இவன் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைப்பவன். திட்டமிடுதல் என்பதோ, இல்லை தெரிந்து நகர்ந்து செல்வதென்பதோ இவனிடத்தில் கிடையாதென அவளறிந்தவரை அவனை புரிந்துகொண்டது.
“எப்போ தனியா விடக்கூடாதோ அப்போ தனியா விட்டாங்க. இப்ப அதுவே பழகிருச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு ஒருத்தரோட இருக்கேன்னா அது உன்னோட தான் இருக்கேன்…” என்றான் மனதை மறையாமல்.
இதற்கு என்ன சொல்லவேண்டும் என்று தெரியாமல் அவன் முகத்தை தான் பார்த்து விழிக்க,
“திரும்பவுமா?…” என கேட்டவன் புன்னகையுடன் அவளை தீண்டி விலக விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
“அவ்வளோ தானா?…” என்று அவளை அணைத்திருந்த பிடியில் ஒரு அழுத்தத்தை கொடுக்க அவன் கையை எடுக்க நினைத்தாள்.
“வாட்?…”
“இல்லை கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்…” அவனுக்கு புரியுமா என்ற யோசனையுடன் அவள் சொல்ல,
“அதான் மார்னிங்ல இருந்து நைட் வரை இருக்கே. அந்த ஸ்பேஸ் போதாதா மிஸஸ் ஆத்மா?…” என கேட்டு அவளை மீண்டும் மௌனியாக்கினான்.
“வேணும்னா சொல்லேன்…” என்றவன்,
“வாழ ஆரம்பிக்கும் போதே நான் சொன்னது தான். திரும்ப அதை நான் ரிப்பீட் பண்ணனுமா ரிது?…” என்று சொல்ல இன்னும் ஒருவித அலைகழிப்பு.
“உங்களுக்கு என்னை புடிக்குமா?…” மனதை அரித்த கேள்வியை கேட்டேவிட்டாள்.
அதற்கு மேலும் இதனை எண்ணி எண்ணி குழம்ப தேவை இல்லை. இந்த திருமணத்தின் ஆரம்பம் எதுவென்று அறிந்தாகவேண்டும் என தோன்றியது.
“புடிக்குமே. இதுலே என்ன சந்தேகம்?…” என்று சொல்ல அதிர்ச்சியில் அவள் உறைந்த நிலை தான்.
“என்ன சொல்லிட்டேன்னு இந்த கண்ணு இவ்வளோ பெருசாகுது?…” என்று அதில் அவன் பொருந்த அவனின் சிலநொடி அணுகலுக்கு அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“ரிது, உள்ள போகலாம்…” என்றவன் கிசுகிசுப்பில் தெளிந்தவள்,
“என்ன சொன்னீங்க? என்னை புடிக்குமா?…” தன் கழுத்தில் புதைந்திருந்தவனின் கேசத்தில் கைகொடுத்து பட்டென்று அவனை நிமிர்த்தி பார்த்து கேட்க,
“ஹ்ம்ம், இப்ப நீ என் வொய்ப் தானே? புடிக்கும்…” என்று சொல்ல கனவிலிருந்து தண்ணீர் தெளித்து எழுப்பியதை போலிருந்தது.
“எனக்கு புரியலை…” என தலையை கைகளால் தாங்கிக்கொண்டாள்.
சில கணங்கள் அப்படியே கரைய அவள் பாவனைகளை மெல்லிய நிலா வெளிச்சத்தில் கவனித்தபடி பார்த்திருந்தான் ஆத்மா.
“என்ன தெரியனும் உனக்கு?…” என கேட்க,
“இந்த கல்யாணம், இது ஏன்? எனக்கு சொல்லிடுங்க ப்ளீஸ்…”
“என்ன சொல்ல சொல்ற? முன்னாடியே உன்னை பிடிச்சு இதான்டா கிடைச்சது சான்ஸ்ன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படினா?…” கேலி குரலில் அவன் சொல்லவும் தொண்டையில் நீர் வரண்டது.
மீண்டும் நோகும்படி என்னவும் சொல்லிவிடுவானோ என்று மனது தவிக்க தொடங்கியது.
கேட்டிருக்கவே வேண்டாமோ? இவனை போல தானும் அப்படியே ஏற்று வாழ்க்கையை செலுத்தியிருக்க வேண்டுமோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
“ரிது, வாட் ஹேப்பன்ட்?…” என்றான் அவளை தன் தோளில் சாய்த்து தலையை நிமிர்த்தி பார்த்து.
“இல்லை…” என சொல்லியவள் குரல் உள்ளடங்கி இருந்தது.
“உன்னை பிடிச்சு கல்யாணம் செஞ்சேன்னு நினைச்சியா? பதில் சொல்லனும்….” என்றதும் அவள் ‘ஆமாம்’ என தலையசைக்க,
“கல்யாணம் செய்யனும்னு நினைச்சேன். அந்த நிமிஷம் ஒரு பிடித்தம். நானும் பிடிச்சுக்கிட்டேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். இப்ப பிடிக்கும் தானே?…” என்று சொல்ல தலை சுற்றியது அவளுக்கு.
“இங்க பார் ரிது, அன்னைக்கு நானும் சைலண்டா தான் நின்னேன். ஈவன் நான் மண்டபத்துக்கு வந்திருக்கவும் கூட மாட்டேன். சித்தப்பாகிட்ட பேச வேண்டியதிருந்ததேன்னு அவங்களை அப்போ வர சொல்ல முடியாதுன்னு நான் அங்க வந்தேன்…”
“நான் வந்த சூழ்நிலை என்னவோ அங்க ரொம்ப ஸ்ட்ரேஞ். அப்பவும் பிராப்ளம் சால்வாகிடும்ன்னு பார்த்தா அவன் கல்யாணம் செய்யமாட்டேன்னு பயந்து கிளம்பறான். சித்தப்பா மன்னிப்பு கேட்டு கெஞ்சறார். பார்த்துட்டு சும்மா நிக்க சொல்றியா?…”
அப்போதும் அவனின் முகத்தையும், அதில் வந்துபோகும் உணர்வுகளையும் தான் அவதானித்தபடி இருந்தாள் அவனே எல்லாம் சொல்லட்டும் என்று.
“அவன் ஒத்துக்கலைன்னதும் வேற வழியில்லைன்னு சித்தப்பா கல்யாணத்தை நிறுத்தனும்னு ஆரம்பிச்சிட்டார். இதுல உன் சித்தி அவங்க வேற. திரும்ப உனக்கு மாப்பிள்ளை பார்த்து, விசாரிச்சு திரும்பவும் இதே பிரச்சனை வராதுன்னு என்ன இருக்கு?…”
“அந்த ஸ்பார்க்ல எனக்கு தோணினது தான் இது. சும்மா வளவளன்னு ஏன் திரும்ப முதல்ல இருந்துன்னு தோணுச்சு. ஏன் நான் மாப்பிள்ளை மாதிரி இல்லையா? நானே கல்யாணம் செஞ்சா என்ன? அதான் பண்ணிட்டேன்…”
“எப்படியும் எனக்கு கல்யாணம் செய்ய தான் போறாங்க. என்னோட மனைவியா அப்படி ஒரு தாட்ல யாரையும் பார்த்ததில்லை. தோணினதில்லை. அந்த செகென்ட் வந்த முடிவு தான். முடிவெடுக்கவும் உன்னை என்னோட வொய்பா பார்த்தேன். ரெண்டுபேருக்கும் கரெக்ட்ன்னு தோணுச்சு…”
நீண்ட மிக நீண்ட விளக்கமாக அவன் சொல்ல ஆக முன்பெல்லாம் அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இல்லை என்பது புரிந்தது ரிதுவிற்கு.
“ஹ்ம்ம், நீ அப்படி நினைச்சிட்டியா?.,…” என கேட்டு சிரித்தவன்,
“எனக்கு உன்னை கல்யாணம் செஞ்சுக்கனும்ன்ற எண்ணம் வர வரை உன்னை சரியா என் ஞாபகத்துல கூட வச்சுக்கலை. ஞாபகமில்லாத பொண்ணை பிடிக்குதா பிடிக்காதான்ற கேட்டகிரில எப்படி கொண்டுவர?…”
‘திருமணத்தின் முன் என் எண்ணங்களில் எங்கும் நீ இல்லை’ என பளிச்சென்று அவன் சொல்லவருவது புரிந்து போனது.
“என்னை தான். வேற என்ன?…” என்று கேட்க திருதிருவென்ற விழிப்பு அவளிடம்.
“அவ்வளோ கஷ்டமாவா இருந்தது என் கொஷின்?…”
“இல்லை, நான் யோசிக்கலை…”
“அப்ப யோசிக்கலை. இப்ப? உன்னை கல்யாணம் பண்ணிட்டேன். உன்னோட வாழ்க்கையையும் வாழ ஆரம்பிச்சிட்டேன். இப்ப? இப்ப பிடிச்சதா?…” என்று கேட்க அவனை போல் பேச வரவில்லை.
திணறலுடன் அவனை ஏறிடுவதும், சிந்திப்பதுமாய் இருக்க ஆத்மா அவளின் நெற்றியில் முட்டினான்.
“ரொம்ப யோசிக்காத. இப்பவும் இந்த நாம வாழற லைஃப் கல்யாணம் ஆகிடுச்சுன்ற பந்தம் மட்டுமே உருவாக்கினது. ஒரு வொய்பா உன்னை எனக்கு பிடிக்கும். இதுவே வீட்டுல பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணினாலும் வாழ்க்கை இப்படித்தானே போகும்?…” என்றதும் திடுக்கிட்டாள்.
முதலில் பார்த்த மாப்பிள்ளையை மனதில் வைத்து கேட்கிறானோ என்று தோன்ற,
“நான் என்னை தான் எக்ஸாம்பிளா சொன்னேன். ஃபீல் ஃப்ரீ…” என்றான்.
“எனக்கு உங்களை மாதிரி பேச தெரியலை. என்ன சொல்லன்னு. ப்ச், கல்யாணம், அதுவும் உங்களோட. நான் நினைக்கலை…”
“ஹ்ம்ம், அப்பறம்…” என்றான் கதை கேட்பதை போல.
“கல்யாணம் வேணா சந்தர்ப்பம், அந்த நிமிஷம் உங்களுக்கு தோணினதால நடந்திருக்கும். அதுக்கப்பறமும் நீங்க ரொம்ப நார்மலா நடந்தது என்னை ரொம்ப கன்ப்யூஸ் பண்ணிடுச்சு…” என்று சொல்லவும் அழுத்தமாய் அவளை பார்த்தான்.
“நான் உன்கிட்ட வேற எப்படி நடந்திருக்கனும்?…” என்று கேட்டவன்,
“உனக்கு நான் வாழ்க்கை குடுத்துட்டேன். நன்றி சொல்லனும், பாராட்டனும், கண்ணீர் விடனும், என்னை இதுக்கு ப்ரைஸ் பண்ணனுன்னும் சொல்லியிருக்கனுமா?…” என்று கேட்க மீண்டும் அவளிடம் மௌனம்.
“இது நானா எடுத்த முடிவு. என்னோட முடிவு. உன்கிட்ட கேட்டு தானே இந்த கல்யாணம்…”
“ஆமா…” என்றாள் அவளும்.
“ஹ்ம்ம், அப்பறம் என்ன? உனக்கு தெரியாதா ஒரு கல்யாணம், அதனை தொட்டு அடுத்து என்னன்னு. இது தெரியாத அளவுக்கு நாம சின்ன பிள்ளை இல்லை. நீயும் கூட சின்ன பொண்ணில்லை. யூஸ்வலா ஒரு வெடிங்ல பிராப்பரா என்ன நடக்குமோ அதுதான் நடந்திட்டிருக்கு…”
“ஹ்ம்ம், புரியுது…”
“என்ன புரிஞ்சதோ? அன்னைக்கு சொன்னதே தான் இப்பவும். என்னை புருஷனா பாரு. அண்ணாமலை மகனா நீ பார்த்தா நாம அடுத்த ஸ்டெப் போக முடியாது. உனக்கு நான் பன்ற எல்லாமே தப்பா தான் தெரியும்…” என்றதும் மீண்டும் அமைதியானாள்.
“பேசனும் ரிது, சும்மா இப்படி சைலன்ட் மோட்க்கு போய் சேஃபா ஒளிஞ்சுக்க கூடாது. நாம நினைக்கிறது தான் நடக்கனும்னு எதிர்பார்க்கிறது ஒரு சுவாராஸியம்ன்னா, நடக்கறதை எடுத்துக்கிட்டு அடுத்து என்னன்னு யோசிக்காம அதோட வழில வாழ்க்கையை வாழறதும் சுவாரஸியம் தான்…” என்றவன்,
“நாம ரெண்டாவதா இருப்போம். நான் இருக்கேன். நீ எப்படின்னு நீயே டிஸைட் பண்ணு…” என்றும் சொல்ல
“ஹ்ம்ம்…” என்றாள்.
“ஆனா டிஸிஷன் எப்பவும் கரெக்ட்டா இருக்கனும். ஸ்பேஸ் கேட்கிற மாதிரி இருக்க கூடாது. ஓகே…” என கறார் குரலில் சொல்ல முகத்தை அலைகடல் பக்கம் திருப்பினாள் ரிதுபர்ணா.
“உள்ள போகலாம் ரிது. என்னோட லைப்ல நான் இவ்வளோ பேசினது நம்ம மேரேஜ் அன்னைக்கும், இன்னைக்கும். சும்மா பேசிட்டே இருக்கறதுன்னா, ஐ கான்ட். எனக்கு எந்த ஸ்பேஸும் வேண்டாம் உன்கிட்ட…” என்றவனின் தோளில் சாய்ந்திருந்தவளின் மௌனம் அவனுக்கு சம்மதமானது.
“நடந்திடுவியா? தூக்கிட்டு போகனுமா? ஜிமிக்கி வேற வெய்ட்டிங்…” என்று கேலியாய் சொல்ல அவனிடமிருந்து வேகமாய் விலகி படியிலிருந்து இறங்கி முன்னே நடந்தவளை புன்னகையுடன் பார்த்தபடி பின் தொடர்ந்தான் ஆத்மகண்ணன்.
வாழ்க்கை அதன் போக்கில் செல்வதென முடிவெடுத்தாலும் அப்படி அத்தனை சுலபமில்லை என்பதை இருவருமே உணரவில்லை.
வாழ்க்கையில் மேம்போக்கான முடிவுகளும், தெளிவுகளும் எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை.