயம். எதிர்த்து கேட்க தெரியலை…”
“என்னால உங்க குடும்பமே பிரிஞ்சது. ஆனா என்னை நம்பி என் கையை பிடிச்ச பொண்ணுக்கு நான் உண்மையா இருக்கனும்னு நினைச்சேன். ரிதுவுக்கு எட்டு வயசுல வித்யா பிறந்தா. எத்தனை இருந்தாலும் அவளுக்கு எந்த உரிமையும் இதுல எடுக்க எனக்கு மனசில்லை…”
“ஆனா ஒன்னொன்னுலையும் என் தங்கச்சின்னு ரிது வித்யாவை எடுத்துக்கும் போது அதுக்கு என்னால தடை போட முடியலை. வித்யாவுக்கு சொந்தமானது இது இல்லைன்னு தோணும். ஒருகட்டத்துல தகப்பனும் போய் வயசு பொண்ணோட இங்கயே இருந்து பார்த்துகிட்டேன்….”
“பார்த்துக்கிட்டேன்னு நான் சொல்றதுக்கு கூட கூசத்தான் செய்யனும். இங்க எல்லாரும் தான் எங்களை பாதுகாப்பா பார்த்துக்கிட்டாங்க. அதுதான் நிசம். என்னதான் பேசாம முகத்தை திருப்பினாலும் வெளில போடின்னு ஒருத்தரும் ஒரு வார்த்தை சொல்லலை. அது உங்க பெரிய மனசு…”
“என் கட்டை வேகற வரைக்கும் நான் இந்த நன்றியை என்னைக்கும் மறக்கமாட்டேன் தம்பி. ஏற்கனவே இந்த வீட்டு பொண்ணுக்கான உரிமையை என் மகளும் சேர்ந்து அனுபவிக்கிறா. அதுவே நாங்க செஞ்ச புண்ணியம். அது போதும் எங்களுக்கு…”
“இனியாச்சும் எல்லாரும் இங்க வந்து போகனும். வித்யாவுக்கு ஒரு வரனை பார்த்து நல்ல இடத்துல கட்டி குடுத்துட்டா நான் கோவில் குளம்ன்னு எங்கியாச்சும் காலத்தை ஓட்டிருவேன்…” என்று அழுதபடி கண்ணீரை துடைத்தார்.
ஆத்மாவால் எதற்கும் பதில் பேசவோ, சமாதானம் சொல்லவோ, நடந்துவிட்டது விடுங்க என்று கூறவோ முடியவில்லை.
‘நிராதரவு, போக இடமில்லை, வாழ்க்கையும் இல்லை, செல்ல வழியின்றி இங்கிருந்தேன்?’ என்று குமுறும் மனதை எத்தனை நாட்கள் பூட்டி வைத்திருந்தாரோ? வேதனை தான் அத்தனையும்.
இதில் தன் குடும்பத்தினரின் ஒதுக்கங்கள், பேச்சுக்கள் என்று எதிலுமே அவர் முகம் சுருக்கவில்லையே?
இதிலிருந்து ஒன்றுமட்டும் புரிந்தது அவனுக்கு. இத்தனை வருடங்கள் இந்த குற்றவுணர்ச்சியில் தான் அவரின் காலம் கடந்திருக்கிறது என்று.
அவர் நினைத்திருந்தால் ‘என்னை கேட்க நீ யார்?’ என்று எதிர்த்திருக்கலாம். எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இருக்க அவசியமென்ன?
எதையும் உரிமையாக நினைக்காமல் ஒரு வாழ்க்கை. அத்தனையையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக கடந்து வந்திருக்கிறார்.
நினைத்திருந்தால் இரண்டாம் மனைவி என்னும் உரிமையில் அவர் என்ன வேண்டுமானாலும் இங்கே சாதித்திருக்கலாம்.
ஆனால் அன்புக்கு கட்டுப்பட்டு, மனசாட்சிக்கு விரோதமின்றி தனது இடம் இதுவென்று அதனை எல்லை வைத்து இருந்தது வியப்புக்குரியதாய் இருந்தது ஆத்மாவிற்கு.
தவறில்லை. ஒரு மாற்றாந்தாயின் மீது இத்தனை அன்பு ரிது வைத்திருந்தது தவறே இல்லை என முன்பே தோன்றியது தான் இப்போது ஸ்திரம் பெற்றது.
இப்படி எந்தவித கல்மிஷமும் இல்லாத ஒரு அன்பு கொண்ட மனிதி அவளுக்கு தாயாய் கிடைத்ததில் இந்தளவேணும் பாசமில்லை என்றால் தான் எப்படி?
ஆத்மா நினைத்து வருந்திக்கொண்டிருந்தான் முருகேஸ்வரியின் இந்த விளக்கத்தில்.
இதை இவர் தனக்கு சொல்லவேண்டிய அவசியம் என்ன? தன்னுடைய வருகையின்மை எந்தளவிற்கு இவரை பாதித்திருக்கிறது என நினைக்கையில் தன்னையே நிந்தித்துக்கொண்டான்.
“அழாதீங்க அத்தை….” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
“இந்தா நிறுத்து முருகேஸு…” என்று விசாலாட்சி அதற்கு மேல் நிற்காமல் அதட்டியபடி உள்ளே வந்தார்.
“அக்கா…” என்றவர் அவரின் பக்கம் திரும்பி கேவி அழுதபடி உள்ளே செல்ல போக,
“சரி, அதான் முடிஞ்சு போச்சே. விடுத்தா. இம்புட்டு நாள்ல ஒத்த சொட்டு கண்ணீரை பார்த்திருப்பேனா இதை நினைச்சு. போன மனுஷன் ஆட்டமா ஆடிட்டு போய் சேர்ந்தாச்சு. பொம்பளைங்க தான் இங்க படாத பாடு பட்டுட்டு நிக்கிறோம். விடு…”
விசாலாட்சி அவரை தேற்ற ஆத்மா முகத்தில் ஆச்சர்யம். இவர்களிடம் எத்தனை புரிதல்?
இப்போதும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. முருகேஸ்வரிக்கு அங்கே முதலில் கை கொடுத்து துணை நின்றது விசாலாட்சி தான்.
தனது தங்கையின் இடத்திற்கு வந்தவர் என்று அவரை தள்ளி நிறுத்தி பழிக்காமல் அவரின் சூழ்நிலையை அறிந்து துணை நின்றதெல்லாம் எப்படி ஒரு மனது என்று பார்த்தான்.
சூழ்நிலை, விதி. இவை மட்டுமே அனைத்திற்கும் காரண காரணிகளாக இருந்துகொண்டு மனிதர்களை எத்தனை தூரம் ஆட்டிப்படைகிறது என நினைத்தவன் முகத்தில் பெரும் அமைதி.
“அதென்ன இவ்வளவு அழுகை? இப்ப இங்க என்ன நடந்து போச்சு? அதான் வந்துட்டானே? அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை. உரிமையா மாப்பிள்ளைன்னு கூப்பிடாம தம்பி தம்பின்னுட்டு இருக்க?…” என்று விசாலாட்சி அதட்டவும்,
“அதானே?…” என்றான் ஆத்மாவும்.
முருகேஸ்வரி கண்ணீரை துடைத்துவிட்டு அப்போதும் மாற்றி மாற்றி விழித்துக்கொண்டு தான் இருந்தார்.
“இன்னும் என்ன?…” விசாலாட்சி கேட்க,
“உங்களை வாய் நிறைய மாப்பிள்ளைன்னு கூப்பிட கூட பயமா இருந்துச்சு. ஆனா கூப்பிடனும்னு தோணவும் செஞ்சுச்சு…” என தலையை குனிந்தபடி சொல்ல,
“சரி இப்ப கூப்பிடுங்க…” என்றான் ஆத்மா.
“இல்ல, இல்ல வேண்டாம் தம்பி. ஏற்கனவே இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்னு பேசறாங்க. இப்பத்தான் உங்கப்பாவும், அம்மாவும் நல்லா இருக்காங்க. நான் கூப்பிட்டு யாராச்சும் கோவிச்சு…” என சொல்லும் பொழுதே,
“இங்க என்ன பன்றீங்க? என்ன கண்ணா எப்ப வந்த? எங்க உன் சித்தப்பா?…” என்று இலகுவாய் வந்தார் செண்பகம்.
அவர் எல்லாம் கேட்டிருப்பாரோ என பார்த்தபடி மற்றவர்கள் இருக்க அவர் அப்போது தான் வந்திருந்தார்.
“அதான் போன்ல சொன்னேனே? இப்ப தூங்கறா….” என்று விசாலாட்சி சொல்ல,
“சரி, அப்ப நான் போய்ட்டு அப்பறமா வரேன்…” என்று கிளம்பிவிட்டார்.
செண்பகம் வந்ததிலிருந்து அவர் பேசி சென்றது வரை முருகேஸ்வரி ஒருவித பதட்டத்துடனே இருந்ததை கவனித்த ஆத்மாவிற்கு அவரை பார்க்க அத்தனை பரிதாபமாக இருந்தது.
“சரி நானும் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். ரிது எழுந்துக்கவும் கூப்பிட சொல்லுங்க அத்தை…” என்று கிளம்பியிருந்தான் ஆத்மா.
“சரிங்க தம்பி…” என முருகேஸ்வரி சொல்ல முகத்தில் மென்னகை.
“உங்களுக்கு எப்ப கூப்பிடனும்னு தோணுதோ அப்ப மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க. ஆனா நான் உங்க மாப்பிள்ளை தான். மனசுல வச்சுக்கோங்க…” என்று சொல்லிவிட்டு வெளியே வர படி இறங்கும் பொழுதே அண்ணாமலையின் கார் வந்துவிட்டது.
முருகேஸ்வரியின் மூச்சே நின்றுவிட்டது. ஆனந்தி என்ன சொல்வாரோ என்று பயத்துடன் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு பார்க்க பதட்டமின்றி முன்னே நடந்தான் ஆத்மா.
மகனை அங்கிருந்து வரும் பொழுதே அண்ணாமலையும், ஆனந்தியும் பார்த்துவிட்டனர்.
காரை விட்டு இறங்க ஆத்மா அருகே செல்லவும் முருகேஸ்வரியும், விசாலாட்சியும் கூட உடன் சென்றனர்.
“என்னம்மா ஹாஸ்பிட்டல் போனா போன் போட்டு சொல்லமாட்டியா? இப்ப எப்படி இருக்கா?…” என்றார் அண்ணாமலை முருகேஸ்வரியிடம்.
“என் கிட்ட சொல்லியிருந்தா அப்பவே கிளம்பி வந்திருப்பேன்ல?…” என்ற ஆனந்தி,
“நீ பார்த்தியா கண்ணா? ரிது என்ன பன்றா?…” என மகனிடம் கேட்டார்.
“தூங்கறாம்மா…” என்று சொல்லியவன்,
“நானும் போய் ட்ரெஸ் மாத்திட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்…” என்று வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
“சரி போங்க…” என்ற அண்ணாமலை,
“ஆனந்தி இனிமே கொஞ்ச நாளைக்கு வெளி சோலிக்கு நீ வர வேண்டாம். அவசரத்துக்கு யாராச்சும் இருக்கனும் இங்க…” என்று சொல்லிக்கொண்டே சென்றார் அவர்.
“சரிங்க…” என்ற ஆனந்திக்கு அங்கே நிற்கவா வேண்டாமா என்று தயங்கி நிற்க,
“என்ன? என்ன சரியா பதிலில்லை…”
“இல்லை நானும் போய் மருமகளை பார்த்திட்டு வரட்டா?…” என கேட்டுவிட விசாலாட்சி முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
“பார்த்தியா?…” என முருகேஸ்வரி கையை இடிக்க,
“சும்மாருங்கக்கா…” என்றார் பதட்டத்துடன் அவர்.
“என்கிட்டே ஏன் கேட்கிற? உன்னை என்ன இங்க கட்டியா போட்டிருக்கேன்? போய் பாரு. என்னன்னு இருந்து கவனி. இதெல்லாம் ஒருத்தர் உனக்கு சொல்லனுமாக்கும்?…” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட,
“சரி வாங்க போவோம்…” என முன்னே நடந்தார் ஆனந்தி அத்தனை சாதாரணமாய்.
மாற்றம் ஒன்றே மாறாதது. மனிதர்களின் மாற்றம் இயல்பானது. இயல்புகள் தொலையாத மாற்றம் அழகானது.