“ஏன் ஆனந்தி, ரொம்ப கத்தறாளே?…” என்று பாவம் போல கேட்டவரின் கண்ணில் நீர்படலம்.
“எனக்கும் அதான் தெரியலைங்க…” என்று சொல்லும் பொழுதே தன்னைப்போல அண்ணாமலை கைகள் ஆனந்தியின் கையை பிடித்துக்கொண்டது.
எத்தனை வருடத்திற்கு பிறகான ஒரு ஸ்பரிசம்? ஆனந்தி சந்தோஷத்தில் கண்ணீர் சிந்தினார்.
மகள் மனோவின் பிறப்பின் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டவர் உடல்நிலை ஒரு பொம்மை போன்றானது.
உயிருள்ள ஒரு மனித பொம்மை. மற்றபடி அவரால் சிறிய வேலைகளை கூட செய்யமுடியாத அளவிற்கான பலவீனம்.
கணவர், பிள்ளைகளை கவனிக்க முடியாமல் போக என்று நிறைய வாழ்க்கையின் எதிர்காலத்தின் பயத்திலேயே தான் கழிந்தது.
வேறு ஒருவராக இருந்திருந்தால் நிச்சயம் இரண்டாம் திருமணம் செய்திருப்பார். சம்சாரியாய் இருந்தும் தவம் போல ஒரு வாழ்க்கை அண்ணாமலை வாழ்ந்தது.
மனதளவிலும், உடலளவிலும் அண்ணாமலை சுத்தமாய் இருக்க எந்த இடத்திலும் அந்த குற்றவுணர்வு ஆனந்தியை அணுகவிடாமல் தான் பார்த்துக்கொண்டார்.
அவர் ஆனந்தியிடம் அதிகமான கோபம் வெளிப்பட்டதும், சொல்லி காண்பித்ததும் ரிது, ஆத்மா விஷயத்தில் தான்.
எத்தனை கம்பீரமாய் இருக்கும் மனிதரின் இந்த குழந்தைத்தனமான செய்கையில் உருகி தான் போனார் ஆனந்தி.
“ஒன்னும் ஆகாதுங்க…” என அவரின் கையை தட்டி கொடுக்க முதுமையின் அனுசரணையை இருவரும் பரிபூரணமாய் உணர்ந்த தருணம்.
“அண்ணே குழந்தை பிறந்துடுச்சு…” என்று விசாலாட்சி சொல்ல அதற்குள் மற்றவர்களும் வந்துவிட்டனர்.
ஊரிலிருந்து சுந்தரி கூட வந்துவிட்டாள் ரிதுவை இப்படி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொல்லவும்.
அத்தனைபேரும் கூடிவிட மொத்த கூட்டத்திற்கும் அந்த வளாகமே திக்குமுக்காடியது.
“பெண் குழந்தை…” என்று நர்ஸ் வெளியே வந்து சொல்லிவிட்டு செல்ல ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லி சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டனர்.
“நான் போய் ஸ்வீட் வாங்கிட்டு வரேன்…” ஏழுமலை கிளம்ப,
“மாமா நான் வரப்பவே வாங்கிட்டு வந்துட்டேன். கார்ல இருக்கு…” என்று அவருடன் நடந்தான் முரளி.
அத்தனைபேரும் குழந்தையின் முகத்தை பார்க்கவென்று காத்திருக்க அண்ணாமலை மனதிற்குள் அந்த இறைவன் அண்ணாமலைக்கு நன்றி சொல்லிக்கொண்டார்.
கதவு திறக்கப்பட்டதும் ஆத்மா குழந்தையுடன் வெளியே வர அவன் கைகளுக்குள் குட்டி தேவதை ஒன்று கைகால் முளைத்த பூச்செண்டாய் கண்களை கசக்கி உருட்டிக்கொண்டு தன்னுடைய உறவுகளை புதிதாய் பார்த்தது.
“அப்படியே அம்மா தான். அண்ணே இங்க பாருங்க நம்ம அம்மா மாதிரியே ஜாடை…” பார்த்ததும் இளவரசு சொல்லி குதூகலிக்க அண்ணாமலை கண்கள் பனிக்க எழுந்து நின்றார்.
“தூக்கிருவீங்களா?…” என அவரிடம் வந்த ஆத்மா சற்றே கிண்டலுடன் கேட்க,
“உன்னையே தூக்கி வளர்த்தவன்டா நான். கொண்டா…” என்று கையை நீட்டவும் அவரின் கையில் வைத்துவிட்டான் ஆத்மா.
“என் பொண்ணு…” என பெருமையாக சொல்லவும் குழந்தையை ஏந்தியவர் கைகளில் மெல்லிய நடுக்கம்.
“என்னை கொஞ்சம் பிடியேன்…” என்று சொல்லவும் அவரை ஆத்மா அணைத்து நிற்க,
“சுகர் மாத்திரை போடலை கண்ணா. அதான் கொஞ்சம் நடுக்கமா இருக்கு…” என்று ஒரு சமாதானம் வேறு அண்ணாமலை.
பெற்றவர்களின் மனநிலை என்னவென தான் ஒரு தகப்பனாகிய தருணத்தில் புரிந்துகொண்டவன் இன்னும் தந்தையை சேர்த்து அணைத்து நின்றான்.
“உங்கம்மாவாம். ஆமாவா?…” என மெல்லிய குரலில் அண்ணாமலையிடம் அவரின் நடுக்கத்தை போக்க என பேச்சை மாற்றி ஆத்மா கேட்க,
“ஆமா தான். இந்த கண்ணு அப்படித்தான். அம்மாவும் பல்லு போன பின்னாடி இப்படித்தான் வெறும் வாயை அசைச்சுட்டே இருப்பாங்க….” என்றார் அண்ணாமலை.
இருவருமாக அவர்களுக்குள் மற்றவர்களை மறந்து பேசிக்கொண்டிருக்க பார்த்தவர்களுக்கு தகப்பன், மகன் இருவருக்கிடையே எத்தனை வருடத்திற்கு பிறகான இந்த நெருக்கம் என்று என நெகிழ்ந்து போயினர்.
“முரளி ஸ்நாப் எடுடா…” என பரத் சொல்ல,
“ஆமா, கண்டிப்பா…” என்று தனது மொபைலை எடுத்து அவற்றை வீடியோவாகவும், கூடவே புகைப்படங்களாகவும் எடுத்து தள்ளினான்.
மற்றவர்கள் யாரும் அவர்கள் இருவரையும் கலைக்கவே இல்லை. பேசட்டும். பேசிக்கொண்டிருக்கட்டும் என்று ரசித்து பார்த்தனர்.
தகப்பனும் மகனும் மாற்றி மாற்றி சத்தமில்லாத ஒரு வாக்குவாதம். அத்தனை பேச்சிலும் ஆத்மா அண்ணாமலையை அணைத்திருந்த கையை விடவில்லை.
“வயசானா பல்லில்லாம தான் போகும். பல்லில்லைன்னா வெறும் வாயை அசைச்சிட்டே தான் இருப்பாங்க. இது ஒரு ஒத்துமையா? வேற சொல்லுங்க…” என வம்பிழுக்க,
“நீ வேணா பாரு. வளரும் போது தெரியும்…” அண்ணாமலை விடாமல் சொல்ல,
“அப்ப வளர்ந்த பின்னாடில சொல்லனும். என்னவோ உங்கம்மா பிறந்தப்பவும் அவங்களை இப்படி தூக்கி வச்சிட்ட மாதிரில பேசறீங்க?…”
“ஆமாடா, இப்ப எங்கம்மாவை தான நானும் தூக்கி வச்சிருக்கேன்…” என நெகிழ்ந்து போய் பேத்தியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவர்,
“சரி நீ பிடிச்சுக்கோ. இந்தா…” என்று நீட்ட,
“இருக்கட்டும். உங்கம்மாவை நீங்களே வச்சிருங்க…”
“டேய் கண்ணா, கையெல்லாம் உதறுதுடா. நான் கொஞ்ச நேரம் உக்கார்ந்துக்கறேன்…” என கெஞ்சலும் அதட்டலுமாக சொல்லியவர் அவனின் கையில் குழந்தையை தர வாங்கியவன் தகப்பனின் வியர்வையை உணர்ந்தான்.
அதன் பின்னர் தான் அத்தனை பேருமே பிள்ளையை வாங்கிக்கொண்டார்கள் மாற்றி மாற்றி.
“அவ எப்படி இருக்கா? நல்லாருக்கால்ல?…” அண்ணாமலை மருமகளை கேட்க,
“எவ?…” என்றான் இன்னும் கிண்டலுடன் ஆத்மா.
“உன் சம்சாரம் தான். எப்ப ரூமுக்கு பாத்துவாங்க?…”
“நல்லாயிருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல ஷிப்ட் பண்ணிடுவாங்க…” என்றவன் தன்னுடையை குனிந்து பார்த்தான்.
“வீட்டுக்கு போய் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா கண்ணா…” ஆனந்தி சொல்ல,
“ரிதுவை ரூம்க்கு மாத்தட்டும் ம்மா. பார்த்துட்டு போறேன்…” என்று சொல்லிக்கொண்டிருக்க நர்ஸ் வந்து குழந்தையை வாங்கி சென்றார்.
இன்னும் ரிதுபர்ணா மயக்கத்தில் தான் இருந்தாள். அதனால் அதற்குள் வந்துவிடலாம் என்று வீட்டிற்கு அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் அவள் மயக்கம் தெளிந்திருக்க மாற்றி மாற்றி அனைவருமே வந்து பார்த்துவிட்டனர்.
ரிதுவை வேறு அறைக்கு மாற்றபட்டிருக்க ஆத்மா வந்துவிட்டான் மருத்துவமனைக்கு.
“இவ்வளோ நேரம் உன்னை தேடினோம். இப்பத்தான் குழந்தையும் ரிதுவும் தூங்கறாங்க…” என்றார் ஆனந்தி.
“ஓகே, நான் பார்த்துக்கறேன்…” என்று அறைக்குள் செல்ல அங்கே விசாலாட்சியும், முருகேஸ்வரியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தொட்டிலில் குழந்தை உறங்கிக்கொண்டிருக்க அதனை லேசாய் ஆட்டியபடி இருந்தவர்கள் ஆத்மா வரவும் எழுந்து வெளியே வந்தனர்.
குழந்தையை குனிந்து பார்த்தவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. லேசாய் ஒரு விரலால் பிள்ளையை தொட்டு தடவியவன் பார்வை ரிதுவை தீண்ட கண் மூடி உறக்கத்தில் இருந்தவளின் அருகே அமர்ந்து அவள் கைகளை பற்றிக்கொண்டான்.
“நான் வர வரைக்கும் இருக்க முடியலை. அப்பறமாம்? ஒண்ணுமில்லை…” என மெல்லிய குரலில் சொல்லியவள் முகத்தை சுருக்கவும் புன்னகைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
விழிகளை மூடி அவனின் அச்சாரத்தை உள்வாங்கியவள் கைகள் இறுக்கம் பெற்றது.
“கண்ணத்தான்…” என புருவம் சுளிக்க,
“வலிக்குதாடா?…” என்று கன்னத்தை வருடினான்.
“ஹ்ம்ம், ஆமா. காலெல்லாம் ரொம்ப வலி…” என்றதும் அவளின் கையை விட்டு காலடிக்கு அமர்ந்தவன் லேசாய் அவள் பாதத்திலிருந்து பிடித்துவிட வலி குறைந்ததில் புன்னகையுடன் கண் மூடியவள் மீண்டும் உறங்க ஆரம்பித்துவிட்டாள்.
பிள்ளை பசிக்கு சிணுங்கவும் ரிது விழிக்க குழந்தையை தூக்கி தந்தவன் முகத்தில் சொல்லொண்ணா பேருவகை.