“அப்படியே உங்கப்பா கூடவே போய்டு. எப்ப பாரு அப்பா…” என ரிது புகைய,
“ம்மா போ…” என்றாள் குழந்தை கோபமாய்.
“எவ்வளோ வாய்?…” என்று மகளிடம் மல்லுக்கு நிற்க பிள்ளையும் இரு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு தாயை கண்களை உருட்டி முறைத்தது.
“எல்லாம் உன் அப்பா கையில இருக்கற திமிர். ஊருக்கு வா வச்சுக்கறேன்…” என்று மிரட்டினாள்,
“ப்பா ம்மா டிஷ்யூம் போடு…” என்று மகள் ஆத்மாவின் கழுத்தை கட்டிக்கொள்ள ஆத்மா ரிதுவை பார்த்து கண்ணடித்தான்.
“குடுத்திடலாம் குட்டிம்மா…” என்று மகளை கட்டிக்கொண்டு கொஞ்ச,
“சரி சரி. முதல்ல சாமியை கும்பிடுவோம். எப்ப பாரு ரெண்டுபேரும் மல்லுக்கு நிக்கிறது?…” என இளவரசு சொல்லவும் அனைவரும் பூஜைக்கு நின்றனர்.
கற்களாலான அடுப்பில் விறகுகளும் சிறு சிறு குச்சிகளும் வைக்கப்பட்டு முதலில் கற்பூரத்தை பற்றி சாமியை கும்பிட்டு அனைவரும் வணங்க அடுப்பிறகும் அக்னி மூட்டப்பட்டது.
அண்ணாமலை கண்ணை காட்ட முரளியிடம் பேச நகர்ந்தான் ஆத்மா. அவனின் கையை பற்றியவள்,
“என்ன இது வெறும் நெத்தியா?…” என்று அங்கிருந்த சந்தனத்தை எடுத்து நீட்ட,
“வச்சுவிடு…”என்று குனிந்தான் ஆத்மா.
அனைவரும் அடுப்பில் கவனத்தில் இருக்க அரிசி களைவது, பருப்பை எடுப்பது, வெல்லத்தை உடைப்பது என்று அவரவர் வேலையில் இருந்தனர்.
அதனை பார்த்துவிட்டு ரிதுவும் அவன் கீற்றாய் நெற்றியில் வைத்துவிட்டு அதனை சரி செய்து,
“அழகா இருக்கு…” என்று சொல்ல,
“பின்ன? ஆத்மான்னா சும்மாவா?…” என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.
“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் முரளி…” என்று சொல்லவும் விளையாட்டை விடுத்து சீரியஸாக நின்றான் முரளி.
இருவரும் பேசியபடி ரிதுவின் வீட்டு திண்ணையில் சென்று அமர்ந்துகொண்டனர்.
வீட்டுக்குள் இருந்து ஏலக்காயை இடிக்க என சிறிய குத்து உரலை எடுத்துக்கொண்டு வித்யா வெளியே வர,
“வித்யா…” என அழைத்த முரளி,
“இந்தா இதையும் அம்மாக்கிட்ட நான் குடுத்தேன்னு குடுத்திரு…” என்று நீட்ட வித்யா சிரித்தபடி அதனை வாங்கிக்கொண்டு சென்றாள்.
“சொல்லுங்கண்ணா…” முரளி கேட்கவும்,
“வித்யாவை பத்தி என்ன நினைக்கிற முரளி?…” என்றான் ஆத்மா.
“அண்ணா…”
“உனக்கு வித்யாவை பிடிக்கும் தானே?…” என கேட்க மேலும் அதிர்ச்சி.
அசாத்திய அமைதியுடன் அமர்ந்திருந்த முரளியின் பார்வை வித்யாவில் படிந்து மீண்டது.
செண்பகத்துடன் என்னவோ ஜாடையில் பேசிக்கொண்டிருந்தாள் அவள். தலையில் பூவை சரியாக வைக்கவில்லை போலும், செண்பகம் அதனை எடுத்து ஒன்றுபோல வைத்து விட்டார் அவளுக்கு.
“நினைக்க என்ன இருக்கு அண்ணா? நல்ல பொண்ணு…” முரளி சொல்ல,
“வித்யாவுக்கு வரன் ஒன்னு வந்திருக்காம்…” என ஆத்மா சொல்லவும் திடுக்கிட்டு திரும்பினான்.
மின்னலாய் சிறு வலி ஊடுருவி சென்று மறைந்தது அவன் முகத்தில். உடனே சுதாரித்து லேசாய் புன்னகைத்தவன்,
“நல்ல இடம்ன்னா குடுக்கலாமே?…”
“நிஜமாவா? உனக்கு கஷ்டமில்லையா?…”
“அண்ணா நீங்க என்ன நினைக்கறீங்கன்னு புரியுது. எனக்கு வித்யாவை பிடிக்கும். அம்மா எனக்கு பார்க்கற பொண்ணா வித்யா இருந்தா என்னைவிட சந்தோஷப்படற ஆள் வேற யாருமில்லை…”
“அப்பறம் என்னடா? சித்தி நல்லா தானே பழகறாங்க?…”
“ம்ஹூம், அது வேற. இந்த கல்யாண பேச்சை எடுத்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை…”
“உன் விருப்பம் அதுவா இருக்கும் போது சொல்லேன். உனக்கு பிடிச்சிருக்குன்னு. நாங்க எல்லாம் இருக்கோமே?…”
“இல்லைண்ணா, உங்களுக்கு தெரிஞ்சது தான். ஒரு கூட்டுக்குள்ள இருந்தாலும் ஒரே தொழில்ல இருந்தாலும் இப்ப இருக்கற நெருக்கம் முன்னாடி இருந்ததா? ம்ஹூம். ஒருத்தருக்கு ஒண்ணுன்னா உடனே போய் நிப்போம் தான். ஆனா இப்ப இவ்வளோ க்ளோஸ் இல்லை தானே?…”
“சரிடா அதுக்கு?…”
“என்னால அது எப்பவும் மாற வேண்டாம். அம்மா இந்தளவுல முருகேஸ்வரி அத்தைட்டையும், வித்யாட்டையும் வேறுபாடு பார்க்காம பழகறாங்க. ஒருவேளை அவங்களுக்கு எனக்கு எடுக்கனும்னு எண்ணம் வந்தா அப்ப பார்ப்போம்…”
“என்ன பேசற நீ முரளி?…”
“இன்னொரு உண்மை என்னன்னா? என்னால உங்களை மாதிரி அவ்வளோ தைரியமா எல்லாரையும் எதுத்துட்டு எதையும் பண்ண முடியாது. எனக்கு அம்மா ரொம்ப முக்கியம். என்னால இந்த குடும்பத்தோட சந்தோஷமும் போய்ட கூடாது…” முரளி முடிவாய் சொல்லிவிட்டான்.
“ஒருவேளை வித்யாவுக்கு ஒரு ஐடியா உன் மேல இருந்தா?…”
“என்ன என் மேலையா? வாய்ப்பே இல்லை…” உறுதியாய் மறுத்தான் முரளி.
“அதை நீ சொல்ல கூடாதுடா…”
“நான் மட்டுமில்லை. உங்களுக்கே தெரியும். தெரிஞ்சே பேசறீங்க. முருகேஸ்வரி அத்தை சொல்லி சொல்லி வளர்த்திருக்காங்க இது நமக்கு உரிமை இல்லாத இடம்ன்னு. அவளுக்கு அப்படி எந்த எண்ணமும் யார் மேலையும் வராது. அத்தை சொல்ற இடத்துக்கு தான் தலையாட்டுவா…”