“பட் அதுல ஒரு விஷயமிருக்கே. அந்த விதி தான் நம்மளை தேடி வரனும். தப்பை நாம பண்ணிட்டு விதியை சொல்ல கூடாது இல்லையா? மனுஷனுக்கு செல்ப் கண்ட்ரோல் முக்கியமாச்சே? இல்லைன்னா…” என்றவனின் பேச்சை கையமர்த்தி தடுத்தவள்,
“இப்ப என்ன சொல்ல வர்றீங்க? எங்கப்பாவுக்கு செல்ப் கண்ட்ரோல் இல்லைன்னா? ஆமா, அதுக்கென்ன? நான் ஒன்னும் உங்ககிட்ட வந்து நிக்கலையே? முடியலை. கஷ்டம், காப்பாத்திக்குடுங்க. காசு குடுங்கன்னு….” என்றாள் அடக்கப்பட்ட ஆவேசத்துடன்.
கண்களில் அத்தனை கனல். இந்த பேச்சு எதற்கு ஆரம்பித்தது என்றே மறந்துவிட்டிருந்தனர் இருவரும்.
அவன் என்னவோ சொல்ல ஆரம்பித்து பேச்சின் திசை மாறி இப்போது இப்படி சண்டையில் முடிய ஆத்மாவின் முகத்தில் மாற்றமில்லை.
மெலிதான புன்னகையுடன் அவளை பார்த்தவன் அவளின் தோளை தட்டிக்கொடுத்தான். அதில் அவள் விலக,
“மிஸ்ஸாகற நீ? சண்டை போடறோமா நாம?…” என்று கேட்டவனை திகைத்து பார்த்தாள்.
“என்னாச்சு? என்ன பார்வை இது?…” என்றவன் விரல்கள் தோளில் இருந்து அவளின் கன்னத்திற்கு இடம்பெயர லேசாய் பின்னால் சரிந்து அவனின் கரத்தை பிடித்து விலக்கினாள்.
“நம்பிக்கைன்றது ஒரு உணர்வு ரிது. அதுக்காக சாமி காப்பாத்தும்ன்னு எல்லாத்தையும் சாமி மேல போட்டுட்டு நாம என்னவேணாலும் பண்ணலாம்ன்னு இல்லை. எல்லாமே நம்ம கையில தான் இருக்கு. அதை சொல்ல வந்தேன்…”
“நீங்க பேசினது தப்புன்னு எனக்கு கோவம். அதான் நானும் பேசினேன்…” என்றாள் ரிது.
அதில் மறைமுகமாய் அவன் கோபம் கொள்ளாததும், தான் பேசியதற்கு எதிர்ப்பு சொல்லாததுமே அவளை மேலும் பேசவிடவில்லை.
ஆனால் நீ பேசியது தவறு என சுட்டிக்காட்ட ஆத்மா முகத்தில் அப்போதும் மாற்றமில்லை.
“தப்புன்னு ஒத்துக்கமாட்டேன். நான் பேசினதும் உண்மை. நீ பேசினதும் உண்மை. இதுல தப்பு எங்க இருந்து வந்தது?…” என்று கேட்க வாயடைத்து பார்த்தாள்.
அண்ணாமலையின் மகனா இவன்? என்று தோன்ற அவளின் வியந்த விழிகளில் பார்வையை பதித்துவிட்டு சாலையில் திரும்பிக்கொண்டான்.
“செல்ப் கண்ட்ரோல் ரொம்ப முக்கியம். நீ கொஞ்சம் அந்தபக்கம் பார்க்கலாம். இப்ப நடு ரோட்டுல போய்ட்டிருக்கோம்…” என்று சொல்ல சட்டென பார்வையை திருப்பினாள் ரிதுபர்ணா.
“குட், டீச்சர்க்கு சொல்லித்தறது மட்டுமில்லை கேட்டுக்கற பழக்கமும் இருக்கு…” என பாராட்ட அவன் பக்கம் பார்க்கவே இல்லை அதன்பின்.
வீடு வந்ததும் கைகளை கழுவிவிட்டு உணவு உண்ண வந்து அமர்ந்தான். ரத்னா இன்னும் கிளம்பியிருக்கவில்லை.
இருவரும் வரவும் அவர் பரிமாற அமைதியாய் முடிந்தது அந்த நேரம். சாப்பிட்டு விட்டு ஆத்மா எழுந்து மாடிக்கு செல்ல அவனுடன் அவள் கிளம்பவில்லை.
அவன் பேசியதன் தாக்கம் மனதை விட்டு அகலாமல் இன்னும் கீறிவிட்டுக்கொண்டு இருந்தது.
அத்தனை வைராக்கியமாய் அப்படி எந்த ஒரு பேச்சும் வந்துவிட கூடாதென்று தானே எதிர்கால கவலைகள் எதையும் நினைக்காமல் தானே அனைத்தையும் சுமந்தது.
இன்று யோசிக்க யோசிக்க அத்தனை கஷ்டமாய் இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையை நினைத்தும் பார்க்கவில்லை.
தன்னை வருந்த செய்யவேண்டும் என்பது அவனின் நோக்கமல்ல என்பது புரிந்தாலும் அதற்கு அவன் காட்டிய உவமை மனதை மிகவும் பாதித்தது என்னவோ உண்மை.
யோசித்தபடி மொட்டைமாடிக்கு சென்றுவிட்டாள். தூரத்தில் அடர்ந்த இருளில் அலைகள் மட்டும் ஓடிவருவதும், பின்னோக்கி செல்வதுமாக இருக்க அதனை பார்த்தவளுக்கு கொஞ்சம் அமைதி கிடைப்பதை போலிருந்தது அந்த தனிமை.
அங்கேயே படி போன்ற அமைப்பின் மேல் மயில்மாணிக்கக்கொடி படர்ந்திருக்க அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
ஆத்மாவாக தேடி வரும் வரை அவனை பற்றி கூட எண்ணமில்லை. எதையும் யோசிக்காதே யோசிக்காதே என்று நினைத்தவளுக்கு இப்போதையே நினைப்பு தனது வேலையை பற்றி மட்டுமே.
நிச்சயம் தன்னை அங்கே இருந்து வேலை பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் வீட்டினர்.
அடுத்து என்ன செய்வது என்று தான் யோசித்தாள். அவளின் வேலை அவள் படித்த கல்லூரியில் தான்.
முதுகலை படிப்பை முடித்ததுமே அவளை அங்கே தற்காலிக பணியில் அமர்த்திவிட்டனர்.
ரிதுபர்ணாவின் கற்பித்தலும் நல்லவிதமாய் இருக்க விரைவில் வேலையை நிரந்தரமாக்கி கொள்ளலாம் என்று நிர்வாகம் சொல்லியிருக்க மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
தற்போதைய சூழல் வருமானத்திற்கு குறைவில்லை என்றாலும் தன்னுடைய உழைப்பும், சொந்தக்காலில் நிற்பதுமே முக்கியமாக பட்டது.
‘என்ன இருந்தாலும் அம்மா வழில அந்த சொத்துக்களால வர வருமானம் தானே இதெல்லாம்?’ என இப்போதும் பேச்சுக்கள் இருக்க அவற்றை கடந்து வந்துகொண்டிருந்தாள்.
எழில் குழுமத்தில் தமயந்தியின் பேரில் அவளுக்கான பங்கை மாத வருமானமாய் தருவிக்க தமயந்தியின் பெற்றோர் எவ்வளவோ போராடியும் முடியாதென மறுத்துவிட்டார் அண்ணாமலை.
“நோகாம நோம்பு கும்பிடுவாங்க உங்க மருமகனும், அவன் மகளும். அதுக்கு நான் உழைச்சு கொட்டனுமா? அதான் ஊரை சுத்தி இருக்கற கடைகண்ணியை அவ பேருக்கு எழுதி வச்சுட்டீங்க தானே? அது போதாதாக்கும்?…”
வீட்டின் வெளி திண்ணையில் வைத்து ஊருக்கே கேட்க அவர் கத்திய கத்தல் இன்றளவும் மறக்காதே.
“கொட்டி கொட்டி குடுத்த நகைநட்டை தான் அம்புட்டையும் குடிச்சு அழிச்சாச்சு. இப்ப தொழில்லையும் பங்கு குடுத்து அதையும் இழுத்து மூடனுமா? யார் வீட்டு சொத்தை யாருக்கு அழறது? பிச்சையா கூட எதுவும் தரமுடியாது…” என அத்தனை அசிங்கப்படுத்திவிட்டார்.
அண்ணாமலை சொல்லிய அந்த வருமானமும், நகைகளும் விழலுக்கு இழைத்த நீரை போலத்தான். வந்த வழியும் தெரியாமல், செல்லும் வழியும் தெரியாமல் போனது.
‘நான் எதுவுமே கேட்கவில்லையே?’ என்ற மன்றாடலுடன் பிச்சை என்ற வார்த்தையில் குன்றிப்போய் நின்ற பெண்ணை மடிதாங்க அந்த நாள் முருகேஸ்வரியை தவிர யாருமில்லாது போனார்கள்.
இப்போது நினைக்கையில் வருத்தம் மேலிட ஒரு புன்னகை. அவ்வளவே அவளிடமிருந்து பிரதிபலிப்பு.
மனதில் தோன்றியதை அத்தனை சுலபத்தில் பகிர்ந்துவிடமாட்டாள். ‘என்னை ஏன் இத்தனை பேச்சு?’ என்று எதிர்த்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது.
பேசும் பேச்சுக்களை வைத்து பலமடங்கு தள்ளி நின்றுவிடுபவள் இப்போது எங்கும் செல்லமுடியாமல் ஆத்மாவின் கைகளுக்குள் அவன் மனைவியாய் சிக்குண்டதை போல மூச்சு முட்டியது.
இப்போதும் அவனுக்குள் சிறைப்பட்டதை போலிருக்க மெல்ல தலையை அசைத்து திரும்ப நிஜம் தான்.
ஆத்மாவின் வலிய கரங்கள் அவளை சுற்றி வளைத்திருந்தது. எப்போது வந்தான் என்ற தெரியவில்லை.
அருகில் அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு மீண்டும் அவன் முகத்தில் ஒரு தேடல்.
‘இவனுக்கு என்ன தலையெழுத்து என்னை இப்படி திருமணம் செய்து அழைத்து வரவேண்டும் என்று’ என்ற பார்வையுடன் அவனை ஏறிட,
“கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேனே? ஏன் தனியா இருக்க?…” என்றான் ஆத்மா இன்னும் வாகாய் அமர்ந்து அவளை அணைத்தபடி.
“சும்மா, இங்க வரனும்னு தோணுச்சு. அதான்…” என்றவளின் முகத்தை அளந்தவன் பார்வை அவளை தாண்டி பார்த்தது.
“வெய்ட்…” என்று இறங்கி சென்று அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் விளக்கை அணைத்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டான் பழையபடி.
“பீச் சைட்ல வாக்கிங் வரவங்களுக்கு இங்க கவனிச்சு பார்த்தா நாம இருக்கறது தெரியும்…” என்று விளக்கம் சொல்ல,
“அவ்வளோ தூரத்துல இருந்து இங்க பார்ப்பாங்களா?…”
“ஹ்ம்ம், யாருன்னு பார்க்கனும்னு நினைச்சா பார்க்கலாம் தானே? மொபைல்ல ஜூம் பண்ணி கூட பார்க்கலாம் தானே? ப்ரைவேசி போய்டும்…” என்று அவளின் கழுத்தை சுற்றி கை கொண்டு வளைத்து அணைத்தான்.
இலகுவாய் இப்போது பேசியவனிடம் மீண்டும் கோபம் காட்டி முகம் திருப்ப முடியவில்லை அவளால்.
அது அவளின் சுபாவமும் அல்ல என்பதால் அவனிடம் சட்டென முறித்துக்கொள்ள முடியவில்லை.
அப்படி இருந்தது அவனின் பேச்சும் செயலும். அதுவே அவனிடம் இலகுவாய் செல்ல விடவில்லை.
“என்ன ரிது? என் முகத்துல என்ன இருக்கு? சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கறேன்…” என்றான் ஆத்மா அவள் பார்க்கும் விதத்தில்.
“எதுவுமில்லையே…”
“ம்ஹூம்ம், என்னவோ யோசிக்கிற. சொல்லு, இல்லைன்னா கேளு. பதில் சொல்றேன்…” என்றவன்,
“பட், எனக்கு மறைச்சு பதில் சொல்ல வராது. எனக்கு தோணுறதை அப்படியே சொல்லிடுவேன்…” என்றான்.
எதிராளியின் முகம் பார்த்து செயல்படாத அவனும், முகதாட்சண்யம் பெரிதும் பார்க்கும் அவளும் ஒரே பாதையில் பயணம்.
இந்த விந்தையை எண்ணி வியந்துகொண்டே மௌனமாய் மீண்டும் பார்வையை அலைகடல் பக்கம் திருப்பினாள்.
“உங்களுக்கு தனியா இருக்கறது ரொம்ப பிடிக்குமோ?…” என்ற கேள்வி ஆரம்பமானது அவளிடமிருந்து.
இதுதான் வாழ்க்கை. இனி இங்கே தான் அவளின் இருப்பு என்னும் பொழுது தெரிந்துகொள்ளவேண்டுமே?
அவனை அறிந்துகொள்ள அதற்கான முதல்படியை தானே முன்வந்து முதலில் எடுத்து வைத்தாள்.
அவன் தன்னை தெரிந்துகொள்ள நினைப்பானா என்று தோன்றிய நொடி அவன் மீதான யூகம் நிச்சயம் மாட்டான் என்று தான் அவளுக்கு உணர்த்தியது.