ஆத்மா ரிதுபர்ணாவுடன் கிளம்பும் வரை அண்ணாமலை வரவில்லை. ஆனந்தி அத்தனைமுறை போன் செய்து பார்த்துவிட்டார்.
இளவரசுவிடம் சொல்லியும் அழைக்க சொல்லி பார்க்க அண்ணாமலை எதற்கும் மசியவில்லை.
“மனோ, உன் அம்மாக்கிட்ட சொல்லி வை. சும்மா போன் போட்டுட்டே இருந்தா அவனோடவே கிளம்ப சொல்லு. அவன் பண்ணிருக்கறதுக்கு பேரு கல்யாணம். அதுக்கு நான் வேற வந்து வழியனுப்பனுமா? என் மூஞ்சிலயே முழிக்க கூடாது அதுங்க ரெண்டும்…” என மகளிடம் அழைத்து கத்திவிட்டிருந்தார்.
ஆனாலும் ஆனந்தி கேட்பவரா? மீண்டும் மீண்டும் அழைக்க கட்டுக்கடங்காத போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் அண்ணாமலை.
இது சரிப்பட்டுவராது என இளவரசுவின் மகன் முரளியை அழைத்து நேரில் சென்று பார்க்க சொல்ல என இளவரசுவின் வீட்டிற்கு வந்தார் ஆனந்தி.
வந்தவர் முன் வரவேற்பறையில் நின்றுகொண்டு முரளியை அழைக்க உள்ளிருந்து செண்பகம் தான் வந்தார்.
“என்னக்கா? அவன் சாப்பிடறான். என்ன விஷயம்ன்னு சொல்லுங்க…” என்று தானும் அங்கேயே நின்றுகொண்டார்.
அதனை மீறி ஆனந்தியால் உள்ளே செல்லமுடியவில்லை. செண்பகம் அழைத்த போதே உள்ளே சென்றிருக்கவேண்டுமோ என நினைத்தவருக்கு இப்போது சத்தமிட்டு அழைக்கவும் முடியவில்லை.
உள்ளே மகன் வேறு இருக்க என்ன செய்வது என கையை பிசைந்துகொண்டு நின்றார் ஆனந்தி.
இப்படி ஒரு நிலையில் தன்னை நிறுத்துகின்றனரே தகப்பனும், பிள்ளையும் என ஆத்திரம் வேறு வந்தது அவருக்கு.
“சொல்லுங்கக்கா, உள்ள பிள்ளைங்களுக்கு பரிமாறனும். நீங்களும் உள்ள வந்து சாப்பிடுங்க. பொண்ணு மாப்பிள்ளைக்கு விருந்து தான் நடந்திட்டிருக்கு…” என்று சொல்ல தன்னை கேலி செய்வதை போலிருந்தது செண்பகத்தின் பேச்சு.
“ஒன்னும் வேண்டாம். முரளி சாப்பிட்டதும் கம்பெனிக்கு போய் அவரை கூட்டிட்டு வர சொல்லு…”
“ஏன் மாமாவுக்கு போன் போடவேண்டியது தானே?…”
“அவர் எடுத்தா நான் ஏன் இங்க வரேன்? சூப்பர்வைசர்க்கு போட்டும் அவர் போனை வாங்கமாட்டிக்காரே….” என்றார் ஆனந்தி.
“இத்தனைபேர் சொல்லியே மாமா கேட்கலை. இவன் போய் கூப்பிட்டா மட்டும் வந்திருவாரா? விடுங்கக்கா. போக போக சரியாகிடும்…” என்ற செண்பகம்,
“மனோவை வர சொல்லுங்க. உங்களுக்கு சாப்பாடு குடுத்து விடறேன்…”
“ஒன்னும் வேண்டாம். ராணியே சமைச்சாச்சு…” என்று சொல்லிவிட்டு ஆனந்தி சென்றுவிட்டார்.
செண்பகம் உள்ளே வரவும் இளவரசு கூட சத்தம் போட்டார் ஏன் உள்ளே வர சொல்ல வேண்டியது தானே என்று.
“சாப்பிட கூப்பிட்டேன். கண்ணன் இருக்கான்னு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. முரளியை அங்க கூப்பிட்டாங்க. சாப்பிடற பிள்ளையை அனுப்ப முடியுமா?…” என்ற செண்பகம்,
“ரிது உனக்கு சமைக்க தேவையான எல்லாம் ஏற்கனவே உன் வீட்டுல பேக் பண்ணியே இருக்கு. வேற ஏதாவது வேணும்னா என்கிட்டே சொல்லு. சென்னைக்கு பார்சல் போட்டுவிடறேன்….” என்றார்.
அங்கேயே தன்னை இருக்க வைக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் அனைவரும் செய்துகொண்டிருந்தனர். புரிந்தும் மறுக்கமுடியாமல்,
“அதுவே போதும் த்தை. வேணும்னா மட்டும் சொல்றேன்…” என ரிதுபர்ணா சொல்ல ஆத்மா எதுவும் பேசவில்லை.
“இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ கண்ணா…” என செண்பகம் அவனை கவனிக்க,
“போதும் சித்தி. ட்ரைவ் பண்ணனும்…” என்று எழுந்துகொண்டான்.
“ட்ரைவரை போட்டுக்கோயேன் கண்ணா. உங்களை விட்டுட்டு வரட்டும்…” என இளவரசு கூட சொல்ல,
“எனக்கு பிடிக்காதே சித்தப்பா. என் கார், நான் தான் ட்ரைவ் பண்ணனும்…” என்று சொல்லிவிட்டான் ஆத்மா.
அவன் கை கழுவ எழுந்ததும் அதற்கு மேல் ரிதுபர்ணா அமரவில்லை. கிளம்புகிறானே என அவனுடனே எழுந்துகொள்ள அவளை பார்த்தவன்,
“நீ சாப்பிட்டு வா…” என்றான்.
“இல்ல எனக்கும் போதும்…”
“ப்ச், உட்கார்…” என்று ஆத்மா அமர இந்த அதட்டல் எல்லாம் புதிதாய் இருந்தது ரிதுவிற்கு.
விவரம் தெரிந்து யாரும் இப்படி அவளை அதட்டியதில்லை. இளவரசுவே அவளிடம் தன்மையாக தான் பேசுவார்.
ஆத்மாவின் இந்த அதட்டல் சற்றே அதிகாரத்தொனியாக தெரிந்தது ரிதுபர்ணாவிற்கு.
அங்கே வைத்து மற்றவர்கள் முன்னிலையில் அவனுடன் வழக்காட என்ன, பேச கூட என்னவோ மனதில்லை. அமைதியாக அமர்ந்து இலையில் இருப்பதை வேகமாக சாப்பிட,
“மோர் மட்டும் குடுங்க சித்தி குடிக்கறேன்…” என கேட்டு வாங்கிக்கொண்டு அவள் சாப்பிடுவதை கவனித்தான் ஆத்மா.
அவனின் குறுகுறுப்பான பார்வையில் சாப்பிட முடியாமல் கையில் எடுத்த உணவுடன் அவனை பார்த்தவள்,
“சாப்பிடும் போது இப்படி பார்க்க கூடாது. திரும்புங்க…” என்றாள் உடனே. முதல்முறை அவளிடமிருந்து கட்டளை.
கட்டளையே தான். அவள் எப்படி உண்ணுகிறாள் என அப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தான் ஆத்மா.
அதில் சற்று சங்கோஜமாகி போனவள் பட்டென்று சொல்லிவிட ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டான்.
அண்ணாமலை போல சத்தம் எழுப்புவானோ என பார்க்க ம்ஹூம், அவன் அதற்கு மேல் அவளை கவனிக்கவில்லை.
அண்ணாமலை கோபம் அந்த ஊரறிந்தது. இடம் பொருள் பார்க்காத மனிதர். பேச்சென்று வந்துவிட்டால் முகதாட்சண்யம் கூட பார்க்காமல் வாளாய் வார்த்தைகளை வீசிவிடுபவர்.
அவரின் சத்தம் அந்த காம்பவுண்டிற்குள் அத்துப்படி. வேலையாட்களிடம் கூட சாதாரணமாகவே சுள்ளென்று விழும் மனிதர்.
ஆத்மாவின் குரலை அப்படி எல்லாம் என்றும் கேட்டதில்லை. ஆனாலும் இப்போது அவன் அதட்டியது அண்ணாமலையை சற்றே ஞாபகப்படுத்தியது ரிதுபர்ணாவிற்கு.
சாப்பிட்டு வெளியே வர முருகேஸ்வரி அங்கே அவர்கள் வீட்டு வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்தார் வித்யாவுடன்.
“போய் சொல்லிட்டு வா. நான் வெய்ட் பன்றேன்…” என்று ஆத்மா நின்றுகொண்டான் இளவரசு வீட்டு வாசலிலேயே.
ஆத்மாவை ரிதுபர்ணாவுடன் வீட்டிற்கு அழைத்து சம்பிரதாயம் செய்ய முருகேஸ்வரிக்கு கொள்ளை ஆசை தான்.
ஆனால் அழைக்கவே அச்சமாக இருந்தது. திருமணம் முடிந்தும் அந்த வீட்டை கவனித்து பார்க்க கூட அவன் முயலவில்லையே?
அப்படி இருக்க அழைத்தால் மட்டும் வந்துவிடுவானா என்று தோன்றியது. இப்போதும் மனைவியை மட்டும் அனுப்பிவிட்டு தன் சித்தப்பாவின் வீட்டினருகே நின்றுகொண்டவனை கவனித்தபடி ரிதுவை பார்த்தார்.
இங்கே வெளியே இவர்களது பேச்சு சத்தம் கேட்க நடப்பவற்றை பார்த்து சொல்லவென்று காவலுக்கு நின்ற ராணியின் அழைப்பின் பெயரில் ஆனந்தியும், மனோவும் வெளியே வந்துவிட்டனர்.
விசாலாட்சி முருகேஸ்வரியுடன் பேசிக்கொண்டிருக்க ரிதுபர்ணா வரவும் இருவரும் அவளின் கையை பிடித்துக்கொண்டனர்.
“உள்ள வந்து அப்பா அம்மா படத்துக்கு கும்பிட்டுட்டு கிளம்பு கண்ணு…” என முருகேஸ்வரி உள்ளே அழைக்கவும் ஆத்மாவை பார்க்க அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“நீ வா, அவன் நிப்பான். எல்லாத்துக்கும் அவனை பார்க்கனுமா என்ன?…” என விசாலாட்சி அழைத்து செல்ல ஆத்மா தன் காரின் மேல் சாய்ந்து நின்றுகொண்டான்.
“அண்ணா…” மனோவின் குரல் அருகில் கேட்க,
“சொல்லு மனோ…” என சொல்லியவன் குரலில் மனோ தயங்க ஆனந்தி அங்கிருந்தே பேசுமாறு சைகை செய்தார்.
“அப்பாக்கிட்ட சொல்லாம இப்படி கிளம்பறது…”
“நீ சொல்லிடு. நான் இன்னும் பத்துநாள் இங்க இருந்தாலும் அவர் வரமாட்டார். தெரிஞ்சே அவருக்காக நானும் வெய்ட் பண்ண முடியாது. எனக்கும் வேலை இருக்கு. நான் கிளம்பறேன்…” அவ்வளவு தான்.
அதற்கு மேல் எதுவும் எதுவும் பேசவில்லை. மனோ தாயின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
அவளும் எதுவும் சொல்லாமல் செல்ல ஆத்மா தன் தாயையும் தங்கையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிவிட்டான்.
ரிதுபர்ணா வரவும் அவளின் கையில் இன்னும் சில பைகள் இருந்தது. காரின் அருகே வந்த முருகேஸ்வரி,
“தம்பி, ரிது பொண்ணு எதுவும் வாய்விட்டு கேட்காது. கொஞ்சம் பார்த்துக்கோங்க…” என்றார் ஆத்மாவிடம் தன் தைரியத்தை கூட்டிக்கொண்டு.
இத்தனை வருடத்தில் அவன் அவரின் முகத்தையாவது கவனித்திருப்பானா என்று அவருக்கே தெரியவில்லை.
இப்போதும் ரிதுவிடம் காரில் ஏறுமாறு சொல்லிவிட்டு முருகேஸ்வரிக்கு தலையசைத்தான்.
அந்தமட்டும் அவருக்கு அத்தனை சந்தோஷம் பதிலளித்துவிட்டான் என்பதை போல மகிழ்ந்து போனார்.
“கண்ணா…” என அவனின் அத்தை விசாலாட்சி வர உடன் அவரின் கணவர் ஏழுமலையும் வந்தார்.
“புறப்பட்டுட்டியா கண்ணா?…” என அவர் கேட்க,
“ஆமா மாமா. இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்…” என்று நேரத்தை பார்த்து சொல்ல,
“என்ன பார்த்துட்டே நிக்கிற விசாலம், இதை குடு…” என்று சொல்லவும் என்ன என பார்த்தான் ஆத்மா.
“ஒண்ணுமில்லை, ரிதுவுக்கு பிடிச்ச பலகாரம். உன் மாமா போய் வாங்கிட்டு இப்பதான் வரார்…” என்று அந்த பையை நீட்ட ஊஃப் என்று மூச்செடுத்தவன் அதையும் வாங்கி உள்ளே பின் இருக்கையில் வைத்தான்.