விசாலாட்சி, ஏழுமலை தம்பதிகளின் மகள் சுந்தரி. பக்கத்து ஊரில் தான் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இன்னொரு மகன் பரத்.
“பரத் பெரியண்ணனோட கம்பெனிக்கு போய்ட்டான். இல்லைன்னா அவனும் இருந்திருப்பான்…” என்று சங்கடமாக சொல்ல,
“இப்ப ஏன் இவ்வளோ விளக்கம் த்தை? நான் கேட்கவே இல்லையே?…” என்றான் ஆத்மா.
இதுவெல்லாம் அவனுக்கு தேவையில்லாததாகவே பட்டது. இருந்தால் மட்டும் என்னவாகிவிடும் என்று நினைத்தான் அவன்.
“சரி நான் என்னவோ பேசிட்டிருக்கேன். அதைவிடு. நீ ரிதுவை நல்லா பார்த்துக்கோ கண்ணா…” விசாலாட்சி அவளையும் பார்த்தவாறு சொல்ல,
“நான் பார்த்துக்கறேன் த்தை. தெரியாமலா கூட்டிட்டு போறேன்…” என்று கிண்டலாக சொல்லி,
“கூடவே இருந்து பார்த்துக்கறேன் போதுமா?…” என்றான் ஆத்மா விசாலாட்சியிடம் சிரித்தபடி.
“என்ன நீ? இது பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்சு போகும் போது எல்லார் வீட்டுலையும் சொல்றது தான். கேட்டுக்கப்பா கண்ணா…” சொல்லிய இளவரசு,
“ரிதும்மா, இனிமேலும் எல்லாத்துக்கும் அமைதியா இருக்க கூடாது. வேணும்னா வாய்விட்டு கேட்கனும். முடியலைன்னா நீ தான் சொல்லனும். அங்க நாங்க யாரும் உன் கூட இல்லை. கண்ணா மட்டும் தான். புது ஊர் வேற…” என்று சொல்ல,
“சரிங்க மாமா…” என்றவள் இளவரசுவிடம்,
“அவங்ககிட்ட சொல்ல…” என ஆனந்தி, மனோவை திரும்பி பார்த்தாள்.
சொல்லிவிட்டு செல்ல சொல்வார்களோ குடும்பத்தினர் என்று நினைத்தபடி எட்ட இருந்தவர்களை பார்த்து கேட்க ஆத்மாவும் அங்கே தான் பார்த்தான்.
அப்போது கூட இதனை கண்டு ஆனந்தி அருகே வரவில்லை. மகனிடம் பேசவுமில்லை.
மனோவிற்கு வரவேண்டும் என்று ஆசை இருந்தாலும் தாயை தனித்து விட்டுவிட்டு செல்ல முடியவில்லை.
“உன் அத்தை தானே? இதுல என்ன இருக்கு? சொல்லிட்டு கிளம்பு ரிது…” என்ற விசாலாட்சி,
“வா, நான் உன் கூட வரேன்….” என ரிதுபர்ணாவின் கையை பற்ற,
“வேண்டாம் த்தை. இருக்கட்டும்…” என்றான் ஆத்மா.
“என்ன கண்ணா நீ? அம்மா அங்கயே நிக்கிறாங்க…”
“அங்க தானே நிக்கிறாங்க. நிக்கட்டும்…” என்றவன் ரிதுவிடம்,
“நீ போய் போய்ட்டு வரேன்னு சொன்னாலும் பதிலுக்கு அவங்க எதுவும் சொல்ல போறதில்லை. முகத்தை திருப்புவாங்க. தேவையா உனக்கு? வேண்டாம், விடு…” என ஆத்மா சொல்லிவிட மற்றவர்களும் அங்கே பார்த்துவிட்டு இவர்களுக்கு தலையசைத்தனர்.
“ஹ்ம்ம், ஏறு…” என்று சொல்லவும் ரிதுவும் அனைவரிடமும் சொல்லிவிட்டு காரில் அமர்ந்தாள்.
அத்தனைபேரும் அங்கேயே கையசைத்தபடி இவர்களை வழியனுப்பி நிற்க கார் அந்த வளாகத்தை தாண்டி பெரிய கேட்டை விட்டு வெளியேறி வீதியில் இறங்கியது.
அதுவரை அமைதியாக இருந்தவன் பார்வை இப்போது கண்ணாடி வழியே பின்னிருக்கையில் பதிந்தது.
“சென்னைல எதுவுமே கிடைக்காத மாதிரி இத்தனை ஏத்தி விட்டிருக்காங்க. இது தான் இத்தனை திங்க்ஸ் என் கார்ல பர்ஸ்ட் டைம் நான் கொண்டுபோறது. உன்னோட லக்கேஜ் மட்டும் கொண்டுவந்தா பத்தாதா?…” என்றான் ஆத்மா.
“பிடிக்கலைன்னா இறக்கி வச்சிடலாம். இன்னும் ஊரை தாண்டலை தானே? கஷ்டப்பட வேண்டாம்….” ரிதுவும் பதிலுக்கு சொல்ல அவளை திரும்பி பார்த்தவன்,
“நான் லக்கேஜை சொன்னேன்…” என்றான் உடனே.
ஆனால் ரிது ‘தன்னை’ என்று சொல்லவில்லை. மௌனமாய் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.
மனதில் அத்தனை யோசனைகள். வேலை பார்க்கும் கல்லூரியில் இருந்து தோழிகள் அழைத்திருக்க யாரிடமும் பேசவில்லை. அழைப்பை ஏற்கும் நிலையிலும் இல்லை.
நிச்சயம் திருமணம் பற்றி மட்டும் பேச போவதில்லை. எப்படி சமாளித்தாய்? என்ன நடந்தது? முன்பே காதலா? இப்படியான கேள்விகள் இன்னும் கூட வரும்.
எதையும் ஏற்காமல் அதனை கையில் வைத்துக்கொண்டே வர வித்யாவிடமிருந்து மெசேஜ் வந்துகொண்டிருந்தது ரிதுபர்ணாவிற்கு.
கரூரை தாண்டி சென்றுகொண்டிருந்தது கார். மூன்று மணி நேரத்திற்கு மேல் கடந்துவிட்டது.
இருவரிடமுமே பேச்சில்லை. பாடல் மட்டும் மெல்லிய சத்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் அமைதியாய் சாலையில் கவனம் வைத்திருக்க நேரம் செல்ல செல்ல ரிது ஒருவிதமாய் இலகுவாய் அமர முடியாமல் அவஸ்தையுடன் இருந்தாள்.
சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் ஏசியில் இருந்தாலும் என்னவோ மதிய உணவை உண்டதற்கும், இரவு உறக்கமில்லாமல் இருந்ததற்கும் எப்படியோ வந்தது.
இதில் உடலின் அவசர அழைப்பு வேறு தலையை பிளந்தது. எங்காவது இறங்கி முடித்து, ஏதேனும் குடித்தால் என்ன என்று தோன்ற இவனிடம் கேட்பதா என யோசனையுடன் பார்க்கையில் காரை ஓரங்கட்டி பழச்சாறு கடை ஒன்றில் நிறுத்தினான் ஆத்மகண்ணன்.
“வாஷ்ரூம் போறதுனா போய்ட்டு வா ரிது…” என்று சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்…” என மறுத்துவிட்டாள் ஒரு பேச்சிற்கு.
“ஓகே, நான் போய்ட்டு வரேன். நீ கார்ல வெய்ட் பண்ணு…” என அவன் இறங்கிக்கொண்டு கதவை சாற்றி செல்ல ஐயோ என்றானது.
“சொல்லும் போதே போயிருக்கலாம். தேவையா எனக்கு?…” என தலையில் அடித்துக்கொண்டவள் திரும்பி கதவை திறக்க பார்க்க லாக் செய்யப்பட்டது கதவு.
“போச்சு, பூட்டிருக்காங்க. இறங்கவும் முடியாது…” என வயிற்றை பிடித்துக்கொண்டு அவஸ்தையாய் வெளியே பார்க்க அங்கே கடையின் முன் நின்று இடுப்பில் கை வைத்தபடி இவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான் ஆத்மா.
அவனை பார்த்ததும் ஆசுவாசமும், கண்டுகொண்டானே என அசட்டு பார்வையுமாய் அவனிடத்தில் அவள் பார்வை பதிய,
“வரியா?…” என்று ஒற்றை விரல் நீட்டி வெளியிலிருந்து கேட்க என்னடா இவன் என்று பார்த்தவள் ஆமாம் என தலையசைத்தாள்.
மீண்டும் லாக்கை விடுவித்தவன் அருகே சென்று கதவை திறந்துவிட இறங்கினாள் ரிதுபர்ணா.
“அந்த லெப்ட் போய் ரைட் திரும்பினதும் பர்ஸ்ட் ரூம். வெளில போர்ட் இருக்கும்…” என்று சொல்ல வேகமாய் அவனை பார்க்காமல் ஒரு ஓட்டம்.
“கொஞ்சம் பிடிவாதமும் இருக்கும் போல இவளுக்கு?…” என சொல்லிக்கொண்டவன் இருவருக்கும் ஜூஸை வாங்கி வைத்திருந்தான்.
காரில் ஏறியதுமே அவளிடம் நீட்டியவன் குடித்து முடிக்கும் வரை தான் அமைதியாக இருந்தான்.
கப்பை வெளியே எறிந்துவிட்டு கார் கண்ணாடியை அவள் உயர்த்தும் வரை அவளை பார்ப்பதும் பாதையை பார்ப்பதுமாக இருந்தவன்,
“ரிது உன் மொபைல் தா…” என்றான்.
“என் மொபைலா? எதுக்கு?…”
“உன் நம்பர் இல்லை என்கிட்டே. மார்னிங்கே கேட்கனும்னு நினைச்சேன். மறந்துட்டேன்…”
இளவரசு முன்பே அந்த குடும்பத்தினர் அத்தனை பேரின் எண்ணையும் அவளை பதிந்து வைத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தி தந்திருந்தார்.
என்றாவது அவசரத்திற்கு உபயோகமாகும் என்று சொல்லியிருக்க மறுக்கமுடியாமல் பதிந்தும் வைத்திருந்தாள் ரிதுபர்ணா.
இப்போது திடீரென்று கேட்டதும் எங்கே தனது மொபைலை வாங்கி அவன் எண்ணை பதிவு செய்யும் பொழுது அவனின் எண் இருப்பதை கண்டுகொள்வானோ என போனை அவனிடம் தர யோசித்தாள்.
பார்த்தால் என்ன நினைப்பானோ என்றிருந்தது. இளவரசு தந்ததென்று சொல்லலாம் தான். ஆனாலும் அவனிடம் கொடுக்க தோன்றவில்லை.
“என்ன ரிது?…” ஆத்மா மீண்டும் அழைக்க,
“இல்லை, நீங்க ட்ரைவ் பண்ணுங்க. உங்க மொபைல் குடுங்க. நான் சேவ் பண்ணிக்கறேன்…” என பதட்டமாய் சொல்ல தன்னதை எடுத்து நீட்டினான் ஒரு குறுகுறு பார்வையுடன்.
“இல்லை எனக்கு பாஸ்வேர்ட் வேண்டாம். நீங்களே சொல்லுங்க…”
“ப்ச், ட்ரைவ் பன்றேன்ல…” என்று சொல்ல தன்னை கிண்டல் செய்கிறானோ என்னும் விதமாய் இருந்தது அவன் குரல்.
தான் தரமறுத்து அவன் மொபைலை வாங்கியதற்கு சுட்டி காண்பிப்பதை போல் செய்கிறானோ என பார்த்தாள்.
“என்கிட்டே ஏன் உங்க பாஸ்வேர்ட்?…”
“நீ என் வொய்ப் தானே? டெய்லி உனக்கு ஞாபகப்படுத்தனுமா?…” என அடுத்த நொடி சுள்ளென்று கேட்டான் அடக்கப்பட்ட கோப குரலில்.
“நீ பார்க்க கூடாதுன்ற அளவுக்கு அதுல ரகசியம் எதுவுமில்லை. ஞாபகம் வச்சுக்கோ பாஸ்வேர்டை. என்னைக்காச்சும் யூஸாகும்…” என்றதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அவன் சொல்லியதை கேட்டு மொபைலை ஓபன் செய்தவள் தனது எண்ணிற்கு அழைப்பு விடுத்து அவனிடம் நீட்டினாள்.
“ரிங் விட்டா? சேவ் யார் பண்ணுவா? என் மொபைல்ல உன் நம்பரை சேவ் பண்ணு. அதுக்கு தானே கேட்டேன்…” என்றதும் தனது பெயரை போட்டு பதிந்துவிட்டு அவனிடம் தர மீண்டும் மௌனம்.