“எல்லாருக்கும் தெரியாதே? சிலர் அதுக்கெல்லாம் நேரமில்லைன்னுவாங்க. எனக்கு பெருசா தெரியலை, வந்து வாங்கிக்கோன்னு. மாசம் ஒருதடவை. கடையையும் எப்படி இருக்குன்னு பார்த்த மாதிரி இருக்கும்….” என்றவள்,
“காம்ளெக்ஸ் எல்லாம் ஒரே நாள்ல முடிஞ்சிரும். பஸ் ஸ்டான்ட் கிட்ட கடைங்க தான் கொஞ்சம் இழுபறியாகும்…” என்று அவள் கடகடவென்று சொல்ல அமைதியாக அவளை பார்த்தான்.
“இவ்வளோ இன்கம் வருது. ஆனா ஏன் நீ காலேஜ்ல வேலைக்கு போன ரிது?…” என்றான் அவன்.
ஆத்மா கேட்டதும் இதழோரம் சிறு புன்னகை. தானாக வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள் அவள்.
“பெரிய காரணம் எல்லாம் இல்லை. அப்பா இறந்த பின்னால வருமானம் வந்தாலும் நிறைய இடத்துல அவரோட வைத்தியத்துக்கு வாங்கி வச்சது எல்லாம் இருந்தது. அதை அடைக்கவும், நான், வித்யா படிக்கவும், வீட்டு செலவுன்னு பார்க்கவும்ன்னு கொஞ்சம் டைட் தான்…”
“அப்பவும் இவ அம்மா சொத்து மட்டும் இல்லன்னா நடுத்தெருவு தான்னு காதுபடவே பேசினாங்க. செண்பகம் அத்தையே கூட சொன்னாங்க. நல்ல வேலை சொத்த விக்க முடியாது. இந்த வருமானம் தான் உங்களுக்கு காலகாலத்துக்கும்ன்னு எழுதி வச்சாங்க. இல்லைன்னா இதுவும் இருக்காதுன்னு சொன்னாங்க..”
“சில நேரம் ஆறுதல் வார்த்தைகள் கூட உயிரை அறுக்கும். இதுக்கு திட்டியே பேசிடலாம்ன்னு நினைக்கிற அளவுக்கு ஆறுதலா பேசிருவாங்க. அவங்க தெரிஞ்சு பேசறாங்களோ இல்லையோ ஆனா அனுபவிக்கிறவங்களுக்கு எவ்வளோ வலின்னு யாருக்கும் புரியாது…”
சில நொடி அமைதி அவளிடம். மூச்சை இழுத்துவிட்டுகொண்டிருந்தாள். அவனை பார்க்கவில்லை.
ஆத்மாவும் அவள் பேச்சை கவனித்தபடி இருந்தான். இப்படி அவனிடத்தில் முதன்முதலில் மனம் திறந்து பேசுகிறாள். பேசட்டும் என பார்த்திருந்தான்.
மனம் விட்டு பேசிவிட்டால் இறுக்கங்கள் குறையும் என்று அவன் மௌனம் பூண்டிருக்க விளக்குவதற்கோ, விவரிப்பதற்கோ எதற்கோ ஒன்று அவனிடம் அவள் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
வேலை தனக்கு ஏன்? எத்தனை அவசியம் என அவனும் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற உந்துதல் அவளை தள்ளியது.
அதன் ஆரம்பம் இன்னும் சில வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்று தட்டியெழுப்ப உள்ளுக்குள் குமுறிய உணர்வுகள் வெளிப்பட்டது.
“எங்கம்மாவுக்கு தானே தந்தாங்க. அதை ஏன் இவ்வோ பெரிய விஷயமா இவங்க பேசறாங்கன்னு புரியவே இல்லை. அப்பவே விசாலாட்சி பெரிம்மா தான் சொல்லுவாங்க. என்னதான் கால் காசா இருந்தாலும் கைக்காசுன்னு இருக்கறது தனி….”
“எங்கம்மாவுமே ஒருகட்டத்துல அவங்கப்பா குடுத்த சொத்துல தானே வாழ்க்கையை ஓட்டினாங்க. அதுவும் இல்லைன்னா? அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு தேவை இல்லை….” என்று ஆத்மாவை பார்க்க அவன் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை.
“நான் யாரையும் சார்ந்து இருக்கவேண்டாம்ன்னு ஒரு வைராக்கியம். இந்த சொத்தே இல்லைன்னாலும் எனக்கு என் வேலை இருக்குன்னு தூக்கி போட்டுட்டு போக அப்பப்ப தோணும்….” என்றதும் ஆத்மா திடுக்கிட்டான்.
“ஆனா ஏன் போகனும்? தாத்தா சொத்தா இருந்தாலும் எங்கம்மாவுக்கு அவங்களா பிரிச்சு தந்தது. எனக்கு என் அம்மாவோடது. எனக்கு உரிமைப்பட்ட இடம் தானே? தானமாவா தந்தாங்கன்னு தோணும்…”
“இதை யோசிக்காம நீ படிச்சு வேலைக்கு போ. அப்ப யார் சொல்ல போறான்னாங்க பெரிம்மா. என்னவோ என்னோட ஆத்தமாட்டாமைக்கு சொன்னாங்க. ஆனா அதையே நான் பிடிச்சுக்கிட்டேன். எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் என்னோட சம்பாத்தியத்துல எனக்காக வாங்கறதுல ஒரு திருப்தி…”
“கடை வருமானம் எல்லாம் வித்த நகை செய்யவே சரியா இருக்கும். சித்தி அத்தனை கட்டுசெட்டு. போன நகைகளை மீட்க முடியலை. ஆனா புதுசா எனக்கு எங்கம்மா வச்சிருந்த மாதிரி வாங்கி வச்சிடனும்னு அவ்வளோ ஆசை அவங்களுக்கு…” என்றவளை விழியகலாது பார்த்தான் ஆத்மா.
“உனக்கு உங்கப்பா மேல கோவமே வரலையா?…” என்ற கேள்வியில் மொத்த ரத்தமும் சுண்டிவிட்டதை போல முகமே வெளுத்துவிட்டது ரிதுபர்ணாவிற்கு.
“ரிது…” என்றவன் அவளை நெருங்கி அணைத்துக்கொள்ள,
“இருக்கா இல்லையான்னு தெரியலை. ஆனா இப்ப எதுவுமே நடக்கலையே? எனக்கு என்னன்னே தெரியாத ஒரு வயசுல நடந்ததை நான் எப்படி எதிர்க்கவும், மறுக்கவும் முடியும்? அதுவும்…” என்றவள் தொண்டையை செரும,
“ப்ச், நான் ஒருத்தன் இதை எல்லாம் கேட்டிட்டிருக்கேன். ஓகே வா, இப்படியே இருந்தா இதை யோசிச்சிட்டே இருப்ப. என்னோட ஷோரூம் வா…” என எழுப்பினான்.
“உங்க கடைக்கா?…” என கேட்கவும்,
“என்னோட ஷோரூம். இப்ப நம்மோடது…” என அவன் பல்லை கடிக்க சட்டென அண்ணாமலை ஞாபகம்.
“நோ நோ. இது முழுக்க முழுக்க என்னோட திறமையால உருவானது. இந்த ஷோரூம் என் உழைப்பு. இதுக்கான அடித்தளம் அந்த பணம் தான்னாலும் அது என்னோட உரிமை இது. நான் எப்படி தூக்கி போடுவேன்…”
“இல்லை நான் அப்படி சொல்ல வரலை…”
“வேற எப்படி? ப்ச், அதெல்லாம் வேண்டாம். நீ வா. இனி நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஷோரூமை ரன் பண்ணலாம். என்னோட மனைவியா உனக்கு அந்த ரைட்ஸ் இருக்கு…” என்று சொல்ல அவனின் பிடியிலிருந்து கையை விலக்கியவள் முகம் கலங்கி இருந்தது.
“என்ன?…” என்றான் தன் இடுப்பில் கையிரண்டையும் ஊன்றிக்கொண்டு.
“நான் பார்த்துக்கறதா? நான் வேலைக்கு போக வேண்டாமா?…” என்றவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன்,
“சரி, என்ன செய்யனும்?…” என்றான்.
இதுவரை அவள் சொல்லியவற்றை எல்லாம் கேட்டிருக்க அத்தனை சுலபத்தில் அவள் மனதின் ரணம் மாறிவிடாது என புரிந்தது.
இப்போதும் இதனை அவளின் முடிவிற்கே விட்டான். இந்த ஒருவாரத்தில் அவனிடம் அவள் நெருங்கி வந்துகொண்டிருக்க மீண்டும் ஒரு பிணக்கை அவன் விரும்பவில்லை.
“கேட்கறேன், சொல்லேன். என் முகத்தில என்ன இருக்கு?…” என்று பற்றியவன் முகத்திலிருந்த சூடு அவன் பதித்த தடத்திலில்லை. குளுமையாய் பதிந்தான்.
“என்ன முழிக்கிற? சொல்லு ரிது…” என்றான் அவளை பிடித்துக்கொண்டு.
“பேசும் போதே வாயடைக்கிறீங்க. என்ன சொல்ல?…” கண்களை மூடி திறந்து தன்னை சமநிலைக்கு கொண்டுவர பார்க்க,
“நீ ஏன் வாயடைக்க வைக்கிற என்னை? நீ தான் தூண்டற. டக்குன்னு சொன்னா நெக்ஸ்ட் என்னன்னு பார்ப்பேன்…” சட்டென வானிலை மாற்றம் போல் அவன் கண்சிமிட்ட தலையை உலுக்கிக்கொண்டு பின்னே சாய்ந்தாள்.
ரிதுவின் காதோர முடிகள் சுருண்டிருக்க அதனுடன் ஜிமிக்கிகள் உறவாட அதனை பார்த்தவன் விரல்கள் அதனை சுண்டியது.
“க்யூட்…” என்றான் ஆத்மா.
“நான் வேலைக்கு போகனும்…” எங்கே மீண்டும் பேசவிடமாட்டானோ என சொல்ல,
“போகலாம். ஆனா இப்ப எப்படி? இங்க ஜாப் தேடனும். அதுவரை என்னோட ஷோரூம்…”
“அங்க தான் வேலைக்கு வரேன். எனக்கு சம்பளம் குடுங்க…” என்று நிற்க இப்போது ஆத்மா தானாகவே வாயடைத்து நின்றான்.
“ஆர் யூ மேட்?…” என கேட்க ரிதுபர்ணா ஒன்றும் சொல்லவில்லை.
சிறிது நேரம் அறைக்குள் இங்குமங்கும் அலைந்தவன் அவளின் முகத்தை கவனித்துக்கொண்டே தான் நடந்தான்.
அவள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கொஞ்சம் யோசிக்க அதில் தவறேதும் இருப்பதாகவும் தெரியவில்லை.
மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அவள் கேட்பதற்கிணங்க இறங்கி வந்தான் அவன்.
“நான் ஓகே சொல்லலைன்னா?…” என்று கேட்க,
“என்னை எப்படியும் உங்க ஷோரூம்க்கு கூட்டிட்டு போய்ருவீங்க. அதான் நான் அங்க வேலை பார்க்க வரேன்னு சொன்னேன். அதெல்லாம் ஒத்துப்பீங்க…” என சொல்லியவளை கைகளுக்குள் கொண்டுவந்தவன்,
“பார்ரா, என்னை அவ்வளோ தெரியுமா உனக்கு?…” என்றான் சிரிப்போடு.
“கொஞ்சம்…”
“கொஞ்சவா?…”
“இல்லை கொஞ்சம். லைட்டா. அப்படி சொன்னேன்…”
“சத்தமா சொல்லனும். நீ பாதி சொன்னா எனக்கு இப்படித்தான் புரியுது. அப்பறம் வாயடைக்க வைக்கறேன்னு சொல்ல கூடாது…” என்றான் அவன்.