முரளி ஆணித்தரமாய் பேச ஆத்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிலநொடி மௌனத்தின் பின்,
“ஓகே, சித்தி சம்மதிச்சு அவங்களே பொண்ணு கேட்டா?…”
“சத்தியமா குடுத்து வச்சவன் நான். ஆனா நடக்காதே?..” என்றவன் மீண்டும் வித்யாவை பார்த்தான்.
“லவ்ன்னு சொல்ல முடியலைண்ணா. ரொம்ப பிடிக்கும். அவளை நல்லா பார்த்துக்கனும்னு தோணும். எப்பவும் சந்தோஷமா இருக்கனும்னு நினைப்பேன். அவ என் கூட இருந்தா தான்னு இல்லை. அவளை புரிஞ்சவன் ஒருத்தனோட நல்லாயிருந்தான்னா போதும்….” என்று சொல்லிவிட,
“இது போதும். நீ போ…” என்று சொல்ல அங்கே பொங்கல் வைக்குமிடத்தில் பொங்கலோ பொங்கல் என்ற சத்தம்.
வித்யா வந்து ஆத்மாவையும், முரளியையும் அழைக்க இருவரும் அவளுடன் நடந்தனர்.
“கிழக்க பார்த்து பொங்கிருச்சு. எல்லாம் நல்லதாவே நடக்கும்…” என்று ஆனந்தி சொல்ல அனைவருமே சூரியபகவானை கையெடுத்து கும்பிட ஆளுக்கு ஒரு கை அரிசியை பானையில் போட்டனர்.
பொங்கல் வைத்து முடித்து பசுவிற்கும், கடவுளுக்கும் படைத்து அனைவருக்கும் இலையில் பரிமாறினார்கள் வாழைப்பழமும், தேங்காய் பத்தையும் சேர்த்து.
இடையில் ஆத்மா அண்ணாமலையிடம் சொல்லிவிட இளவரசுவும் வந்துவிட விஷயம் பகிரப்பட்டது.
முரளியின் எண்ணம் புரிந்து அவன் மீதான மதிப்பும் உயர அனைவருக்கும் இதனை எப்படியாகினும் முடித்துவிட வேண்டும் என்று தோன்றியது.
“எங்க போற? இங்க உக்கார்ந்து சாப்பிடு. பாப்பாவை நாங்க பார்த்துக்கறோம்…” செண்பகம் வித்யாவை உட்கார சொல்லி அவளை சாப்பிட சொல்லிக்கொண்டிருந்ததை திரும்பி பார்த்தனர்.
“கண்டிப்பா நல்லபடியா நடக்கும்…” என்றான் ஆத்மா.
“சரிப்பா, நீ போய் பொங்கலை சாப்பிடு…” என்று சொல்ல ரிது பானையில் இருந்த பொங்கலை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டிருந்தாள்.
“ரிது…” என்ற அவனின் அழைப்பில் திரும்பியவள்,
“ஹேப்பி பார்த்த டே சொன்னீங்க. இந்த கரண்டிலையே வாய்ல நாலு போடு….” என்று திரும்பிய வேகத்தில் மிரட்டி இருக்க அதில் ஒட்டியிருந்த சர்க்கரை பொங்கலை எடுத்தவன்,
“ஹேப்பி பொங்கல்…” என்று கண்கள் மின்ன சிரிப்புடன் அவளுக்கு தர யாரும் பார்க்கவில்லையே என்று வாங்கிக்கொண்டாள்.
“உங்களுக்கு வெரி ஹேப்பி பொங்கல்…” என்று அவனுக்கும் தர ஆத்மாவின் முகத்தில் குறும்பாய் புன்னகை.
“பார்த்து பொங்கல் பானைக்கு வெட்கம் வந்திட போகுது…” என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்கக் சபர்மதி தான்.
“அங்க பொங்கல் கேட்டாங்க. எடுக்க வந்தேன். இங்க என்னடான்னா?…” என்றவள் ரிதுவின் கையில் இருந்த கரண்டியையும் பாத்திரத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுவிட ஆத்மா, ரிது இருவரின் புன்னகையும் ஒன்று சேர்ந்தது.
“உங்களால எப்பவும் நான் தான் மாட்டுறேன்…”
“உன்கிட்ட நான் மாட்டிக்கிட்ட மாதிரியா?…” என்று அவளை தோளில் கைபோட்டு இழுத்துக்கொண்டவன் மற்றவர்களின் பார்வையிலிருந்து விலகி நடந்தான்.
“நம்ம வாழ்க்கையோட அர்த்தம்.. உன் அர்த்தம் நானாவும், என் அர்த்தம் நீயாவும். அது நம்ம பந்தத்தோட ஆத்மார்த்தமான அர்த்தம்…” உள்ளார்ந்த நேசத்துடன்.
“ஆத்மார்த்தமாக…” ரிது சிரிக்க,
“ஆமா, இந்த ஆத்மாவின் அர்த்தமாக…” என்றவன் நெற்றியில் முத்தமிட்டவன் விலகி நடக்க,
“கிளம்பலாம்…” என்றுவிட்டாள் ரிதுவும் உடனே.
அதற்குள் பசு மாடுகள் சப்தமிட அங்கிருந்த வாழை பழங்களை எடுத்து அவற்றிற்கு தர உடன் நின்று பசுக்களின் நெற்றியை வருடியபடி அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள் ரிது.
தூரத்தில் இருந்து அவர்கள் இருவரையும் பார்த்தவர்கள் மனது நிறைந்து போயிருந்தது.
இருவரின் திருமணத்தின் பொழுது இருவரின் இணக்கம் சாத்தியமில்லாத ஒன்றாகிவிடுமோ நினைத்து மருகியிருக்க நாங்கள் சாத்தியமாக்காவிட்டால் வாழ்வில் எதுவும் சாத்தியமில்லை என்று வாழ்ந்து காண்பித்திருந்தனர் ஆத்மாவும், ரிதுவும்.
எதிர்பார்க்காத திருமணம், எதிர்பார்ப்பில்லாத நேசம், நிர்பந்திக்காத துணை என தெளிந்த நீரோடையாக வாழ்வின் பூரணங்களை அனுபவித்து வாழ்ந்திருந்தனர். அதுவும்,
ஆத்மார்த்தமாக…
ஆத்ம அர்த்தமாக…
இருவரின் ஆத்மாவின் அர்த்தமாக…
அவர்கள் உயிர் சுமக்கும் நேசத்தின் ஆன்மாவின் அர்த்தமாக…