“அதையும் நீ கேட்கலையா அவன்கிட்ட?…” அதற்கும் விசாலாட்சி அதட்ட,
“அதுக்குள்ளே கிளம்பிட்டாங்க…” என்றவள்,
“நான் என்ன சமைக்க? அதுவும் இல்லாம இங்க அதுக்கும் வேலைக்கு இருக்காங்க. வேலைக்கு ஆள் இருக்கும் போது நான் போய் சமைச்சா?…”
“உனக்கு அங்க சமைக்க, புழங்க இஷ்டம் இல்லைன்னு சொல்லு…” என்றவர் என்னவோ பேச வந்து வாயை மூடிக்கொண்டார்.
பார்வை அவளை உறுத்து விழிக்க ரிது மௌனமாய் பார்த்தாள் அவர்களை. வித்யாவை பார்த்த விசாலாட்சி எழுந்து உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு,
“இன்னும் உனக்கு என்ன வேணும்?…” என்றார்.
“பெரிம்மா, நான் என்ன கேட்கறேன்? எனக்கு எதுவும் வேண்டாம். என்னை கொஞ்சம் விட்டா…”
“விட்டா கிளம்பி இங்க வந்திருவியா?…”
“இங்க அவங்க உட்பட எனக்கு புதுசு. பழக்கமில்லை. என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க பெரிம்மா…”
“எல்லாரும் பழகிட்டு தான் குடும்பத்தை ஓட்டறாங்களா? நாம தான் அப்படியப்படியே புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை பார்க்கனும். அதோட அவன் என்ன புதுசு. உன்னோட மாமா மகன் தானே? சும்மா இதையே சொல்லிட்டிருக்க?…”
“பெரிம்மா…”
“என்ன நினைச்சிட்டு இருக்க? இங்க எப்படா உன்னை கழட்டி விடலாம்ன்னு பெரியண்ணன் நினைக்கிறாரு. நீயே அதுக்கு வாய்ப்பை தந்திருவ போல?…” என்றதும் அவள் முகம் இறுகியது.
“இதெல்லாம் தேவையே இல்லை தானே? அன்னைக்கு மட்டும் இவங்க பேசாம இருந்திருந்தா…”
“என் சின்னண்ணன் அந்த வீணா போன பயந்தாரி கால்ல விழுந்து உன்னை கட்டிக்க சொல்லி கெஞ்சிருப்பார். அதுதான் நடந்திருக்கும். அதுக்கு கண்ணன் மட்டுமில்லை, நானுமே ஒத்துக்கமாட்டேன்…” என்றவர்,
“ரிது, என் பொண்ணா போய்ட்ட. எனக்கு நல்லா வருது. ஏன்டி ஏன்டி இப்படி நினைக்கிற? ஏன் அவன் என்ன பண்ணான் உன்னை? நல்லா தான பார்த்துக்கறான்?…” என்ற கேள்விக்கு மறுக்க முடியவில்லை.
“இப்ப என் கூட எதுக்கு இவ்வளோ சண்டை போடறீங்க பெரிம்மா? நான் சமைக்கனுமா? இனிமே செய்யறேன்…”
“அது மட்டுமா?…”
“வேற?…”
“சந்தோஷமா சிரிச்ச முகமா வாழனும். உன்னோட வழக்கையை பார்த்து தான் எங்களுக்கு இங்க சந்தோஷமும் நிம்மதியும். புரியுதா?…”
“புரியுது…”
“இப்ப என்ன செய்ய போற? அவனுக்கு போன் பண்ணி வர சொல்லி பேசு…”
“இப்பதான் அவங்களே பேசினாங்க….”
“சரி அப்ப சும்மாவே இப்படி உக்கார்ந்திருப்பியா? வேலையை பாரு. அது உன்னோட வீடு. இங்க எப்படி இருப்பியோ அப்படி இரு…” என விசாலாட்சி விரட்ட,
“நீங்க டிபிகல்ட் மாமியார் மாதிரி மிரட்டறீங்க பெரிம்மா. என்ன ஒன்னு எனக்கு பெரியம்மாவா போய்ட்டீங்க…” என்றவள்,
“எல்லாம் பண்ணலாம். அதுக்கு முன்ன என் ட்ரெஸ் எல்லாம் எடுத்து உள்ள அடுக்க சொன்னாங்க அவங்க. அதை செய்யனும். போதுமா?…”
“சந்தோஷம்…” விசாலாட்சி நொடிக்கும் குரலில் சொல்ல,
“போதுமா?…” என்றாள் ரிது காட்டமாய்.
“போதாதே? அங்கயே அந்த துணிமணிங்க இருக்கனும். கூட நீயும். பத்தலைன்னா சொல்லு, இங்கருக்கற உன்னோட உடுப்பு எல்லாத்தையும் பெட்டியை கட்டறேன்…” என்றார் விசாலாட்சி சிரித்துக்கொண்டே.
“சரி சரி, வை…” என்று சொல்லி வைத்துவிடவும் மீண்டும் அமைதியாக இருந்தாள் யோசனையுடன்.
கல்லூரிக்கு செல்லமுடியாதென்று தெரிந்துவிட்டது. சென்னையில் இருக்க அங்கே வேலையை எப்படி தொடர முடியும்?
அதனை நேரில் சென்றாவது சொல்லவேண்டுமே? அதற்கேனும் ஊர் செல்லவேண்டும்.
முதலில் பார்த்திருந்த மாப்பிள்ளை அருகில் இருந்த ஊர் என்பதால் வேலையை விட அவசியமில்லை என்று நினைத்தாள்.
இப்போதோ வாழ்க்கை ஆத்மாவுடன் என்று விதித்திருக்க இனி எங்கே வேலைக்கு செல்ல என்று தான் தோன்றியது.
இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே, முடிவு செய்யலாம் என நினைத்தபடி எழுந்துகொள்ள ரத்னா வரவும் சரியாக இருந்தது.
“சாப்பிட வாங்க மேம்…” என்ற அழைப்பில் கீழே வந்தவள் உண்டு முடித்துவிட்டு அடுக்களையை சுற்றி பார்த்தாள் மறுபடியும்.
என்னென்ன பொருட்கள் எங்கே இருக்கிறதென மீண்டும் ஒரு பார்வையிடல் கவனமாக.
அதனை ரத்னாவிடமும் கேட்டு தெரிந்துகொண்டவள் சுற்றி பார்த்துவிட்டு புன்னகையுடன்,
“நாளையில இருந்து நான் சமைக்கறேன்…” என்றாள் ரத்னாவிடம்.
“ஏன் மேம்? என் குக்கிங் நல்லா இல்லையா?…” ரத்னா பதற,
“அப்படி இல்லை…” என்ற ரிது ‘இதென்ன தேவையில்லாமல் செய்கிறேன்?’ என தோன்ற,
“சும்மா கேட்டேன். எனக்கு தோணும் போது செய்யறேன். அதை தான் சொல்லவந்தேன். அப்ப ஹெல்ப் பண்ணுங்க….” என்றதும் தான் ரத்னாவிற்கு நிம்மதியானது.
“சரிங்க மேம், நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்றதும் தான் ஆத்மாவுக்கு உணவு சென்றதோ என்னவோ என தோன்றியது.
“அவங்களுக்கு சாப்பாடு அனுப்பியாச்சா?…”
“அப்பவே அனுப்பிட்டேன் மேம். இந்நேரம் சாப்பிட்டே முடிச்சிருப்பாங்க ஸார்…” இலகுவாய் சொல்லிவிட்டு அவர் வேலையில் ஈடுபட ரிதுபர்ணா வெளியே வந்தாள்.
“சரியான தத்தி நான். அவங்க வீட்டுல இருந்துக்கிட்டு அவங்க சாப்பிட்டாச்சா இல்லையான்னு கூட கேட்கலை…” என தலையில் தட்டிக்கொண்டாள்.
பின் தன்னறைக்கு வந்தவள் புடவையை மாற்றி வேறு உடை அணிந்துகொண்டு ட்ராலியை உருட்டிக்கொண்டுவந்து தனது உடைகளை பிரிக்க ஆரம்பித்தாள்.
அவன் சொல்லிய இடத்தை பார்த்தவள் இத்தனை பெரிதா என்று யோசித்தபடி அதையும் சுத்தம் செய்துவிட்டு ஒவ்வொன்றாய் எடுத்து ஹேங்கரில் மாட்ட ஆரம்பித்துக்கொண்டிருந்தாள்.
உடைகள் எல்லாம் கட்டிலில் பரத்தி இருக்க உள்ளிருந்த க்ளோசெட்டிற்கும் இங்கே கட்டிலுக்குமாய் நடந்துகொண்டிருந்தாள்.
காதில் ஹியர்போனை மாட்டி பாடலை ஒலிக்கவிட்டபடி வேலையை பார்க்க நேரம் சென்றதே தெரியவில்லை.
இவ்வளவு தானே முடித்துவிடலாம் என்று பார்க்க இரண்டு பெட்டியை கூட முடிக்க முடியவில்லை.
அவ்வளவு வைத்திருந்தனர். இதில் நகைகள் வேறு இருக்க அதனை எங்கே வைக்க என்று தெரியவில்லை.
முருகேஸ்வரியை ஒன்றும் சொல்லமுடியாது. வேண்டாம் என்றாலும் ‘உன்னுடையது’ என அவர் வைத்துவிடுவார் தான்.
இப்போது இங்கே இடம் பார்த்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமே? சுத்தமாக தெரியவில்லை.
ஒரு பெருமூச்சுடன் இன்னொரு பெட்டியில் வைத்து மூடிவிட்டு மூன்றாம் பெட்டியை திறந்தாள்.
அதற்கே உடல் களைத்துவிட்டதை போலிருக்க அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருகினாள் ரிதுபர்ணா.
சட்டென கதவு திறந்தது கூட தெரியவில்லை. காதில் பாடல் ஒலிக்க இந்த ஓசை கேட்கவில்லை.
யாரோ அருகில் வரும் அரவத்தில் ரத்னாவோ என அசட்டையாய் திரும்பி பார்க்க அருகே வந்து நின்றதோ ஆத்மா.