Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
கண்ணாளன் கைகள் தொட்டு – 3 (3)
Post Views:
11,970
அவள் பெயரை முழுதாய் பதிந்து வைத்திருந்தாள் அவன் அலைபேசியில். பார்த்தவனுக்கு முகத்தில் சற்று புன்னகையும் கூட.
‘வொய்ப்ன்னு சேவ் பண்ணமாட்டாளாமா?’ என நினைத்தவன் ஒன்றும் சொல்லாமல் போனை வைத்தான்.
கார் சென்னையை நெருங்கும் பொழுது பத்துமணியாகி இருக்க சென்னைக்குள்ளிருந்து வீடு சென்று சேரவே இரண்டுமணி நேரம் பிடித்தது.
அதற்குள் முருகேஸ்வரி, இளவரசு, விசாலாட்சி என எல்லோருக்கும் போன் போட்டு சொல்லிவிட்டிருந்தாள்.
அத்தனை போக்குவரத்து நெரிசல். மறுநாள் வேலை நாள் என்பதால் வெளியூர் சென்றிருந்தவர்கள் எல்லாம் திரும்பி வருவதை போலிருந்தது.
இரவு உணவிற்கு கூட எங்கேயும் நிற்கவில்லை. பசிக்கவில்லை என்று ரிது சொல்லிவிட தான் மட்டும் ஓரிடத்தில் ஒரு காபியுடன் முடித்துவிட்டான்.
சென்னை வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் அந்த கூட்டத்தில் ஆமை வேகத்தில் கார் ஊர்ந்து செல்ல அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் உறங்கி போனாள்.
“ரிது…” என்று அவளின் கன்னத்தை தட்டி எழுப்பவும் விழித்து பார்க்க பிரமாண்ட வீட்டின் போர்டிகோவில் கார் நின்றிருந்தது.
“இறங்கு…” என்று தானும் இறங்கிக்கொள்ள அதற்குள் அவளின் உடமைகள் எல்லாம் இறக்கப்பட்டு உள்ளே கொண்டுசெல்ல பட்டிருந்தது.
“இறங்கு, கார்லையேவா குடும்பம் நடத்த முடியும்?…” என்று கேட்கவும் சட்டென குதித்து இறங்கிவிட்டாள்.
“இங்கயும் ஆரத்தி எடுக்க யாருமில்லை. வா…” என உள்ளே செல்ல அவனை பின்தொடர்ந்து சென்றவளுக்கு எதையும் பார்க்கும் ஆர்வம் கூட இல்லை.
எப்போதடா உறங்குவோம் என்று உடலெல்லாம் வலித்தது. அரை உறக்கத்தில் அவன் செல்லும் திசையில் தான் தானும் சென்றாள்.
“இதுதான் ரூம். நீ போய் ரெஸ்ட் எடு. நான் இப்ப வரேன்…” என விளக்கை ஒளிர்வித்து சொல்லவும் உள்ளே நுழைந்தாள்.
“உனக்கு ஏதாவது?…” என மீண்டும் திரும்பியவன் அவளிடம் கேட்டு முடிக்கும் முன்,
“நான் தூங்கறேனே?…” என்றாள் அவள்.
ஒருநொடி அவளை பார்த்து நின்றவன் தலையை மட்டும் அசைக்க திரும்பி பார்க்காமல் சென்று படுக்கையின் ஓரத்தில் படுத்துவிட்டாள்.
“எதாச்சும் முடியலையா? ஒருவேளை தலைவலி இப்படி எதாச்சும்?…” என்று கேட்க,
“ம்ஹூம்…” அவ்வளவு தான்.
உடையை கூட மாற்றாமல் பயணம் செய்த புடவையுடனே படுத்திருக்க ஆத்மாவால் அப்படி உறங்க முடியவில்லை.
நிதானமாக உடைமாற்றி முகம் கை, கால் கழுவிவிட்டு வந்து படுத்தவன் ஓரமாய் உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பவும் மனமில்லாது உறங்க நினைக்க முடியவில்லை.
முதல்நாள் நெருக்கம் அவனிடம் இப்போதும் அவளை வேண்ட கையிட்டு தன் அணைவிற்குள் கொண்டுவந்தான் ஆத்மா.
அவனின் திடீர் அணைப்பில் பதறி எழுந்துகொள்ளும் முன் அப்படியே அழுத்தி பிடித்துக்கொண்டான் எழவிடாமல்.
“நோ நீட். தூங்கு…” என்று சொல்லிவிட அப்படி ஒரு ஆசுவாசம் ரிதுவிடம்.
ஆனால் உறக்கம் போய்விட்டது இப்படி அணைத்ததில். கண்ணை மட்டும் மூடிக்கொண்டு அசையாமல் படுத்திருக்க மெல்ல மெல்ல ஆத்மாவின் கைகள் தளர்ந்தது.
காலை எழுந்துகொள்ளும் பொழுது அவனில்லை அருகில். எழுந்து பாத்ரூம் செல்ல போக உட்பக்கமாக பூட்டியிருந்தது.
“குளிக்கிறாங்க போல?…” என்ற சொல்லிக்கொண்டு அறையிலிருந்து வெளியே எட்டி பார்த்தாள்.
அந்த வீட்டை இன்னுமே சுற்றி பார்க்கவில்லை. அவள் அந்த தளம் மட்டும் வலம் வர அதற்குள் குளித்துமுடித்து வந்தான் ஆத்மா.
வந்தவன் ரிதுவை தேட அவள் மீண்டும் அவர்கள் அறைக்குள் வர இருவரும் மோதி நின்றனர்.
“பார்த்து வரமாட்டியா…” என்று கீழே விழவிருந்தவன் காலை ஊன்றி கதவை பிடித்து நின்றான்.
“இல்லை, கவனிக்கலை…” என்று மெதுவாய் சொல்லிவிட்டு அவனை தாண்டி சென்றவளின் கை பிடித்து நிறுத்திய ஆத்மா,
“எங்க போற நீ?…” என்றவன் அவளிதழில் தன்னதை லேசாய் ஒற்றி எடுக்க ஒற்றுதல் மீண்டும் ஒன்றுதலானது.
“இப்பதான் முழிச்சேன்…” லேசாய் விலகி நகர எத்தனித்து சொல்ல இடையோடு கையிட்டு நிறுத்தியவன்,
“தெரியும்…” என்ற ஆத்மா மீண்டும் தொடர்ந்தான்.
மனைவியிடம் விடுபட மனமில்லாத ஒரு ஆளுமையை அவளுக்குள் செலுத்திக்கொண்டிருக்க ரிதுபர்ணா பிடிமானமின்றி அவனின் கைகளை பற்றினாள்.
அவனிடமிருந்து விடுபட முயன்று நெளிந்த ரிதுவின் விலகளில் அவன் தீவிரம் முற்றுபெற அவனின் மொபைலும் அழைத்தது.
“பேசிட்டு வரேன், வெய்ட் பண்ணு…” என சொல்லி சென்றவனிடமிருந்து தப்பித்தவிதமாய் தனது உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க ஓடிவிட்டாள்.
ஆத்மாவின் இந்த இலகு தன்மையில் ஒன்றமுடியாமல் இன்னுமே தடுமாற்றம் ரிதுபர்ணாவிற்கு.
அது அவள் வீடு கூட தான் என்ற உரிமை உணர்வை கூட அந்த இல்லம் துளியும் கொடுக்கவில்லை.
கணவனுடன் அங்கே வந்திருக்கிறாள். ஆனால் கணவனாகப்பட்டவன் செயல்களில் இன்னுமே குழப்பம் தான்.
வாழ ஆரம்பித்த பின்னுமே இப்படி குழப்பத்தோடு ஒரு வாழ்க்கை தனக்கு எப்படி என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
அவனை போல எல்லாவற்றையும் சுலபமாய் எடுத்துக்கொண்டு போக என்னவோ முடியவில்லை.
கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை கைகள் தழுவ அங்கே சுவற்றில் சாய்ந்தவள் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
வெகுநேரம் அப்படியே வெறித்தபடி இருக்க பாத்ரூம் கதவு இரண்டுமுறை தட்டப்பட முதலில் கவனத்திலேயே இல்லை அவள்.
“ரிது…” என்ற சத்தத்துடன் வேகமாய் திறந்துகொண்டு வந்துவிட்டான் ஆத்மா.
கீழே முழங்காலிட்டு அமர்ந்திருந்தவள் மடியில் அவள் கொண்டுவந்திருந்த உடைகள் இருக்க அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன்,
“இன்னும் குளிக்காம என்ன ஈர தரையில உக்கார்ந்திட்ட?…” என்றதும் தான் கதவை தாழிடாமலே வந்துவிட்டது புரிந்தது.
“கதவை லாக் பண்ணலையா?…” என ரிதுபர்ணா சத்தமாயே தன்னை நிந்தித்துக்கொள்ள,
“ரிது…” என்றான் ஆத்மா.
“ஹாங், ஒண்ணுமில்லை. தூக்கம் வரலை…” அவள் என்னவோ உளற,
“என்ன?…” என்றான் மீண்டும் சத்தமாய்.
“என்ன உளறிட்டிருக்க? பாத்ரூம்ல தூக்கமா?…”
“இல்லை அது வந்து…”
“உன்னை குளிக்கலையான்னு தான் கேட்டேன். தூங்கலையான்னு இல்லை…”
“இப்ப குளிச்சிட்டு வரேன். வந்திடறேன்…” என்று சொல்ல,
“ஓகே, ரிலாக்ஸ். இங்க வா இங்க பைப் எல்லாம் காமிச்சிடறேன்…” என்று அவளை அழைத்து ஒவ்வொன்றின் உபயோகங்களை காண்பித்தான்.
அதன் பின்பு தான் அதன் ஆடம்பரம் புரிந்தது. அங்கிருந்த லேட்டஸ்ட் வகை குளியலறை அமைப்பை கவனித்தாள்.
“ஓகே வா? ஈஸியா?…”
“ஹ்ம்ம்…” என்று மட்டும் தலையசைக்க,
“உன் ட்ரெஸ் இங்க வை. வெட் ட்ரெஸ்க்கு இந்த டிரா. குளிச்சிட்டு மிஷின் அங்க இருக்கு. அங்க போட்டிடு. இல்லைன்னா மெய்ட் பண்ணிடுவாங்க…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், தேங்க்ஸ்…” என்றவளை அழுத்தமாய் பார்த்தவன்,
“ஓகே குளிச்சிட்டு வா…” என்று சென்றுவிட்டான்.
அப்போது தான் நிம்மதியானது. எங்கே இங்க வைத்து ஏதேனும் சில்மிஷம் எதுவும் செய்வானோ என மனது தடதடத்துக்கொண்டிருக்க அப்படி எதையும் அவன் நிகழ்த்தவில்லை.
எங்கே மீண்டும் உள்ளே வந்துவிடுவானோ என்று வேகமாய் சென்று தாழிட போக மீண்டும் கதவை திறந்துவிட்டான்.
“அம்மா…” என சத்தத்துடன் பின்னே நகர்ந்து பதறிவிட,
“ஹேய் ஈஸி ரிது. டவல் உள்ளயே இருக்கு. உனக்கு பாத்ரோப் வேணும்னா இன்னைக்கு ஷோரூம்ல இருந்து வரவழைச்சிடலாம். நீயே சூஸ் பண்ணிக்கோ…” என்று சொல்ல,
“இல்லை, இல்லை எனக்கெதுவும் வேண்டாம்…” என்று கதவை வேகமாய் அடைத்துவிட்டாள் அவள்.
ஒரு நாளுக்கே இப்படி. இப்படியே எத்தனை நாட்கள் தப்பித்து ஓட முடியும்? குளித்துவிட்டு வெளியே அவனிடம் தானே செல்லவேண்டும்.
அந்த பாத்ரூமே அவளை அச்சமூட்டியது. மனதிற்கு ஒட்டவே இல்லை. குளித்து முடித்து வெளியே வர ஆத்மா அங்கே இல்லை.
அறையிலிருந்து வெளியே கூட செல்ல யோசனையாக இருந்தது. கட்டிலில் அமர்ந்துகொண்டாள் ரிதுபர்ணா.
“மேடம்…” என்று கதவு தட்டப்பட்ட நிமிர்ந்து பார்க்க அங்கே ஒரு பெண்மணி நின்றிருந்தார்.
“உங்களை ஸார் சாப்பிட வர சொன்னார். கீழே வாங்க…” என்று சொல்ல அங்கே வேலை செய்கிறவர் என்று புரிந்தது.
அவருடன் இறங்கி கீழே செல்ல இரவு கவனிக்காததெல்லாம் இப்போது கவனத்தில் பட்டது.
மிகப்பெரிய பங்களா என்று நினைத்திருக்க பெரிது தான். இரவு பயமுறுத்திய பிரமாண்டம் இப்போது சாதாரணமாக தெரிந்தது.
“உட்கார், சாப்பிட்டு வீட்டை பார்க்கலாம். நானே காமிக்கிறேன்…” என்றதும் அமர்ந்து சாப்பிட வீட்டிலிருந்து போன்.
உடனே எடுத்து பேச ஆரம்பித்தாள். விசாலாட்சி, முருகேஸ்வரி என பேசிக்கொண்டிருக்க சாப்பிடாமல் பதில் கூறினாள் ரிதுபர்ணா.
“நீ சாப்பிடு, சாப்பிட்டு பேசறேன்னு சொல்லு ரிது…” என்றவன் சொல்லை கவனித்தாலும் இங்கே பதிலை சொல்லிக்கொண்டிருந்தாள் ரிது.
ஒருமுறை சொன்னவன் மேலும் பேசவில்லை. ரிதுபர்ணா பேசிவிட்டு போனை வைத்துவிட்டு சாப்பிட்டு முடிக்கவும்,
“ஓகே, ரெஸ்ட் எடு. நான் ஷோரூம் போய்ட்டு வரேன்…” கிளம்பிவிட்டான் ஆத்மா.
திகைத்து போனாள் ரிதுபர்ணா. இப்படி சட்டென விட்டுவிட்டு கிளம்ப செய்வதறியாது நின்றாள் அந்த வீட்டில் தனியொருத்தியாய்.
Advertising
Advertising