ஆத்மா கிளம்பி சென்றும் வெகுநேரம் அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றவளுக்கு அங்கிருக்கவே பிடிக்காமல் போனது அந்த நொடி.
கோவித்துக்கொண்டானோ, என்னவோ எதுவும் அவன் முகத்திலிருந்து தெரியவில்லை.
எதுவும் சொல்லாமல் முகத்திலடித்ததை போன்ற அந்த செயல் சுத்தமாய் ஜீரணிக்க முடியவில்லை.
போனில் அத்தனை ஆர்வமாக அங்கே முதல்நாள் பொழுது எப்படி சென்றது என கேட்டவர்களை புறக்கணிக்க முடியாமல் பேசிவிட்டு போனை வைப்பதற்குள் இவனின் கோபம்.
எங்கே எந்த திசையில் பயணிப்பதேன்றே தெரியவில்லை. கண்ணை கட்டி எங்கோ கொண்டுவந்து விட்டுவிட்டு சென்றதை போல நெஞ்சை முட்டியது மனஅழுத்தம்.
நேரம் செல்ல செல்ல தானும் கொஞ்சமேனும் அவன் சொல்லியதை கேட்டிருக்கலாம் என்றே தோன்ற ஆரம்பித்துவிட்டது ரிதுபர்ணாவிற்கு.
முதல்நாள் அத்தனை தூரம் முருகேஸ்வரியும், விசாலாட்சியும் அவளின் தலையை உருட்டி இருந்தனர்.
விடுமுறை வரைக்கு இருப்பதாக ஒரு வேகத்தில் அவள் அவர்களிடத்தில் சொல்லிவிட ஆத்மாவும் மறுக்கவில்லை என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்க அவ்வளவு தான்.
அத்தனை பேச்சுக்கள், அத்தனை அறிவுரைகள். தன் தாயின் திருமணத்தில் ஆரம்பித்து இன்றுவரை உள்ள பிரச்சனை அத்தனையிலும் எல்லாம் மீறி அவளை கை பிடித்திருப்பவன் பற்றி பேசிக்கொண்டே தான் இருந்தனர்.
அதிலேயே வெறுத்துவிட்டது. எதுவும் பேச தோன்றாமல் சரி என்று தலையாட்டிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
இங்கே வந்தாவது மாற்றம் ஏற்படுமா என்றால் எல்லாம் அந்நியமாக தெரிந்தது அவன் முதற்கொண்டு.
அதுவே தலைவலியை தந்தது. ஒன்றும் செய்ய தோன்றாமல் அங்கேயே ஹாலில் வந்து அமர்ந்துகொள்ள அவளுக்கு காபி கொண்டுவந்து தந்தார் பணிப்பெண்.
“மேம், காபி…” என்று நீட்டினார் பணிப்பெண்.
“வேண்டாம், நான் காபி குடிக்கமாட்டேன்…” என்று மறுத்துவிட,
“டீ தரட்டுங்களா?…” என்று கேட்டதே எதையாவது குடியேன்ம்மா என்று சொல்வதை போலிருக்க தலையை அசைத்துக்கொண்டாள்.
அங்கே எதுவும் தன்னிஷ்டம் இல்லை போலும் என்று தோன்ற எழுந்து வெளியே வந்து மரத்தின் நிழலில் அமர்ந்தாள்.
டீயுடன் அவளை தேடி அங்கேயே வந்துவிட்டார் அந்த பெண். அவர் கொண்டுவந்த டீயை வாங்கி கீழே வைக்க அவரும் அங்கேயே நிற்க இதென்னடா என்று கடுப்பாகி போனது.
“நான் குடிச்சிட்டு கப்பை கொண்டு வரேனே? நீங்க போங்க…”
“இல்லை மேம், நீங்க தனியா இருப்பீங்க. டீ குடிச்சா வீட்டை சுத்தி பார்க்கலாம் பாருங்க…” என்றதும் இதுவேறையா என்று தோன்றியது.
ஒன்றும் சொல்லாமல் டீயை குடித்துவிட்டு எழுந்து கொள்ள டீ கப்பை வாங்கிக்கொண்டார் அவர்.
“உங்க பேர் சொல்லவே இல்லையே?…” என்று ரிதுபர்ணா கேட்க,
“ரத்னா மேம்…” என்றார்.
நடுத்தர வயது தான் இருக்கும். உடையாகட்டும், பேச்சாகட்டும் அத்தனை நேர்த்தி. பார்க்க பணியாள் போலவே தெரியவில்லை.
“உள்ள வாங்க…” என்று அழைத்து சென்றவர் ஒவ்வொரு இடமாய் சுற்றி காண்பித்தார்.
வீடு பார்க்கத்தான் பெரிது. ஆனால் நான்கே அறை தான். கீழே ஒரு படுக்கையறை. முதல் மாடியில் இரண்டு. அதற்கு மேல் ஒன்று என்று வீடு அத்தனை விஸ்தாரமாக இருந்தது.
அழகாய் இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாக தோன்றவில்லை. என்னவோ கண்காட்சிக்கு பார்ப்பதை போலிருந்தது.
மனது ஏக்கத்துடன் தன்னுடைய வீட்டை நினைத்து பார்த்துக்கொண்டது. பழைய கட்டிடம் என்றாலும் அதில் இருந்த ஒரு சுகம் இங்கே தோன்றவில்லை.
எல்லாவற்றையும் பார்த்தபடி படியேறியவள் மொட்டைமாடியில் வந்து நின்றுவிட்டாள்.
மனதை கொஞ்சம் அமைதிப்படுத்தியது அந்த வீட்டில் அந்த மொட்டைமாடி தோட்டமும், தூரத்தே தெரிந்த கடலும் தான்.
பார்த்தவள் அங்கேயே நின்றுவிட ரத்னா கீழே சென்றுவிட மீண்டும் அவளை தேடி வந்தார்.
“ரொம்ப நேரமா உங்க போன் ரிங்காகுது மேம்….” என்று சொல்லவும் தான் அதில் கவனம் பதிந்தது.
மாடியில் தூரத்தே தெரிந்த கடலலையை பார்த்தபடி அங்கேயே நின்றவள் மொபைலை கீழே மறந்துவிட்டாள்.
“ஸார் லன்ச் டைம் வீட்டுக்கு வரமாட்டாங்க. நைட்டாகிடும் எப்பவும்….”
“அப்போ மதிய சாப்பாடு?…”
“அனுப்பி வச்சிருவேன் மேம். நீங்க இருக்கீங்கன்னு தான் என்னை டே டைம் இருக்க சொல்லிருக்காங்க. இல்லைன்னா நான் காலையில, மத்தியான சமையல்ன்னு என் வேலை முடிச்சிட்டு, நைட் டின்னர் செய்ய வந்து செஞ்சுட்டு போய்டுவேன்…”
“ஓஹ்…” என்றவள் தலையசைக்கவும் ரத்னா கீழே சென்றுவிட மீண்டும் அழைப்பு வரவும் பார்க்காமலே எடுத்தாள்.
“சொல்லுங்க சித்தி…” என்றதும் மறுபக்கம் மௌனம்.
“சித்தி?…” என மீண்டும் அழைத்தவள் மொபைலை பார்க்க அதில் அவனின் பெயர்.
“ஸ்ஸ்ஸ் அச்சோ…” என்று நாக்கை கடித்து சொல்லி,
“சொல்லுங்க…” என்றாள் உடனே.
“என்ன பண்ணிட்டிருக்க ரிது?…” என்றான் ஆத்மா.
“இங்க அவங்க, ப்ச் ரத்னா வீட்டை சுத்தி காமிச்சாங்க…”
“பார்த்தியா?…”
“ஹ்ம்ம்…”
“ஓகே, இப்ப என்ன டெரெஸ்ல இருக்கியோ?…”
“ஆமா…”
“கடல்காற்று ரொம்ப கேட்டுச்சு….” என சொல்லவும் அங்கிருந்து உள்ளே வந்துவிட்டாள்.
“சொல்லுங்க….” மீண்டும் வேறு என்ன பேச என தோன்றாமல் சொல்லியதையே சொல்ல,
“உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ணி வச்சுக்கோ….”
“எங்க?…”
“நம்ம ரூம்லயே சைட்ல ஒரு ஆஷ் கலர் டோர் இருக்கும். அது தான் ட்ரெஸ்ஸிங் ரூம். க்ளோசெட் ஓபன் பண்ணி பாரு. வாக்கிங் வாட்ரோப் தான். ஒன் சைட் ஃபுல்லா என்னோடது. இன்னொன்னு எம்ப்டி தான். நீ உன்னோடதை அங்க அரேஞ்ச் பண்ணிக்கோ…”
“ஹ்ம்ம், சரி…” என்னும் பொழுதே யாரோ பேசும் சப்தம் இங்கே கேட்டது இவளுக்கு.
“ஓகே இதை சொல்ல தான் கூப்பிட்டேன். எதாச்சும் எமர்ஜென்சினா கால் பண்ணு. பை…” என்று வைத்துவிட்டான்.
இதற்கே என்னவோ போலாக தங்கள் அறைக்குள் நுழைந்தாள். மீண்டும் அழைப்பு.
அவன் தானோ என்று பார்க்க இம்முறை வீடியோ காலில் வித்யா. சட்டென முகம் ஒளிர அதனை அட்டன் செய்தாள்.
“குட்டிம்மா….” என்றதுமே தங்கை சாப்பிட்டாச்சா என்று தான் கேள்வி எழுப்பினாள்.
“இங்க குடு வித்யா…” என வாங்கிக்கொண்ட முருகேஸ்வரி,
“கண்ணு நல்லாருக்கியா? சாப்பிட்டியா?…”
“காலையில தானே சித்தி கேட்டீங்க? அதுக்குள்ளையா?…” என ரிதுபர்ணா புன்னகைக்க அதை கண்டுகொள்ளாதவராக,
“என்னத்தா இன்னும் தலையை உணத்தாம இருக்க?…”
“அவங்க கிளம்பினாங்க. அதான் அப்படியே கட்டிட்டேன்…”
“என்ன கண்ணு நீ? சளி புடிக்காம. புது ஊரு. இதெல்லாம் கவனமா இருக்க வேணாமா?…” என்று வரிசையாக கேள்விகளை கேட்க,
“ஒன்னொன்னா கேளுங்க சித்தி…” என்ற ரிது,
“அச்சோ சித்தி, குளிச்சிட்டு வந்தேன். அவங்க ஷோரூம் கிளம்பிட்டாங்க. அதான் அப்படியே உக்கார்ந்துட்டேன்…”
“சரித்தான், கல்யாணமாகி போன பொண்ணு ஒரு இடத்துல இப்படிதான் உக்காரறதா? வீட்டுல வேலையை பார்க்கலையா?…”
“என்ன வேலை இருக்கு சித்தி? இங்க எதுவும் இல்லை. சர்வன்ட் இருக்காங்க…”
“இருந்தா நீ எதாச்சும் செய்யறது?…”
“சித்தி…”
“ஏன் நம்ம வீட்டுலையும் தான் இருக்காங்க மேவேலைக்கு. மத்ததுக்கு எல்லாம் புழங்க விடறோமா என்ன? நீ பண்ணு கண்ணு. அந்த தம்பியும் அங்க எம்புட்டு நாளைக்கு மத்தவங்க கையில சாப்புடும். பொண்டாட்டி நீ செய்யறது தனி ருசி கண்ணு…” என்றார் முருகேஸ்வரி.
“இவ இன்னும் என்னதான் நினைச்சிட்டு இருக்கா?…” என போனை வாங்கிய விசாலாட்சி,
“இன்னும் உனக்கு என்னடி? மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்திருக்கற? அவனுக்கு சமைச்சு வச்சுட்டு வர சொல்ல வேண்டியது தானே?…” என அதட்ட ரிதுபர்ணாவுக்கு கண்ணை கட்டியது.
“பெரிம்மா…” என சலிப்பாய் சொல்லியவள்,
“உங்க மருமகன் ஷோரூம்ல இருந்தே நைட் தான் வீட்டுக்கு வருவாங்களாம். சர்வன்ட் சொன்னாங்க…”