ரிதுவின் வளைகாப்பு சிறப்பாகவே நடந்து முடிந்திருந்தது. திருமணத்தை சிறப்பாக செய்யமுடியாத குறையை வளைகாப்பில் நிவர்த்தி செய்துவிட்டதை போல ஆனந்திக்கு அத்தனை சந்தோஷம்.
வளைகாப்பிற்கு ஆனந்தியின் அண்ணனும், அவரின் சொந்தங்களும் கூட வந்திருந்தனர்.
அண்ணாமலை அழைப்பு தரவே இல்லை. ஆனந்தி மட்டுமே அழைத்திருந்தார் அவர்களை.
சொந்தங்கள் மத்தியில் அது ஒரு பெயராகி போகும் என்றும், என்னதான் மனகசப்பாக இருப்பினும் விசேஷம் என்று வருகையில் தாய்மாமனை அழைக்காமல் செய்ய முடியாது என்பதால் அழைத்துவிட்டார்.
அதையும்விட தன் அண்ணன் மனைவியின் முன் தன் மகன், மருமகளின் வாழ்வையும், வாரிசு வரவிருப்பதன் மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தி கர்வப்படவேண்டும் என்ற அடிமனத்தின் ஆசையும் ஒரு காரணம்.
அழைத்து அவர்களும் வந்து அண்ணாமலையோ, ஆத்மாவோ ஒரு தலையசைப்புக்கு மேல் பேசவில்லை.
அண்ணாமலை உறவை அத்தனை சீக்கிரம் பகைத்துக்கொள்ள முடியாதென்பதால் ஆனந்தியின் அண்ணன் குருமூர்த்தி சற்று அடக்கித்தான் வாசித்தார்.
பரத்தின் மனைவி வளைகாப்பில் நடந்துவிட்ட சம்பவத்தில் அண்ணாமலையின் உட்சபட்ச கோபத்தை கண்டுவிட்டார் குருமூர்த்தி.
அதன் பின்னர் தொழிலுக்கும் நஷ்டம், உறவுகளுக்குள்ளும் மதிப்பிருக்காதென இருந்தவர் வந்த சுவடு அறியாமல் விசேஷத்தில் கலந்துகொண்டு சென்றுவிட்டார்.
வளைகாப்பு முடிந்து ரிதுவை முருகேஸ்வரியிடம் விட்டுவிட்டு சென்னை கிளம்பிவிட்டான் ஆத்மா.
அவன் வீடு வந்தது, ஆனந்தி வந்து பேசியது என ரிதுவிற்கு மகிழ்ச்சி என்றாலும் முருகேஸ்வரியை போல அதனை பெரிதாய் கொண்டாடவில்லை ரிது.
“என்ன கண்ணு நீ? அவங்க எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்காங்க? நீ இவ்வளோ சாதாரணமா இருக்க?…” என்று தான் ஆத்மா வீட்டிற்கு வந்து சென்ற அன்று சண்டை பிடித்தார் அவளிடம்.
“இதென்ன சித்தி வம்பா இருக்கு? இங்க யாரையும் வர கூடாதுன்னு யாரும் சொல்லலை. அவங்களா வராம இருந்தாங்க. இப்ப வந்துட்டாங்க. இது அவங்க உரிமை. உரிமை யாரும் குடுத்து கிடைக்கிறதில்லை. தனக்கா தோணனும். இப்ப அவங்களுக்கு தோணிருக்கு…”
“அப்பறம் ஏன் உப்புசப்பில்லாம இருக்க? உனக்கு சந்தோசம் தானே?…”
“ஏன் இல்லாம? ரொம்ப சந்தோஷம். நிறைய கோவம் கூட இருக்கு. இத்தனை வருஷம் ஏன் வர முடியலையான்னு கேட்கனும்னு கோவம்…” வேண்டுமென்றே முருகேஸ்வரியிடம் அவள் வம்பிழுக்க,
“யாத்தே, இந்த புள்ளைக்கு என்னாச்சுன்னு பாரு?…” என கன்னத்தில் கை வைத்துவிட்டவர்,
“மறுக்கா ஒருவாட்டி சண்டைகிண்டை போட்டுடாத கண்ணு. சித்திக்காகா வேண்டி சொல்லுறேன் கேளு…” என்று அவளின் கன்னம் பற்றி கொஞ்சவும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள் ரிது.
“நீங்க ரொம்ப அப்பாவி சித்தி…” என்று கொஞ்சிக்கொண்டவள்,
“சண்டைன்னா பெரிய சண்டையில்லை. சின்ன சண்டை. அது கோவம் வராது…” என்று விளக்கம் சொல்ல அப்போதும் விசாலாட்சியிடம் புலம்பிவிட்டார் முருகேஸ்வரி.
“நல்ல ஆள் பார்த்து சொன்ன நீ? இனி இவ எத்தனை கோவிலுக்கு வேண்டுதல் வைப்பாளோ? அவளை சும்மாவே இருக்க விடமாட்டியா நீ?…” என்று சத்தம் விசாலாட்சி போட்டுவைத்தார்.
மாலையானால் சபர்மதியும், மனோவும் ரிதுவிடம் வந்துவிடுவார்கள். பரத்தின் மகனை வைத்துக்கொண்டு விளையாட, பேசி, சிரிக்க என்று மாலை வேளை அங்கே அமர்க்களமாக இருக்கும்.
அதோ இதொவென்று ரிதுவின் பிரசவ நேரமும் நெருங்கி வந்திருக்க ஆத்மா கொடுத்த தேதிக்கு முன்பே வந்துவிட்டான் அவளுடன் இருக்க.
“சுக பிரசவத்துக்கு நிறையவே சான்ஸ் இருக்கு….” என டாக்டர் சொல்லியிருக்க வலி வந்ததும் மருத்துவமனை வந்துவிட்டார்கள் மொத்த குடும்பமும்.
நள்ளிரவில் ரிதுவிற்கு வலி வந்துவிட அத்தனைபேரும் கூட்டமாய் அவளுடன் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
“டெலிவரி பெய்ன் தான். அட்மிட் பண்ணிடலாம்…” என்றதும் அத்தனைபேருக்கும் பரபரப்பு தொற்றியது.
இத்தனைபேர் மருத்துவமனையில் இருக்கவேண்டாம் என்று சொல்லிவிட ஆத்மா, முருகேஸ்வரி, செண்பகம், ஆனந்தி மட்டுமே இருந்தனர்.
ஆனால் வீட்டிலிருந்து ஓயாமல் போன் செய்து கேட்பவர்களுக்கு தான் பதில் சொல்லி முடியவில்லை.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன். இன்னும் தூங்கவே இல்லை நீ?…”
“ம்ஹூம், தூக்கம் வராது…” என்று சொல்லி மீண்டும் ரிதுவினருகே சென்று அமர்ந்துகொண்டான்.
அவளின் கையை கோர்த்துக்கொண்டு மெல்லிய குரலில் அவளுடன் பேசிக்கொண்டிருந்த மகனை ஆனந்தியும் கவனித்தார்.
மகனின் அனுசரணையும், மருமகளின் அன்பும் ஒன்றுகொன்று சளைத்ததில்லை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் எத்தனை அன்பு கொண்டிருக்கின்றனர் என்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.
அவர்கள் பேசட்டும் என மற்றவர்கள் விலகி வர மீண்டும் ரிதுவுடன் நடக்க ஆரம்பித்தான் ஆத்மா.
“எவ்வளோ நேரம் தான் அவனே கையை புடிச்சிட்டு நடப்பான்? கொஞ்ச நேரம் அவனை உட்கார சொல்லிட்டு கூட ஆளுக்கு கொஞ்ச நேரம் அவளோட நடக்க வேண்டியது தானே?…” அண்ணாமலை மற்ற பெண்களை சத்தம் போட,
“அவன் எங்க கேட்கிறான்?…” என்றார் விசாலாட்சி.
“இப்படி சொன்னா என்ன புரியுமாம்?…” என்ற செண்பகம்,
“கண்ணனுக்கு ரிதுவுக்கு எல்லாமே அவனே செய்யனுமாம். நானா தானே கல்யாணம் பண்ணேன். என்னோட வாழ்க்கையில் முக்கியமான நாள். நீங்க பாருங்கன்னு நான் ஒதுங்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலயும் நான் அவ கூட இருப்பேன்னு எங்களை தள்ளி நிக்க சொல்லிட்டான்…”
“என்னால முடியலை. கண்ணத்தான்…” என்ற அலறலில் அத்தனைபேரும் அங்கே பார்க்க ரிதுவிற்கு பனிக்குடம் உடைந்துவிட்டது.
“டாக்டரை கூப்பிடுங்கப்பா…” என்ற சத்தத்துடன் ரிதுவை கையில் தூக்கிக்கொண்டான் ஆத்மா.
பிரசவ அறைக்குள் ரிதுவுடன் நுழைந்தவன் வெளியே வரவே இல்லை. மருத்துவர் அவனை செல்ல சொல்லியும் கேட்கவில்லை ஆத்மா.
“அவன் இதையெல்லாம் பார்த்தா தாங்குவானோ என்னவோ? வெளில கூப்பிடுங்க…” என்று ஆனந்தி சொல்ல,
“இதைவிட ஒரு பாக்கியம் ஒரு ஆம்பளைக்கு கிடைக்குமா? அவன் பிள்ளையை அவன் பொண்டாட்டி எப்படி பெத்து குடுக்கான்னு பார்க்கட்டும். காலத்துக்கும் அவளை மனசுல கடவுளா வச்சுப்பான்…” என்ற அண்ணாமலை,
“அவன் இதை தாங்காம வேற யார் தாங்குவா? வரட்டும்…” என அங்கிருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்துகொண்டார்.
முழுதாய் கேட்கவில்லை என்றாலும் ரிதுவின் அலறல் வெளியே மெல்லிய சத்தமாய் கேட்கத்தான் செய்தது.
அதற்கே வெளியில் இருந்தவர்களின் மனது ஆடித்தான் போனது. அண்ணாமலைக்கு பயமே வந்துவிட்டது.