இத்தனை தூரம் தன்னை சுத்தலில் விடுபவனின் மேல் கோபப்பட கூட முடியாமல் பின் தொடர்ந்தாள் ரிதுபர்ணா.
இப்போது இந்த நகைக்கடைக்கு எதற்கு? அதுவும் தன்னை அழைத்துக்கொண்டு என தோன்றியது.
‘ஒருவேளை தனக்காகவோ?’ என தோன்ற அவனிடம் பார்வையை செலுத்தி மீண்டும் முக ஆராய்ச்சியில் ஈடுபட அவள் விழிகளின் தீண்டலில் திரும்பி பார்த்தான்.
“எப்பவுமே உனக்கு என் முகத்துல ஒரு கண்ணு. என்னவாம்?…” என கேட்டதும் அவளுக்கு தூக்கிவாரி போட்டது.
“கண்ணா?…” என அவள் வாயில் கை வைத்து கேட்க,
“ஹ்ம்ம், கண்ணா தான்…” என சிரிப்புடன் கூறினான் ஆத்மகண்ணன்.
“ம்ஹூம், கண்ணா? நீங்க சொன்னீங்கல்ல கண்ணு. அந்த மீனிங்…” என அவசரமாய் அவனுக்கு ஒரு விளக்கம் தந்துவிட்டு,
“எனக்கென்ன உங்க மேல கண்ணு? நான் சும்மா பார்த்தேன். எனக்கொன்னுமில்லை…” என்றாள்.
“என் முகத்துலன்னு தான சொன்னேன். ஏன் இவ்வளோ பதட்டம்?…” என்றவன்,
“என் மேல இருந்தாலும் தப்பில்லை. என் வொய்ப் தானே நீ? கண்ணு வச்சுக்கோ. நீ வைக்காம வேற யார் வைக்க முடியும்?..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தவரிடம் என்னவோ பேசியவன்,
“செகேன்ட் ஃப்ளோராம். வா…” என்றான்.
“எங்க? என்கிட்டே எதுவும் சொல்லலை நீங்க?…”
“ஆனா உன் கூட தானே வந்திருக்கேன்? தனியா வந்திருந்து நீ என்கிட்டே எங்கன்னு கேட்டு நான் சொல்லலைன்னா அப்போ நீ கேட்கவேண்டியது தான். நீயும் என்னோட தானே வர…”
அவன் அதற்கு நீண்ட விளக்கம் தர ஏன்தான் கேட்டோமோ என்றாகி போனது ரிதுபர்ணாவிற்கு.
அவன் சொல்லிய இரண்டாம் தளத்தில் வந்து நின்றதும் அவற்றை சுற்றி பார்த்தாள். அது காதணிகளுக்கு மட்டுமேயான தளம்.
“இங்க எனக்கா வாங்க வந்திருக்கோம்?…” அடுத்த சந்தேகமாய் கேட்க,
“ஏன்? உனக்கு வாங்காம எனக்கா வாங்கி காதுல போட்டுக்க போறேன்?…” சற்றே கிண்டல் தொனியில் சொல்ல மீண்டும் கப்பென்று வாயை மூடினாள்.
இவனிடம் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் வெறுமனே வேடிக்கை பார்க்கலாம் என்று தோன்ற மௌனமாகி போனாள்.
“நான் இதுவரை தோடு எதுவும் போட்டதில்லை. அப்போ உனக்கு தானே?…” என்று சொல்ல அப்போதும் வாயை கோந்து போட்டு ஒட்டியதை போல மூடிக்கொண்டாள்.
“உன்னோட வந்திருக்கேன், ஏன் உனக்கு தானான்னு டவுட்? உனக்கு நான் எதுவும் வாங்கமட்டேனா?…” என்று கேட்க விழிகள் விரிந்ததே தவிர வார்த்தைகளை சிறை பிடித்து வைத்துக்கொண்டாள்.
“என்ன சைலன்ட்?…” என்றவன் அவளின் தலையசைப்பில்,
“ஓகே, நீ ஒன்னும் பேசவேண்டாம். வா…” என்று சொல்லி ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவன் அவன் எதிர்பார்த்த பகுதிக்கு வரவும் அமர்ந்துகொண்டான்.
“சிட்…” என்று ரிதுபர்ணாவை அமர வைத்து,
“ஜிமிக்கி டிசைன்ஸ் எடுங்க…” என்றான் அங்கு நின்ற ஊழியரிடம்.
‘இப்ப எதுக்கு இது?’ என தோன்ற கேள்வியாய் அவனை பார்க்க அவள் கேள்வி புரிந்து,
“நான் உன் ஜிமிக்கியை உடைச்சுட்டேன்ல. அதான் வேற வாங்கலாமேன்னு. அதுவும் வேற ஸ்டட் எதுவும் உன் முகத்துக்கு செட்டாகற மாதிரி எனக்கு தோணலை…” என்று சொல்ல எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
‘இவன் அளவுக்கு அதிகமாகவே தன்னை கவனிக்கிறான்’ என தெளிவாய் புரிந்து போனது.
அவளின் பதில் எதையும் எதிர்பார்க்காமல் ஒவ்வொரு ஜிமிக்கியாய் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தவன் ஒன்றை தேர்வு செய்து ரிதுவின் காதருகே வைத்து பார்த்தான்.
“நல்லாயிருக்கு ஸார் மேடம்க்கு…” என ஊழியர் சொல்ல,
“தெரியும்…” என்று அவரை பார்க்காமலே படக்கென்று பதில் சொல்லியவன் அந்த ஜிமிக்கியை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தான்.
‘என்னவோ செய்துகொள், வாங்கு, வாங்காமல் இரு. எனக்கேன்?’ என்பதை போல விட்டேற்றியாக அமர்ந்துகொண்டாள்.
இங்கே எது தன்னுடைய விருப்பம் கேட்டு நடக்கிறது? ஏற்பாடு செய்த திருமணமாவது செய்யட்டுமா என இளவரசுவும், முருகேஸ்வரியும் ஒருவார்த்தை கேட்டார்கள்.
எந்த நொடி ஆத்மா தன் வாழ்க்கையில் வந்தானோ அப்பொழுதில் இருந்தே தலையசைப்பதை போல தான் நிகழ்வுகளும் நிகழ்ந்தேற பொம்மை போலமர்ந்திருந்தாள் பதுமை.
“உனக்கு ஓகே வா ரிது?…” அவன் கேட்கவும் அப்போதும் தலையசைப்பு தான்.
‘இப்போது நீ ஏன் இதனை வாங்கி தருகிறாய்?’ என கேள்வி கேட்டால் ‘புருஷன், உரிமை, உடைத்தேன்’ என அங்கே வைத்தும் பேசிவிடுவானோ என எதையும் மறுக்கவில்லை இருக்கும் இடம் பொருட்டு.
“நைஸ்…” என மீண்டும் அவள் காதில் வைத்து பார்த்து கண்ணாடியை காண்பித்து பார்க்க சொல்ல நன்றாகவே இருந்தது.
அதுவும் அந்த ஜிமிக்கியின் அழகிய வேலைபாடு மனதையும் கண்ணையும் கவர்ந்தது.
“செலெக்ட் பண்ணிடறேன்…” என்று சொல்லிய ஆத்மா ஊழியரிடம்,
“ஹ்ம்ம், இந்த ஜிமிக்கி ஒன்னும் டேமேஜ் ஆகாது தானே?…” என்று கேட்க திக்கென்றானது ரிதுபர்ணாவிற்கு.
‘போச்சு, அடேய்’ என மனதிற்குள் அவசரமாய் அலறியவள் அதே வேகத்தில் அவனின் கையை பிடிக்க,
“என்னம்மா?…” என்றான் ரிதுவை பார்த்து.
விளையாட்டோ, வில்லங்கமோ எதுவும் இல்லை முகத்தில். வெகு சாதாரணமாக தெரிந்துகொள்ள கேட்ட கேள்வி தான்.
ஆனால் அதன் பொருள் உணர்ந்தவளுக்கோ அங்கே அமரமுடியாமல் ஒருவித சங்கடமாகி போனது.
“இதை என்ன இங்க கேட்கறீங்க?…” என வாயை திறந்துவிட்டாள்.
“இங்க வாங்கற நகை பத்தி இங்க தானே கேட்கனும்…”
“ஜிமிக்கி வெய்ட்டா தான் இருக்கு. ஒன்னுமாகாது. ப்ளீஸ் வேற எதுவும் கேட்க வேண்டாம்…” என்றாள் அவள் அவன் பக்கம் தலை சாய்த்து மெல்லிய குரலில்.
“வேற டிசைன்ஸ் காமிங்க…” என அதனை விழிகளால் மறுத்துவிட்டவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை அவளுக்கு.
“அதான் ஒன்னு எடுத்தாச்சே? இன்னும் என்ன? போகலாம்…” ரிது அழைக்க,
“என்ன அவசரம்? ரெண்டு மூணு இருந்தா உனக்கு யூஸாகும் தானே? ஒரே மாதிரி தான் போடுவியா நீ? வேற டிஸைன்ஸ் பார்க்கலாம்….” என்று சொல்லியவன் அவளின் பேச்சை கேட்காது மேலும் இரண்டை தேர்வு செய்ய கண்ணை கட்டியது ரிதுவிற்கு.
“பில் பண்ணியாச்சு. இதை போட்டுக்கோ…” என அங்கேயே சொல்ல,
“இல்லை. புது நகை வாங்கினா வீட்டுல வச்சு சாமி கும்பிட்டு தான் போடனும்னு சித்தி சொல்லியிருக்காங்க…” என்றதும் வாங்கிய நகையை பேக் செய்ய சொல்லியவன்,
“வேற எதுவும் வேணுமா?…” என்றான்.
“ம்ஹூம், வேண்டாம்…” என மறுக்க நகையை வாங்கி காரில் ஏறும் வரை அமைதியாக இருந்தவன் காரை கிளப்பவும்,
“ஏன் அப்படி? சாமிக்கு வச்சு கும்பிட்டு போடனும்னு?…” என்று ஆத்மா கேட்க எதற்கு என்று தெரியவில்லை என்றாலும் பதில் கூறினாள்.
“அப்பத்தான் லட்சுமி கடாட்சம், செல்வம் பெருகும்ன்னு சொல்வாங்க…” என்று அவள் கூறவும் இதழோரம் ஒரு இகழ்ச்சி புன்னகை.
“உங்கம்மாவுக்கு கூட தாத்தாவும், பாட்டியும் நகை போட்டு அனுப்பும் போது சாமிக்கிட்ட வச்சு தானே எடுத்து தந்திருப்பாங்க? இப்ப அதுல ஒரு நகையாச்சும் மிச்சமிருக்கா?…” என்றதுமே முகம் கன்றிவிட்டது ரிதுவிற்கு.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து போக மழுக்கென்று கண்ணை நீர் நிறைக்க முயன்று உள்ளிழுத்தாள்.
“உன்னை குத்தி காமிக்க சொல்லலை. எதுவும் நம்மகிட்ட இருக்கனும்னு நினைச்சாலும் அது நம்ம கையில இல்லை. அதுக்கு சும்மா சாமியை காரணம் சொல்லாதன்னு சொல்லவரேன்…” என்று சொல்ல மீண்டும் மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
ரிதுபர்ணாவிற்கு ஒருமாதிரி கீழிறக்கமாக தோன்றிவிட்டது ஆத்மாவின் இந்த பேச்சு. சுத்தமாய் பிடிக்கவில்லை.
“உண்மை தான் எதுவும் நம்ம கையில இல்லை. கஷ்டம் ஒரு மனுஷனை மட்டுமே சுத்தி வராது. அது விதி. முன்ன எங்களுக்கு, அடுத்து யாருக்காவேணாலும் இருக்கலாம். அதுவும் நம்ம கையில இல்லை…” பட்டென்று சொல்லிவிட்டாள்.